‘சுட்டி’ கணேசன்!

'சுட்டி' கணேசன்!அண்மையில் ‘சுட்டி விகடன்’ ஆசிரியர் சுட்டி கணேசன் பற்றிய கட்டுரையொன்றினை இணையத்தில் வாசித்தேன் , அதை எழுதியவர் தகவற் தொழில்நுட்ப வல்லுநரும், அத்துறையில் தமிழ் நூல்கள் பலவற்றை எழுதியவருமான காம்கேர் கே.புவனேஸ்வரி அவர்கள். அவர் அக்கட்டுரையில் ‘சுட்டி’ விகடன் சஞ்சிகையுடன் தனக்கேற்பட்ட அனுபவமொன்றினையும் பகிர்ந்துகொண்டிருந்தார். நல்லதொரு கட்டுரை. அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். ‘சுட்டி’ விகடன் அவர்கள் என் முகநூல் நண்பர்களில் ஒருவரும் கூட. அக்கட்டுரைக்கான இணைய இணைப்பு: http://compcarebhuvaneswari.com/?p=483

‘சுட்டி’ கணேசன் அவர்களைப்பற்றிய மேற்படி கட்டுரை ஆச்சரியத்தைத்தரவில்லை. ஏனென்றால் அவரை நான் 1996ஆம் ஆண்டிலிருந்து அறிவேன். ‘ஸ்நேகா’ பாலாஜியாக அறிமுகமானவர். ஸ்நேகா பதிப்பகமே எனது நூல்களான ‘அமெரிக்கா’ (சிறுகதைகள் மற்றும் சிறு நாவற் தொகுப்பு) மற்றும் ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ ஆகிய நூல்களைத் தமிழகத்தில் சிறப்பாக வெளியிட்டது. அவையே தமிழகத்தில் முதலில் வெளியான எனது நூல்கள்.

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் இவரை ‘சவுத் ஏசியன் புக்ஸ்’ பாலாஜியாக அறிந்திருப்பார்கள். ‘சவுத் ஏசியன் புக்ஸ்’ நிறுவனமும், இலங்கையின் தேசிய கலை இலக்கிய பேரவையும் இணைந்து பல நூல்களை வெளியிட்டுள்ளன்மை குறிப்பிடத்தக்கது.

அன்றிலிருந்து இன்று வரை இவருடனான தொடர்பு நீடித்து வருகின்றது. இவரது பல கடிதங்களும் என்னிடம் இன்னுமுள்ளன. எனது நூல்களை வெளியிட்ட காலத்தில் அவர் எழுதிய கடிதங்கள் அவை.

இவரைப்பற்றி நினைத்ததும் வேறு பல நினைவுகளும் உடன் நினைவுக்கு வரும். எனது படைப்புகள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் இவரே.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: பாரதீய சங்கீதம் இசைமேதை எம்.பி. ஶ்ரீநிவாசனும் நடன நர்த்தகி கார்த்திகா கணேசரும் இணைந்த கவிஞனின் கனவு !

முருகபூபதி” இசை வெறும் உணர்ச்சியைத்தரக்கூடிய போதையல்ல. அது நலிந்துபோன இதயத்திற்கு நம்பிக்கையை ஊட்டுகிறது. மனிதனின் தத்துவார்த்த வாழ்வை வளப்படுத்தும் வலிமை அதற்குண்டு. எனவே மனித நாகரீகத்தின் செல்வமான இசையின் உயிரை அகற்றி, அதன் வெறும் சடலத்தை மாத்திரம் காட்டும் நிலையை இசையமைப்பாளர்கள் கைவிடவேண்டும். மக்கள் கவிஞன் பாரதி கூறியதைப்போலவே இசையின் வாயிலாக நவரசங்களை பிரதிபலிக்கச்செய்யவேண்டும். அதைச்செய்ய முன்வரும் இசையமைப்பாளர்களையும் மக்களையுமே நான் விரும்புகின்றேன்.”

இவ்வாறு பாரதி நூற்றாண்டு காலகட்டத்தில் இலங்கை வந்திருந்த இந்திய இசைமேதை எம்.பி. ஶ்ரீநிவாசன் ( மானாமதுரை பாலகிருஷ்ணன் ஶ்ரீநிவாசன்) வீரகேசரி வாரவெளியீட்டிற்கு ( 20-12-1981) வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.
இவரை பேட்டிகண்டவர் வீரகேசரி பத்திரிகையாளர் சுபாஷ் சந்திரபோஸ்.

யார் இந்த ஶ்ரீநிவாசன்…?

ஒரு   கால கட்டத்தில்  சென்னையில்  இடதுசாரி  கலை இலக்கியவாதிகள்   கூட்டாக  இணைந்து  தயாரித்து  வெளியிட்ட பாதை   தெரியுது  பார்    திரைப்படத்தின்  இசையமைப்பாளர். இந்தப்படத்தில்   சில   காட்சிகளில்   ஜெயகாந்தனும்    வேண்டா வெறுப்பாக   தோன்றி  நடித்திருந்தார்.  எனினும்  படத்தின்  நீளம்  கருதி   அதனை  சுருக்கும்பொழுது  தான்  வரும்  காட்சிகளை ஜெயகாந்தன்   நீக்கச்சொன்னார்.

ஜெயகாந்தனின் அருமை நண்பரான எம்.பி.ஶ்ரீநிவாசன், தமிழ், மலையாளம், வங்காளம் உட்பட சில இந்திய மொழிகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருப்பவர்.

Continue Reading →

ஆய்வு: வேலூர் மாவட்ட இருபெரும் சிவன் திருத்தல வரலாறும் கட்டிட அமைப்பும் – ஓர் ஆய்வு

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -முன்னுரை
வேலூர் மாவட்டத்தில் வேலூர்க் கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயமும் விரிஞ்சிபுரம் ஸ்ரீ மார்க்கபந்தீசுவரர் ஆலயமும் வரலாற்று சிறப்பு மிக்கவைகளாகவும் சிறந்த கட்டிட அமைப்பினை உடையவையாகவும் திகழ்கின்றன. அவற்றின் அமைப்பும் இலக்கியங்களிலும் வரலாற்றிலும் அவைகள் பெறும் இடத்தைக் குறித்தும் இக்கட்டுரையில் காணலாம்.

விரிஞ்சிபுர மார்க்கபந்தீசுவரர் கோயில்

கரன் என்னும் சுராசுரனுக்கு அருள்பாலித்த வரலாற்றையும் தென்கயிலாயக் கிரிப்பிரதட்சிண விழாவில் கரிகாற் சோழ பூபதிக்குத் துக்கம் காட்டிய வரலாற்றையும் இக்கோயில் உணர்த்துகின்றது.

“பாலிமாநதித் தெய்வநீராடிய பலத்தா
லாலமாயவ னேயமாயவன் புரத் தடைந்தான்
சாலுமப்பதி யடைந்திடு மரும்பெருந் தவத்தாற்
சூலபாணியாம் வழித்துணை மருந்தரைத் தொழுதான்”1

இதன் வழி, அரசன் தெய்வத் தன்மையுள்ள அப்பாலாற்றின் நீரில் மூழ்கிய பலத்தினால் அன்புடன் திருமால் பூசை செய்ததாகிய விண்டுபுரியிற் சேர்ந்தான். இவனைத் தொடர்ந்து கௌரி, பிரமதேவர், திருமால் ஆகியோரும் முனிவர்கள் பலரும் பாலாற்றில் மூழ்கி நீராடி மார்க்கபந்தீசுவரரைப் பூசித்து மலையை வலம் வந்தனர். இவ்வகையில் இவ்வழி துணையம்பதி தென் கயிலாயங்கிரி போன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனையே,

“மன்னிய விமானந்தோன்று மிடமெல்லாம் வானோர்நாடா
மின்னிசை முரசங்கேட்டு மிடமெலா மயனா டென்பர்
சென்னியர் துதினோசை தெரிவிடந் திருமாலூரா
முன்னிய சிவன்வாழ் கோயி லுருத்திர னுலகமாமே”2

சிவலிங்க பெருமான் வீற்றிருக்கிற இடமெல்லாம் தேவருலகத்துக்குச் சமானம் என்றும் அங்கு முழங்கும் இனிதான ஓசையுள்ள முழவு கேட்குமிடமெல்லாம் திருமால் லோகமென்றும் பரமசிவம் வீற்றிருக்கும் திருக்கோயிலானது திருகண்டருத்திர லோகமாகிய கைலாசம் என்றும் அத்தலத்தின் முக்கியத்துவத்தை இப்பாடல் உணர்த்துகிறது.    கரிகாற் சோழ பூபதிக்கு மார்க்கபந்தீசுவரர் கிரிப் பிரதட்சண விழாவின் போது அருள்புரியும் காட்சி, மாசி மாதம் அருணாசலேசுவரர் திருவண்ணாமலை பள்ளிக் கொண்டாப்பட்டில் வல்லாள மாமன்னர் காலமானதற்குத் திருக்கருமம் செய்வதைப் போல் இருந்தது. தென் கயிலாயகிரி முகப்பில் இடபம் இருந்து வருவதும் அங்குள்ள மலையாள அன்பர் இடபக்கொடி பறக்கவிட்டு அதில் வேட்டு வெடித்துத் தென் கயிலாயகிரி பிரதட்சிண விழாவில் மார்க்கபந்துவை வணங்கி, திருவிழா கொண்டாடுவதும் அன்று முதல் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிற சிறப்பாகும்.

Continue Reading →

ஆய்வு: சங்ககாலச்சடங்குகளும் பெண்களின் நிலைப்பாடும்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமாய் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருப்பன சங்க இலக்கியங்கள். தமிழின் செழுமைக்கு மட்டும் சான்றாய் நிற்காது பன்முகப்பதிவுகளைத் தன்னகத்தே கொண்டன இவ்விலக்கியங்கள் என்பது கூடுதல் சிறப்பு. அவற்றிலும் ஒரு காலச் சமூகத்தை அடையாளம் காட்டும் அற்புத இலக்கியங்கள். இதில் காணக்கிடப்பன பல. அவற்றுள் ஒன்று அக்காலத்திய சடங்குமுறைகளும் அதில் பெண்களுக்கான பங்களிப்பும் குறித்தது. பெண்ணியக்கோட்பாடு வேரூன்றி மரமாகி நிற்கும் இக்காலச்சூழலில் ஒவ்வொரு காலத்திய பெண்கள் பற்றிய பதிவுகளை, அவர்களுக்கானச் சமூகச் சூழலை இலக்கியங்களே வெளிப்படுத்தி நிற்கின்றன. அவ்வகையில் சங்ககால இலக்கியங்களில் வழி அறியலாகும் சடங்குகள் குறித்தும் அவற்றுள் பெண்கள் குறித்த சமூகநிலைப்பாடும் இங்கு ஆய்வுக்கு உரியதாகிறது.

சங்ககாலச் சடங்குகள்
வழிபாடுகளும் சகுனங்களும் நம்பிக்கைகளும் சடங்குகளும் மக்களின் வாழ்வில் சங்ககாலம் தொட்டு இயைந்த ஒன்றாக உள்ளமையை இலக்கியங்கள் வழி அறிய முடிகின்றன.

‘அருங்கடி மூதூர் மருங்கிற் போகி
யாழிசையின் வண்டார்ப்ப நெல்லொடு
நாழிகொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
பெருமுதுபெண்டிர் விரிச்சி நிற்ப’(முல்லைப்பாட்டு 7-11)

என்று முல்லைப்பாட்டு மக்களின் வழிபாடு மற்றும் நம்பிக்கை குறித்துச் சுட்டுகிறது. நெல்லையும் மலரையும் தூவி வழிபட்ட முறைமைகளையும் எந்தவொரு நிகழ்வையும் நிகழ்த்தும் முன்னர் நற்சொல் கேட்டு நடத்தும் நம்பிக்கையையும் பண்டைய மக்கள் வாழ்வில் பின்பற்றியமை குறித்து இவ்வடிகளின் வழி அறியமுடிகின்றது.

Continue Reading →