சிறுகதை: நாகமுத்துவும் திருவள்ளுவரின் 55வது குறளும்

-பேராசிரியர் கோபன் மகாதேவா -இடம்: தமிழீழம் தென்மராட்சி கைதடி-நுணாவில் என்னும்  கிராமம்.
காலம்: 1960களின் முற்பகுதி.
தன் கணவரின் எட்டுச் செலவு நடந்த சனி பிற்பகல், உணவுப் பந்தியில் அமர்ந்திருந்த எல்லோருக்கும் நாகமுத்து தன் கையால் ஏதுமொன்று பரிமாற வேண்டும் என நாண்டு நின்று, எல்லோரும் சாப்பிட்டு முடியும் நேரத்தை அவதானித்து, ஓர் ஓலைப் பெட்டியில் உழுந்து வடைகளை எடுத்துச் சென்று தனது வளையல்கள் கழற்றியிருந்த வலக்கையால் ஒவவொன்றாக வாழை இலைகளின் நடுவில் மெதுவாக வைத்துக் கொண்டு வரிசை வரிசையாக ஒவ்வொருவரையும் பார்த்து ஒருவாறு புன்னகித்தபடி சென்றாள். நடையில் அவள் தடுமாறியதை எவரும் கவனிக்கவில்லை. வெற்றியர் இறந்தது புதன்கிழமை. அவருக்குக் கடுமையாக்கிய நாள் தொடங்கி, அவள் அவரருகேயே இரவுபகலாகக் காணப்பட்டாள். எனவே மகள் இரத்தினமும் சிறுமிகளாகிய இரு பேத்தியரும் அடுக்களை வேலைகளின் பொறுப்பை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் புதன்கிழமையில் இருந்து, எட்டுச் செலவுச் சனி மட்டும், இனத்த வெளிப்-பெண்கள் சிலர் காலை வந்து இரவுமட்டும் ஒத்தாசை செய்தனர். அவளுக்கும் சிலர் உணவு பரிமாறிக் கொடுத்தனர். ஆனால் உண்மையில் அவளை இருந்து உண்ணவைக்க முடியவில்லை. ஏதோ, தினம் தினம் அடுத்த நாள் உயிர் வாழவே அவள் சிறிது புசித்து வந்தாள் என்பது பல நாட்களுக்குப் பின்னரே ஊகிக்க முடிந்தது.  வியாழன், வெள்ளி, சனி, அவள் வீட்டுக்கு வந்த எல்லோருடனும், அழுதழுது கூடப் பேசவே தெண்டித்தாள்.  சமையல் வேலைகளுக்கு வேண்டிய சாமான்கள் இருக்கும் இடங்களை எல்லாம் உடனே காட்டி உதவினாள்.  பகலில் படுத்து இளைப்பாறத் தெண்டிக்க வில்லை. அதற்கு அவளின் கடமையுணரச்சி விடவில்லை. தன் மகள், மகனுடனும் மூன்று மருமகன் மாருடனும் பாசத்துடன் பேசி, பேரப் பிள்ளைகளைக் கட்டி முத்தமிட்டு ஆறுதல் கூறினாள். சனிக்கிழமை காலையிலேயே எட்டுச் செலவையும் துடக்குக் கழிவையும் ஐயரை அழைத்துச் செய்வித்து, மதிய போசனம் முடிந்தவுடன் பந்தலையும் இறக்கி, குடும்பத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தால் தாம் ஞாயிறு காலை வெளிக்கிட்டு கொழும்பு திரும்பலாம் என மருமகன்மார் துரையும் தில்லையும் தெண்டித்தனர். ஆனால் ஐயர், புதனன்று நாலு மணிக்கே பிரேதம் சுடலை சென்ற படியால் சனியன்று நாலுக்குப் பின்னரே தன் துடக்குக் கழிவுப் பூசை தொடங்க முடியும் என்றதால், இன்னொரு நாள் சுணக்கம் ஏற்பட்டது. எனவே, இருவரும் கூடிய லீவுகளைக் கோரித் தந்திகளை அனுப்பி, நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற தத்துவத்தைப் பின்பற்றினர். சனிக்கிழமை மாலை ஏழுக்கு எல்லாம் இனத்தார் தம்தமது வீடுகளுக்குச் சென்று விட்டனர். உடனே அவள் மகன் (பள்ளிக்கூடப் பரிசோதகர்) கந்தசாமியைத் தன் கணவரின் முன்-அறைக்குள் கூப்பிட்டு வெற்றியர் எவருக்கும் ஏதும் கடன்வகையில் கொடுக்க வேண்டுமா என ஆராய்ந்தாள். இது நடக்கும் போது வேறு ஏதோ வேலையாக அங்கு சென்ற துரையர், வெற்றியர் கடன் ஒன்றும் விட்டு வைக்க இல்லை என அறிந்து, அவள் விட்ட ஆறுதற் பெருமூச்சைக் கவனிக்கத் தவற வில்லை.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 133 : சென்னை வெள்ளமும், நகர் அமைப்பு பற்றிய சிந்தனைகளும்…

சென்னையில் வெள்ளம்!சென்னையில் விரைவில் இயல்பு நிலை தோன்றி , அனைவரினதும் சிரமங்கள், துன்பங்கள் நீங்கிட அனைவரும் வேண்டுவோம். விமானநிலையம் போன்ற கட்டடங்களுக்குள் எல்லாம் எவ்வளவு வெள்ளம்! இந்திய மத்திய , மாநில அரசுகள் இதிலிருந்து பாடம் படிக்க வேண்டும். இவ்விதமான இயற்கைச்சீற்றங்களைச் சமாளிக்கும் வரையில், நகரைத்தயார் நிலையில் வைத்திருக்கும் வகையில் நகர அமைப்புத்திட்டங்களை வடிவமைத்து அமுல் படுத்த வேண்டும். இந்த மாமழை ஒன்றை அனைவருக்கும் புரிய வைத்திருக்கின்றது. காங்கிரீட் வனமாக மாறிக்கொண்டிருக்கும் நகருக்கு, இவ்விதமான சமயங்களில் விரைவாக நீர் வடிந்து போவதற்குரிய வடிகால்கள் போதுமான அளவுக்கு இல்லை என்பதுதான் அந்தப்புரிதல்.

டொராண்டோ, கனடாவிலும் இதுபோன்ற நிலையுண்டு. ஒரு மணித்தியாலம் விடாது மழை பெய்தால் போதும் நகரம் வெள்ளக்காடாக மாறிவிடும். குறிப்பாக ‘டொன் வலி பார்க்வே’ கடுகதி நெடுஞ்சாலை வெள்ளத்தால் நிறைந்துவிடும். இதற்குக்காரணமும் இங்கும் போதிய அளவு குறுகிய நேரத்தில் அதிகமாகப்பெய்யும் மழை நீர் விரைவாக வடிந்து போவதற்குரிய வடிகால் வசதிகள் போதுமான அளவு இல்லை என்பதுதான். சென்னையில் தற்போது பெய்யும் மழைபோல் பல நாள்களாக மழை பெய்தால், ‘டொராண்டோ’வுக்கும் இந்த நிலைதான் எதிர்காலத்தில் ஏற்படும்.

இந்த இயற்கையின் சீற்றத்திலிருந்து இந்திய மத்திய , மாநில அரசுகள் பாடம் படிக்க வேண்டும். நகரத்திட்டமிடல் வல்லுநர்கள் நகரொன்றுக்குப்போதிய அளவில் வடிகால்கள் இருக்கும் வரையில் அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும். சூழற் பாதுகாப்பினை மையமாக வைத்துத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். மக்களை நகரங்களை நோக்கிப் படையெடுக்காத வண்ணம், பிற பகுதிகளிலும் வேலை வாய்ப்புகள் உருவாகும் வகையிலான திட்டங்களை உருவாக்க வேண்டும்.

Continue Reading →

படித்தோம் சொல்கின்றோம்: சாவின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த குழந்தைப் போராளிகளின் மௌனத்தை உடைக்கும் புதினம் வழி தவறிச்சென்ற ஒரு ஆட்டுக்குட்டியின் கதை அம்மாவை இழந்து துப்பாக்கியை ஏந்திய சைனா கெய்ரெற்சியின் குழந்தைப்போராளி நவீனம்

சைனா கெய்ரெற்சியின்    குழந்தைப்போராளி   நவீனம்முருகபூபதி“ஏகே 47  துப்பாக்கியுடன்  ஒவ்வொரு  குழந்தையும்  மூன்று ரவைக் கூடுகளை   அணிந்துகொள்கிறார்கள்.  சிலர்  ஆறு ரவைக் கூடுகளைக்கூட  கட்டியிருப்பார்கள்.  இந்தச் சுமையைப்பற்றி எங்களுக்கும்   கவலையில்லை.  எங்கள்  தலைவர்களுக்கும் கவலையில்லை.    எந்தப்பாரத்தைச் சுமந்தாவது,  என்ன  வித்தை காட்டியாவது   தலைமையின்  கவனத்தைப் பெற்றுவிடுவதில் குழந்தைகள்   கண்ணும்  கருத்துமாயிருந்தார்கள்.   கனமான இந்தத்துப்பாக்கிகள்   எங்களுக்குத்தாயின் அரவணைப்பைப்போன்றன.   நாங்கள்  உயிரைவிட்டாலும் விடுவோமே  தவிர  ஒரு  கணமும்  துப்பாக்கியை விட்டுப்பிரியமாட்டோம்.   துப்பாக்கி  இல்லாத  நாங்கள் முழுமையற்ற   பிறவிகள்.   உங்களின்  இந்த  அவலநிலை  குறித்து உங்கள்  தளபதிகள்  கொஞ்சமேனும்  கவலை கொள்ளவில்லையா… ?  என  நீங்கள்  கேட்கக்கூடும்.   அவர்கள் முசேவெனியின்   விருப்பங்களைப் பிழைபடாமல்  நிறைவேற்றும் கலைகளில்   மூழ்கிக்கிடந்தார்கள். ”

இந்த  வாக்குமூலம்,  ஆபிரிக்க  நாடான  உகண்டாவில்  1976  ஆம் ஆண்டு   பிறந்த  ஒரு  குழந்தையின்   போர்க்கால  வாழ்க்கையின் சரிதையில்  பதிவாகியிருக்கிறது. அவள்  பெயர்   கெய்ரெற்சி.   (Keitetsi). அந்தக்குழந்தைக்கு  ஒன்பது  வயதாகும்பொழுது  இராணுவப்பயிற்சிக்கு   தள்ளப்படுகிறாள்.   கட்டளைத்தளபதிக்கு அவளுடைய   குழந்தைப்பருவம்  ஒரு பொருட்டல்ல.   ஆனால்,  அவளுக்கு  ஒரு  அடைமொழிப்பெயர்  சூட்டவேண்டும்.  அவளுக்கு இடுங்கிய  கண்கள். ” ஏய் உன்னைத்தான்.சீனர்களைப்போல  இடுங்கிய  கண்  உள்ளவளே…. என்னை  நிமிர்ந்துபார்.”  அந்த உறுமலுடன்  அவளுக்கு பெயரும்  மாறிவிடுகிறது. அன்றுமுதல் அவள் சைனா கெய்ரெற்சி. (China Keitetsi)

தாயன்பு,   நல்ல  பராமரிப்பு,  நேசம்  தேவைப்பட்ட  குடும்பச்சூழல், கல்வி   யாவற்றையும்   தொலைத்துவிட்ட  பால்ய காலம், களவாடப்பட்ட  குழந்தைப் பருவம்,  ஆரோக்கியமற்ற  அரசு,  அதிகாரம் யாரிடமுண்டோ  அவர்களே   மற்றவர்களின்  வாழ்வைத் தீர்மானிக்கும்   சக்திகள்.   இவ்வளவு  கொடுந்துயர்களின்  பின்னணியில்  சபிக்கப்பட்ட  ஒரு  பெண் குழந்தையின்  வாழ்வு  அந்த   உகண்டா   மண்ணில்  எவ்வாறு  பந்தாடப்பட்டது…? அவளது அபிலாசைகள்   எங்கனம்  புதைக்கப்பட்டது…? என்பதை சயசரிதைப்பாங்கில்   சொல்லும்  புதினம்தான்  குழந்தைப்போராளி.

Continue Reading →