‘பதிவுகளில் அன்று’ : நீதி யாதெனில்…

‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


பதிவுகள்   ஜூன் 2008 இதழ் 102

தமிழ்நதிஊரை விழிகளால் அள்ளி ஞாபகப்பெட்டகத்துள் பூட்டிவைக்க வேண்டியிருக்கிறது. அந்நிய நிலங்களில் விழுந்து காயப்படும்போது மருந்தாகப் பூசிக்கொண்டு மீண்டுமொரு பொய்மிடுக்கில் உலவ அது உதவலாம். சில நண்பர்களைப் போல நாடு,இனம்,மொழி இன்னபிற கரைதல்களை அறுத்தெறிந்து விட்டேற்றியாகும் ‘பெரும்போக்கு’ மனம் இன்னமும் கூடவில்லை. அறைச்சுவர் தடவி, வேம்பின் பச்சையை விழிநிரப்பி, பூனைக்குட்டிகளின் கால்மிருதில் யாருமறியாதபடி முத்தமிட்டு விடைபெற்றேன். பேரறிவாளர்கள் இந்நெகிழ்வை பெண்ணியல்பு எனக்கூடும். பெருநகருக்கேயுரித்தான பைத்தியக்காரப் பரபரப்போடு இயங்கிக்கொண்டிருந்த கொழும்பில் நுழையும்போது மகிழ்ச்சியாகத்தானிருந்தது. தேவைகளின் குரல்களால் ஓயாமல் அழைத்துக்கொண்டேயிருக்கும் குடும்பம் அற்ற ‘தனியறை நாட்கள்’ என்னளவில் கொண்டாடத்தக்கன. மடிக்கணனி, சில புத்தகங்கள், இசைத்தட்டுக்கள், கடலோரம் மாலை நடை இவை போதும் தனியறை நிரப்புதற்கு. கனடா கடவுச்சீட்டிற்கு இந்திய விசா தர ஒரு வாரம் வேண்டுமென்றது ஒருவகையில் நல்லதாயிற்று.

இரண்டு நாட்கள் இனிதே கழிந்தபின் உண்டியல்காரர் வடிவில் வந்தது வினை. “இந்த அறையில் தனியே இருக்கிறீர்களா?”புருவங்களை உயர்த்திக் கேட்டார். ஆமென்றேன். “இப்படியான இடங்களில் தனியே இருப்பது பிழை. தேவையற்ற பிரச்சனை வரும்”என்றார். நான் தங்கியிருந்தது யாழ்ப்பாணத்தவர் ஒருவரின் – ஒரு நட்சத்திர குறியும் அற்ற விடுதியொன்றில். 2001ஆம் ஆண்டிலிருந்து கொழும்பு வரும்போதெல்லாம் அதுவே என் தங்ககமாயிருந்தது. விடுதிப் பையன்கள் கோழிப்பார்சல் சொல்லியனுப்பினால் கூடவே பழங்களும் வாங்கிவருவார்கள். அடிக்கடி படுக்கை விரிப்பு மாற்றி, என் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து பெரிய குவளையில் பிரத்தியேகமாகத் தேநீர் தந்து ‘ஆதரவாக’க் கவனித்துக்கொள்வார்கள். அதற்காக நான் சில நூறு ரூபாய்களை உவந்தளித்திருந்தேன் எனச் சொல்ல வேண்டியதில்லை. உண்டியல்காரர் போனபிறகு பயம் ஒரு குளவியைப் போல அறையினுள் சொய்யிட்டுக்கொண்டிருந்தது. அதற்குத் துணையாக அறையின் வசதிக்குறைவு தன்னைப் புதுப்பித்துக்கொண்டு கண்ணெதிரில் நின்றது. மேலும், அந்தத் தெருமுனையில் நிற்குமொரு ஆட்டோக்காரன் என்னை ஏற்றிக்கொண்டு போனபோது தனது சகாவை அவசரமாக வரும்படி அழைத்திருந்தான். நான் கைப்பையை இறுக்கிக்கொண்டு ஆட்டோவை சடுதியாக நிறுத்தி போகுமிடத்திற்கு முன்னதாகவே இறங்கிவிட்டேன். ஒன்றைச் செய்ய முடிவெடுத்துவிட்டால், அதனை வழிமொழியும் காரணங்களைக் கற்பித்துக்கொள்வதொன்றும் சிரமமில்லை.மறுநாள் காலை நான்கு நட்சத்திர விடுதியொன்றின் ஆளை அமிழ்த்தும் கட்டிலின் மென்மையை வியந்தபடி படுத்திருந்தேன். நேர்த்தியாக தரை ஓடு பதிக்கப்பட்டிருந்த விசாலமான குளியலறைப் பீங்கான் மீதமர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டிருப்பதற்கான ஒருநாள் கட்டணம் 6,800ரூபாய்கள். குற்றவுணர்வைத் தூண்டும் தொகைதான். எனினும், ‘உயிருக்கு விலையில்லை’ என்ற மகாதத்துவத்தின் முன் யாதொன்றும் செய்வதற்கில்லை.

இப்போது பிரச்சனைப் பூதம் இல்லாத யன்னலிலிருந்து கிளம்பியது. நான் இருந்த 308இலக்க அறையிலிருந்து அலையெறியும் கடலைப் பார்க்க முடியாது. குறைந்தபட்சம் தெருவைக்கூடப் பார்க்க முடியாது. எஞ்சியிருந்த இடத்தை என்ன செய்வதென்றறியாமல் கட்டிய அறைபோலிருந்தது அது. என் வயிற்றெரிச்சலைக் கிண்டுவதற்கென்றே ஏப்ரலிலும் அதிசயமாக மழை வேறு பெய்துகொண்டிருந்தது. அறையை மாற்றித் தரும்படி கேட்டேன். விடுதி நிறைந்திருப்பதால் இல்லையென்றார்கள். யன்னலற்ற அறையொன்றினுள் குருட்டு வெளவாலைப்போலமுட்டிமோதிக்கொண்டிருப்பது ‘வாராமல் வந்த மாமணியாகிய’ஓய்விற்கு இழைக்கும் துரோகமெனப்பட்டது.

Continue Reading →

பதிவுகளில் அன்று: கருமையமும் மையமற்றுச் சுழன்ற சில நாடகங்களும்!

‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


பதிவுகள் ஏப்ரல் 2007 இதழ் 88

- என்.கே.மகாலிங்கம் -கருமைய நாடக நிகழ்வுக காட்சி..கருமையத்தின் 3வது ஆண்டு நாடக நிகழ்வுகள் மார்ச் 31 சனிக்கிழமையே பார்க்கக் கிடைத்தன. பெண்கள் பயிற்சிப் பட்டறையிலிருந்து மூன்று நாடகங்களும் செழியன், தர்சன் ஆகியோரின் இரு நாடகங்களும் சுதர்ஷனின் நாட்டிய நாடகமும் நிகழ்ந்தன. ஏறக்குறைய இரண்டரை மணித்தியாலங்கள். பெண்கள் பட்டறையின் நாடகங்கள் சிறியவை என்றாலும் தாம் சொல்ல வந்த செய்தியை சுருக்கமாக நடித்துக் காட்டி விடை பெற்றன.

முதலாவது நாடகம், இன்னும் எங்கள் காதில். தனா பாபுவின் ஆக்கம், நெறியாள்கை. தமிழீழப் போராட்டத்தை ஆதரிக்கும் புலம்பெயர்ந்தவர்கள் சிலரின் இரட்டை வேடத்தையும் போலித்தனத்தையும் புட்டுக் காட்டியது இந்நாடகம். யுத்தத்தில் இறக்கும் தம் உறவினரின் பெயரை வைத்துத் தாம் ஏதோ செய்ததாகப் பீத்திப் பெருமை கொள்ளும் ஒரு குடும்பத்தின் கதை இது. தன் மகனை யுத்தத்திற்கு அனுப்ப நொண்டிச் சாக்குக் காட்டுவதும், இயக்கத்தில் இருந்து வெளியேறிய பெண் என்றவுடன் திருமணம் செய்ய அஞ்சி ஒதுங்கும் மகனையும் பெற்றோரையும் காட்டும் கதை இது. தம் கருத்தைச் சுருக்கமாகவே வெளிப்படுத்தி எம் மக்களின் மனங்களை போலித்தனங்களை விமர்சித்து விட்டு, தீர்ப்புக் கூறாமல் விலகிச் செல்கிறது நாடகம். அந்தளவில் அது வெற்றியே.

தாலாட்டு நாடகம் இரண்டாவது. பெண்களின் நுண் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் குழந்தைகளைப் பெறும் பொறியாகப் பெண்களை நடத்துவதைக் காட்சிப்படுத்தியது நாடகம். அதில் இறுதியாக வந்து குழந்தைகளையும் பெண்களையும் அருமையான, இனிமையான, சோகமான குரலில் தாலாட்டுப் பாடினார் அம்மா யோகேஸ் பசுபதி. அவர் பாடிய குரலும் பாட்டும் பெண்களின் சோகத்துக்கு உயிரூட்டியதுடன் பார்வையாளர்களையும் அதனுடன் ஒன்றச் செய்தது. நாடகத்திற்கும் உயிர் கொடுத்தது. அதீதாதாவின் தாலாட்டுப் பாடல் இனித்தது.

அடுத்தது, சுயம் என்ற சிறிய நாடகம். ஆரம்பத்தில் அசையாமல் உறைநிலையில் பல நிமிசங்கள் நின்றபோதிலும் அந்நிலையிலிருந்து மீள வெளிக்கிட்டவுடன் அது நாடகமாக உருவெடுத்தது. இளம் பெண்களை அப்படி நிற்காதே, இப்படி நிற்காதே, இப்படி உடுக்காதே, அப்படி அழகுபடுத்தாதே என்று கட்டுப்படுத்துவது எம் சமூகம், ஆனால் மறுதலையாக, ஆண்கள் விரும்புவது பெண்கள் அரைகுறையாக ஆடை அணிந்து ஆட்டம் போடும் நடனங்களையே. இது என்ன இரட்டை வேடம்? அதையே சுயம் என்ற இந்நாடகம் தெளிவாகவும் நாடகத்திற்கேற்ற அளவுடனும், சிறந்த உத்திகளுடன் மையக் கருத்தை விட்டு நகராமல் சுருக்கமாக மனதைத் தைக்கக் கூடியதாக மௌனமாகக் கேட்டு விட்டு நகர்ந்து விடுகிறது. ஆக்கி அளித்த பெண்கள் பயிற்சிப் பட்டறைக்கு ஒரு கைதட்டல். பாராட்டு.

Continue Reading →

பதிவுகளில் அன்று: பெண்ணியாவின் ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!’

பெண்ணியாவின் கவிதைகள்... ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


பதிவுகள் டிசம்பர் 2006 இதழ் 84

இது- கண்ணீரும் கவலையும் கழிந்து புத்துயிர்ப்புடன் வீறு கொண்டெழும் எல்லாப் பெண்களினதும் சார்பான குரலாக ‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!’ சோம்பலுடன் சுருண்டு தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு பூனைக்குட்டியைச் சிலிர்த்துக் கொள்ளச் செய்யும் ஒரு நேசமான தடவலைப்போல பெண்ணியாவின் கவிதைவரிகள் ஆங்காங்கு மனதைச் சிலிர்க்கச் செய்கின்றன. வீடு, வேலை, முற்றம, சுற்றம் என்று மட்டும் வட்டங்களிடப்பட்ட பெண்களின் வாழ்வில், இயல்பான நேசத்துடன் உணர்வுச் சூழல்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய நட்புக்காக ஏங்குவதே வழக்கமாகி விட்டபின், நம்பிக்கையான நட்பாகுபவை இரண்டுதான். ஒன்று மொழி புரியாத குழந்தை மற்றையது இயற்கை. முற்றத்து மரங்களுக்கும் பெண்களுக்கும் உள்ள நேசம் அலாதியானது. மிக இயல்பானது. அவற்றில் வந்து தங்கும் பறவைகளும் அணில்களும்தான் ஆத்மார்த்த நண்பர்கள். வீட்டிலுள்ள உறவினர்க்கும் புரியாத உணர்வுகளை துல்லியமாக புரிந்து கொண்டவையும் கூட. இப்படித்தான் பெண்ணியாவின் முதலாவது கவிதை ‘நேசம் அல்லது நெல்லிமரம்’ வெளிப்படுகின்றது. அடக்கி வளர்க்கப்பட்ட பெண்களின் உணர்வுப் பிரதிபலிப்பாக தன்மீதே நம்பிக்கையிழந்த வாழ்வின் கருத்தாக ஆரம்பிக்கின்றது.

‘என்னையே பார்க்கும் நெல்லிமரம்
என்ன வடிவாய்த்தான் உள்ளது.
என் முகத்தை விட!’
(நேசம் அல்லது நெல்லிமரம்)

என்கிற வரிகள்.

இன்றைய சமூகத்தில் பெண்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் திகழ்வது வெளிப்படை எனினும் பெரும்பாலான நடுவயதுப் பெண்களிடையே இத்தகைய உணர்வுகளே காணப்படுகின்றன. இங்கு தொனிக்கும் சோக உணர்வை ஊசலாடும் நம்பிக்கையின்மையை இன்னும் வலிதாக வெளிப்படுத்துகின்றன.

ஒரு உருண்டையின்
நுனியில் தொங்கிக் கொண்டிருக்கிறேன்’

(மாதராய்ப் பிறந்திட)

என்ற வரிகள்.

உருண்டைக்கு நுனி இருக்காது. இருந்தாலும் வலுவாகப் பற்றிக் கொள்ளக் கூடியதாக அமையாது. அதில் தொங்கும் ஒரு மனதில் ஊசலாடும் நம்பிக்கைகளும் மிக மெல்லியவையே.வீட்டிற்குள் மனைவி, தாய், தாதி என்ற வகைகளில் வளைய வரும்போது, பழக்கப்பட்ட ஒரு தடத்தில் எந்த மாற்றமும் இல்லாத வாழ்க்கை முறையில் இயங்கும் மரத்துப்போன உள்ளத்திலும் ஒரு தேடல்; என்னவென்றே இனம்புரியாத தேடல். சராசரியாக எல்லாப் பெண்களின் வாழ்விலும் காணப்படக்கூடிய உணர்வுதான். மாற்றங்களை எதிர்பார்த்த போதும் மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும்போது சமூகத்திற்கான அச்சம் அவர்களை சிலையாக்கிவிடும்.

Continue Reading →

நான் போக முடியாத “மாவீரர் நாள்”

‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


பதிவுகள் ஜனவரி 2007 இதழ் 85
கட்டுரையாளர் நடராஜா முரளிதரன்1998 இன் நடுக்கூறில் நான் கனடாவிற்குள் நுழைந்த பின் அரசியல் தஞ்சம் கேட்டு 40 நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தேன். அதன் பின் ஏறத்தாள இரண்டரை மாதங்கள் வரை கனடியச் சிறைகளுள் அடைக்கப்பட்ட பின்னர் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் கனடிய டாலர்கள் பிணை(ஒரு இலட்சம் வீடு, ஐம்பதினாயிரம் பணம்) அரசியல் செயல்பாடுகள் தொடர்பான 14 நிபந்தனைகள் உட்பட இரு வாரங்களுக்கு ஒரு தடவை “இமிக்கிரேசன்” அலுவலகத்திற்குச் சென்று கையெழுத்திடல் போன்ற கண்டிப்பான நீதிமன்ற உத்தரவுகளின் பேரிலேயே நான் விடுதலை செய்யப்பட்டிருந்தேன்.

அதன் பின் ஏழரை வருடங்களின் பின் இவ்வருட மத்தியில் எனது பெயருக்கு முதற் தடவையாக ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகக் கூடிய வேலை செய்ய அனுமதிக்கும் பத்திரம் வழங்கப்பட்டது. ஆயினும் இது வரை இலவச மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கான “ஹெல்த் கார்ட்” எனக்கு வழங்கப்படவில்லை.

எனது மகள் உயர் கல்வி பெறுவதற்காக பல்கலைக் கழகத்துள் உட்புகுந்த போது அவளால் எந்தக் கடனுதவியையும் “ஒன்ராரியோ” அரசிடமிருந்து பெற முடியாமல் போனது. மாறாக “வெளிநாட்டு மாணவர்” என்ற இலச்சினை பொறிக்கப்பட்டு இரண்டரை மடங்குக்கு மேலான (குடியுரிமை பெற்ற அல்லது நிரந்தர வதிவிட உரிமை பெற்ற மாணவர்களோடு ஒப்பிடுகையில்) கட்டணத்தைப் பல்கலைக்கழகத்திற்குச் செலுத்துமாறு நிர்பந்திக்கப்பட்டாள்.

இவ்வாறான கழுத்தை நெரிக்கும் பொருளாதார நெருக்கடிகள் ஒரு புறமிருக்க அரசியல் செயல்பாடுகள் தொடர்பான நீதிமன்றத்தின் கண்டிப்பான 14 நிபந்தனைகளும் எத்தகைய மீறல்களுக்கும் உட்படுத்தப்படாமல் என்னால் பேணப்பட வேண்டியவை. அல்லாவிட்டால் எனது பிணைகள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டு நானும் சிறையுள் மீண்டும் தள்ளப்படலாம். அத்தகைய நிபந்தனைகளுள் “விடுதலை புலிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாக ஆதரிக்கும் கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் போன்றவற்றில் நான் பார்வையாளனாகவோ அல்லது பங்காளனாகவோ கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை என்பது முக்கியமான ஒன்று. அரசியல் வேலைத் திட்டங்களை ஆழ்மனதில் புதைத்துக் கொண்டு கனடாவுக்கு நான் வந்ததாக யாரும் என்னை சந்தேகிக்கத் தேவையில்லை. ஆயினும் “மாவீரர் நாள்” வந்து போகும் வேளைகளில் அவ்வாறான நிகழ்வொன்றுக்கு நான் போக முடியாதது குறித்து எனது மனம் துயருறுவது வழக்கம். இத்தகைய எனது துயரத்துக்கு “அரசியல் முலாம்” பூசி விட முடியாது. நான் சார்ந்த அல்லது சார முயலுகின்ற அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டுச் சாதாரண தனி மனிதனாவே அந்த வேதனையின் வெளிப்பாடுகளைச் சுமந்து செல்ல நேருகிறது.

ஈழப் போராட்ட களம் பல்லாயிரக்கணக்கான மக்களின் உடல்களில் இருந்து கொப்பளித்துப் பாய்ந்த குருதி வெள்ளத்தினால் சேறாகிய “குருஷேத்திரமாகவே” கடந்த இரு தசாப்தங்களாகக் காட்சியளிக்கிறது. அந்த மண்ணில் வாழ்ந்த, வாழும், வீழ்ந்த, வெளியேறிய மண்ணின் மைந்தர்கள் யாவருக்கும் அந்த மண்ணோடு பிணைந்த சொல்ல முடிந்த, சொல்லில் வடிக்க இயலாச் சரிதங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்றாக என்னை மிகவும் பாதித்து நிற்கின்ற ஈழப் போர்க்களத்தில் வீழ்ந்து மடிந்த எனது நண்பன் “லிங்கம்” பற்றிய எண்ண அலைகள் சிலவற்றையே இங்கு மீட்க முயலுகின்றேன்.

Continue Reading →

அப்பாவின் முகம் பார்க்கும் கண்ணாடி

முல்லைஅமுதன்அப்பா என்றில்லை..யாவர்க்கும் பொதுவான குணம்தான்.அப்பா என்பதினால் அதிகமாய் கவனத்தில் கொள்கிறோம். அவ்வளவே. காலை, மாலை, இரவு என மாறுகின்ற பொழுதுகளுடன் நாமும் நகர்ந்துகொண்டிருக்கிறோம்.

தன்னம்பிக்கை மிக்கவர் அப்பா.வாழ்வின் சகல அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்து தன்னைத்தானே வடிவமைத்துக் கொண்டவர்.

ஒருநாள் மாலைநேரம் இரத்தம் சொட்டச் சொட்ட பரிதவித்துவந்தது பூனை.. விறாந்தை முழுக்க ரத்தம்.

அப்படியே அனைத்துத் தூக்கிப்பிடிக்க அம்மா துணியால் துடைத்துவிட்டு இன்னொரு துணியால் இரத்தம் வந்த பகுதியை கட்டிவிட்டால்.வலியால் பூனை துடித்தது.

அம்மா அப்பாவைத் திரும்பிப்பார்த்தாள்.

உடைஞ்சு போச்சு எண்டு தெரியும்..அதைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போறதுக்கு பொருட்காட்சிக்கு வைக்கபோற மாதிரி…’

அப்பா எதுவும் பேசவில்லை.

அந்தக் கண்ணாடியை தனது பதினைந்தாவது வயதில் தனது முதல் உழைப்பில் வாங்கியதாக பெருமையாகச்சொல்வார்.

முகச்சவரம் செய்வதற்கு சலூனுக்குப் போனதில்லை.முகச்சவரம் செய்யும் கருவிக்குள் பிளேட்டைப்பொருத்தி முகச்சவரம் ச்ய்வார்..அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பார்

எங்களுக்கும் பழகிப்போயிற்று..அறைக்குள் கண்ணாடி இருந்தாலும் பவுடர் போடவும்,பொட்டுச் சரியோ எனப்பார்க்கவும் அம்மாவும் தங்கைகளும் முண்ணனியில் நிற்பார்கள்.நானும் தலையைச் சீவவும்,பவுடர் போடவும் தான் என்றாலும், அவ்வப்போது வளர்கிற தாடியை பார்த்து உள்ளுக்குள் குதூகலிக்கவும் அந்தக் கண்ணாடியின் உதவி தேவைப்பட்டது.

அடுக்களையிலிருந்து அம்மா தங்கைகளைக் கூப்பிட்டாலும், ம் ..ம் என்று வெகுநேரம் கண்ணாடியின் முன்னால் நிற்பதைக் காண அம்மாவிற்கு கோபமாக வரும்.விறகுக்கட்டையுடன் வர அம்மா.. என்றபடி அறைக்குள் நுழைந்துவிடுவார்கள்.

Continue Reading →

(பதிவுகள்.காம்) பதிவுகளில் அன்று: வன்னியிலிருந்து மூன்று படைப்புக்கள்

- டிசெ தமிழன் -– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


பதிவுகள் செப்டம்பர் 2005 இதழ் 69 –

உக்கிரமான போர்க்காலத்தில் வன்னியிலும் மக்கள் வாழ்ந்தார்கள் என்று ஏனைய நாடுகள் ஒப்புக்கொள்வதற்கு அந்த மக்கள் சமாதானக்காலம் வரை காத்திருக்கவேண்டி வந்தது. அதேபோன்று அந்தக் கடும் நெருக்கடிக் காலகட்டத்தில் வன்னிப்பெரும் நிலப்பரப்பிலிருந்து குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பல படைப்பாளிகள் தோன்றியிருந்தனர் என்று புலம்பெயர்ந்தவர்கள் அறியவும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று. நானறிந்தவரையில், போர்க்காலத்தில் மூன்றாவது மனிதன் ஓரளவு வன்னியிலிருந்து எழுதிய படைப்பாளிகளைப்பற்றி குறிப்புக்களை எழுதியதை வாசித்திருக்கின்றேன். அதில் சி.சிவசேகரம், மு.பொன்னம்பலம் போன்றவர்கள் வன்னியிலிருந்து முகிழ்ந்த படைப்புக்களுக்கு விமர்சனங்களை அவ்வவ்போது எழுதியிருந்தனர்.

அமரதாஸின் இயல்பினை அவாவுதல் (1999), நிலாந்தனின் யாழ்ப்பாணமே ஓ… எனது யாழ்ப்பாணமே (2002), தானா.விஷ்ணுவின் நினைவுள் மீள்தல் (2003) போன்றவை வன்னிப்பெரும் நிலப்பரபிலிருந்து அச்சிட்டு வெளியிடப்பட்டாலும், படைப்பாளிகள் வன்னிக்குள்ளும் வெளியிலும் வாழ்ந்தவர்கள்; வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். வன்னியிலிருந்து பதிக்கப்பட்டதால், அவற்றை வன்னிப்படைப்புக்கள் என்ற ஒரு இலகுவான பிரிப்புக்குள் கொண்டுவரலாம் என்று நினைக்கின்றேன்.

இயல்பினை அவாவவுதல் தொகுப்பை வெளியிட்ட அமரதாஸ் ஒரு போராளியாக இருந்தவர். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் களத்தில் நேரடியாக நின்றவர். சண்டிலிப்பாய் – அளவெட்டிப்பகுதியில் நடைபெற்ற புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் காலில் படுகாயம் அடைந்து இன்றும் ஒருகால் சரியாக இயங்காது அவதிப்படுபவர். இன்றையபொழுதில் போராட்ட அமைப்பிலிருந்து முற்றாக விலகி சாதாரண ஒரு பொதுமகனாக, துணைவி, பிள்ளை என வாழ்ந்துகொண்டிருக்கின்றார். அவருடம் நேரடியாகப் பேசியபோது தன்னை ஒரு சுயாதீன பத்திரிக்கையாளர் (Freelance Journalist) என்றே அடையாளப்படுத்த விரும்புவதாய்க் கூறியது நினைவு.

அமரதாஸ் என்னும் படைப்பாளி பற்றி, கருணாகரன் இந்தத் தொகுப்புக்கான முன்னுரையில் இப்படிக் கூறுகின்றார். ‘அமரதாஸ் 23 வயது இளைஞர்; ஈழக்கவிஞர்; தொண்ணூறுகளில் ஆரம்பத்திலிருந்து எழுதத்தொடங்கியவர்.; இலக்கியத்தின் பிற துறைகளிலும் ஈடுபடுபவர்; வாழ்வின் சகல விடயங்கள் பற்றியும் தீர்க்கமாக உரையாடுபவர்; புரிந்துணர்வோடும் விரிந்த சிந்தனையோடும் உறவாடுபவர். இவரின் கவிதைகளிலும் இந்தப் பின்புலங்களை உணரமுடியும். இவற்றுக்கப்பாலான அம்சங்களையும் அடையாளங்களையும் இவருடைய கவிதைகளில் வாசகர்கள் உணரக்கூடும்.’

Continue Reading →

பதிவுகளில் அன்று: சத்திய யுகத்தை அகத்தில் இருத்திய கவிஞன், சு.வில்வரெத்தினம்!

- என்.கே.மகாலிங்கம் -– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


பதிவுகள் ஜூலை 2008 இதழ் 103

[ சு.வில்வரெத்தினத்தின் இசைப்பாட்டுக்கள் இப்பொழுது மற்றவர்கள் பாடி வெளிவருகின்றன ஒரு இசைப்பேழையில். அது காலத்துக்குத் தேவையான ஒரு செயற்பாடு. அந்த ஒலிப்பேழையில் 11 பாடல்கள் இருக்கின்றன. பலர் பாடியிருக்கின்றனர். எஸ்.வி.வர்மன் இசை அமைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை , 22 ஜூன் 2008, மாலை ஐந்து மணிக்கு கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடக்கவிருக்கிறது. .]

சு.வில்வரெத்தினம்என்.கே.மகாலிங்கம்சுப்புரெத்தினத்துக்கு, பாரதிதாசன் என்று தன் புனைபெயரை ஆக்கிக் கொள்வதற்கு முன்பு, பாரதியாரை ஒரு கல்யாண விழாவில் தற்செயலாகச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. சுப்புரெத்தினம் ஏற்கெனவே பாரதியாரின் சுதேசிய கீதங்களைப் படித்து, அவற்றால் கவரப்பட்டிருக்கிறார். பாரதியாரை அவர் தெருக்களில் கண்டிருக்கிறார். அவரை ஓவியர் ரவிவர்மாவின் ‘பரமசிவம்’ என்று மட்டும் மனதில் பதிவும் செய்திருந்திருக்கிறார். அவரும் அந்த விழாவுக்கு வந்திருந்தார். ஆனால் அவர் தான் அந்தத் தேசிய கீதங்களைப் பாடியவர் என்று சுப்புரெத்தினத்திற்குத் தெரியாது. அந்த விழாவில் சுப்புரெத்தினம், ‘வீரசுதந்திரம் வேண்டி நின்றார் வேறொன்று கொள்வாரோ’ என்ற பாடலைப் பாடுகின்றார். பாரதியாh,; ‘யார் இவர்? இவர் பாடல்களை உணர்ந்து பாடுகிறார்’ என்கிறார். அவரைத் தன் வீட்டுக்குக் கூட்டி வரச் சொல்லித் தன் நண்பருக்குக் கூறுகின்றார். சுப்புரெத்தினம் அங்கு போன போது பாரதியார் இன்னொருவர் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்தச் சந்திப்பு சுப்புரெத்தினத்தைப் பாரதிதாசனாக்கியது என்பது வரலாறு. இரண்டு கவிஞர்களுமே பாடல்களை வாய் திறந்து இசையுடன் பாடக் கூடியவர்கள் என்பது மேலதிகச் செய்தி.

பாரதியார் பாடுவார் என்பதை யதுகிரியம்மாள், வ.ரா. பத்மநாதன் போன்றோர் பதிவு செய்துள்ளனர்;. ஒருமுறை, தற்செயலாக பாரதியாரை வழியில் சந்தித்த வையாபுரிப்பிள்ளை கூட தன் அறைக்கு அவரைக் கூட்டிப் போய் பாட வைத்தார் என்பதும் இன்னொரு செய்தி.

கவிதைகளைப் பாடுவதும் இசையுடன் பாடும் வழக்கமும் இருந்திருக்கிறது. எம் சங்கப் பாடல்கள் பாடப் பட்டவையே என்று தமிழறிஞர் தொ.பரமசிவன் கூறுவார், அதன் ஏகார முடிவுகளை வைத்து. வாய் மொழிக் கவிதை இலக்கிய வரலாற்றுக் காலத்தில் அதை நம்புவதற்கு அதிக இடமும் இருக்கிறது.

பாரதியார், தனது பாடல்கள் பலவற்றுக்கு ராகம், தாளம் என்னென்ன என்றும், பல்லவி, அனுபல்லவி, சரணங்கள் என்றும், சிந்து, கும்மி, வகைப் பாடல்கள் என்றும், நந்தனார் வர்ண மெட்டு, ஆனந்தக் களிப்பு மெட்டுப் பாடல் போல பாட வேண்டும் என்றெல்லாம் எழுதியுள்ளார். அதேபோல சுத்தானந்த பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் கூட இப்படியாகப் பாடப்பட்டுள்ளன. எம்மூர் சோமசுந்தரப் புலவர் கூட அப்படிப் பாடப்படக் கூடிய பாடல்களையே பாடி உள்ளார். ஓசை நயமுள்ள எதுகை, மோனைகளில் எழுதப்பட்ட மரபுக் கவிதைகளை இசை அமைத்துப் பாடுவது சாத்தியம். அதேபோல, தாலாட்டு, ஒப்பாரி போன்ற பாடல் வகைகளிலும் பாடப்பட்டுள்ளன. செய்யுளில் எழுதுவது மனனம் செய்ய இலகுவானது மட்டுமல்ல, பாடுவதற்கும் வசதியானதே. அதிக அளவில் ஏடுகளோ நூல்களோ இல்லாத காலத்தில் அதற்கு இடமிருக்கிறது. ஆனால் புதுக் கவிதைகளை அப்படிப் பாடுவதற்கு அதிக சாத்தியமில்லை. ஓசை நயக்குறைவு காரணமாக.

Continue Reading →

பதிவுகளில் அன்று: ‘கள்ளம்’ நாவலும் காமம் பற்றிய சில குறிப்புக்களும்!

தஞ்சை ப்ரகாஷின் 'கள்ளம்' நாவல்- டிசெ தமிழன் -– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


பதிவுகள் ஜனவரி 2007 இதழ் 85

நாம் எல்லோரும் நம் வாழ்வில் கள்ளம் செய்துகொண்டே இருக்கின்றோம். பெற்றோருக்குத் தெரியாமல், துணைக்குத் தெரியாமல், குழந்தைகளுக்குத் தெரியாமல், நண்பர்களுக்குத் தெரியாமல் என நுட்பமாய் எமக்கான கள்ளங்களைச் செய்து கொண்டிருக்கின்றோம். கள்ளங்கள் பிடிபடும்போது அவமானப்பட்டும், பிறரின் பார்வைக்கு அது அகப்படாதபோது குறுகுறுப்பான மகிழ்ச்சியுடன் அதைக் கடந்தபடியும் போய்க் கொண்டிருக்கின்றோம். தஞ்சை ப்ரகாஷின் ‘கள்ளம்’ நாவலும் பலரது கள்ளங்களை நம்முன் நிலைக்கண்ணாடியாக -அரிதாரங்களையின்றி- முன் நிறுத்துகின்றது. எனினும் வாசிக்கும் நமக்குத்தான் அவை கள்ளங்களாய்த் தெரிகின்றனவே தவிர, இந்நாவலிலுள்ள பல பாத்திரங்களுக்கு அவை இயல்பான வாழ்க்கை நடைமுறைகளாகத் தெரிகின்றன.

தஞ்சாவூர் ஓவியங்களை பராம்பரியமாகச் செய்துகொண்டு வருகின்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ராஜூ என்கின்ற கலைஞன், எந்த மாற்றமும் இல்லாமல் புராதனத்தை அப்படியே பின்பற்றி ஓவியஞ் செய்கின்ற தந்தையோடு முரண்படுகின்றான். சுயாதீனமாய் எதுவுஞ்செய்யாது, வெட்டி ஒட்டி கண்ணாடிச் சில்லுகளால் அலங்கரித்து வெளிநாட்டில் அவற்றை நல்லவிலைக்கு விற்று பணஞ்சம்பாதிக்கும் தனது தந்தையை மிக வெறுக்கும் ராஜு குடியிலும், கஞ்சாவிலும் மிதக்கின்றான். ராஜூ தனது மகன் என்ற காரணத்திற்காகவும், தனது கெளரவம் பாதிக்கப்படக்கூடாது என்றவகையிலும் ராஜூவின் ‘அடாவடிகளை’ சகித்து அவனது செலவுகளுக்கு கேட்ட நேரத்துக்கு எல்லாம் காசு கொடுத்து கவனிக்கின்றார் ராஜூவின் தந்தை. ஒருநாள் சிதைந்து போய்க்கொண்டிருக்கும் தஞ்சாவூர் அரண்மணையின் சிக்கலான தெருக்களில் ஒன்றில் பாலியல் தொழிலாளியான பாபியைச் சந்திக்கின்றான் ராஜூ. ஆனால் அவளை விட அந்தப் பாலியல் தொழிலாளிக்கு கூடமாட ஒத்தாசை செய்து சமைத்துக் கொண்டிருக்கும் ஒரு மராட்டியப் பெண் மீது ராஜூவுக்கு மையல் வருகின்றது. பாபியால் -தான் தெரிந்து வைத்திருக்கின்ற பாலியல் தொழிலால் எந்த ஆணையும் அடித்து வீழ்த்த முடியும் என்ற எண்ணத்தை-ராஜூவை நுட்பமான விதத்தில் ஈர்த்து ஜூம்னா வெற்றி கொள்கின்றாள். பாபிக்கு பொறாமை தீயாய் எழுகின்றது.

ஜும்னாவுடன் சேர்ந்து சேரியில் வாழத்தொடங்கும் ராஜூ சேரி மக்களின் கடவுள்களான சுடலை மாடனையும், காடனையும், இராயனையும், சூரனையும் தஞ்சாவூர் கண்ணாடிச்சில்லுகள் தெறிக்க தெறிக்க பிரமாண்டமாய் கட்டி எழுப்புகின்றான். அவனின் ஆளுமை கண்டு சேரிப் பெண்கள் பலர் அவனில் மையல் கொள்கின்றனர். தம் விருப்பங்களை நாகரீகம் பூசி மினுக்காமல் நேரடியாக ராஜூவிடம் தெரிவிக்கவும் செய்கின்றனர். ராஜூவை அந்தச் சேரிப் பெண்கள் மட்டுமில்லை அந்தச் சேரி ஆண்களும் தலையில் வைத்துக்கொண்டாடுகின்றனர். அன்றைய நாளின் பசியை எப்படித் தீர்ப்பது என்ற கவலையைப்போல அன்றைய நாளின் காமத்தைத் தீர்ப்பது அன்றைய நாளுக்குரியது என்பதாய் சேரி மக்களுக்கு வாழ்க்கை முறை இருக்கின்றதே தவிர கடந்தகாலம்/நிகழ்காலம் குறித்த எந்தப்பிரக்ஞையும் அம்மக்களுக்கு இருப்பதில்லை. தமக்கான -ஒழுங்கு நடைமுறைப்படுத்திய சமூகம் கூறும்- கள்ளங்களைத் தெரிந்தே செய்கின்றனர். ராஜூ தன்னில் மையல் கொள்ளும் பெண்களுக்கு -உடலகளைக் கலக்கச் செய்யாமல் ஆனால் ஒருவித காமத்தைத் தக்கவைத்தபடி- தனது தஞ்சாவூர் ஓவியக் கலையைக் கற்றுக்கொடுக்கின்றான். ‘கருப்பையைக் கழற்றி வைக்காதவரை உங்களுக்கு எங்களைப் போன்ற ஆண்களிலிருந்து சுதந்திரம் இல்லையடி’ என்று ராஜூ கூறிக்கொண்டாலும் பல பெண்களைத் தேர்ச்சியுள்ளவர்களாய், தமது உழைப்பிலேயே வாழ்வை நகர்த்தக்கூடிய கலைஞர்களாய் வளர்த்துவிடுகின்றான். அவர்கள் தங்கள்பாட்டில் கண்ணாடிச் சில்லுகளில் படம் வெட்டி ஒட்டி தஞ்சாவூரிலும் அதற்கு அண்மையிலுள்ள ஊர்களிலும் விற்று காசு உழைக்கத் தொடங்குகின்றார்கள்.

Continue Reading →

பதிவுகளில் அன்று: ஜெயமோகனின் நாவல்கள்!

- டிசெ தமிழன் -– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்  –


பதிவுகள் ஜனவரி 2005 இதழ் 61 –

ஜெயமோகனின் நாவல்களில், ‘ஏழாம் உலகம்’ தவிர்த்து அனைத்தையும் வாசித்திருக்கிறேன். விஷ்ணுபுரத்தில் ஆரம்பித்து, கொழும்பில் நின்றபோது தமிழ்ச்சங்கத்தில் பின் தொடரும் நிழலின் குரல், ரப்பர், கன்னியாகுமாரி எல்லாம் எடுத்து வாசித்து, இப்போது காட்டில் வந்து நிற்கிறேன். ரப்பர் 90களில் எழுதப்பட்ட ஜெயமோனின் முதலாவது நாவல். நாவல் என்பதை விட நாவலிற்கான ஒரு முயற்சி என்றே என் வாசிப்பில் அடையாளப்படுத்துகிறேன். அங்கே சாதிப்பெயர்களால் உருவகிப்பட்ட பாத்திரங்கள் இப்போதும் காட்டிலும் அவ்வாறே அடையாளப் படுத்தப்படுவதால், தசாப்தம் தாண்டியும் ஜெயமோகன் எங்கே நிற்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஜெயமோகனின் நாவல்களை இலகுவாய் ஒருவிதமான வகைக்குள் அடக்கிவிடலாம். எப்போதும் அவரின் நாவல்கள் ஊடாடிக்கொண்டிருப்பது பெருங்கனவும் அதன் தவிர்க்கமுடியாத வீழ்ச்சியும். எல்லா நாவல்களும் ஒருவிதமான சோகத்துடனும் இயலாமையுடனும் முடிகின்றன.

ரப்பரில் எந்தப்பாத்திரமும் மனதில் நிற்கமுடியாமல் வாசித்தவுடன் மறைந்துவிடுகின்றனர். நாவல் முழுவதும் கனக்க கதாபாத்திரங்கள். ஒரு விதமான தொடர்பை/நீட்சியை ரப்பரிலும் காட்டிலும் வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். ஆனால், தனது நாவல் என்ற கட்டுரைத்தொகுப்பில் 90களிலே நாவல்கள் தமிழில் முகிழத்தொடங்குகின்றன என்று குறிப்பிடுகையில் அவர் எதைக்குறிவைத்து சொல்கிறார் என்று சொல்லத்தேவையில்லை.

விஷ்ணுபுரம் அவரின் அடுத்த நாவல் என்று நினைக்கிறேன். உண்மையில் சொல்லவேண்டும் என்றால், நான் முதல் பாகமும் இறுதிப்பாகமும் மட்டுமே வாசித்திருக்கிறேன். தத்துவப்பகுதியில் என்னால் நுழையவே முடியவில்லை. விஷ்ணுபுரம் ஒரு இந்துத்துவ பிரதியை ‘நடுநிலைமை’ என்று வாசிப்பவர்கள் எண்ணும்படி கவனமாகப்பின்னப்பட்டிருக்கிறது. அரவிந்தன்(காலச்சுவடு ஆசிரியர்) அண்மையில் காட்டிற்கும் ஏழாம் உலகத்திற்கும் விமர்சகம் எழுதுகையில் விஷ்ணுபுரம் மட்டுமே ஜெயமோகனின் சிறந்தபிரதி என்கின்றபோது பிரதியின்நிலை என்னவென்று கூறத்தேவையில்லை. ஒருகாலத்தில் ஜெயமோகனின் நெருங்கிய நண்பனாகவும், RSSன் தீவிர அங்கத்துவராயும் அரவிந்தன் இருந்திருக்கிறார் என்பதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

Continue Reading →