நனவிடை தோய்தல்: சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier)

சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier)இரமணிதரன் கந்தையா ( சித்தார்த்த 'சே' குவேரா)சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier) 02/20/2020 இலே தொண்ணூற்றுமூன்றாம் அகவையை எட்டியிருக்கும் ஹொலிவுட் நடிகர். நாற்பதுகளிலே போல் உரோபிசன் (Paul Robeson), ஐம்பதுகளிலே ஹரி பெலொபாண்டே (Harry Belafonte), என்ற வரிசையிலே வெள்ளைத்தோலர்களின் அருகிலே பத்தோடு பதினொன்றாய் நின்று எடுபிடி வேலைசெய்யும் (Gone with the Wind இன் மாமி, போக், பிரிஸி போன்ற) கறுப்பினப்பாத்திரங்களுக்கு மாறாக, தோல் நிறம் சார்ந்த சமூகப்பிரச்சனைகளை அக்காலகட்டத்தின் எல்லையை மீறியோ மீற முயன்றோ பேசமுயன்ற ஹொலிவுட் படங்களின் நடிகராய் அறுபதுகளிலே சிட்னி பொய்ரியேய் வருகிறார். ஒப்பீட்டளவிலே உரோபிசனுக்கிருந்த வசதியும் உயர்கல்விபெறும் வாய்ப்பும் கரிபியன்பின்புலத்தைக் கொண்ட நண்பர்களான பின்னைய இருவருக்குமிருக்கவில்லை. ஆயினும், ஐம்பதுகளிலே நியூ யோர்க்கின் வட அமெரிக்கக்கறுப்பர் நாடக அமைப்பினூடாகத் தம்மை வெளிக்காட்டி ஹொலிவுட்டினுள்ளே நுழைந்தவர்கள். இவர்கள் திறந்துவைத்த கதவு ||ஓரளவுக்கு|| வெள்ளையருக்குமப்பால் அனைத்துத்தோலர்களையும் உள்ளடக்கும் வெளியினை ஏற்படுத்தித் தந்திருக்கின்றதெனலாம். அதற்கு அறுபதுகளிலே மார்டின் உலூதர் கிங்-இளையவர் முன் நின்று போராடிய குடிசார் உரிமைக்கான அமைப்பு மட்டுமல்ல, ஊடகங்களாலே பேச மறுக்கப்படும் ஆயுதம் தாங்கிய கறுப்புச்சிறுத்தைகள் போன்ற அமைப்புகளும் காரணமாகின்றன! அதேவேளையிலே கிங்கோடு வன்முறையறு போராட்டங்களிலே தம் திரைச்செல்வாக்கினையும் முதலாய்ப் போட்டுக் கலந்துகொண்டவர்களிலே பெலொபாண்டேயும் பொய்ரியேயும் அடங்குவார்.

பார்த்த பொய்ரியேயின் படங்களிலே குறிப்பிடத்தக்கவையெனக் கருதுகின்றவை, The Defiant Ones, Lilies of the Field, A Raisin in the Sun, Guess Who’s Coming to Dinner, To Sir, with Love, In the Heat of the Night. They Called Me Mr. Tibbs படம் அவரின் In the Heat of the Night படத்தின் பாத்திர வெற்றியை முதலிட்டுக் காசு காண வந்த படமாகவே தோன்றியது. தொண்ணூறுகளிலே வந்த Sneakers, The Jackal இரண்டும் அக்காலகட்ட நட்சத்திரப்பட்டாளங்களோடு இரண்டாம் நிலைப்பாத்திரமாக அவர் வந்துபோகும் நகைச்சுவை, விறுவிறுப்புப்படங்கள். அவரின் அறுபதுகளிலே வந்த படங்களின் சமூகம் சார்ந்த பிரச்சனைகளைப் பேசும் தேவை அவற்றிலிருக்கவில்லை அல்லது அவற்றுக்கிருக்கவில்லை.

The Defiant Ones: சிறையிலிருந்து தப்பும் கறுப்பு-வெள்ளைக்கைதிகளூடாக ஐம்பதுகளின் பிற்பகுதியின் அமெரிக்கக்கறுப்புவெள்ளை நிலவரத்தைப் பேசும்படம். நடிகை ஜேமி லீ கேர்டிசின் தந்தை ரொனி கேர்டிசுடன் இணையராக பொய்ரியேய் தோன்றிய படம். ஒட்டாத சமாந்திர வெளிகளிலே அருகருகே வாழ்கின்றவர்களை வெளியினைப் பகிர்ந்தாகவேண்டிய வெட்டுத்துண்டுகளுள்ளே இருக்க நெருக்கினால், அவர்களும் சமூகமும் எப்படியாக எதிர்கொள்ளுமென்பதைச் சமூகப்பரிசோதனை செய்யும் படம். பின்னாலே, இதே நிலைமுரணை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கிப் பேசும் பல படங்கள் வந்தன. எடி மேர்பி- டான் ஆர்க்ரோய்ட் நடித்த Trading Places, இரிச்சர்ட் ப்ரையர்- ஜீன் வைல்டர் நடித்த Silver Streak மற்றும் See No Evil, Hear No Evil உள்ளிட்ட சில படங்கள் இப்படியான சூழலை உருவாக்கின நகைச்சுவைப்படங்கள். இதுபோன்ற முரண்பாடுடையோரைச் சூழ்நிலையமுக்கத்தாலே வெளியைப் பங்கிடும் நிலையை உருவாக்கிச் சமூகச்சிக்கல்களைப் பேசும் போர்க்காலப்படங்கள் அமெரிக்காவுக்கு அப்பாலும் அண்மைக்காலத்திலே விரிந்திருக்கின்றது; பொஸ்னியச்சிக்கலை முன்னிட்ட No Man’s Land ஓரெடுத்துக்காட்டு.

Continue Reading →

வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் ஐந்து!

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள்

– அண்மையில் எனது கண்ணம்மாக் கவிதைகள் ஐந்தினைத் தனித்தனியாக இங்கு பதிவு செய்திருந்தேன். அவை அனைத்தையும் தொகுத்து இங்கு தந்துள்ளேன். ‘காலவெளி’ நம் இருப்பின் யதார்த்தம். இச்சொற்றொடரைக் காணும் போதெல்லாம், கேட்கும் போதெல்லாம், வாசிக்கும் போதெல்லாம் நெஞ்சில் களி பொங்குகின்றது; சிந்தனைக்குருவி சிறகடித்துப்பறக்க ஆரம்பித்து விடுகின்றது. காலவெளியற்று இங்கு எதுவுமேயில்லை. காலவெளி பற்றிய என் உணர்வுகளின் பிரதிபலிப்புகள் இக்கவிதைகள். –


1: காலவெளிச்சித்தனின் மடலொன்று!

ஒளிக்கூம்புக்குள் விரிந்து , சுருங்கி,
மீண்டும் விரிந்து
கிடக்குமென் அண்டம்.
அடியே! அண்டத்தில் நீ இங்கெங்கு சென்றிடினும்
உன்னால் ஒருபோதுமே என்னிடமிருந்து
மறைந்துவிடவே முடியாதடி.
ஏனென்று கேட்கின்றாயா?
நீயே அறிந்துகொள்
நீயே புரிந்துகொள்
என்று நானுனக்குக்கூறிடப் போவதில்லை.
உன் சிந்திக்குமறிவுக்கும் வேலை
வைக்கப்போவதில்லை.
நானே  கூறுகின்றேன் விளக்கம் கண்ணம்மா!
உன்னால் புரிந்துகொண்டிட முடிந்தால்
புரிந்துகொள்.
ஏனென்றால் இப்பிரபஞ்சத்துடனான என் உறவு
ஏன் உன் உறவும் கூடத்தான்
ஒருபோதுமே பிரிக்கப்பட முடியாதடீ.
இருந்தாலும் கவலையை விடு.
இன்னும் சிறிது விளக்குவேன்.
நீ, நான் , இங்குள்ள அனைத்துமே
துகள்களின் நாட்டியம்தாம்.
சக்தியின் வடிவம்தான்.
புரிந்ததா சகியே!

Continue Reading →

ஆறாம் நிலத்திணை தமிழ் இலக்கியத்திற்குப் புதியது!

குரு அரவிந்தன்தமிழ் இலக்கியத்தில் ஒரு சந்தேகம் உங்களிடம் கேட்டுப் பார்க்கலாமா?, ‘ஆறாம் நிலத்திணை’ என்றால் என்ன, சங்க இலக்கியத்தில் தேடிப்பார்த்தேன், அப்படி ஒரு பதம் இருப்பதாகத் தெரியவில்லை’ என்று நண்பர் ஒருவர் கேட்டார். ஆறாம்திணை என்பதற்கு ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்ததை வெவ்வேறு வகையான விளக்கத்துடன் தருவார்கள், அது அவர்களது சொந்தக் கருத்தாகும். ஆனாலும் ‘ஆறாம் நிலத்திணை’ என்றால் இப்படியும் இருக்கலாம் என்று எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன் என்று எனது கருத்துக்களையும் அவருடன் நான் பகிர்ந்து கொண்டேன். எனவேதான் கருத்துப் பரிமாறல் மூலம் இந்தக் கட்டுரையை மேலும் மெருக்கூட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன், ஆவணப் படுத்துவதில் தமிழர்தகவல் ஆண்டு மலர்கள்; முன்னிற்பதால் எனது கருத்தை இந்த மலரில் பதிவு செய்கின்றேன். 

தமிழர்களின் வரலாற்றில் ‘தமிழ் இலக்கியம்’ எப்பொழுதும் முக்கியமான இடத்தை வகித்திருக்கின்றது. தமிழ் மொழியின் காலத்தையும் தமிழர்களின் பண்பாடு நாகரிகம் போன்றவற்றையும் கலை, இலக்கிய வடிவங்களையும் அறிந்து கொள்ள பழம்பெரும் இலக்கியங்கள்தான் எங்களுக்கு உதவியாக இருந்தன. புலவர்களும், அரசர்களும், சான்றோர்களும் தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்தியதால் தான் இன்று எமது மொழியின் தொன்மையை, எமது இனத்தின் வரலாற்றை எடுத்துச் சொல்ல முடிகின்றது. அக்காலத்தில் எழுதப்பட்ட ஏடுகளும், கல்வெட்டுக்களும், புடைப்புச் சிற்பங்களும், ஓவியங்களும் எம்மை அடையாளப்படுத்த மிகவும் உதவியாக இருந்தன.

அவற்றைக் கவனமாகப் பாதுகாத்தவர்களும், தமிழ் பிரமி எழுத்துக்களை வாசித்து நவீன முறையில் எல்லோரையும் சென்றடையக் கூடிய வகையில் பதிப்பித்தவர்களும் எம்மினத்தின் பாராட்டுகுரியவர்கள். தற்போது மதுரைக்கு அருகே உள்ள கீழடி அகழாய்வுகள் எம்மினத்தின் தொன்மையைத் தெளிவாக எடுத்துக் காட்டுவனவாக இருக்கின்றன. இவற்றை எல்லாம் தேடி எடுத்து வெளியே கொண்டு வந்து, தமிழ் மெழியைச் செம்மொழியாக்கி எம்மினத்திற்கும் முகவரி தந்தவர்கள் இவர்களைப் போன்றவர்களே என்றால் மிகையாகாது.

Continue Reading →

அரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் கவிதை : “நெஞ்சு பொறுக்குதில்லையே”

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சு பொறுக்குதில்லையே – நம்மை
நெருங்கிடும் துயரங்கள் நீள்வது கண்டு
நெஞ்சு பொறுக்குதில்லையே!

அடிமை விலங்கொடித்து ஆர்ப்பரித்தோம்
அடைந்துவிட்டோம் சுதந்திரமெனக் கொக்கரித்தோம் – இன்று
நெஞ்சு பொறுக்குதில்லையே!

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் கடக்கையில்
அங்கும் இங்குமாய்ச் செய்திகள் படிக்கையில்
நெஞ்சு பொறுக்குதில்லையே!

இறைவன் இருப்பிடத்தைக் கேடயமாக்கி
இளஞ்சிறார் சிதைக்கப்படுவதா சுதந்திரம்
நெஞ்சு பொறுக்குதில்லையே!

கைம்மாறு கருதாது உதவிய காலம்போய்
கையூட்டு இல்லாமல் காரியம் நடப்பதெங்கே
நெஞ்சு பொறுக்குதில்லையே!

Continue Reading →

லண்டனில் தமிழ் மொழிக் கல்வி’

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -ஒரு மனிதனின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஆரம்ப சக்தியாயிருப்பது அவனுடைய மொழியாகும். இந்த மாபெரும் அடிப்படையில் அவனுடைய அடையாளம்,அறிவு, கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம்,இசை நாடகம் போன்ற விழுமியங்கள் கட்டமைக்கப் படுகின்றன,வளர்கின்றன.காலக் கிரைமத்தில் அவனுடைய மொழி சார்ந்த ஆக்கங்கள் அவனுடைய பாரம்பரியத்தின் சரித்திமாகின்றன.

அது மட்டுமல்லாமல்,ஒரு மனிதனின்,உடல்,உள.அறிவியல்,சமூக,ஆத்மீக வளர்ச்சியுடன் மொழி வளர்ச்சியும் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஒரு குழந்தையின் மொழிவளர்ச்சியின் ஆரம்பம் அந்தக்குழந்தை தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஆரம்பிக்கிறது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். தனக்குப் பரிச்சயமான ஒலிகளை, குழந்தை தனது தாயின் வயிற்றிலிருக்கும்போதே அடையாளம் காண்கிறது. குழந்தை தனது தாயின் வயிற்றில் உண்டாக்கும் முதல் அசைவைக் கொண்டாட வளைக் காப்பு வைபம் மூலம் குழந்தைக்குத் தாயின் அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தும் நல்லொலியை ஆரம்பித்தவர்கள் எங்கள் மூதாதையர்.

குழந்தை பிறந்ததும் அதன் மொழி வளர்ச்சி மொழியற்ற வித்தியாசமான ஒலிகளால் வெளிப்படுத்தப்படுகிறது.பின்னர் குழந்தை சார்ந்த நெருங்கிய சூழ்நிலையில் உள்ள குடும்பத்தினரிடமிருந்து பல்வகையான ஒலிகளின் படிமம் சார்ந்த மொழியைக் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறது.

அதன் நீட்சி குழந்தை மிகச் சிறுவயதில் மற்றக் குழந்தைகளுடன் விளையாடிப் பழகும்போதும், அன்னியர்களுடன் பழகும்போதும் தொடர்கிறது.அதன் பின்னர் குழந்தையின் கல்வி பாடசாலையில் ஆரம்பிக்கும்போது,அந்தக் கல்வி குடும்பம், சமுகம், தாண்டி, ஒரு நாட்டின் கல்வியற் கோட்பாடுகளின் கட்டுமானங்களுடன் நீட்சிபெறுகிறது.

Continue Reading →