நனவிடை தோய்தல்: தாயே! தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!

மகேஸ்வரி நவரத்தினம் (மங்கையற்கரசி, மங்கை) டீச்சர்!அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் அம்மா எழுந்து விடுவா எவ்வித அலாரமும் இல்லாமல். குருமண்காட்டுப் பிரதேசத்தித்தின் சேவல்கள் ஆங்காங்கே தம் காலைக்கச்சேரிப் போட்டியினை ஆரம்பித்துவிடும் கூவல் ஒலிகள் தவிரப் பெரிதாக வேறெவ்வித ஒலிகளுமற்ற காலைப்பொழுதில் அம்மா அந்த அதிகாலை நேரத்தில் எழுந்து விடுவதற்குக் காரணமுண்டு. குழந்தைகள் நாம் ஐவர். வவுனியா மகாவித்தியாலயத்துக்கு நடந்து செல்ல வேண்டும். அம்மாவும் அங்குதான் ஆசிரியையாகப் படிப்பித்துக்கொண்டிருந்தார். ‘நவரத்தினம் டீச்சர்’ என்றால் தெரியும். அனைவருக்கும் காலை, மதிய உணவு தயாரித்து, அவற்றை உணவுக்`கேரியரி`ல் அல்லது வாழை இலையில் பார்சல்களாகக் கட்டி, பாடசாலை தொடங்குவதற்குள் அனைவரையும் கூட்டிக்கொண்டு செல்ல வேண்டும். செல்லும் வழியில் அன்று வவுனியா எம்.பி.ஆகவிருந்த தா.சிவசிதம்பரத்தின் வீடிருந்தது. அதற்குப் பக்கத்தில் ஸ்டேசன் ‘றோட்டி’ல் இராமச்சந்திரன் டீச்சர் வீடிருந்தது. அவர் ஒரு மொரிஸ் மைனர் கார் வைத்திருந்தார். சில சமயங்களில் அவருடன் அவர் காரில் பாடசாலை செல்வதுண்டு. அவரது கணவர் சட்டத்தரணி. மகன் இறம்பைக்குளக் ‘கான்வென்’டில் படித்துக்கொண்டிருந்தார். அவர்களை இறக்கிவிட்டு அனைவரும் மகா வித்தியாலயம் செல்வோம்.

அதிகாலை நேரங்களில் ஸ்டேசன் ‘றோட்டின்’ ஒரு புறத்தே பசிய வயல்கள் காட்சியளித்தன. பச்சைக் கிளிகள், குக்குறுபான்கள், ஆலாக்கள், மைனாக்கள், காடைகள், சிட்டுக் குருவிகள், மாம்பழத்திகள், நீண்ட வாற் கொண்டை விரிச்சான் குருவிகள், நீர்க்காகங்கள், மணிப்புறாக்கள்,.. எனப்பல்வகைப்புள்ளினங்களின் மலிந்திருக்கும் வனப்பிரதேசங்கள் ஆங்காங்கே காணப்பட்டன. இயற்கையின் தாலாட்டில் எந்நேரமும் தூங்கிக் கிடக்கும் வன்னி மண்ணின் அதிகாலப்பொழுதுகளை எண்ணியதும் கூடவே அம்மாவுடன் பாடசாலைக்குச் சென்ற பருவங்கள் படர்ந்த நினைவுகள் , அவருடன் வாழ்ந்த அனுபவங்கள் சிந்தையில் படம் விரிக்கின்றன.

இன்று (மார்ச் 26) அம்மாவின் நினைவுகள் அதிகமாக எழுகின்றன. அவருடன் வாழ்ந்த இனிய பொழுதுகள் நினைவிலெழுகின்றன. இனிமையான பொழுதுகள் அவை. காரணமுண்டு: இன்று அம்மாவின் நினைவு நாள். இருப்புள்ளவரை இருக்கப்போகும் நினைவுகள். காலம் மாறி விட்டது. காட்சிகள் மாறி விட்டன. ஆனால் நினைவுகள் மாறுவதில்லை. நிலையாக இருந்து விடுகின்றன. நினைவுகளின் தோய்தல்கள் மானுடப்பிறப்புக்கு இன்பம் சேர்க்கின்றன. அம்மா பற்றிய நினைவுகளும் அவ்விதமான நினைவுகள். இருப்புக்கு இன்பம் சேர்க்கும் நினைவுகள்.

Continue Reading →