ஆய்வு: பாறப்பட்டி இருளர்களின் சமூக அமைப்பில் உறவுமுறைச் சொற்கள்

ஆய்வுக் கட்டுரை!பண்டைக் காலத்தில் விலங்குகளைப் போன்று அலைந்து திரிந்த மனிதன் காலப் போக்கில் பல படிநிலைகளைக் கடந்து வளர்ச்சி பெறலானான். உணவினைத் தேடி அலைந்த மனித இனம் உணவினை உற்பத்தி செய்யத் தொடங்கி நிலையான ஒரு குடியிருப்பை அமைத்துக் கொண்டு வாழத் தொடங்கியது முதல் சமூகம் என்ற ஒரு அமைப்பு தோற்றம் பெறலாயிற்று. அது முதல் அவர்களிடையே ஓர் உறவு ஏற்பட்டது. காலப்போக்கில் இவ்வுறவுகளே மனிதனை உயர்நிலைக்கு அழைத்துச் சென்றது. மேலும் ஒரு சமுதாயத்தின் உயர்வு தாழ்வுகளை நிர்ணயிக்கக்கூடிய காரணிகளுள் ஒன்றாக வளர்ச்சி பெற்றது. ஓர் உறவு ஏற்பட வேண்டுமெனில் குறைந்த அளவு இருவர் தேவை இவ்விருவரும் ஒருவரை மற்றொருவர் ஏதோ ஒரு சொல்லால் குறிப்பிட முற்படும் பொழுது அவர்கள் குறிப்பிட்ட உறவுமுறையை ஏற்க வேண்டியுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு தனிநபரும் ஒரே வேளையில் பல உறவு நிலைகளை அடைய நேரிடுகிறது. அதே வேளையில் இந்த உறவுகளைக் குறிக்க பல வகையான உறவுமுறைச் சொற்களும் தோன்றியது. உறவுமுறைகள் பற்றிய ஆராய்ச்சியில் இவ்வுறவுமுறைச் சொற்கள் முக்கிய இடம் பெறுகின்றது. 

ஆய்வு நோக்கம்

உறவுமுறைச் சொற்கள் ஆய்வில் மானிடவியலார்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள். அவர்கள் ஒரு சமுதாயத்தில் காணப்படும் உறவுமுறைச் சொற்களைக் கண்டுபிடித்து வகைப்படுத்த பலவகையான அணுகுமுறைகளைக் கையாண்டுள்ளனர். அவற்றின் அடிப்படையில் பாறப்பட்டி இருளர்களின் சமுதாய அமைப்பில் காணப்படும் உறவுமுறைச் சொற்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பாறப்பட்டி இருளர்கள்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 அடி உயரத்தில் அடர்ந்த வனப்பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ள இருளர் குடியிருப்பு பாறப்பட்டி ஆகும். இருளர்கள் இந்திய நடுவண் அரசால் இனம் காணப்பட்ட “பண்டைய பழங்குடி இனத்தவர்” (Primitive Tribes) ஆவர். மேற்கே வண்ணப்பாறை, தெற்கே மங்கலத்தாள் பாறை, கிழக்கே சங்கிலிப்பாறை இவ்வாறு மூன்று பக்கங்களும் பாறைகளை எல்லையாகக் கொண்டுள்ளதால் இவ்வூர் பாறப்பட்டி என்று பெயர் பெற்றது. பாறப்பட்டி இருளர்கள் திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்த “இருள” மொழியைப் பேசுகின்றனர். இவர்களின் மொழியில் தமிழ், மலையாளம், கன்னடம் கலந்து காணப்படுகின்றது. இருளர்கள் தங்களுக்குள் உள்ள பிரிவுகளை ‘குலம்’ என்று குறிப்பிடுகின்றனர். இவர்களிடையே மொத்தம் 12 குலங்களும் 96 வகை உட்பிரிவுகளும் காணப்படுகின்றன. இருளர்கள் ஆவி, ஆன்மா, மாந்திரீகம், பில்லிசூனியம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை உடையவர்கள். இவர்கள் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதில் நுண்மதி படைத்தவர்கள். பாறப்பட்டி இருளர்கள் பேச்சு வழக்கு, சடங்குகள் போன்றவற்றால் மற்ற இருளர்களிடமிருந்து தனித்து நிற்கின்றனர். தற்பொழுது இவர்கள் வேலைவாய்ப்பு, குழந்தைகளின் கல்வி போன்ற பல காரணங்களுக்காக மலையை விட்டு கீழே இறங்கி மலையடிவாரங்களில் குடியேறியுள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் பெருமாள் கோவில் பதி, மூங்கில் மடை குட்டை பதி, முருகன் பதி, புதுப்பதி, சின்னாம்பதி மற்றும் கேரள மாநிலத்தில் வாளையார் அருகே நடுப்பதி ஆகிய ஊர்களில் வசித்து வருகின்றனர். மேலும் தாங்கள் பாறப்பட்டியில் இருந்து வந்ததால் தங்களை பாறப்பட்டி இருளர் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

Continue Reading →

மராத்தி இலக்கியம்!

 - சே.முனியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஜெ.பீ. கலை அறிவியல் கல்லூரி, அகரக்கட்டு, ஆய்க்குடி, தென்காசி – 627852 -மராத்தி, மேற்கு இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் பேசப்படும் ஓர் இந்தோ-ஆரிய மொழியாகும். இம்மொழியானது அங்கு அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்படுகின்றது. உலகளவில் தொண்ணூறு மில்லியன் மக்களால் பேசப்படும் மொழி எனும் சிறப்பைப் பெற்றுக் காணப்படுகின்றது.

இந்திய மக்களால் பயன்படுத்தப்படும் மொழிகளுள் மராத்தி நான்காவது இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றது. இம்மொழி பாலி என்ற மொழியின் வழியாகச் சமசுகிருதத்திலிருந்து வந்தது. இது மகாராஷ்டி அல்லது மகாராஷ்டிரா அல்லது அபப்ரம்ஸா என அழைக்கப்பட்டு வந்தது. பின்பு அதன் பேச்சு மொழியில் ஏற்பட்ட படிப்படியான மாறுதல்களே இன்றைய மராத்தி மொழி உருவாக வழிவகுத்தது.

தோற்றம்
மராத்தி மொழியின் தோற்றம் கி.பி.8ஆம் நூற்றாண்டு எனச் சுட்டப்படுகின்றது. நவீனகால மராத்தி பிராகிருத மகராஷ்ட்ரி மொழியிலிருந்து வந்தது. கி.பி.875ஆம் ஆண்டு வரை சாதவாகனப் பேரரசின் அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது மற்ற பிராகிருத மொழிகளைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்த மொழியாக மேற்கு, தென்னிந்தியாவில் பேசப்பட்டு வந்தது. மேலும் இது மகாராஷ்ட்ரி அபபிராம்சா என அழைக்கப்பட்டது. மகாராஷ்ட்ராவில் வாழ்கின்ற ஐம்பது மில்லியனுக்கு மேலான மக்களுக்கு மராத்தி தாய்மொழியாகவும் திகழ்கிறது.

மகாராஷ்ட்ரிரா எனும் பெயர் மகாபாரதத்திலோ, இராமயணத்திலோ இடம் பெறவில்லை. கி.பி.17ஆம் நூற்றாண்டில் சீனப்பயணி யுவாங் சுவாங் இந்தப் பகுதியை மா-ஹா-லா-சொ (ma-ha-la-cho) என்று குறிப்பிடுகின்றார். கி.பி.10ஆம் நூற்றாண்டில் அல்பர்னி மகாராஷ்டிராவை மார்காட்டா (Marhatta) என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாராத்தி மொழியின் தோற்றத்தைப் பற்றி அறிஞர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்துள்ளன. அதாவது, மராத்தி மொழி சமசுகிருதத்திலிருந்து வளர்ச்சியடைந்தது என சி.வை.வைத்யாவும் (C.V.Vaidya), அபபிரம்சாவிலிருந்து வளர்ச்சியடைந்தது என ஸ்டென் க்னோவும் (Sten Knonow) கூறுகின்றனர். பலர் பஞ்ச திராவிட மொழிகளில் ஒன்று எனவும் குறிப்பிடுகின்றனர்.

கைரேயின் (Khaire) கருத்துப்படி (முந்தையப் பேச்சு) மராத்தி மொழியின் பேச்சுமொழிச் சொற்கள் பல தமிழிலிருந்தும் கன்னடம், தெலுங்கு போன்ற திராவிட மொழிகளிருந்தும் கடன் வாங்கப்பட்டு யாதவர்களால் பேசப்பட்டதெனக் கூறுகின்றார்.

பெரும்பாலான மக்கள் மராத்தி மொழியானது பிராகிருதத்திலிருந்து வந்தது என்றே கருதுகின்றனர். ‘விஜயாஅதித்ய’ செப்புத்தகடு மற்றும் சரவணபலகோலா (கர்நாடகம்) கல்வெட்டுக்கள் பிராகிருத மொழி என்று சுட்டுகின்றது. மேலும் அது ‘உத்தியோட்டன்’ என்ற சைன மதத்துறவியின் கூற்றுப்படிக் கொங்கனி எனவும் சொல்லப்பட்டது.

கி.பி.13ஆம் நூற்றாண்டிற்கு முன் (யாதவா காலத்திற்குமுன்) மராத்தியில் எந்தவொரு படைப்புகளும் இல்லை. அதன்பின் வந்த ஆட்சியிலேஎ மராத்தி அலுவலக மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.

Continue Reading →

ஆய்வு: ‘கடல்காண் படல’த்தில் – சங்கச் செவ்வி

- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -முன்னுரை
தமிழ் இலக்கிய, இலக்கண வளத்தைச் சங்கப் பாடல்களின் தனித்தன்மைகளைக் கொண்டும், இலக்கண மரபுகளிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். சங்க இலக்கியத்தின் பாடுபொருட்பொதிவாக அமைந்த முதல், கரு, உரி என்னும் பாடற்கூறுகள், அகப்பாடல் பாடல்மரபுகள், திணைக்கோட்பாட்டு மரபுகள், அதன் கருவுரு ஆகியன தமிழ் இலக்கியங்களின் காப்பியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும், அறநூல்களிலும், அதற்குப் பின்னர் எழுந்த இலக்கியங்கள் யாவற்றிலும் உட்பொதிவாக அமைந்து, இலக்கியத்தை வளப்படுத்தி வருவதனைக் காணலாம். 

தமிழ்மொழியின் தலைப்பெரும் காவியமாகத் திகழ்வது கம்பராமாயணம் ஆகும். அது தமிழ் மரபுக்கேற்றவகையில் படைப்பாக்கம் செய்யப் பெற்றுள்ளமையால் இன்றைக்கும் ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்’ என்று சிறப்பித்துப் போற்றப்படுகின்றது.

கம்பர், வடமொழிக் காவியமான இராம காதையைத் தமிழில் கம்பர் இராமாயணமாகப் படைத்தளித்தாலும், அதில் தமிழ் இலக்கிய, இலக்கண மரபுகளின் சாரத்தைக் காணஇயலும். சங்கச் செவ்விகளில் அகப்பாடல் மரபுகளையும், புறப்பாடல் மரபுகளையும் தன் காவியம் முழுவதும் ஒருசேரப் படைத்தளித்துத் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்துள்ளார். இவற்றோடு மட்டுமல்லாது, கம்பர், சங்க அகப்பொருள் மரபினைத் தழுவியே தனது காவியத்தைப் படைத்துள்ளார் என்பதனைப் பல்வேறு சான்றுகளின் மூலம் அறியலாம். அவ்வகையில் கம்பராமாயண யுத்தகாண்டத்தில் இடம்பெற்றுள்ள ‘கடல்காண் படலத்’தில்; உணர்த்தப்படும் சங்க இலக்கியத்தின் செவ்வியல் கூறுகளான அக, புறத் திணைக்கோட்பாடுகள் குறித்து இக்கட்டுரையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.

சங்கச்செவ்வி
சங்க இலக்கியங்களின் உயிராக அமைபவை அதன் திணைக்கோட்பாட்டு மரபுகளாகும். ‘அகப்பாடலாயினும், புறப்பாடலாயினும் திணைமரபுகளுக்கு உட்பட்டே படைக்கப்பெற வேண்டும’; என்பது சங்க இலக்கியக்கொள்கைகளில் முதன்மையான கருத்தியலாக அமைந்திருக்கின்றது.

Continue Reading →

ஆய்வு: செவ்விலக்கியத்தில் ஓவியக் கலைத்தொழில்

முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113ஓவியக்கலை என்பது காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் ஓர் உயர்ந்த கலையாகும். மனிதன் நாகரிகம் அடையும் முன் காட்டுமிராண்டிகளாக வாழும் காலத்திலேயே ஓவியக்கலை தோன்றிவிட்டது. எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியக் கலை என்றால் மிகையில்லை. தமிழ்நாட்டு ஓவியக்கலை தொன்மையான வரலாற்றைக் கொண்டதாகும். அத்துடன் பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த ஓவியங்கள் முழுதாகவும் சிதைந்த நிலையிலும் குகைகளிலும் பழைய அரண்மனைகளிலும் கோயில்களிலும் வேறு கட்டடங்களிலும் காணப்படுகின்றன. ஓவியத்தோடு தொடர்புடைய குறிப்புகள் பல சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. சங்கம் மருவிய காலம் மற்றும் அதற்குப் பிற்பட்ட காலங்களிலும் ஓவியம் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் உள்ளன. ஓவியச் செந்நூ லுரைநூற் கிடக்கையும் என்ற சிலப்பதிகாரம் அடிகள் ஓவிய சம்பந்தமான நூல் இருந்தமையை அறிவிக்கின்றது. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் ஓவிய நூலென ஒன்றைக் கூறியிருக்கின்றார். ஆடைகளிற் சித்திரங்களை எழுதும் வழக்கம் பழமையானதாகும். ஓவியம் பேசும் செய்திகளும் உணர்த்தும் கருத்துக்களும் மிகப்பலவாகும். இத்தகைய தொல்தமிழரின் ஓவியக்கலையைச் செவ்விலக்கியத்தில் ஓவியக் கலைத்தொழில் என்ற தலைப்பின் வாயிலாகக் காண்போம்.

ஓவியக் கலை

ஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் (Composition) மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி, கடுதாசி, துணி, மரம், கண்ணாடி, காங்கிறீட்டு போன்ற ஊடகங்களில் நிறப்பூச்சுகளைப் பயன்படுத்தி, வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒருகலை ஆகும். 

ஓவியக்கலையானது பல்வேறு ஆக்கத்திறன்களை, உள்வாங்குவதற்கும், ஆவணப்படுத்துவதற்கும் வெளிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறை ஆகும். ஓவியங்கள், இயற்கையானவையாகவோ, ஒரு பொருளைப்போல வரையப்பட்டவையாகவோ, நிழற்படத்தை ஒத்தவையாகவோ, பண்பியல் (Abstract) தன்மை கொண்டனவாகவோ இருக்கலாம். அத்துடன் இவை ஒரு செய்தியை விளக்கும் உள்ளடக்கம் கொண்டவையாக, குறியீட்டுத் தன்மை கொண்டனவாக, உணர்ச்சி பூர்வமானவையாக அல்லது அரசியல் சார்ந்தவையாகக்கூட இருக்கக்கூடும். தமிழர் வளர்த்த நுண்கலைகளின் வரிசையில் ஓவியக்கலை முன்னணியில் நிற்கிறது. மோனாலிசா ஓவியம் இத்தாலிய ஓவியர் லியொனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட உலகப்புகழ்பெற்ற கலைநயமிக்க ஓவியங்களில் ஒன்றாகும்.

Continue Reading →