அறிஞர் அ.ந.கந்தசாமி நினைவாக …..

– ஈழத்தமிழ் இலக்கியத்தின் முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரும், சிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான அறிஞர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14. கவிதை, சிறுகதை, நாடகம், நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் சகல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் அ.ந.க என்று அனைவராலும் அழைக்கப்பட்ட அறிஞர் அ.ந.கந்தசாமி. அவரைப்பற்றி ஈழத்தமிழ் இலக்கியத்தின் ஆளுமைகள் சிலர் எழுதிய கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றினைத் தொகுத்து , அவர் நினைவாக வழங்குகின்றோம். – பதிவுகள் –

சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்~

– அந்தனி ஜீவா –

அறிஞர் அ.ந.கந்தசாமி -– ‘சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்’ என்னும் அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றிய அந்தனி ஜீவாவின் இக்கட்டுரைத் தொடர் ஈழத்தில் தினகரன் வாரமஞ்சரியில் 12-02-1984 அன்றிலிருந்து தொடராக வெளிவந்த கட்டுரைத் தொடராகும். ‘பதிவுகள்’ இணைய இதழிலும் மே 2003இலிருந்து அக்டோபர் 2003 வரை தொடராக மீள்பிரசுரம் செய்யப்பட்டது. தற்போது அ.ந.க.வின் நினைவு தினத்தினை ஒட்டி மீள்பிரசுரமாகின்றது. பெப்ருவரி 14, 1968 அவர் அமரரான நாள். – பதிவுகள் –

அறிஞர் அ.ந.கந்தசாமிஅந்தனி ஜீவா “வாலிபத்தின் வைகறையில் பள்ளி மாணவனாக யாழ்ப்பாணத்து நகரக் கல்லூரிக்கு வந்து விட்டு, மாலையில் கிராமத்தை நோக்கிப் புகைவண்டியில் செல்லுகையில் சில சமயம் தன்னந் தனியே அமர்ந்திருப்பேன். அப்பொழுது என் கண்கள் வயல் வெளிகளையும், தூரத்துத் தொடு வானத்தையும் உற்று நோக்கும்….உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் நிறைந்த காலம். உலகையே என் சிந்தனையால் அளந்து விட வேண்டுமென்று பேராசை கொண்ட காலம்…..”

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அமரராகிவிட்ட எழுத்தாளரும், சிந்தனையாளரும், முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியுமான அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள் தன் இளமைக்கால நினைவலைகளை இவ்வாறு எழுதியுள்ளார். எழுத்தாளர்களின் இளமைக்கால நினைவலைகள் இவ்வாறாகத்தானிருக்கும்.  அமரரான அ.ந.க.வின் எழுத்துகளை மீண்டும் படிக்கும் பொழுது அந்தத் துள்ளும் தமிழும், துடிப்புள்ள நடையும் எம்மை மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன.

Continue Reading →

கவிதைகள் மூன்று!

1. வன்மம்

– மாதங்கி –

கவிதை வாசிப்போம் வாருங்கள்!மேற்கூர்ப் பெருநகர
நாற்சந்தி முகப்படியில்
அறிவு சீவிகள் சிலர் கூடிநின்று
ஆளுக்காள் அடிபட்டனர்
சொட்டை பேசினர்
சொல்லெறிந்து மோதினர்

பிரமிளின் மிச்சமே
பின்நவீன எச்சமே
முள்ளிலா மீனே
வா…. வா
மூக்கிலே குத்துவேன்
முதுகிலேறி மொத்துவேன்

கல்லுக்கும் வன்மம்
கற்றுத் தரவல்ல
சொல்லின் செல்வர்களென்றால்
சும்மாவா?

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 154: இலக்கியத்தில் தடம் பதித்துவரும் சகோதரிகள் இருவர்!

ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் (புகலிடம் இலக்கியத்தையும் உள்ளடக்கி)  தடம் பதித்துvவரும் பெண் எழுத்தாளர்களில் இருவர் சகோதரிகள். ஒருவர் சந்திரா ரவீந்திரன். மற்றவர் சந்திரவதனா செல்வகுமாரன். நீண்ட நாள்களாக சந்திரா ரவீந்திரன், சந்திரா தியாகராஜா, சந்திரவதனா செல்வகுமாரன் ஆகிய மூவரும் சகோதரிகள் என்று நினைத்திருந்தேன். இவர்களில் சந்திரா தியாகராஜாவே மூத்தவராக இருக்க வேண்டுமென்றும் எண்ணியிருந்தேன். பின்னர்தான் தெரிந்தது சந்திரா தியாகராஜாவும், சந்திரா ரவீந்திரனும் ஒருவரே என்பது. சந்திரா தியாகராஜா எண்பதுகளிலிருந்தே ஈழத்துத் தமிழ் வெகுசன ஊடகங்களில் நன்கு அறியப்பட்ட ஒருவராக விளங்கியவர் என்பதாலேயே அவ்விதம் எண்ணியிருந்தேன்.

தற்போது சந்திரா ரவீந்திரனாக அறியப்படும் இவரது ‘நிலவுக்குத்தெரியும்’ சிறுகதைத்தொகுதி அண்மையில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாகத்தமிழகத்தில் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவர் சந்திரா தியாகராஜா என்னும் பெயரில் எழுதிய காலகட்டத்தில் வெளியான ‘நிழல்கள்’ சிறுகதைத்தொகுப்பு பருத்தித்துறையில் யதார்த்தா வெளியீடாக 1988இல் வெளியாகியுள்ளது. அத்தொகுப்பில் சிரித்திரனில் பரிசு பெற்ற இவரது சிறுகதைகளும், யாழ் இலக்கிய வட்டம் / வீரகேசரி இணைந்து நடாத்திய குறுநாவல் போட்டியில் (1984 / 1985) இரண்டாம் பரிசு பெற்ற ‘நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்’ என்னும் குறுநாவலும் அடங்கியுள்ளன.

‘நிழல்கள்’ என்னும் இத்தொகுப்பினை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணையத்தொடுப்பு: http://noolaham.net/project/45/4435/4435.pdf

சகோதரிகள் இருவரும் தொடர்ச்சியாக ஆற்றி வரும் இலக்கியப்பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சந்திரவதனா செல்வகுமாரனும் 1975 தொடக்கம் எழுதி வருகின்றார். இருவருமே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மூலமாகவே தம் இலக்கிய வாழ்வினைத்தொடங்கியவர்கள் என்பதை இவர்களைப்பற்றிய விக்கிபீடியாத்தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 153 :இலங்கைத் தமிழ்ப்பொப் இசையும், நித்தி கனகரத்தினமும்!

நித்தி கனகரத்தினம் இளமையில்நித்தி கனகரத்தினம்இலங்கைத்தமிழ்ப்பொப் இசையென்றால் முதலில் ஞாபகத்துக்கு வருபவர் நித்தி கனகரத்தினம்தான். அமரர் கமலநாதன் எழுதிய ‘சின்ன மாமியே!’ பாடல் மூலம், அதனைப் பாடி, அதனை பட்டி தொட்டியெங்கும் அறிய வைத்து, அதன் காரணமாகவே  இலங்கைத்தமிழ்ப்பொப் இசையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் நித்தி கனகரத்தினம். நான் முதலில் கேட்ட ஈழத்துப்பாடல் ‘சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?’ பாடல்தான்.

நித்தி கனகரத்தினம் பாடிய மூன்று பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை என்பேன். ‘சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?’ , ‘கள்ளுக்கடைப் பக்கம் போகாதே! உன் காலைப்பிடித்துக்கெஞ்சுகிறேன்.’ மற்றும் ‘லண்டனிலை மாப்பிள்ளையாம் பெண்ணு கேட்கிறாங்க’ ஆகிய பாடல்கள்தாம் அவை.

தனித்துவம் மிக்க இலங்கைத்தமிழ்ப்பொப் இசையின் வளர்ச்சிக்கு, இலங்கைத்தமிழரின் யாழ்ப்பாணத் தமிழ்ச்சொற்கள் அடங்கிய இவர் பாடிய பொப் இசைப்பாடல்கள்  முக்கிய பங்காற்றியுள்ளன. ‘ஊர் சுழலும்   பொடியளெல்லாம்’, ‘ ஏனணை மாமி’, ‘இஞ்சினியர் என்று சொல்லி புளுகித்தள்ளினாராம்’ போன்ற சொற்பிரயோகங்கள் மேற்படிப்பாடல்களுக்குச் சுவை சேர்ப்பவை.

இலங்கைத்தமிழ்ப்பொப் இசைக்குப் பலர் பங்களிப்பு செய்திருக்கின்றார்கள். ஆனால் அவர்களில் முன்னணியில் நிற்பவர் நித்தி கனகரத்தினம் என்பேன். அதற்குக் காரணமாகப் பொப் இசைப்பாடல்களுக்கேற்ற அவரது குரல், துடிப்பான இசை, பாடல் வரிகளில் விரவிக்கிடக்கும் நகைச்சுவை ஆகியவற்றையே  குறிப்பிடுவேன்.

Continue Reading →

ஒரு சிறுகதையின் மீளுருவாக்கம்! சயந்தனின் ஆதிரை நாவல் மீதான ஒரு பார்வை.

சயந்தனின் ஆதிரை நாவல்“பொதுசன நூலகங்களில் இருக்கின்ற கனமான  புத்தகங்கள் எனக்கு வாழ்வின் பல மோசமான உண்மைகளை  கற்று தந்திருக்கின்றன” – இது நாம் அதிகம் அறிந்திராத தனது இளவயதில் மரணித்த ஈழத்து எழுத்தாளர் முனியப்பதாசன் ஒரு தடவை கூறிய வாசகம்.  இதனை வாசித்ததிலிருந்து  கனமான தடித்த புத்தகங்களை காணும்போதெல்லாம் இந்த வாசகம் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆயினும்  அவையனைத்துமே வாழ்வின் மோசமான உண்மைகளைக் கற்று தருபனவாக  இல்லாதிருந்த  போதிலும் விதிவிலக்காக ஒரு சில புத்தகங்கள் சில வேளைகளில் அமைந்ததுண்டு. அவற்றில் அண்மையில் வெளிவந்த தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ எனும் மகா நாவலைக்குறிப்பிடலாம். அது கடந்த பல தசாப்த காலமாக நீடித்த ஈழப்போரின் பின்னணியில் மறைந்திருந்த  பல மோசமான உண்மைகளையும் வரலாற்றையும் விபரித்துக்  கூறிச்சென்றது. இப்போது சயந்தனின் ‘ஆதிரை’ எனும் 664 பக்ககங்கள் அடங்கிய கனமான தடித்த நாவலொன்று எமது பார்வைக்கு கிட்டியுள்ளது. இது வாழ்வு குறித்தும் வரலாறு குறித்தும் எத்தகைய உண்மைகளை வெளிக்கொணரப் போகின்றது  என்ற ஆவலுடனேயே இந்நூலினில் நாம் உள் நுழைகிறோம்.

இன்றைய  நவீனதமிழ் இலக்கிய உலகில்  சயந்தன் மிகவும் கவனத்திற்குரிய ஒரு எழுத்தாளர். இவரது ஏனைய நூல்களை நாம் கண்ணுற்ற போதும் அது மிகப் பெரிய பாதிப்புக்களை எம்மிடையே ஏற்படுத்தவில்லை. அர்த்தம் சிறுகதைத்தொகுதி தமிழ்த்தேசியத்தின் பிரச்சார ஊதுகுழல்களாக விளங்கிய பல சிறுகதைகளையும் ஆறாவடு நாவல் பலத்த சிரமமான வாசிப்பனுபவத்துடன்   கடக்க வேண்டிய ஒரு நாவலாகவும் விளங்கியது. இப்போது இவரது இரண்டாவது நாவலாக ‘ஆதிரை’ வெளிவந்துள்ளது. தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நாவல் முன்னுரை, முகவுரை, மதிப்புரை, அணிந்துரை என மரபு சார்ந்த மதிப்பீடுகள் எதுவுமின்றி வெறும் மொட்டையாக வெளிவந்திருப்பது விசனத்தை ஏற்படுத்துகின்றது.

Continue Reading →