நான் இரசித்த முகநூற் பதிவுகள் 1 : எஸ்.எல்.எம்.ஹனீபாவின் பதிவு – “யூழேன் இயொனெஸ்கோ” வின் ‘காண்டாமிருகம்’

யூழேன் இயொனெஸ்கோ” வின் 'காண்டாமிருகம்முகநூல் கலை, இலக்கியத்தைப்பொறுத்தவரையில் மிகப்பயனுள்ளதாக விளங்குகின்றது. இலக்கியப்படைப்புகள், இலக்கிய ஆளுமைகள் பலர் பற்றிய விபரங்கள், கருத்துகள், எழுத்தாளர்கள் பலரின் பல்வகை விடயங்களைப்பற்றிய எண்ணங்கள், படைப்புகளென அது மிகவும் வளமாகச் செழுமையாக விளங்குகின்றது. முகநூலில் அவ்வப்போது என் கவனத்தை ஈர்க்கும், கலை, இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமெனக் கருதுகின்றேன். எழுத்தாளர் எச்.எல்.எம்.ஹனீபாவின் “யூழேன் இயொனெஸ்கோ” வின் ‘காண்டாமிருகம்’ பற்றிய பதிவும் அத்தகையது. அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.- வ.ந.கிரிதரன்

நாடகத்தைப் பார்க்க விரும்பினால் அதற்குரிய இணைய இணைப்பு: https://www.youtube.com/watch?v=XG8zz6y0xFk



எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபாவின் பதிவு கிழே:


“யூழேன் இயொனெஸ்கோ” வின் ‘காண்டாமிருகம்’ – எஸ்.எல்.எம்.ஹனீபா –


உலகின் உன்னத மொழிகளில் ஒன்றான பிரெஞ்ச் மொழியின் இலக்கிய வடிவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துபவை. நாம் வாழும் நமது வாழ்வையே நமக்கு காட்சிப்படுத்துவதோடு அத்தகைய இலக்கியம் நாடக வடிவுறும்போது நாமும் அங்கே நடிகர்களாகிறோம். அது பற்றி “காண்டாமிருகம்” என்ற இந்த நாடகத்தை எழுதிய உலகப் புகழ்பெற்ற “யூழேன் இயொனெஸ்கோ” இவ்வாறு குறிப்பிடுகின்றார்.


“அனைத்துப்பார்வையாளர்கள் நெஞ்சத்திலும்ஒரு வேதனையான உணர்வை, சங்கடத்தை, ஒரு விதமான வெட்கத்தை உண்டுபண்ண வேண்டும். சோகமானது ஜூர உணர்விற்கு மாறாவிட்டால் என்னுடைய சந்தோசம் துன்பத்திற்கு மாறாவிட்டால் நான் மிகச் சாதாரணமானவனாகவும், உணர்வற்றவனாகவும் உணர்கிறேன். நான் என்னை அவமதித்துக் கொள்கிறேன். ஏனென்றால் என்னால் விசயங்களின் எல்லை வரையில் செல்ல முடியவில்லை என்று அர்த்தம். ஒருவன் வடக்கில் வெகுதூரம் செல்ல வேண்டும் தெற்கை அடைவதற்கு, என்கிறார்.


ஒவ்வொரு காலகட்டத்திலும் சில வக்கிரங்கள் நாகரீகமாகக் கருதப்பட்டு, எல்லோரும் அதில் கண்ணை மூடிக்கொண்டு விழுவது நமக்கு தெரிந்ததே. பாசிசம், நாசிசம், சர்வாதிகார நாடுகளின் அரசு முறை, மதவாதம். ஆனால் ஒவ்வொருவரும் விரைவில் பரவிவரும் இந்த நாகரீகத்தை தழுவிக் கொள்ள ஒரு காரணம் கற்பிக்காமல் போக முடிவதில்லை. எனவே மனத்தின் ஒரு மூலையில் ஒரு உறுத்தலும், அதற்குச் சமாதானம் சொல்ல ஒரு தேவையும் தெளிவாகின்றன. இந்த நாடகத்தில் ஒருத்தி கணவனை கைவிட முடியாததால் காண்டாமிருகமாக மாறுகிறாள்; மற்றவர்களுக்கெல்லாம் அறிவுரை தரும், நம்பிக்கை தரும் ஒரு மனிதன் தான் முதலாவதாக காண்டாமிருகமாகிறான். ஒருவன் மிகத் தெளிவாக சிந்தித்து பேசிவிட்டு, ஊரோடு ஒத்துப் போக வேண்டும் என்று கூறி மாறுகிறான். எல்லோரும் மாறும் போது மாறாமல் இருப்பவர்களுக்கு தங்களைப் பற்றியே சந்தேகம் வருவது இயல்பு. இந்த நாடகத்தின் முக்கிய பாத்திரம் எளிதாக வருத்தத்திற்குள்ளாகிறவன், தவறுகளுக்கு தன்னைத்தானே மிகவும் நொந்து கொள்கிறவன், உள்மொழி விடாமல் ஒலிக்கும் மனதுடையவன், சுயசந்தேகங்களினால் விரட்டப்படுகிறவன், ஆனால் எல்லாவற்றிற்கும் எதிராக நின்று கடைசியில் மாறுதலைத் தவிர்த்து நின்று, மனிதனாக எஞ்சிப் போராட தீர்மானிக்கிறவன் இவன்தான். மனிதத் தன்மைகளை வெளிப்படையாகக் கொண்டவன் என்பதினால்.”

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 337: -ஈழத்துத் தமிழ்க் கவிதை -: ‘தேன்மொழி’க் கவிதைகள் – அ.ந..க.வின் ‘கடைசி நம்பிக்கை’ & ‘நான் செய் நித்திலமே’

அ.ந..க.

கவிதை: அ.ந..க.வின்  ‘கடைசி நம்பிக்கை’!

பொதுவாகப் பெற்றொர் பிறக்கும் பிள்ளை புத்திக்கூர்மையுடன் இருக்க வேண்டுமென்று விரும்புவர். ஆனால் இந்தத்தந்தையோ அதற்கு நேர்மாறு. காரணம் மிகுந்த புத்திக்கூர்மை மிக்க தந்தையிவருக்கு இவருடைய புத்திக்கூர்மை வாழ்க்கைக்கு உதவவில்லை. ‘யானோ எனது புத்தியின் கூர்மையால் , வாழ்க்கை முழுவதும் வரண்டு கிடக்கின்றேன்’ என்று வருந்துகின்றார். இதனால் இவர் வேண்டுவதுதான் யாதோ? தனது பிள்ளை அறியாமையிலும், மடமையிலும் சிறந்து விளங்கவேண்டுமென்று விரும்புகின்றார். அவற்றில் எவர்க்கும் குறைவிலாதிலங்க வேண்டுமென்று விரும்புகின்றார். 🙂

“இன்றென் நினைவு ஒன்றேயாகும் –
என்சிறு பிள்ளை நன்கு வளர்ந்து
அறியாமையிலும் மடமைச்சிறப்பிலும்
எவர்க்கும் குறைவிலா திலங்கி அமைதி
நிலவும் வாழ்க்கை நீள நடாத்”த வேண்டுமென்று விரும்புகின்றார்.

எதற்காகத் தெரியுமா?

அப்படியென்றால்தான் ,

“ஈற்றில் இந்த நாட்டை இயக்கும்
மந்திரி சபையிலும் குந்தியிருப்பான்” 🙂

ஓரு சீனக்கவிதையின் தமிழாக்கமிது. தமிழாக்கியிருப்பவர் அ.ந.கந்தசாமி. ‘தேன்மொழி’ சஞ்சிகையின் இரண்டாவது இதழில் (ஐப்பசி 1955) வெளியான கவிதை இது. இன்று ஆட்சிக்கட்டிலுள்ள அமைச்சர்கள் பலரைப்பார்க்கும்போது இக்கவிதையில் விரவிக்கிடக்கும் அங்கதம் இதழ்க்கோடியில் புன்னகையினை வரவழைக்கின்றது. அன்று பாடியது இன்றும் நன்கு பொருந்துகிறதல்லவா.

Continue Reading →