தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை உலகம்! கவி காளிதாசரின் “சகுந்தலை”யை பெண்ணடிமை கோட்பாடுகளிலிருந்து விடுவிக்கும் கவிஞர்!

உயிரிபமும் எப்பொழுதே தான் வசிப்பதற்கு ஓரில்லத்தைக் கண்டடையும்.(மெல்பனில் நடைபெற்ற தமிழச்சி தங்கபாண்டியனுடனான இலக்கியச் சந்திப்பில் சமர்ப்பிக்கப்பட்ட நயப்புரை)


சாந்தி சிவக்குமார்கவிதை நான் பயணப்படாத தளம். சிறுகதைகளிலும் புதினங்களிலும் இயல்பாக இலகுவாக பயணிப்பதுபோல், கவிதை கைவரவில்லை. மனம் இன்னும் அதற்குப் பக்குவப்படவில்லை என்று நினைக்கிறேன். தமிழச்சி தங்கபாண்டியனின் பல கவிதைகள் ஒரு சிறுகதைக்குரிய கருவை தாங்கியிருப்பதும், என் மனம் அதை சிறுகதையாய் மாற்ற முயற்சித்ததும், பின் அதை நான் கட்டியிழுத்து அடுத்த கவிதைக்கு இட்டுச்செல்வதும் என முதல் நான்கு நாட்கள் ஓடியேவிட்டது. தமிழச்சி, தன் மனதிற்குள் பல நாட்களாய் பொத்திவைத்து அடைகாத்ததை கவிதை முத்துக்களாய் ஒரு சில வரிகளில் படைப்பது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடம்பரமற்று, எளிமையான வார்த்தைகளால் எல்லோரும் அனுகும்விதமாக , எல்லோருக்கும் புரியும் விதமாக இவரது கவிதைகள் உள்ளன. எப்படி எளிமையான சொற்களால் ஆனதோ, அதேமாதிரி எளிமையான மனிதர்கள், அன்றாட நிகழ்வுகள், வாழ்க்கைப்பாடுகள், சின்னச்சின்ன இழப்புகள் என இவர் கவிதைகளாலும், நாம், நம் அன்றாட வாழ்க்கையுடனும் எண்ணங்களுடனும் இணைத்துக்கொள்ளலாம்.

இவரது கவிதைகளை வாசிக்கும்பொழுது, தமிழச்சி மறைந்து, கிராமத்துப்பெண்ணான சுமதியே மனதில் வலம்வருகிறார். கிராமத்திலிருந்து பெருநகரத்திற்கு இடம்பெயர்ந்தமையால் அவரது மனதிற்குள் தோன்றும் உணர்வுகளை கவிதையாக பதிவுசெய்கின்றார்.  

தீப்பெட்டி பொண்வண்டு என்ற கவிதையில்,

அதிகாலைத் தூக்கம்… அசங்கியிருக்கும்
வானம் பார்த்துக் கலைகின்ற வரம்
கிராமம்விட்டு நகரத்தில் குடிவந்த நாள் முதல்
பக்கத்துக் குடியிருப்பும் பார்க்காதிருக்க இறுகப்பூட்டப்படும்
சன்னல்களின் உயிரற்ற திரைச்சேலைகளில் நிலைக்கின்ற சாபமானது.  

இக்கவிதையில் கவிஞர், பெருநகரத்து வாழ்வில் தான் இழந்ததை கூறுகிறார். ஆனால், இன்றைய சென்னை வாழ்க்கையும் அன்று நான் வாழ்ந்த சென்னை வாழ்க்கையும் வேறு வேறு! தமிழச்சி தனது கிராமத்து வாழ்க்கையை கூறும்போது, நான் வளர்ந்த சென்னை வாழ்க்கையைத்தான் நினைத்துக்கொள்கிறேன்.

கோடைகாலம் முழுவதும் மொட்டை மாடியில் தண்ணீர் ஊற்றி தரையை குளிர்வித்து, பக்கத்து மாடியில் உள்ளவர்களிடம் கதைபேசி, Transistor இல் பாட்டுக்கேட்டு, தூங்கிய நாட்கள். காலைக்கதிரவனின் வெளிச்சம் படரும்பொழுது, விழித்ததும் – விழித்தும் விழிக்காமலும் சுகமாய் படுத்திருக்கும் அந்த பத்து நிமிடம்….! பக்கத்துவீட்டு தொலைக்காட்சி செய்திவாசிப்பதும், எங்கிருந்தோ வரும் கோயில் மணியோசையும், உடன் ஒலிக்கும் மசூதியின் பாங்கு சத்தமும் என இவரது கிராமத்து வாசனை கவிதைகள் அனைத்தும் எனக்கு என் கிராமத்து சென்னையை நினைவுபடுத்தின.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 315: ரோகித பாஷனா அபயவர்த்தனே (Rohitha Bashana Abeywardane) & ‘தாயகம்(கனடா)’ பற்றிச் சில குறிப்புகள்..

வாசிப்பும், யோசிப்பும் 315: ரோகித பாஷனா அபயவர்த்தனே (Rohitha Bashana Abeywardane)ரோகித பாஷனா அபயவர்த்தனே (Rohitha Bashana Abeywardane) ஒரு சிங்கள ஊடகவியலாளர். முன்னாள் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் , 2006இல் இலங்கையை விட்டு புகலிடம் நாடி புலம்பெயர்ந்த சிங்கள ஊடகவியலாளர்களிலொருவர் இவர். மெளனிக்கப்பட்ட யுத்தத்தின்போது இலங்கைத்தமிழர்கள் அடைந்த இன்னல்கள், துயரங்களை வெளிப்படுத்தும் புகழ்பெற்ற ஆவணப்படமான ‘மெளனிக்கப்பட்ட குரல்கள்’ (The Silenced Voices) ஆவணப்படத்தில் நேர்காணப்படும் சிங்கள ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவர்.  இலங்கைத்தமிழர்கள் நிலையை நன்கு அறிந்த, அதற்காகக் குரல் கொடுக்கும் சிங்கள ஊடகவியலாளர்களில் ரோகித பாஷனா அபயவர்த்தனேயின் பங்களிப்பு முக்கியமானது. தற்போதும் நாடு திரும்பாமல் PEN அமைப்பின் உதவியுடன், ஜேர்மனியில் வாழ்ந்துவரும் இவர் ‘இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள்’ என்னும் (JDS – Journalists for Democracy in Srilanka: http://www.jdslanka.org/ ) இணையத்தளத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், ஆசிரியர் குழுவிலொருவராகவுமிருந்து வருகின்றார். ரோகித பஷானா அபயவர்த்தனே நன்கறியப்பட்ட சிங்களக் கவிஞர்களில் ஒருவரும் கூட. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் மாற்றுக்கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த சிங்களப்பத்திரிகையான ஹிரு பத்திரிகையின் ஸ்தாபகராகவும், பின்னர் அதன் ஆசிரியராகவுமிருந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தது. அப்பத்திரிகையில் இவர் எழுதிய அரசியல் கருத்துகள் காரணமாகவே இவருக்குப் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அவற்றின் காரணமாகவே இவர் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.

சமூக ஊடகங்கள் காரணமாகவும், யுத்தம் ஏற்படுத்திய் பேரழிவுகள் காரணமாகவும் சிங்கள மக்களில் பலர் நாட்டில் அமைதி வேண்டுமென்பதை உணர்ந்திருக்கின்றார்கள். உணரத்தொடங்கியிருக்கின்றார்கள். நாட்டில் தமிழர்கள் சம உரிமையற்று வாழ்வதை உணர்ந்திருக்கின்றார்கள். இலங்கையில் சிறுபான்மையினத்தவரின் நியாயமான பிரச்சினைகள் தீர்க்கப்படுவது நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்துக்கு அவசியமென்பதை உணர்ந்திருக்கின்றார்கள். அவர்களிலொருவர் ரோகித பாஷனா அபயவர்த்தனே. இவர்களைப்போன்றவர்களைப்பற்றி, இவர்கள்தம் அரசியல் நிலைப்பாடு பற்றியெல்லாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

Continue Reading →

வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள் 2!

 

- வேந்தனார் இளஞ்சேய் -

1. விளக்கீடு இன்று!

விளக்கீடு இன்றென்றாள் என் மனையாள்
வந்துமோதின அந்நாள் இனிய நினவுகள்
வகை வகையாய் சுட்டிகளை வைத்தே
வரிசையாய் விளக்கேற்றி நாம் மகிழ்ந்தநாள்

வீடெல்லாம் நிறையவே சுட்டி விளக்கேற்றி
வாழைத் தண்டை  வாசலினில் நட்டுவைத்து
வகையாக நன்கே எள்பொதியிட்டு எரித்தநாள்
வாராதோ மீண்டொருநாள் எம் வாழ்வில்

ஒளியேற்றி உறவுடனே கூடி ஒன்றாய்
ஓடியாடி மகிழ்ந்தே வாழ்ந்தவர் அன்றோ
விளக்கீடு வருவதும் தெரியாமல் நாமிங்கே
விரைவான வாழ்வில் வகையாக மாட்டுண்டோம்.

Continue Reading →

தொடர் நாவல்: வெகுண்ட உள்ளங்கள் (3)

- கடல்புத்திரன்  (பாலமுரளி) -[ 1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பல்வேறு ஈழத்தமிழரின் விடுதலை அமைப்புகளில் இணைந்து போராடப் புறப்பட்டனர். அவ்விதமாகப் புறப்பட்டவர்களில் ‘கடல்புத்திர’னும் ஒருவர். தனது அனுபவங்களை மையமாக வைத்து ‘வெகுண்ட உள்ளங்கள்’ நாவலை இவர் படைத்திருந்தாலும், இந்த நாவல் விரிவானதொரு நாவலல்ல. ஆனால் இவ்விதமாகத் தமது இயக்க அனுபவங்களை மையமாகக்கொண்டு ஏனையவர்களால் படைக்கப்பட்ட நாவல்களிலிருந்து இந்த நாவல் முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் படைக்கப்பட்டிருப்பதொன்றே இந்த நாவலின் முக்கியமான சிறப்பாகக் கருதுகின்றோம். பொதுவாக இவ்விதமான படைப்புகளை எழுதுபவர்களின் எழுத்தில் விரவிக்கிடக்கும் சுயபுராணங்களை இவரது ‘வெகுண்ட உள்ளம்’ நாவலில் காண முடியாது. ‘வெகுண்ட உள்ளங்கள்’ என்னுமிந்த இந்த நாவல் 1983ற்கும் 1987ற்குமிடைப்பட்ட பகுதியில், ஈழத்தமிழர்களின் போராட்ட எழுச்சி எவ்விதம் ஒரு கடலோரக்கிராமத்தின்மீது தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பதை விபரிக்கின்றது. அந்த வகையில் இந்நாவல் அக்காலகட்டத்தை ஆவணப்படுத்திய முக்கியதொரு படைப்பாக விளங்குகின்றது. கூடவே அமைப்புகள் எவ்விதம் செயற்பட்டன, அவற்றின் கட்டமைப்புகள் எவ்விதமிருந்தன என்பவற்றையும் வெளிப்படுத்துகின்றது. – பதிவுகள் -]


அத்தியாயம் மூன்று!

பிறகு அண்ணன் மன்னி வாழ்வு நல்லபடியாகவே ஒடியது. வெளிநாடு போற ஆசை அண்ணனுக்கும் ஏற்பட்டது. அவர்களுக்கிடையில் காசு போதியளவு கிடைக்காமையால் பூசல்கள் மெல்ல மெல்ல எழ ஆரம்பித்தன. ‘என்னடாப்பா வீட்டில் சத்தம் கேட்கிறது’ என்று அவனுடைய நண்பர்கள் கேட்க.ஒரளவு அடங்கிப் போயிருந்தான்.

இயக்கம் அவனை பிடிச்சபோது மன்னி “விடமாட்டேன்” என குழறி அழுதார்.அப்படியும் கொண்டுபோய் விடவே, வீட்டையே ஒடிவந்தார்கள்.

திரும்பிய பிறகு அடிவாங்கியவர்கள் இரண்டு மூன்று நாள் நோவால் வேலைக்கு போகமுடியாமல் தவித்தார்கள்.

கனகனை, அன்டனை, நகுலனைக் கண்டால் விட்டார்கள்.  அண்ணனோடு நேற்று வந்த பஞ்சன் அவனைப்பார்த்துவிட்டு “உங்கட ஆட்கள் மோசமில்லையடா, ஆனா, அடி வாங்கினால் 2,3 நாளைக்கு கட்டாயம் புக்கை கட்டவேணும்” என்றான்.

அவனுக்கு சிரிப்பு வந்தது. அன்டனும் நகுலனும் நண்பர்களாகவிருப்பதால் அவனையும் இயக்கமாக கருதி முறைப்பாடு தெரிவிக்கிறார்கள்.

அண்ணனும் மெளனமாக இருப்பது சங்கடமாக இருக்கிறது. அவனைக்குறித்து புறுபுறுத்தாவது இருக்கலாம். ஆனால் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் போராடுகிறவர்கள் என்ற மரியாதையும் அவர்களுக்கு இருக்கவே செய்தன.

எனவே இயக்கத்தோடு இழுபடுகிறவர்களையும், ‘சப்போட்’ பண்ணுகிறவர்களையும் அவர்கள் தடுக்க முயல‌வில்லை.

ஏ.ஜி.ஏ கூட்டத்திலே, புதிதாய் ஒருத்தனை அறிமுகப் படுத்தினார்கள். இருவருக்கும் அவனை முன்னமே தெரியும்.

“இவன், தற்காலிகமாக தெற்கு அராலிப்பகுதிக்கு ஜி.எஸ்.ஆக நியமிக்கப்படுகிறான்” என அறிவித்தார்கள்.

சங்கானை உப அரசாங்கப் பிரிவில், அராலியும் ஒரு கிராமம். மற்ற 12 கிராமங்களைப்போல இல்லாமல் பெரிய கிராமமாக இருந்தது. அதன் வடக்கு, தெற்கு பகுதிகள் ஒவ்வொன்றுமே நிலப்பரப்பில் ,சாதிப்பிரிப்பில் தனி தனிக்கிராமத்துக்குரிய குணாம்சங்களைக் கொண்டிருந்தன.

முழு கிராமத்துக்கு ஒரு கிராமசேவகரையே இலங்கை அரச பிரிவால் நியமிக்கப்பட்டதால் அவ்விடத்து மக்கள் அதிகமாக கஷ்டப்பட்டார்கள். அதை ஒட்டியே இவர்களும் வடக்கைச் சேர்ந்த லிங்கனை ஜி.எஸ்.ஆக நியமித்து விட்டிருந்தனர். ஆனால், தெற்குக்கு இன்னொரு ஜி.எஸ்.ஐ நியமிக்க வேண்டிய தேவையிருந்தது.

தற்காலிகமான திலகனின் தெரிவு நல்லது தான் . ஆனால் ‌வாலையம்மன் பகுதி ஆட்களுக்கு நிச்சயமாக ஆச்சரியமளிக்கப் போகிறது. மற்றைய கிராமங்களிலிருந்து இரண்டு , இரண்டு அங்கத்தவர்கள் வந்திருந்தார்கள். லிங்கன் ,தன்னுடைய தோழர்களிற்கு அரசியல் தெரியவேணும் என்பதற்காக எப்பவும் இரண்டு தோழர்களை கூட்டத்திற்கு அழைத்து வருபவன். தெற்குக்கு புதியவர் நியமிக்கப் படுவதால் இவ்விருவரையும் அழைத்திருந்தான். அடுத்த கூட்டத்திற்கு வடக்கிலிருந்து இருவர் வருவார்கள். அவனுக்கும் கூட‌ பெரிதாக அரசியல் தெரியாதுதான். ஆனால் இவர்களிற்கு எல்லாம் அவன் மூத்த ‘பாட்ஜ். எனவே கிராமத்திற்கும், மேலிடத்திற்குமிடையில் இருக்கிற‌ ஒரு தபால்காரனாக‌ தன்னை வைத்திருந்தான். எப்பவும் தொடர்பையும் பேணி வந்தான்.

Continue Reading →