பவளவிழா நாயகன் ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 15 – 04 – 2016 அன்று 75 வயது. பவளவிழாக்காணும் ஈழத்து படைப்பாளியின் பல்துறை பணிகள்! புன்னாலைக்கட்டுவனிலிருந்து தமிழர் புலம்பெயர் நாடுகள் வரையில் பயணித்த யாத்ரீகன்!

ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன்1.
“கிழக்கு  வானில்  சூரியன்  தங்கப்பாளமாக  ஜொலித்தபடி உதயமாகிக்கொண்டிருந்தான்.    சூரியோதயத்தை  நான்  முன்னர் கடற்கரையோரங்களில்   நின்று  பார்த்துக் களித்திருக்கிறேன். ஆனால்,   உயரத்தில்,   பறந்துகொண்டிருக்கும்  விமானத்திலிருந்து, புதிய  கோணத்தில்  வெண்பஞ்சுக் கூட்டங்களாக மிதந்துகொண்டிருக்கும்  மேகங்களினூடாக   அந்த   அழகிய காட்சியைப்பார்த்தபோது   நான்  மெய்மறந்துபோனேன்.   ஆதவனின்  ஒளிப்பிழம்புகள்    கணத்துக்குக்கணம்   புதிது  புதிதாய் கொள்ளை   அழகை   அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தன.”

இலங்கையிலிருந்து  17   ஆண்டுகளுக்கு   முன்னர்   வானத்தில்   பறந்து வரும்பொழுது Dr.T.Gnanasekaran  அவுஸ்திரேலியா  சிட்னியில்  இறங்கும்  தருணத்தில்  விமானம்  தரைதட்டுவதற்கு  முன்னர்   அந்த அதிகாலைப்பொழுதின்  உள்ளங்கவர்  காட்சியை   தரிசித்த   58   வயது படைப்பாளி  ஞானசேகரனின்   அன்றைய   வர்ணிப்புத்தான்   அந்த சூரிய  உதயக்காட்சி. அன்று காலை அவருக்கு அவுஸ்திரேலியாவில் விடிந்தது. அன்றைய அவரது வருகையே பின்னாளில்  இலக்கியவானில் ஞானம்   கலை,  இலக்கிய  இதழின்  பரிமாணத்துடன்  அவருக்கு பேருதயமாகியது   என்பதற்கு  ஒரு  நேரடி  சாட்சியாக  இருந்துகொண்டு   பவளவிழா  நாயகன்  ஞானம்  ஆசிரியர்  தி. ஞானசேகரன் அவர்களை வாழ்த்துகின்றேன். இலங்கையில் 1999 வரையில் நான் இவரை சந்தித்திருக்கவில்லை.

1999 ஆம்  ஆண்டு அவுஸ்திரேலியாவில்  சிட்னியில்  வதியும்  தமது புதல்வரிடம்   இவர்  தமது   துணைவியாருடன்   புறப்படுவதற்கு முன்னர்   மல்லிகை  ஜீவாவிடம்  எனது  தொடர்பிலக்கம்  பெற்றுள்ளார். ஒருநாள்   சிட்னியிலிருந்து   ஞானசேகரன்  தொலைபேசியில் அழைத்தபோது,  மெல்பனுக்கு  அழைத்தேன்.   எமது  இல்லத்தில்  ஒரு  மாலைவேளையில்     இலக்கியச்சந்திப்பும்   இரவு   இராப்போசன விருந்தும்    ஒழுங்குசெய்தபொழுது , மெல்பன்  இலக்கிய  ஆர்வலர்கள் செல்வத்துரை   ரவீந்திரன் ,  டாக்டர்  சத்தியநாதன்,   நடேசன்,   புவனா ராஜரட்ணம்,    அருண். விஜயராணி,   பாடும்மீன்  சிறிகந்தராசா ஆகியோர்    கலந்துகொண்டனர். மெல்பனில்   பாலம்  லக்ஷ்மணன்   அவர்களின்  இல்லத்திற்கும்  மாவை நித்தியானந்தனின்   பாரதி   பள்ளிக்கும்   வேறு  சில இடங்களுக்கும்  அழைத்துச்சென்றேன்.    காரில்  அமர்ந்தவாறே குறிப்புகள்    எடுத்துக்கொண்டார்.    பயணக்கதைக்கு   அவர் தயாராகிவிட்டார். இலங்கை   திரும்பியதும்   தினக்குரல்  வார  இதழில் அவுஸ்திரேலியப்பயணக்கதையை    சில  வாரங்கள்  தொடர்ந்து   எழுதி  – இறுதியில் அந்தத்தொடரையே நூலாக்கினார்.  பேராசிரியர் சி. தில்லைநாதனின்  அணிந்துரையுடனும்  எனது  முன்னுரையுடனும் அந்த  நூல்  வெளியாகியது. அவ்வேளையில்  ஞானசேகரன்  தமது  மருத்துவப்பணி  நிமித்தம் கண்டியில்   வசித்தார்.  கண்டி  முகவரியிலிருந்து  ஞானம் பதிப்பகத்தினால்   1999  மார்கழியில்   அந்த   நூல்  வெளியானது. அவுஸ்திரேலியா  வந்தவர்,   இந்தக்கங்காரு  நாட்டைப்பற்றி  மாத்திரம்   தகவல்  சேகரிக்கவில்லை.   இங்கிருந்த  எஸ்.பொ, மாத்தளை  சோமு,   முருகபூபதி,   அருண் . விஜயராணி  முதலான படைப்பாளிகள்,   நாடகக்கலைஞர்  சி. மனோகரன்  ஆகியோருடனான நேர்காணலையும்  பதிவுசெய்துகொண்டு,   சிட்னியில்   24   மணிநேரமும்   ஒலிபரப்பாகும்  இன்பத்தமிழ் வானொலி   இயக்குநர் பாலசிங்கம்   பிரபாகரனுக்கும்    நேர்காணல்  வழங்கிவிட்டு   தாயகம் திரும்பினார். ஞானசேகரன்    சந்தித்தவர்களுடனான  நேர்காணல்   தொகுப்பும், வானொலிக்கு    அவர்  வழங்கிய   பேட்டியும்    இணைந்த  புரிதலும் பகிர்தலும்   என்ற   நுலையும்  அதே  1999  ஆம்  ஆண்டு  மார்கழியில் வெளியிட்டார்.

Continue Reading →