மணம் வீசிய மல்லிகை!

இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு எழுத்தாளர் ஒருவரின் பங்களிப்பு மகத்தானது மட்டுமல்ல பிரமிக்க வைப்பதும் கூட. இவரது எழுத்துலகப் பங்களிப்பும் முக்கியமானது என்றபோதும் பிரமிக்க வைப்பது இவர் இலக்கிய உலகுக்கு ஆற்றிய இன்னுமொரு முக்கியமான பங்களிப்புத்தான். இவர் முற்போக்கு இலக்கியத்தைத் தன் பாதையாக ஏற்றுக்கொண்டதுடன் , செயற்பட்டவரும் கூட, சுயமாக வாசித்துத் தன் எழுத்தாற்றலை, ஞானத்தினை வளர்த்துக்கொண்டவர். இவர் முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தைச் சேர்ந்தவராகவிருந்தபோதும்கூட சகல பிரிவு எழுத்தாளர்களுக்கும் களமமைத்துக்கொடுத்தார். நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் உருவாக, வளர அவர் அமைத்துக்கொடுத்த களம் உதவியது. அதுதான் அவரது மிக முக்கியமான இலக்கியப்பங்களிப்பு. அவர்தான் எழுத்தாளரும், மல்லிகை சஞ்சிகை ஆசிரியருமான டொமினிக் ஜீவா.

ஓவ்வொரு தடவை மல்லிகை இதழ்களைப் புரட்டும்போதும் ஏற்படும் பிரமிப்புக்கு அளவில்லை. முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தில் அவர் இருந்தாலும், மல்லிகையில் அனைவருமே எழுதினார்கள். எழுத்தாளர் எஸ்.பொ. ஒருவரின் படைப்புகளைத் தவிர ஏனைய பல்வேறு இலக்கியக் குழுக்களைச் சார்ந்தவர்களின் படைப்புகளையெல்லாம் மல்லிகையில் காணலாம். எழுத்தாளர் மு.தளையசிங்கம் எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் சு.வில்வரத்தினம் எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் மு.பொன்னம்பலம் எழுதியிருக்கின்றார். கவிஞர் கந்தவனம் எழுதியிருக்கின்றார். கலாநிதி க.கைலாசபதி எழுதியிருக்கின்றார். அறிஞர் அ.ந.கந்தசாமி எழுதியிருக்கின்றார். ஒவ்வொரு காலகட்டத்திலும் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கெல்லாம் மல்லிகையில் இடம் கிடைத்திருக்கின்றது. கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன், வடகோவை வரதராஜன், தாமரைச்செல்வி , கே.எஸ்.சுதாகர் என்று அன்று இளையவர்களாகவிருந்த பலர் எழுதியிருக்கின்றார்கள்.

Continue Reading →

இலங்கைத்தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாததோர் ஆளுமை: காவலூர் எஸ். ஜெகநாதன் (காவலூரான்)

காவலூர் எஸ். ஜெகநாதன்ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டக்காலத்தில் அமைப்புகளின் உள் முரண்பாடுகள், புற முரண்பாடுகள் பலரை பலி வாங்கியுள்ளன. இலங்கை அரசுக்கும், போராட்ட அமைப்புகளுக்குமிடையிலான மோதல்கள் பலரைப் பலியாக்கியிருக்கின்றது. போராட்டம் காரணமாக அமைப்புகளினால் பல்வேறு அரசியல் காரணங்களினால் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்விமான்கள், பொதுமக்கள் எனப்பலர் பலியாகியுள்ளனர். அவர்களின் இழப்புகள் ஈடு செய்யப்பட முடியாதவை. அவர்களில் ஒருவர்தான் எழுத்தாளர் காவலூர் எஸ்.ஜெகநாதன். எனக்குக் காவலூர் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் இவர்தான். காவலூருக்கு இவரைப்போல் பெருமை சேர்த்தவர் வேறொருவர் இலர். அவ்வளவுக்குப் பத்திரிகை, சஞ்சிகைகள், வானொலியிலெல்லாம் காவலூரின் பெயரை ஒலிக்க வைத்தவர் இவர். அண்மையில் நூலகம் தளத்தில் பழைய மல்லிகை போன்ற சஞ்சிகைகள், பத்திரிகைகளைத் தேடிக்கொண்டிருந்தபோது எங்கு தேடினாலும் என் கண் முன்னாள் வந்து நிற்கும் எழுத்தாளராக விளங்கியவர் இவரே. அவ்வளவுக்கு அவர் தீவிரமாக எழுத்துலகில் இயங்கிக்கொண்டிருந்தார். மல்லிகை, வீரகேசரி, சுடர் என்று அவரது படைப்புகள் வெளிவராத பத்திரிகை, சஞ்சிகைகளே இல்லையெனலாம்.

இலங்கையில் பட்டம் பெற்று  நல்ல பணியில் இருந்தவர் 83 ஜூலைக்கலவரத்தைத்தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாகத் தமிழகம் சென்றார். தன் குடும்பத்தாரைப் பாதுகாப்பாக அங்கு தங்க வைத்துவிட்டு அடிக்கடி இலங்கை வந்து போய்க்கொண்டிருந்தார். அவ்விதமானதொரு சூழலில் திடீரெனக் கடத்தப்பட்டுக் காணாமல் போனார். பின்னர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன. அவர் கொல்லப்பட்டது பற்றிப் பலவிதமான தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இத்தகவல்களை காவலூர் ஜெகநதன் பற்றிய என் முகநூல் பதிவொன்றின்போது எதிர்வினையாற்றிய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களினால் பதிவு செய்யப்பட்டன. அவர் அமைப்பொன்றினால் கடத்தப்பட்டு இன்னுமோர் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், பின்னர் அவ்வமைப்பினால் கொல்லப்பட்டதாகவும் அத்தகவல்கள் கூறின. அதற்கு அவரைக் கைது செய்த அமைப்பின் தலைவர் கூறிய காரணம் அவர் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதுதான். அப்பதிவுக்கு எதிர்வினையாற்றியிருந்த காவலூர் ஜெகநாதனின் சகோதரரான எழுத்தாளர் எஸ்.எஸ்.குகநாதன் அக்காலகட்டத்தில் தமிழகத்தில் தங்கியிருந்த இலங்கை எழுத்தாளர் ஒருவர் காவலூர் ஜெகநாதன் தமிழகத்தில் குறுகிய காலத்தில் அடைந்த செல்வாக்கினைக்கண்டு பொறுக்க மாட்டாமல் அவர் மேல் அவ்விதமானதொரு பழியைப்போட்டதாகவும், அதன் காரணமாகவே அவரது நண்பரான அமைப்பின் தலைவர் அவரைக் கைது செய்ததாகவும் தன் கருத்தினைப் பதிவு செய்திருந்தார். ஆனால் இன்று அவரைக் கைது செய்த அமைப்பின் தலைவரும் இல்லை. கொன்ற அமைப்பின் தலைவரும் இல்லை. ஆனால் காவலூர் ஜெகநாதன் உயிருடன் இல்லாவிடினும் அவர் படைப்புகளூடு வாழ்ந்துகொண்டிருக்கின்றார். இனியும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்துகொண்டுதானிருப்பார். அவ்வளவுக்கு அவர் படைப்புகள் தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்திருக்கின்றன. அப்படைப்புகள் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகளினூடு , அவர் வெளியிட்ட படைப்புகளூடு அவர் வாழ்ந்துகொண்டிருப்பார்.

Continue Reading →