‘டொராண்டோ’வில் பாலன் தோழரின் ‘சிறப்பு முகாம் சித்திரவதை முகாம்’ நூல் வெளியீட்டு நிகழ்வு!

– வாசகர்களே! பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்காக, குறிப்பாகத் தமிழகத்தமிழர்களுக்காக, அவர்கள்தம் மத்தியில் தமிழகத்தின் சிறப்பு முகாம்களென்ற சிறைச்சாலைகள் பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக, அங்கு வாடும் ஈழத்தமிழ் அகதிகளின் நிலை பற்றி எழுதப்படும் புனைவுகள், அபுனைவுகள் ஆகியன தொடர்ச்சியாகப்பிரசுரிக்கப்படும். தமிழகத்துச்சிறப்பு முகாம்களில் நீங்கள் அடைபட்டிருக்கின்றீர்களா?  அப்படியானல் உங்களது அனுபவங்களை எம்முடனும் பகிர்ந்துகொள்ள விரும்பினால் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அவற்றை அனுப்பி வையுங்கள். – பதிவுகள் –


'டொராண்டோ'வில் பாலன் தோழரின் 'சிறப்பு முகாம் சித்திரவதை முகாம்'  நூல் வெளியீட்டு நிகழ்வு!

நேற்று , நவம்பர் 29, 2015 அன்று, பாலன் தோழரின் ‘சிறப்பு முகாம் சித்திரவதை முகாம்’ நூல் வெளியீட்டுக்குச் சென்றிருந்தேன்.  வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளுக்கு வரும் எண்ணிக்கையிலானவர்களே வந்திருப்பார்கள் என்றெண்ணிச் சென்ற எனக்கு , நிகழ்வு நடந்த கூடம் நிரம்பி வழிந்ததைக்கண்டபோது ஆச்சரியமும், கூடவே மகிழ்ச்சியும் தோன்றின.

எழுத்தாளர் பா.அ.ஜயகரனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு அமைப்புகள் பலவற்றின் கூட்டு முயற்சியாக நடைபெற்றதாக அறிந்தேன். இந்த நூல் வெளியீட்டின் இன்னுமொரு சிறப்பு அரசியல்ரீதியில் பல்வேறு முரண்பட்ட கருத்துகளைக்கொண்டவர்கள் இணைந்து இந்த நூல் வெளியீட்டினை நடாத்தியிருப்பதுதான். இது வரவேற்கத்தக்கது. முரண்பாடுகளுக்குள் நட்புரீதியிலான ஐக்கியத்தைக்காணல் ஆரோக்கியமானதே. நிகழ்விலும் பல்வேறு அரசியல் கருத்துள்ளவர்களையும் காண முடிந்தது. குறிப்பாக மயில், ராதா , சேனா, சிவா  போன்ற தேடகம் நண்பர்கள் பலரையும், ஜான் மாஸ்ட்டர், அலெக்ஸ் வர்மா, பரதன் நவரத்தினம், நிருபா நாகலிங்கம், ரதன், எஸ்.கே.விக்கினேஸ்வரன், மீராபாரதி , சிவவதனி பிரபாகரன் என்று பலரைக்காண முடிந்தது.

நிகழ்வின் ஆரம்பத்தில் மார்க் அந்தனி என்னும் இளைஞர் தமிழகச்சிறப்பு முகாமொன்றில் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனுபவத்தை விபரித்து உரையாடினார். ‘நாடு கடந்த தமிழீழம்’ அமைப்பின் பிரதிநிதிகளிலொருவரான உஷா ஶ்ரீஸ்கந்தராசா தனதுரையில் தமிழகத்துச் சிறப்பு முகாம்கள் மூடப்படுவதனை வற்புறுத்தி உரையாற்றினார். அத்துடன் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை புலப்படும் வகையில் ஜெயலலிதாவுக்கு எல்லாரையும் கடிதங்கள் எழுதும்படியும் அறிவுரை பகிர்ந்தார்.

அவரைத்தொடர்ந்து சர்வதேச மன்னிப்புச்சபையினைச்சேர்ந்த ஜான் ஆர்கியு  உரையாற்றினார். அவர் தனதுரையில் தனக்குக் கடந்த இருபத்து ஐந்து வருடங்களாக இலங்கைத்தமிழர் பிரச்சினை பற்றி ஆழமான புரிதல் இருப்பதாகவும், ஆனால் தமிழர்கள் அதிகமாக வாழும் தமிழ் நாட்டில் இவ்விதம் ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாம்கள் என்னும் சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடயம்  பற்றி அவ்வளவான புரிதல் இல்லை என்றும், ஆனால் இனிமேல் தன்னால் முடிந்த அளவுக்கு இந்த விடயத்தைச் சர்வதேச மன்னிப்புச்சபையின் கவனத்துக்குக் கொண்டுவர முயற்சி செய்யப்போவதாகக்குறிப்பிட்டார்.

இவர்களைத்தொடர்ந்து நூல் பற்றிய ஆய்வுரைகள் இடம் பெற்றன. முனைவர் சேரன், எழுத்தாளர் த.அகிலன், கணன் சுவாமி , பரதன் நவரத்தினம் மற்றும் ஈழவேந்தன் ஆகியோர் உரையாற்றினர்கள்.

Continue Reading →