இலங்கைக் குண்டுத்தாக்குதல்களில் பலியாகிய , பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்பு’ ஒழுங்கு செய்த அஞ்சலி நிகழ்வு!

இலங்கைக் குண்டுத்தாக்குதல்களில் பலியாகிய , பாதிக்கப்பட்டவர்களுக்காக 'சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்பு' ஒழுங்கு செய்த அஞ்சலி நிகழ்வு!இன்று ஸ்கார்பரோவில் அமைந்துள்ள ‘ஹீரோ பார்ட்டி ஹா’லில் அண்மையில் இலங்கையில் நிகழ்ந்த கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஹொட்டல்கள் ஆகியவற்றில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களில் பலியான, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டமும், கலந்துரையாடலும் நடைபெற்றன. தற்போதுள்ள சூழலில் மிகவும் கட்டாயமாக நடத்த வேண்டிய இந்நிகழ்வினைச் சிறப்பாகக்  குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்ததற்காகக் ‘சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்பு’ பாராட்டுக்குரியது.  குறிப்பாக அவ்வமைப்பினைச் சேர்ந்த ரட்ணம் கணேஷ், நேசன் & டெரென்ஸ் அந்தோனிப்பிள்ளை , சபேசன், சத்தியசீலன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

நிகழ்வில் கனடியக் கலை, இலக்கிய, சமூக மற்றும் அரசியல் வெளிகளில் பங்கு பற்றும் பலரைக் காண முடிந்தது. குறிப்பாக நேசன் , பாலா (கரவெட்டி), எல்லாளன், அலெக்ஸ் வர்மா, கிருபா, திலீபன், மெலிஞ்சி முத்தன், கலாநிதி சுல்ஃபிகா,  பாலசுப்பிரமணியம் (கரவெட்டி), கற்சுறா, ஜெபா கற்சுறா, எஸ்.கே.விக்னேஸ்வரன், அவரது மகள் அரசி விக்னேஸ்வரன் , ‘அரங்காடல்’ செல்வன் , நிரூபா ஆயிலியம், சிவா கந்தையா (டெலோ),பாக்கியம் முருகேசு எனப் பலரைக் காண முடிந்தது.

நிகழ்வு அண்மையில் இலங்கையில் குண்டுத்தாக்குதல்களில் பலியாகிய மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்துவதுடன் ஆரம்பமாகியது. ‘சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்’பினைச் சேர்ந்த ரட்ணம் கனேஷின் ஒருங்கிணைப்பில் ஆரம்பமாகியது. நிகழ்வினை ஆரம்பித்து வைத்து அவராற்றிய உரையில் ‘சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்பு’ நடைபெற்ற தாக்குதல்கள் பல்லின மக்களுக்கிடையிலான இணக்கத்துக்கு அபாயத்தை ஏற்படுத்தியதுடன் இலங்கையின் பொருளாதாரத்துக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என்று எடுத்துரைத்ததுடன் அரசு மேலும் எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்கள் நிகழாதவாறு நடவடிக்கைகளை எடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார். இதற்கு மக்களாகிய நாமனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.

அவரைத்தொடர்ந்து கலாநிதி ந.ரவீந்திரன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை இலங்கையின் கடந்த கால மற்றும் தற்கால அரசியல் பற்றிய தெளிவான உரையாக அமைந்திருந்தது. இலங்கையில் மார்க்சிசக் கட்சிகளின் செயற்பாடுகள், தேசியப் பிரச்சினை , சோவியத் உடைவுக்குப்பின்னர் பண்பாட்டுத்தளத்தில் முன்னெடுக்கப்படும் சமூக, அரசியற் செயற்பாடுகள், இலங்கையில் நிலவிய சாதியை, இன, மத, மொழி மற்றும் வர்க்கத்தை மையமாக வைத்தியங்கிய அடையாள அரசியல், பயங்கரவாதத்தை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்த இலங்கைத்தமிழர்கள் (இவ்விதமான நடவடிக்கைகளை அவர்களது ‘பையன்க’ளே செய்திருந்தாலும் வெளியில் அவர்கள் அவற்றை அவர்களது ‘பையன்கள்’ செய்யவில்லை என்று கூறிக்கொண்டாலும், அவர்கள் ‘பையன்க’ளின் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்டிக்காலம் ஆதரவானதொரு நிலைப்பாட்டினையே எடுத்திருந்தார்கள் ) இவற்றைப்பற்றியெல்லாம் தொட்டுச் சென்றது அவரதுரை. அவர் தனதுரையில் முஸ்லிம் மக்கள் தம்மினத்தவர் செய்த தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களைக் கண்டித்ததன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே கண்டித்திருக்கின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

Continue Reading →