ந.மயூரரூபனின் ‘புனைவின் நிழல்’ குறித்து… படைப்பு – படைப்பாளி – வாசகனாதிய தளங்களில் கிளர்த்தும் வினாக்களும் விடைகளும்

எழுத்தாளர் தேவகாந்தன்ந.மயூரரூபனின் ‘புனைவின் நிழல்’ சென்ற ஆண்டு (ஏப்ரல் 2018) வெளிவந்திருக்கிறது. இதுபற்றி மிகுந்த வாத பிரதிவாதங்கள் ஓர் இலக்கியச் செயற்பாடுள்ள சமூகத்தில் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப் பட்டிருக்கவேண்டும். ஆனால் இலங்கைத் தமிழ்ச் சூழலில் குளத்திடை போட்ட கல்லான நிலைமைதான் வழக்கம்போல் பிரதிக்கு ஏற்பட்டிருக்கிறது. பத்திரிகை சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகளின் இத் தொகுப்பு மிகுந்த அவதானிப்பில் தோன்றிய வினாக்களுக்கு கண்டடைந்த விடைகளை மிகச் சுருக்கமாகவும், இறுக்கமாகவும் சொல்வதோடு, விடையாக எதையும் சொல்லாத இடங்களிலும் வினாக்களை எழுப்பிய அளவில் திருப்திகொண்டு தம்மை அமைத்திருக்கின்றன.  

பத்தொன்பது சிறு கட்டுரைகளின் தொகுப்பான இச் சிறு நூல் கொள்ளும் விகாசம் பெரிது. இதுபற்றி கவனம் கொள்கையில் முதலில் இதன் முன்னுரைபற்றிப் பேசவேண்டும். கட்டுரைகள் சொன்னவற்றை மிகச் சரியாக எடைபோட்டு அவற்றின் குறை நிறைகளைச் சுட்டி அதுவொரு வாசக திசைகாட்டியாக பொருத்தமாகச் செயற்பட்டிருக்கிறது. ஒரு முன்னுரையாகவன்றி நூலின் திறனாய்வாகவே அது உருக்கொண்டிருக்கிறது. அந்தளவு ஓர் கனதியான முன்னுரையை தாங்கக்கூடிய வலிமை ந.மயூரரூபனின் கட்டுரைகளுக்கு இருக்குமாவென, அதை முதலில் வாசிக்கையில், என்னில் ஐயுறவெழுந்தது. கட்டுரைகளை வாசித்த பின்னால் இது ‘காகத்தின் தலையில் பனம்பழத்தை வைத்த கதை’யாக இல்லையென்பதைத் தெரியமுடிந்தது.

இந்த பத்தொன்பது கட்டுரைகளை நோக்குகையில் படைப்பு – படைப்பாளி – வாசகன் ஆகிய தளங்களில் தனித்தனியாகவும், பின் ஒட்டுமொத்தமாகவும் ‘புனைவின் நிழல்’ தன் கருத்தை முன்வைத்திருப்பதாகக் கொள்ளமுடியும்.

இப் பிரதி முன்வைக்கும் கருத்துச் சாராததும் நூலாக்கம் சம்பந்தப்பட்டதுமான இரண்டு அம்சங்களை முதலில் குறிப்பிடுவது நல்லது எனத் தோன்றுகிறது. ஒன்று, தெளிவற்றதும் தீவிரமற்றதுமான சில கட்டுரைகளை, குறிப்பாக ‘ஆண்குறியாலான அதிகாரம்: காலம் கலங்கி மடியும் மந்திரம்’ என்பதுபோன்றவற்றை தொகுப்பில் சேர்க்காது விட்டிருக்கலாம். அவை பொருள் மயக்கமும் தெளிவின்மையும் கொண்டிருக்கின்றன. ஏனைய கட்டுரைகளோடு ஒப்பிடுகையில் அவை வலிமை குறைந்தவையும். அடுத்து, நிறுத்தக் குறியீடுகள் தேவையற்ற இடங்களிலும், அதிகமான இடங்களில் தவறான பிரயோகத்திலும் வருவதைத் தவிர்த்திருக்கலாம். இதனால் பொருள் கோடலின் இடைஞ்சல் வாசிப்பின் வேகத்தையும் சுகத்தையும் தடுக்காது இருந்திருக்கும்.  

இக் கட்டுரைகள் பலவிடங்களில் இயங்கியல், அமைப்பியல் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றன. இயங்கியல் என்ற வார்த்தையை இயங்குமுறை எனக் குறிக்கவேண்டுமிடங்களிலும் பயன்படுத்துவதால் விளக்கக் குறைவு ஏற்பட்டு வாசகனை மலைக்க வைக்கின்றது. அவை கவனிக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் பேச்சு வழக்கில் பயன்படும் அமைப்பியல் என்ற பதம் (சிலர் அமைப்பியலெனவே எழுத்திலும் பயன்படுத்துகின்றனர்) இன்று எழுத்திலும் அவ்வாறே பயன்படுத்தப் படுவதில்லையென்பது ஆய்வுலகில் அறிய வந்துள்ள விபரம். அது அமைப்பு மையவாதமெனவே படுகின்றது (பார்க்க: ‘அமைப்பு மையவாதமும் பின்அமைப்பயிலும்’, க.பூரணச்சந்திரன்). இது முக்கியமான அம்சமில்லையெனினும் வாசக தெளிவுக்காக இதுவும் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம்.

Continue Reading →