திருவாசக அரண்மனை!

குணசிங்கம் சிவசாமி - கட்டடக்கலைஞர்வட இலங்கையில் இந்துக் கோவில்கள் பொதுவாகத் திராவிடக்கலையின் அடிப்படைகளை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டு  வந்தன. அண்மைக்காலங்களிலும் ஓரளவுக்கு இந்த அடிப்படையிலேயே அவை அமைக்கப்படுகின்றன. திராவிடக் கட்டடக்கலை மிகப்பழமை வாய்ந்த கட்டடக்கலைகளுள் ஒன்று. திராவிடக் கட்டடக்கலை ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே ஆரம்பமானது.  கற்காலக் கட்டடக்கலையின் பொறியியல் மற்றும் சிற்பவியல் நுணுக்கங்களை மையமாகக் கொண்டு திராவிடக் கட்டடக்கலை ஆதிக்கமான கட்டடக்கலை அடிப்படைகளை வெளிக்கொணர்ந்தது.

1900இல் ஆரம்பப்பகுதியில் உலகரீதியில் உருக்குக்கம்பிகளால் வலுவூட்டப்பெற்ற ‘காங்ரீட்’ (Reinforced Concrete)  பொதுமைப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்துக்கோயில்களின் கட்டடக்கலை புதிய பரிணாமம் எடுத்ததாகக் கருதிக்கொள்ள முடியாது. அது கற்காலக் கட்டட அமைப்பின் மீள் வடிவமைப்பாகவே காணப்படுகின்றது.  சிற்பக்கலை வடிவங்கள் , கட்டடக்கலை நுணுக்கங்கள், பொறியியல் அடிப்படைகள் எல்லாமே கற்காலக் கட்டடக்கலையில் அடையாளம் காணப்பட்டவற்றை ‘காங்ரீட்’டில் மீளமைப்பவையாகவே காணப்படுகின்றன.

வட இலங்கையில் பாரம்பரியக் கட்டடக்கலை வடிவங்களில் ‘மடம்’கள் முக்கிய  இடம் பெற்றன. ‘நடை’, ‘திண்ணை’ , ‘தலைவாசல்’, ‘நடுமுற்றம்’ (Centre Courtyard)  உட்பட இன்னும் பல நுணுக்கங்கள் அடையாளம் காணப்பட்டன. நடுமுற்றத்தை மையமாகக் கொண்டு சுற்றிவர அமைந்த , வரிசையாக அழகு படுத்தப்பட்ட தூண்களைக் கொண்ட மெல்லிய நீளமான ‘விறாந்தை’ பிரதான அழகியல் வெளிப்படையாகக் காணப்பட்டது. நாற்சார் அல்லது முற்சார் ஓட்டுகூரை இந்தக் கட்டடக்கலையின்  இன்னுமொரு பிரதான வெளிப்பாடாகக் கருதப்படுகின்றது.

25.06.18 திங்களன்று , நாவற்குழியில் அண்மையில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்ட சிவபூமி திருவாசக அரண்மனையின்  ஒரு பகுதியாக நடுமுற்றத்தில்  அமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட  சில தட்சணாமூர்த்தி ஆலயத்தின் கும்பாபிஷேக வைபவத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. கும்பாபிஷேக வைபவங்கள் ஆரம்பிக்கும் முன்னராகவே சென்றிருந்தேன். கட்டடக்கலைஞன் என்ற ரீதியில் என்னைக் சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

Continue Reading →

முருகபூபதியின் “சொல்லத்தவறிய கதைகள்” – புதிய நூல் பாரிஸில் அறிமுகம்

முருகபூபதியின் "சொல்லத்தவறிய கதைகள்" - புதிய நூல்  பாரிஸில் அறிமுகம்

அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான முருகபூபதியின் புதிய வரவு, சொல்லத்தவறிய கதைகள் நூலின் அறிமுக அரங்கும், முருகபூபதியுடனான இலக்கியச்சந்திப்பும் எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி (03-02-2019) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு பாரிஸில் எழுத்தாளர் வாசுதேவன் தலைமையில் நடைபெறும். நிகழ்ச்சி நடைபெறும் முகவரி:  TIASCI  — 13, RUE DE L’AQUEDUC  —- 75010 PARIS . பாரிஸிலிருந்து வெளியாகும் ” நடு” இணைய இதழின் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சியை “நடு” ஆசிரியர் எழுத்தாளர் கோமகன் ஒழுங்குசெய்துள்ளார். 

Continue Reading →

சிறுகதை: பால்ய விவாஹம்

சீர்காழி தாஜ் எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் மறைவினையொட்டி , பதிவுகள் இணைய இதழில் வெளியாகிய அவரது  சிறுகதையான ‘பால்ய விவாஹம்’ மீள்பிரசுரமாகின்றது –

– எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள், பல்வேறு விடயங்கள் பற்றிய கருத்துகள் பலவற்றை உங்களில் பலர் இணையத்தில் வலைப்பூக்களில், இணைய இதழ்களில் (பதிவுகள் உட்பட), முகநூலில் படித்திருக்கலாம். எனக்கு அவரது எழுத்தில்  பிடித்த விடயங்களிலொன்று அவரது நடை. ஒருவித நகைச்சுவை ததும்பும் எள்ளல் நடை. அடுத்தது அவரது சிந்தனைப்போக்கு. ஒரு விடயத்தைப் பற்றி பல்வேறு திக்குகளில் படிப்பவர் சிந்தனையைத் தூண்டும் வகையில் சிந்திப்பது. இன்னுமொரு முக்கியமான விடயத்திலும் அவரை எனக்குப் பிடிக்கும். பாசாங்குத்தனமற்ற, வெளிப்படையான , தற்பெருமையற்ற ஆளுமை. அவரது எழுத்தில் காணப்படும் இன்னுமொரு விடயம்: கூர்ந்து அவதானித்தல். தன்னைச் சுற்றிவரும் உலகில் நடைபெறும் செயல்களை, உறவுகளை.  நிலவும்   வாழ்வியற் போக்குகளை  இவற்றையெல்லாம் மிகவும் கூர்ந்து அவதானிப்பது அவரது இன்னுமொரு திறமையான பண்பு. ‘பால்ய விவாஹம்’ என்ற அவரது இந்தச் சிறுகதையின் தலைப்பினைப் பார்ததும் ‘பால்ய விவாகம்’ பற்றிய விமர்சனமாக இருக்குமோ என்று எண்ணி வாசித்தால் இந்தச் சிறுகதையில் விரிந்த உலகு என்னைப் பிரமிக்க வைத்தது. 

ஒரு சிறுவனுக்கு காய்க்காத வீட்டு வளவு மா மரத்துடன் நடைபெறும் பால்ய விவாஹம் பற்றியதே கதையின் மையக்கருத்து. அந்தச் சிறுவனே கதை சொல்லியும்; அவனது பெயரும் தாஜ் என்றிருப்பது கதையின் நடையில் ஒருவித சுயசரிதத் தன்மையினைப் படர விடுகிறது. ஆனால் அவர், தாஜ், தனது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் பின்னிய சிறுகதையாகத்தான் இதனைக் கொள்ளவேண்டும். அவ்விதம் மரத்துடனான திருமணம் அந்த மரத்தைக் காய்க்க வைக்குமென்ற கருத்தொன்றும் அந்தச் சிறுவன் வாழும் சீர்காழி இஸ்லாமிய சமூகத்தில் நிலவுகின்ற விடயத்தை இச்சிறுகதை வெளிப்படுத்துகின்றது. இதனைக் குழந்தைப் பேறில்லாது வாடும் பெண்களுக்கும் குறியீடாகக் கருத முடியும். இந்த கருத்தினூடு விரியும் கதையில் வரும் பாட்டி பாத்திரம் மிகவும் இயல்பான அனைவர் வாழ்வில் வந்துபோகும் பாத்திரம். உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டிருக்கின்றது. இது தவிர இந்தச் சிறுகதையில் சீர்காழியில் வாழும் இஸ்லாமிய மக்களிடையே நிலவும் பேச்சுத்தமிழை வாசிப்பில் நாம் அறிந்துகொள்கின்றோம். அத்துடன் அச்சமுதாயத்தின் வாழ்வில கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் பற்றியெல்லாம் இச்சிறுகதையினூடு அறிந்துகொள்கின்றோம். இது தவிர சுற்றியுள்ள இயற்கை பற்றிய அழகான வர்ணனையும் கதையில் விரவிக் கிடக்கின்றது. தாஜ் அவர்களின் இச்சிறுகதையான ‘பால்ய விவாஹம்’ சிறுகதை இதுவரை நான் வாசித்த அவரது சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை. உங்களையும் நிச்சயம் கவர்ந்திழுக்கும். வாசித்துப் பாருங்கள். –  வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள் –


சிறுகதை: பால்ய விவாஹம் – சீர்காழி தாஜ்

இன்று வியாழக்கிழமை. நாளை வெள்ளி! ‘பள்ளி’ கிடையாது. கண்விழித்தவுடன் தோன்றிய முதல்நினைவே சந்தோஷம் தந்தது. நாளைக்கு காலை ஏழு, ஏழரை வரை துங்கலாம். எட்டும் தூங்கலாம். என்னை எழுப்ப என் அம்மா நிலையாய் நிற்கும்தான். ‘இத்தனை நேரம் தூங்குறானேன்னு…!’ பாட்டி விடாது. “பிள்ளை நல்லா தூங்கட்டும்டீ….” என சொல்வார்களே தவிர, எழுப்ப சம்மதிக்க மாட்டார்கள். ஆனால், பள்ளி இருக்கும் நாள்தோறும், என் பாட்டிதான் என்னை எழுப்பி விடும். அஞ்சேகால் விட்டா… அஞ்சரை! கொல்லை நடைக்கு போய் கிணற்றடியில் ‘கைகால்’ அலம்பிவிட்டு, பல்விளக்கச் சொல்லும். தூக்கம் கலையாது எழுந்து போய், கொல்லைக் கதவை திறப்பேன். திறந்த நாழிக்கு, கோழிகளின் அதன் குஞ்சுகளின் கெக்கரிப்பு, தூக்கக் கலக்கத்தை விரட்டும். இந்தக் கெக்கரிப்புதான் தினம்தினம் நான் கேட்கும் முதல் இசை! கொல்லைத் தாழ்வாரத்தின் கிழக்குப்பக்க மூலையில், கள்ளிப்பலகையிலான, கம்பி வலையிட்ட கோழிப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கோழிகளையும் குஞ்சுகளையும் பார்க்க ஆவலெழும்! இன்னும் தீரவிடியாத, அந்த   இருட்டில், அதுகள் எதுவும் சரியா தெரியாது. சப்தம் மட்டும்தான் ஆறுதல். தாழ்வாரத்திலிருந்து படியிறங்கி, இடதுபுறம் திரும்பி, பத்து தப்படி வைத்தால், சின்ன கிணறு. அதைச்சுற்றி சிமெண்ட்தளம்! கிணற்றை குனிஞ்சுப் பார்க்க மாட்டேன். பயம். பார்த்தாலும், தண்ணீர் தெரியாது. இருட்டுத்தான் கிடக்கும்! கொஞ்சத்துக்கு விடியல் கண்டுவிட்டதென்றாலும், எங்க வீட்டுக்கொல்லை இன்னும் இருட்டுதான்!

Continue Reading →

குறுநாவல்: தங்ஙள் அமீர்

அஞ்சலி: எழுத்தாளர் சீர்காழி தாஜ் மறைவு! இனிய நண்பரை, உடன் பிறவாச் சகோதரரை இழந்தோம்!  இன்று மாலை முகநூலுக்குள் நுழைந்த என்னை துயரகரமான, அதிர்ச்சியினையூட்டிய செய்தியொன்று எதிர்கொண்டது. எழுத்தாளரும், இனிய நண்பரும், உடன் பிறவாச் சகோதரருமான சீர்காழி தாஜ் அவர்க– எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களின் மறைவினையொட்டி , பதிவுகள் இணைய இதழில் வெளியாகிய அவரது  ‘தங்ஙள் அமீர்’  குறுநாவலை மீள்பிரசுரம் செய்கிறோம் –

– புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அன்னிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் ‘தங்ஙள் அமீர்’ இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. ‘தங்ஙள் அமீர்’ என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர்  இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக ‘தங்ஙள் அமீரை’ப் பாவிப்பதும்தாம். இஸ்லாமிய சமுகத்தவர் மத்தியில் நிலவும் தலாக் கூறி விவாகரத்து செய்யும் செயற்பாட்டினை எவ்விதம் ஒருவர் தவறாகப் பாவிக்க முடியும் என்பதையும் அப்துல்லா அல்-ரவ் என்னும் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் குறுநாவலிது. உண்மையில் தங்ஙள் அமீர் நல்லதொரு பாத்திரப் படைப்பு. இக்குறுநாவலை இன்னும் விரிவாக்கி, தங்ஙள் அமீர் பாத்திரத்தை இன்னும் உயிரோட்டமுள்ளதாக்கி நல்லதொரு நாவலை இதே பெயரில் படைக்க தாஜுக்கு வாய்ப்பிருக்கிறது. அதனைப் பயன்படுத்துவாரானால் தமிழ் இலக்கிய உலகுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் இன்னுமொரு முகத்தினைக் காட்டும் வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் குறுநாவலாக இருந்த போதிலும், மத்திய கிழக்கு நாடொன்றின் தமிழர் வர்த்தக வாழ்வை, அங்கும் மக்களின் மூட நம்பிக்கைகளை ஆதாரமாகக்கொண்டு தொடரும் பணம் பெருக்கும் வர்த்தகச் செயற்பாடுகளை  விபரிக்கும் ‘தங்ஙள் அமீர்’ வித்தியாசமான , முக்கியமான படைப்பு. நாஞ்சில் நாடனின் ‘மிதவை’ (உள்ளூர் புலம் பெயர்தலை விபரிக்கும்), காஞ்சனா தாமோதரனின் , ஜெயந்தி சங்கரின் , ப.சிங்காரத்தின் படைப்புகள் வரிசையில் தமிழக எழுத்தாளர் ஒருவரின் புலம் பெயர் அனுபவங்களின் பிரதிபலிப்பு சீர்காழி தாஜின் ”தங்ஙள் அமீர்’. இக்குறுநாவலினைப் ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுப்பிய எழுத்தாளர் தாஜ் நன்றிக்குரியவர். -வ.ந.கிரிதரன், ஆசிரியர், பதிவுகள்-


குறுநாவல்: தங்ஙள் அமீர் (பதிவுகள் – 23 April 2014)

“நேற்று ‘அல் – முராஃபி’க்கு போனீங்களா?, போக்கரை சந்திச்சீங்களா?” – எங்க மேனேஜர் ‘ஜெம்’, எதிர்பக்கத்து கேபினிலிருந்து எழுப்பிய அந்தக் கேள்வி எனக்கானது. காலையில் அலுவலகம் போனவுடன், மேனேஜர் ரூமுக்கும், அக்கவுண்டண்ட் ரூமுக்கும் எதிரே, பக்கவாட்டுத் தடுப்பினுள் காணும் டீ டேபிளில், காஃபி உண்டாக்கி; நானும், ஸ்டோர்கீப்பர் ஜமாலும் குடிக்கத்தொடங்கிய போதுதான், ஜெம் அலுவலகம் வந்தார். இருக்கையில் அவர் அமர்ந்த நாழிக்கு அப்படி கேட்டதென்பது எனக்கு குழப்பத்தைத் தந்தது.

‘அல் முராஃபி’ ஒரு சூப்பர் மார்க்கெட். ரியாத் புறநகர்ப் பகுதியான ‘அல் நசீம்’-ல் உள்ளது. அதன் பர்ச்சேஸ் மேனேஜர்தான் போக்கர்! அவனைப்பற்றிதான் கேட்கிறார். மலையாளியான அவன் பெயர் பக்கர் குஞ்சு. பக்கர் குஞ்சு, வழக்கில் போக்கராகிப் போனான். எங்க மேனேஜருக்கு அவன் கூட்டுக்காரனும்கூட. வியாபாரரீதியில் எங்களுக்கு நிறைய ஆர்டர்கள் தரக்கூடியவன். அதற்கு ஈடாக மாதம்தட்டாமல் நாங்கள் தரக்கூடிய அன்பளிப்பு கவர் கனமானது! சிரிப்பற்ற அவனது முகத்தில் சிரிப்பை வரவழைப்பது! அவனது எத்தனையோ சௌதி சம்பாத்திய சந்தோஷங்களில் இதுவும் ஒன்று.

Continue Reading →

அஞ்சலி: எழுத்தாளர் சீர்காழி தாஜ் மறைவு! இனிய நண்பரை, உடன் பிறவாச் சகோதரரை இழந்தோம்!

எழுத்தாளர் சீர்காழி தாஜ்இன்று மாலை முகநூலுக்குள் நுழைந்த என்னை துயரகரமான, அதிர்ச்சியினையூட்டிய செய்தியொன்று எதிர்கொண்டது. எழுத்தாளரும், இனிய நண்பரும், உடன் பிறவாச் சகோதரருமான சீர்காழி தாஜ் அவர்களின் மறைவுச் செய்திதான் அது. எழுத்தாளர் அனார் தனது முகநூற் பதிவில் தாஜ் அவர்களின் மறைவுச்செய்தியினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். செய்தியினை உள்வாங்குவதற்கே சிறிது கஷ்ட்டமாகவிருந்தது. நேற்றும் தி.ஜானகிராமனின் படைப்புகள் பற்றிய முகநூற் குழுமத்தில் நான் பதிவிட்டிருந்த முகநூற் பதிவொன்றுக்குத் தன் கருத்துகளை ‘அன்பு  கிரி’ என்று ஆரம்பித்துப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களா மறைந்து விட்டார். அவரது அங்கத்தம் தவழும் எழுத்து நடைக்கு நான் எப்பொழுதுமே அடிமை. நண்பர் எழுத்தாளர் தாஜ் அவர்கள் மறைந்த செய்தி ஏற்படுத்திய துயரத்தை  அளவிட வார்த்தைகளேதுமில்லை.

சிந்தனைக்குருவி தன் சிறகுகளை அடிக்கின்றது. நண்பர் தாஜை முதன் முதலில் அறிந்த காலகட்டம் நினைவுக்கு வருகின்றது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான எனது ‘அமெரிக்கா (தொகுப்பு) மற்றும், மறும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூல்களைத் தமிழக நூல் நிலையக் கிளையொன்றில் கண்டு, வாசித்துவிட்டுத் தன் கருத்துகளை ஆக்கபூர்வமான முறையில் நீண்ட இரு கடிதங்களாக எழுதி அனுப்பியிருந்தார். பின்னர் வைக்கம் முகம்மது பசீரின் ‘எங்கள் தாத்தாவுகு ஆனையொன்றிருந்தது’ நூலினைக் கனடாவில் வசிக்கும் தனது நண்பர் ஒருவர் மூலம் அனுப்பிருந்தார்.

‘பதிவுகள்’ இதழில் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில் நண்பர் தாஜிம் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியினையே தந்தது. அச்செய்தினைக் கனவில் கூட எதிர்பார்த்திராத நிலையில் அச்செய்தி மிகுந்த அதிர்ச்சியினைத்தந்தது. கூடவே அளவிட முடியாத துயரையும் தந்தது.

நண்பர் தாஜின் சிறுகதைகள், குறுநாவல் ஆகியன உள்ளடங்கிய தொகுதியின அண்மையில்தான் காலச்சுவடு பதிப்பகத்தினர் வெளியிட்டிருந்தனர். தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் தொகுதிகளிலொன்று அத்தொகுதி.

சீர்காழி தாஜ் கவிதைகள், கதைகள் என்று இவரது எழுத்துப்பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இணைய இதழ்கள் (பதிவுகள் உட்பட) , தமிழகத்து வெகுசன மற்றும் சிற்றிதழ்கள் எனப்பல ஊடகங்களில் இவரது பல படைப்புகள் வெளியாகியுள்ளன. ஆனந்த விகடனின் பவளவிழாப்போட்டிகளில் இவரது கவிதைகள் முத்திரைக்கவிதைகளாக வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தாஜ் அவர்கள் ‘தமிழ்ப்பூக்கள்’ என்னும் வலைப்பதிவினையும் நடாத்தி வருகின்றார். http://tamilpukkal.blogspot.ca/

எழுத்தாளர் தாஜ் அவர்களின் மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் (முகநூல் நண்பர்களுட்பட) அனைவருக்கும் எனது மற்றும் ‘பதிவுக’ளின் ஆழ்ந்த இரங்கல்கள். கூடவே ‘பதிவு’களில் , முகநூலில் வெளியான அவர் பற்றிய குறிப்புகளையும் மீண்டுமொருமுறை பகிர்ந்துகொள்கின்றேன்.

Continue Reading →

படித்தோம் சொல்கின்றோம் : நடேசனின் “எக்ஸைல்” குறித்து ஒரு பார்வை! சார்பு நிலையெடுக்காத மனிதநேயவாதியின் குரல்!

” ஈழப்போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்குகொண்டவர்கள் எல்லோரும் தோல்வியைத்தான் தழுவினார்கள். ஒருவருமே வெல்லாத அந்தப்போராட்டத்தில் பலர் காலம் கடந்து தங்களை சுதாரித்துக்கொண்டார்கள். வேறும் பலர் கிடைத்த நன்மைகளோடு வாரிச்சுருட்டினார்கள்” இந்த வரிகளை நடேசனில் எக்ஸைல் நூலில் படித்தபோது, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள்தான் நினைவுக்கு வந்தன. அவற்றில் பெரும்பாலானவை சுயவிமர்சனப்பாங்கில் எழுதப்பட்டிருந்தவை. இலங்கை – இந்திய பாதுகாப்புத் தரப்பைச்சேர்ந்தவர்களும் ஐக்கியநாடுகள் சபைக்காக இலங்கையில் பணிபுரிந்த மேற்குலக வாசிகளும், ஆண்கள் – பெண்கள் உட்பட முன்னாள் போராளிகளும் , படைப்பாளிகளும் எழுதும் நூல்கள், ஆவணங்கள், ஆய்வுகள் வந்தவண்ணமிருக்கின்றன. நீடித்த உள்நாட்டுப்போரின் பெறுபேறாகவும் இவற்றை ஏற்கலாம்! அவ்வாறு எழுதியவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் நடேசன். இவரது தொழில் விலங்கு மருத்துவம். அது சார்ந்த உண்மையும் புனைவும் கலந்த கதைகளையே தொடக்கத்தில் எழுதியவர். அத்தகைய எழுத்துக்களின் ஊடாகவே சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள், பயண இலக்கியங்கள் என தனது பார்வையை விரிவுபடுத்திக்கொண்டவர்.

இவரது அத்தகைய படைப்புகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன. வடக்கில் சப்த தீவுகளில் ஒன்றென அழைக்கப்பட்ட எழுவை தீவில் பிறந்து, அங்கு ஆரம்பக்கல்வியைக்கற்று, யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியான இந்துக்கல்லூரியில் உயர்தர வகுப்பை தொடர்ந்த காலத்தில் இலங்கை அரசியலின் அரிச்சுவடியும் தெரியாமல், அங்கு 1974 ஆம் ஆண்டில் நடந்த நான்காவது உலகத்தமிழாரய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்கச்சென்றவர். அவர் தனது வாழ்நாளில் முதல் தடவையாக துர்மரணங்களை பார்த்து திகைத்துப்போனதும் அவ்வேளையில்தான். தமிழராய்ச்சி கண்காட்சி ஊர்தியால் மின்சார வயர் அறுந்துவிழுந்து அதன் தாக்கத்தினால் துடிதுடித்து இறந்தவர்களைப்பார்த்த திகைத்துப்போன ஒரு நேரடி சாட்சிதான் நடேசன். இவரது அந்த மாணவப்பருவம், அன்றைய அரசின் கல்வி மீதான தரப்படுத்தலையும் எதிர்கொண்டது. அக்காலப்பகுதியில் வடபகுதி மாணவர்களை அரசியல் எவ்வாறு ஆட்கொண்டது என்பதை இந்த நூலில் இவ்வாறு பதிவுசெய்கிறார். ” எனது வயதையொத்த இளைஞர்கள் அரசியல் சாயம் படாமல் தப்பமுடியாது. ஹோலி பண்டிகை காலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடாதவனும் வர்ணத்தை பூசிக்கொள்வதுபோல் அரசியல் வாடை என்னைத் தழுவியது.”

பாடசாலைக்கு கல்லெறியத்தொடங்கிய மாணவர்கள் எவ்வாறு இ.போ. ச. பஸ்ஸிற்கு கல்லெறிந்து பிரச்சினையை மேலும் கூர்மையாக்கினார்கள் என்பதிலிருந்து தமிழ்த்தலைவர்கள் தொடங்கிய சிங்கள ஶ்ரீ கார் இலக்கத்தகடுகளுக்கு தார் பூசும் இயக்கம், மற்றும் கவனயீர்ப்பு போராட்டங்களையும் நினைவுபடுத்தியவாறு, தமிழகத்திற்கு தப்பிச்செல்லும் இரண்டு குழந்தைகளின் தந்தையான ஒரு இளம் குடும்பஸ்தன், எதிர்நோக்கும் சம்பவங்கள், அவலங்கள், சந்திக்கும் நபர்கள், அவர்களின் குணவியல்புகள் முதலான பல்வேறு தகவல்களை இந்த எக்ஸைல் பதிவுசெய்துள்ளது.

நடேசன், ஆயுதம் ஏந்திய எந்தவொரு தமிழ் இயக்கத்திலும் இணைந்திராதுவிட்டாலும், அவற்றின் தலைவர்கள், தளபதிகள், மற்றும் போராளிகளுடன் உறவைப்பேணியிருப்பதும் தெரிகிறது. இந்த நூலில் ஒவ்வொரு அங்கத்தையும் இலங்கை தமிழர் அரசியலில் ஈடுபட்டவர்களை சுயவிமர்சனம் செய்யத்தூண்டும் விதமாகவே எழுதியிருப்பதுடன் எமது சமூகத்தையும் கேள்விக்குட்படுத்துகிறார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாக்கு நீரிணை பிரித்தாலும் சினிமாவும், கடத்தல் சாமான்களும் எவ்வாறு நிரந்தரமாக இணைத்துவைத்தன என்பதை மிகவும் சுவாரஸ்யமாக ஒரு கதை சொல்லியாக பகிர்ந்துள்ளார். இராமேஸ்வரத்தில் இந்தியக்கரையில் இறங்கும்போது,கையில் பணம் இருந்தாலும் அதனை செலவிடாமல், எடுத்துச்சென்ற சிங்கப்பூர் குடை, லக்ஸ் சோப் முதலானவற்றைக்கொடுத்து சமாளிக்கும் காட்சியை அக்காலப்பகுதியில் இராமானுஜம் கப்பலில் பயணித்தவர்களுக்கு நினைவூட்டுகின்றார். பல இடங்களில் நடேசன், படிம உத்தியோடும், உவமான உவமேயங்களுடனும், அங்கதமாகவும் காட்சிகளை சித்திரிப்பதனால், இந்த நூலை வாசகர்கள் புன்னகையுடன் நகர்ந்து செல்ல முடியும்.

Continue Reading →

வாசகர் முற்றம் – அங்கம் 04: இழப்புகளிலிருந்து உயிர்ப்பித்த இலக்கியவாதி ரேணுகா தனஸ்கந்தா! ஈழத்து இலக்கிய உலகில் பேசுபொருளான “சொல்லாதசேதிகள்” தொகுப்பிலும் இடம்பெற்ற கவிஞர்!

இலக்கியவாதி ரேணுகா தனஸ்கந்தாபுத்தர் வந்த திசையிலிருந்து, காந்தி பிறந்த தேசத்திலிருந்து அவர்கள் வந்தார்கள். அவர்களுக்கு இடப்பட்ட நாமம் ” அமைதிப்படை” ! மக்கள் அவர்களை நம்பினார்கள். ஏற்கனவே, சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் போரிட்டு, தங்கள் தேசத்தின் எல்லைகளை பாதுகாத்தவர்கள் எங்களையும் காப்பாற்றுவார்கள் என போற்றினார்கள். 
அவ்வாறு வந்தவர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங் அங்கு 32 மாதங்கள் தங்கியிருந்தவர். அண்மையில் அவர் மீண்டும் அங்கு வந்தபோது உதிர்த்த வாக்குமூலம் இது:  “நாங்கள் இங்கு தரையிறங்கியபின், தாக்குதல்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று நினைத்து இலங்கை இராணுவத்தினர் தங்கள் ஆயுதங்களை கைவிட்டார்கள். இலங்கை இராணுவத்தினருடன் கைகுலுக்கிய நாங்கள், அமைதி காக்க வந்திருக்கிறோம் என்று தெரிவித்தோம். எதுபோன்ற ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை என்பதோடு, இலங்கைக்கு புதிதான எங்களுக்கு வழிகாட்டுவதற்கு வரைபடங்களோ, மேம்பட்ட உளவுத்துறை தகவல்களோ கொடுக்கப்படவில்லை.”  

இந்தியப்படை அங்கு வந்திறங்கியபோது, வட இலங்கையில் உரும்பராயில் வசித்த இரண்டு ஆசிரியர்கள் – அங்கு பிரசித்திபெற்ற கல்விமான்களாக அறியப்பட்டவர்கள், தங்கள் குடும்பத்தினரிடம் சொல்கிறார்கள்: ” அமைதி காக்க வந்திருப்பவர்களை நம்பலாம். இலங்கை இராணுவத்திற்கு அவர்கள் கைகுலுக்கியது ஒருவகையில் இராஜதந்திரம். எங்கள் தமிழ் மக்களை அவர்கள் கைகுலுக்கி அரவணைப்பது தொப்புள் கொடி உறவு. அவர்கள் பிறந்த தேசத்தின் பிதாவின் அகிம்சையால், பிரித்தானிய ஆதிக்கம் வெளியேறியது. அதுபோன்று, இங்கும் எங்கள் பிரதேசத்தில் பேரினவாத ஆதிக்கத்தை வெளியேற்றுவார்கள். தைரியமாக இருங்கள். தயக்கமிருந்தால், ஊருக்குள்ளே உறவினர் வீடுகளில் சென்றிருங்கள்” என்று வழியனுப்பிவைத்தார்கள்.

அவர்களில் ஒருவர் நவரட்ணம் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் கணக்கியல் ஆசிரியர். மற்றவர் தம்பையா, யாழ். ஸ்ரான்லி கல்லூரியின் முன்னாள் அதிபர்.  ஆசிரியர் நவரட்ணம் தந்தையார். முன்னாள் அதிபர் தம்பையா, தாயின் தந்தையான தாத்தா. தந்தையும் தாத்தாவும் தங்கள் மகள்மாரை அன்று பாதுகாப்பாக அனுப்பிவைத்துவிட்டு, வீட்டிற்கு காவல் இருந்தனர். அமைதிகாக்க வந்தவர்கள், தங்களையும் காத்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலை தோன்றியது. அதற்காக அமைதியிழந்து அலைந்தார்கள். வேட்டுக்களை தீர்த்தார்கள். உரும்பராயில் பல அப்பாவி பொதுமக்களின் உயிர்களைப் பறித்தார்கள்.  அந்தத் தந்தையையும் தாத்தாவையும் அதன்பின்னர் காணவில்லை!
இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களின் கதைகள் எங்கள் தேசத்தில் தொடர்ந்தவண்ணமிருக்கின்றன. 

வாசகர் முற்றம் தொடரில், எதற்காக இந்தச்செய்திகள் வருகின்றன? என யோசிக்கின்றீர்களா? அந்த தாத்தாவையும் தந்தையையும் அதன்பின்னர் பார்க்கமுடியாமல்போன ஒரு தேர்ந்த இலக்கிய வாசகியைப்பற்றிய பதிவுதான் இந்த அங்கம். ஈழத்து இலக்கியவளர்ச்சியில் இன்றும் பேசப்படும் ஒரு கவிதைத்தொகுதிதான் பத்துப்பெண்கள் எழுதி, 1986 ஆம் ஆண்டில் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அவர்களினால் தொகுத்து வெளியிடப்பட்ட சொல்லாத சேதிகள்.  அ.சங்கரி, சிவரமணி, சன்மார்க்கா, ரங்கா, மசூரா ஏ.மஜிட், ஒளவை, மைத்ரேயி, பிரேமி, ரேணுகா நவரட்ணம், ஊர்வசி ஆகிய பத்துப் பெண்கவிஞர்களின் 24 கவிதைகளின் தொகுப்பு சொல்லாத சேதிகள். ஈழத் தமிழ்ப்பெண் கவிஞர்களது முதலாவது கவிதைத் தொகுதி என்ற பெருமையையும் இத்தொகுப்பு பெற்றிருக்கிறது.  அன்று செல்வி ரேணுகா நவரட்ணம் என்ற பெயருடன் இத்தொகுப்பில் கவிதை எழுதியிருக்கும் இவர், தற்போது மெல்பனில் திருமதி ரேணுகா தனஸ்கந்தாவாக இரண்டு பிள்ளைகளின் தாயாக எம்மத்தியில் இலக்கியம் பேசிக்கொண்டிருக்கிறார்.  பயிற்சிபெற்ற ஆங்கில ஆசிரியை. வசாவிளான் மத்தியகல்லூரியில் பணியாற்றியவர். இவரது ஆசான்கள் கவிஞர் சோ. பத்மநாதன், பேராசிரியர் மௌனகுரு. தந்தையும் தாத்தாவும் கல்விப்பின்னணிகளுடன் தேர்ந்த வாசகர்களாகவும் இருந்தமையாலும், ஆசான்கள், கலை, இலக்கியவாதிகளாகவும் படைப்பாளிகளாகவும் விளங்கியமையாலும் ரேணுகாவும் தீவிர வாசகரானார். தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதினார். ஒரு சில கதைகளும் படைத்தார். யாழ்ப்பாணத்தில் அன்று வெளியான சட்டர்டே ரிவியூ பத்திரிகையிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகின.

Continue Reading →