அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் – 28 ஆண்டுகள் நிறைவு! இலங்கையில் தொழில் நுட்பக்கல்லூரிகள் தொடர்பான விழிப்புணர்வின் அவசியத்தை வலியுறுத்திய ஒன்றுகூடல்!

அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் -  28 ஆண்டுகள் நிறைவு! இலங்கையில்  தொழில்  நுட்பக்கல்லூரிகள் தொடர்பான விழிப்புணர்வின் அவசியத்தை  வலியுறுத்திய  ஒன்றுகூடல்!” அவுஸ்திரேலியா  மெல்பனில் 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை மாணவர் கல்வி நிதியம் தங்கு தடையின்றி இயங்கி 28 ஆண்டுகளை நிறைவுசெய்து மற்றும் ஒரு புதிய ஆண்டில் கால் பதிக்கின்றது. இதுவரை காலத்தில் இலங்கையில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய  இந்நிதியம், இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கும் அன்பர்களின் பேருதவியினால்  அனுப்பி  பட்டதாரிகளாக்கியுள்ளது.  எனினும் இலங்கையில்   நீடித்த   போரினால்  பாதிப்புற்ற  தமிழ் மாணவர்களின்  தேவைகள்  நீடித்துக்கொண்டே  இருக்கின்றன.”

இவ்வாறு கடந்த ஞாயிறன்று ( 16 ஆம் திகதி)  அவுஸ்திரேலியா மெல்பனில் நடைபெற்ற இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 28 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில்  தலைமையுரையாற்றிய  நிதியத்தின் தலைவர்  திரு. விமல் அரவிந்தன்  குறிப்பிட்டார். மெல்பன், வேர்மண்  தெற்கு சமூக மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  நிதியத்தின்  உறுப்பினர்கள்  கலந்து  சிறப்பித்தனர். இலங்கையிலும்  உலகநாடெங்கிலும்  போர்களினாலும்  இயற்கை அனர்த்தங்களினாலும்  உயிரிழந்த  மக்களுக்கும்,  கடந்த ஆண்டு இறுதியில்  மறைந்த நிதியத்தின் முன்னாள் தலைவர் எழுத்தாளர் திருமதி அருண். விஜயராணியை  நினைவுகூர்ந்தும்  ஒரு  நிமிடம் மௌனம் அனுட்டிக்கப்பட்டது. நிதியத்தின்  2015- 2016  ஆண்டறிக்கையை  துணை  நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதியும்  நிதியறிக்கையை  நிதிச்செயலாளர்  திருமதி வித்தியா  ஶ்ரீஸ்கந்தராஜாவும்  சமர்ப்பித்தனர்.

Continue Reading →

இலண்டன்: புத்தக அறிமுக விழா!

செல்வி கார்த்திகா மாகேந்திரனின் புத்தக அறிமுக இசைச் சமர்ப்பணவிழா22/10/26 சனிக்கிழமை அன்று செல்வி. கார்த்திகா மகேந்திரனின் புத்தக அறிமுக, இசைச் சமர்ப்பண விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விழாவே வித்தியாசமான முறையில் எம் சமுதாயத்திற்கு நல்லதோர் பாடம் கற்றுக் கொடுக்கும் முறையில் அமைந்திருந்ததைக் காண்டு வியந்தேன். விழாக்கள் என்றாலே ஆடம்பர மோகம் தாண்டாவமாடுகின்ற இக் காலகட்டத்தில் மிகவும் எளிமையான முறையில் தரமான நிகழ்வுகளை சிறப்பாக வழங்கியிருந்தார்கள். அவரவர் புகழை பறைசாற்றவே அனேகமானோர் இப்படியான விழாக்களை நடாத்துவது வழக்கம் ஆனால் இவ்விழாவோ இளைய தலைமுறையினரிடம் இலைமறை காயாக மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரும் பணியையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தது என்பதை உணரக்கூடியதாக இருந்தது.

மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் தேனுண்ட வண்டுகளாக மயங்கி மகிழ்வுற்றதையும் காணக்கூடியதாக இருந்தது. கார்த்திகாவின் இனிமையான குரலில் நானும் என்னை மறந்து இசையோடு சங்கமித்துவிட்டேன். இந்த நேரத்தில் கார்த்திகாவின் ஆசிரியை இசைக்கலைமணி, கலாவித்தகர் திருமதி. சேய்மணி. சிறிதரன் அவர்களின் அளப்பரிய சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது. மேலும் பல்லாயிரம் இசைவல்லுனர்களை உருவாக்குவார் என்ற அசையாத நம்பிக்கை எனக்குண்டு. நிகழ்வின் போது கார்த்திகாவிற்கும் ஆசிரியருக்கும் இடையில் இருந்த புன்னகையின் ஊடான தொடர்பு இரசிக்கக்கூடியதாக இருந்தது.

14 வயதிலேயே நூல் எழுதும் வல்லமை கொண்ட கார்த்திகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.  தொடரட்டும் உங்கள் கலைப்பயணம். இந் நிகழ்வில் மிகப் பிரமாதமாக இசைக் கருவிகளை வாசித்தவர்கள், அழகாக நடனமாடிய சிறுவர்கள், அனுபவம்மிக்க சிறந்த அறிவிப்பாளார், உரையாற்றியவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். முக்கியமாக திரு.மகேந்திரன் குடும்பத்தினர் சபையோரை மிகவும் அன்பாகவும் பண்பாகவும் வரவேற்று மகிழ்ந்தார்கள். அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகாட்டும் .

Continue Reading →