வாசிப்பும், யோசிப்பும் 157: இலக்கியச்சிறப்பு மிக்க ‘தமிழர் தகவல்’ மலர்!

வாசிப்பும், யோசிப்பும் 157: இலக்கியச்சிறப்பு மிக்க 'தமிழர் தகவல்' மலர்!கனடாவிலிருந்து வெளிவரும் ‘தமிழர் தகவல்’ இதழின் பெப்ருவரி (2016) மாத இதழ் அதன் இருபத்து ஐந்தாவது ஆண்டு மலராக வெளிவந்துள்ளது. இதனை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இவ்விதம் ஈழத்துப் பத்திரிகை உலகில் நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளரான எஸ்.திருச்செல்வத்தை ஆசிரியராகக்கொண்டு அவரால் வெளியிடப்படுவது.

மாதா மாதம் வெளியாகும் இதழ்கள் கனடாத் தமிழருக்கு, புதிய குடிவரவாளர்களுக்குப்பயனுள்ள விபரங்களை, ஆக்கங்களைத்தாங்கி வெளிவருவன. அவற்றை இலக்கியச்சிறப்பு மிக்கவை என்று கூற முடியாது.. ஆனால் இவ்விதழின் ஆண்டு மலர்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். அவை நிச்சயம் இலக்கியச்சிறப்பு மிக்கவை என்று கூறலாம். அந்த வகையில் இலக்கியச்சிறப்பு மிக்க மலராக இம்மாத இதழும் வெளிவந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

இம்மலர் கனடாத்தமிழர் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் வெளிப்படுத்தும் வகையில் வெளியாகியிருக்கும் அதே சமயம், உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழும் தமிழர் பற்றிய விபரங்களையும் தாங்கி வெளிவந்திருக்கின்றது.  அவ்வகையில் புலம் பெயர் தமிழர் சிறப்பு மலராகவும் இவ்விதழைக்கூறலாம். மலரின் கலை, இலக்கியச்சிறப்பு மிக்க கட்டுரைகளாகப்பின்வரும் கட்டுரைகளைக்குறிப்பிடுவேன்.

1. கனடாவில் தமிழ் ஒலிபரப்பு கால் நூற்றாண்டு வரலாறு – பொன்னையா விவேகானந்தன். கனடாவில் தமிழ் ஒலிபரப்பு வளர்ந்த கதையினை விரிவாக விபரிக்கும் கட்டுரை இது.

2. திரை விலகுகிறது.. மேடை நாடகங்கள் – ப.ஶ்ரீஸ்கந்தன். இக்கட்டுரையும் கனடாத் தமிழரின் நாடக வரலாற்றை விரிவாகப்பேசுகிறது; ஆவணப்படுத்துகிறது.

3.  இது படமல்ல. புலம்பெயர் திரைப்பட கவழிகை. – ரதன்.  திரைப்படங்களைப்பற்றிய பொதுவான கட்டுரை. இறுதியில் கனடாவில் வெளிவந்த திரைப்படங்களைப்பட்டியலிடுகிறது. இதற்குப்பதிலாக கட்டுரை முழுவதுமே கனடாவில் வெளியான தமிழ்த்திரைப்படங்களைப்பற்றியதாக இருந்திருக்கும் பட்சத்தில், கனடாத்தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய நல்லதோர் ஆவணக்கட்டுரையாக விளங்கியிருக்கும். கவழிகை என்றால் திரைச்சீலை. ‘புலம்பெயர் திரைப்பட கவழிகை’ என்ற தலைப்பு ‘புலம்பெயர் திரைப்படத்திரைச்சீலை’ என்ற பொருளினைத்தருகின்றது. அது பற்றிய குழப்பகரமான சிந்தனையைத்தருகிறது. இன்னும் எளிமையாகத் தலைப்பினை வைத்திருக்கலாமென்று தோன்றுகிறது.

Continue Reading →

மெல்பனில் தென்னாசிய கவிஞர்களின் சங்கமம்! கண்காட்சியும் கவிதா நிகழ்வும்!

நிகழ்வுகள்!இலங்கை – இந்தியா – பாக்கிஸ்தான் – பங்களாதேஷ் – நேபாளம் – பூட்டான் – மாலைதீவு – ஆப்கானிஸ்தான் முதலான எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் SAPAC (South Asian Public Affairs) என்னும் தென்னாசிய விவகாரங்களுக்hகன அமைப்பு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மெல்பனில் தொடங்கியது.

பல்லின கலாசார நாடாக விளங்கும் அவுஸ்திரேலியாவில் இதுபோன்ற பல தேசிய அமைப்புகள் இயங்குகின்றன. பொருளாதாரம் – விளையாட்டு – வர்த்தகம் – அயலுறவு – ஒருமைப்பாடு – கல்வி – வர்த்தகம் – கலாசாரம் முதலான துறைகளில் மேற்குறித்த எட்டு தென்னாசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் பரஸ்பரம் கலந்துரையாடுவதற்கும் ஒன்றிணைந்து கருத்தரங்கு தகவல் அமர்வுகள் நடத்துவதற்காகவும் தொடர்ச்சியாக இயங்கிவருகிறது. இந்நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு குடியேறியிருப்பவர்கள் மத்தியில் இருக்கும் கலை இலக்கிய ஊடகத்துறை ஈடுபாடு மிக்கவர்களுக்காக முதல்தடவையாக ஒன்றுகூடலை நடத்த முன்வந்துள்ளது. 

அவுஸ்திரேலியாவில் எதுவித இலாபநோக்கமுமமற்ற அமைப்பாக பதிவுசெய்யப்பட்டுள்ள தென்னாசிய விவகாரங்களுக்கான இந்த அமைப்பு, எதிர்வரும் 27 ஆம் திகதி (27-02-2016) சனிக்கிழமை மெல்பனில்; இலக்கிய நிகழ்ச்சியை ஒழுங்குசெய்துள்ளது.

மெல்பனில்  –  Stirling theological college   மண்டபத்தில் (40-60 Jackson  Road,  Mulgrave 3150 ) மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சி, நூல்களின் கண்காட்சியுடன் தொடங்கி கவிதா நிகழ்வுடன் இரவு 9.00 மணிக்கு  நிறைவுபெறும். குறிப்பிட்ட எட்டுநாடுகளுக்கும் கலை இலக்கிய கவிதைப்பாரம்பரியம் இருக்கிறது. தமிழ் மக்கள் ஏனைய நாடுகளின் கவிதை முயற்சிகளை அறிந்துகொள்வதற்கும் அந்த நாடுகளைச்சேர்ந்தவர்கள் தமிழர்களின் கவிபுனையும் ஆற்றலை அறிந்துகொள்வதற்கும் ஏற்றவாறு நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Continue Reading →

மெல்பனில் அனைத்துலக பெண்கள் தின விழா!மறைந்த பெண்ணிய ஆளுமைகள் அருண்.விஜயராணி – தமிழினி நினைவுரை!

அனைத்துலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் எதிர்வரும் மார்ச் 06 ஆம் தேதி     (06-03-2016) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு மெல்பேர்ண் பிரஸ்டன்…

Continue Reading →

ஆய்வு: தமிழரின் சமூக ஊடாட்டங்களில் உடல் பற்றிய கருத்தியல்

எழுத்தாளர் க.நவம்ஒரு குறிப்பிட்ட பிரதேச எல்லைக்குள் வாழ்கின்றவர்கள் என்ற வகையிலும், அவ்வாறு வாழும்பொழுது, பொதுமைப்பாடுடைய பல்வேறு தொடர்புகளையும், உறவுகளையும், ஊடாட்டங்களையும் தமக்கிடையே மேற்கொண்டுள்ளவர்கள் என்ற வகையிலும், அக்குழுமத்தினரை ‘ஒரு சமூகம்’ என அழைத்தல் மரபு. பாரம்பரிய தமிழ்ச் சமூகத்தில், மிக நீண்ட காலமாக, இந்த மனித உறவுகளையும் தொடர்புகளையும் ஊடாட்டங்களையும் நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்றாக, உடல் இருந்து வந்துள்ளது.

இவ்வாறான சமூக நடத்தைகளின்போது, உடலை மையமாக வைத்து, சமூக உறுப்பினர்கள் ஒருசாரார்மீது, ‘பாகுபாடு’ பேணப்பட்டு வந்துள்ளமைக்கு, ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள. ஒரு மனிதனின் உடல், இன்னொரு மனிதனால் தீண்டப்படுதலை, தடுத்து நிறுத்துவதற்கு வழிவகுத்த, இந்தப் பாகுபாட்டுக்கு, குறிப்பாகப் பெண்களும், இயற்கையாகவே உடலில் குறிப்பிட்ட குணாம்சங்களையோ அல்லது குறைபாடுகளையோ கொண்டவர்களும், சாதி என்ற பெயரால் தாழ்த்தப்பட்டவர்களும் இலக்காகி வந்துள்ளனர்.

மனித வரலாற்றின் ஆரம்ப காலம் தொட்டு, உடல் வலுவின் அடிப்படையில், பெண்ணினத்திலும் வலுவான சக்தியாகக் கணிக்கப்பெற்ற ஆணினமானது, சமூகத்தின் சகல மட்டங்களிலும், தனது அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொண்டது. பெண்ணினத்தை இரண்டாந்தர சக்தியாக, அடையாளப்படுத்திக்கொண்டது. இது போதாதென்று, கற்பு என்ற பொன் விலங்கை, பெண்களின் கரங்களில் பூட்டிக்கொண்ட தமிழ்க் கலாசாரம், ‘மாதவிலக்கு’ என்ற இயற்கையான உடலியல் செயற்பாட்டின்போதும், ‘தீட்டு’ என்ற பெயருடன் பெண்களின்மீது தீண்டாமையைத் திணித்துக்கொண்டது.

அடுத்து, இயற்கையாகவே உடலியல் மாற்றங்களுக்குள்ளாகி, அண்மைக் காலம்வரை அரவாணிகள் எனும் அருவெருக்கத்தக்க பெயரால் அழைக்கப்பட்டு வந்த திருநங்கையரை, சங்க இலக்கியங்களும், அறநூல்களும், பக்தி இலக்கியங்களும், காப்பியங்களும் ‘அச்சுமாறிகள்’ என்றும், ‘ஆண் பெண்ணாகிகள்’ என்றும், ‘பரத்தையருக்கு ஒப்பானோர்’ என்றும், ‘அலிகள் – ஊனங்கள் – பேடிகள்’ என்றும் குறிப்பிட்டு, அவர்களை இழிவானவர்களாகவும் கேள்விக்குரியவர்களாகவும் ஒதுக்கிய வரலாறு இற்றைவரை தொடர்கிறது. அனைத்து மாற்றுத் திறனாளிகளது நிலைமையும் எமது சமூகத்தில் இவ்வகைப்பட்டதே! மேலும், கறுப்பு நிறமுடையவர்களாகப் பிறந்த தமிழ்ச் சமூகத்தினர், அழகற்றவர்களாகவும், ஆளப்படுபவர்களாகவும், அதிகாரத்திற்குத் தகுதியற்றவர்களாகவும், இழிவின் சின்னங்களாகவும் கருதப்பட்டு வருகின்றமைக்கான ஆரம்ப விதை, தமிழ் அரசுகள் வீழ்ச்சியடைந்த 13ம் நூற்றாண்டின் இறுதியிலேயே நாட்டப்பட்டுவிட்டது.

Continue Reading →