வீடற்றவர், நாடற்றவர் கதை சொல்வோமா? வாழ்வில் பட்ட கதை சொல்வோமா? “மலையக மக்கள் கவிமணி” சி.வி.வேலுப்பிள்ளை (1914 -1984) நினைவுகள்

அமரர் சி. வி. வேலுப்பிள்ளைவீடற்றவர், நாடற்றவர் கதை சொல்வோமா? வாழ்வில் பட்ட கதை சொல்வோமா? "மலையக மக்கள் கவிமணி" சி.வி.வேலுப்பிள்ளை  (1914 -1984) நினைவுகள்  “பிள்ளைகளுக்கு கதை கேட்பதில் எத்தனை இன்பம். கதை சொல்லுவதில் பாட்டிக்குத் தனி இன்பம். பாட்டி தான் கண்டதையும் கேட்டதையும் தன்னைப்பற்றியும் தன் குடும்பம் தன் பந்துக்கள், தன் கிராமம், தன் ஊர், தன் இன்ப துன்பம் இவைகளைப்பற்றியும் கதை கதையாகச்சொல்லுவாள். பேரன் பாட்டியை கதைசொல்லும்படி கேட்டபோது, அவள் நான் பிறந்த கதைசொல்லுவேனா? நான் பட்ட கதைசொல்லுவேனா? என்ற கேள்வியைச்சொல்லி கதையை ஆரம்பித்தாளாம். பலவருடங்களுக்குப்பின் மலைநாட்டில் பிறக்கும் ஒரு பேரன் தன் பாட்டியிடம் கதைசொல்லும்படி கேட்டால், அநேகமாய் பழைய பாட்டி சொன்ன பதிலையே சொல்லுவாள். அது நாம் பிறந்த கதையாகவும் பட்ட கதையாகவும்தான் இருக்கமுடியும். இந்தக்கதை நாடற்றவர், வீடற்றவர் கதை.” இவ்வாறு தொடங்குகிறது அமரர் சி. வி. வேலுப்பிள்ளையின் நாடற்றவர் கதை.  இதன் முதல் பதிப்பு 1987 இல் தமிழகத்தில்தான் வெளிவருகிறது. அவருடைய வாரிசுகளில் ஒருவரான இர. சிவலிங்கம் அதனை தமிழகத்தில் வெளியிடுகிறார். 

உலகின் பலபாகங்களில் இன்றும் நாடற்றவர்கள், வீடற்றவர்கள் பரதேசிகளாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இயக்குநர் பாலாவும் பரதேசி என்ற பெயரிலே அவர்களின் கதையை படமாக்கினார்.  பேரக்குழந்தைகளுக்கு கதை சொல்லக்கூடிய பாட்டிமாரின் நேரத்தை தற்காலத்தில் மெகா சீரியல்கள, தொலைக்காட்சிகள் ஊடாக ஆக்கிரமித்துள்ளன. அதனால் கதைசொல்வதற்கு பாட்டிகளும் இல்லை. கேட்பதற்கு பேரர்களும் இல்லை. பாட்டிகள் வேறு உலகத்திலும் பேரர்கள் வேறு உலகத்திலும் இருக்கும் இக்காலத்தில் இலங்கையில் வெள்ளையர்களினால் இழுத்துவரப்பட்டு மலையக காடுகளை பசுமையாக்கிய கறிவேப்பிலைகளாக தூக்கியெறியப்பட்டு ஒப்பாரிக்கோச்சிகளில் ஏற்றப்பட்டவர்களின் கதையை சி.வி. வேலுப்பிள்ளையின் நூலிலிருந்து தெரிந்துகொள்கின்றோம். கறிவேப்பிலைகள், ஒப்பாரிக்கோச்சி என்ற தலைப்புகளிலும் இலங்கை மலையக எழுத்தாளர்கள் கதைகள் எழுதியிருக்கிறார்கள்.

சி.வி. என்று இலக்கியஉலகில் அறியப்பட்ட வேலுப்பிள்ளை அவர்கள் மலையகத்தில் தலவாக்கொல்லையில் மடக்கொம்பரை என்ற கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி பிறந்தவர். அவருடைய நூற்றாண்டு கொண்டாடப்பட்டு, மூன்று வருடங்கள் கடந்த நிலையில் அவர் பற்றி எழுதுகின்றேன். இவரை கொழும்பில் ஒரே ஒரு தடவைதான் சந்தித்துபேசியிருந்தாலும் அன்றைய தினத்தை என்னால் மறக்கமுடியாது. 1982 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வெள்ளவத்தையில் இலக்கிய ஆர்வலர் நண்பர் ரங்கநாதன் அவர்களின் இல்லத்தில் ஒரு இனிய மாலைப்பொழுதில் நடந்த சந்திப்பில்தான் அவரை முதல் முதலில் கண்டேன். அவ்வேளையில் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டு கொண்டாட்டங்களை நாடளாவிய ரீதியில் தொடக்கிவைத்திருந்தது. தமிழகத்திலிருந்து எழுத்தாளரும் அவ்வேளையில் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளரும் கட்சியின் ஏடு ஜனசக்தியின் ஆசிரியருமான தோழர் த. பாண்டியனை அழைத்திருந்தது.
அவர் தமிழகம் திரும்புவதற்கு முதல் நாள் ரங்கநாதன் இல்லத்தில் நடந்த சந்திப்பு தேநீர் விருந்துபசாரத்திற்கு சி. வி. வேலுப்பிள்ளையும் வருகை தந்திருந்தார். பேராசிரியர் கைலாசபதி, சோமகாந்தன், மாணிக்கவாசகர், பிரேம்ஜி ஞானசுந்தரன், அந்தனி ஜீவா, தெளிவத்தை ஜோசப், மேமன்கவி, நீர்வை பொன்னையன் உட்பட பலர் வருகை தந்திருந்தனர்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 273: முகநூற் குறிப்புகள் சில!

கவலையளிக்கும் இலங்கை நிலை!

இலங்கை பல்லினங்கள் வாழும் நாடுகளிலிலொன்று. அண்மையில் கண்டியிலேற்பட்ட கலவரம் துரதிருஷ்ட்டமானது. இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும் சமயங்களில் பாதித்தவரும், பாதிக்கப்பட்டவரும் வேறு வேறான இனத்தைச் சார்ந்தவராகவிருக்கும் பட்சத்தில் இனவாதிகளால் இச்சம்பவங்கள் ஊதிப்பெருப்பிக்கப்பட்டு இனக்கலவரங்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்களுள்ளன. கடந்த காலங்களில் வதந்திகள், சம்பவங்கள் இனக்கலவரங்களை உருவாக்கி அழிவுகளை ஏற்படுத்தின. இவ்விதமான கலவரங்கள் ஏற்படும் சமயங்களில் நாட்டில் நிலவும் சட்டதிட்டங்கள் இவ்விடயங்களைப் பொறுப்பேற்று, கலவரங்கள் ஏற்படாத வகையில் நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் நாட்டில் அடிக்கடி இனக்கலவரங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். இவ்விதமான சம்பவங்கள் ஏற்படும் சமயங்களிலெல்லாம் இன, மத, மொழி போன்ற வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று, சட்டம் தன் கடமையைத் துரிதமாகச் செய்யும் சூழலை நடைமுறைப்படுத்த வேண்டும். குற்றமிழைத்தவர்கள் முறையான நீதி விசாரணைகளின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். இவ்விதமான நடைமுறை பழக்கத்துக்கு வருமானால் இவ்விதமான சம்பவங்கள் நடைபெறும் சமயங்களில் சட்டம் தன் கடமையை ஒழுங்காகச் செய்யும் என்னும் மனநிலையில் அனைத்து நாட்டினருமிருப்பார்கள். அதனால் உணர்வுகளுக்கு ஆட்பட்டு இனக்கலவரங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகின்றது. ஆனால் சட்டம் தன் கடமையைச் செய்வது பாரபட்சமற்று இருப்பது அவசியம். அவ்விதமிருந்தால்தான் அனைத்து இன மக்களும் அச்சட்டத்தின் மேல் மதிப்பு வைப்பதுடன், காவல் துறையினருக்கும் ஒத்துழைப்பினை நல்குவர்.

கடந்த காலங்களில் இனக்கலவரங்கள், யுத்தங்களால் மூழ்கடிக்கப்பட்டிருந்த நாட்டில் தற்போதுதான் சிறிது காலமாக அமைதி ஓரளவென்றாலும் நிலவுகின்றது. இந்த அமைதி நீடிக்க வேண்டுமென்றால் நாட்டிலுள்ள சட்டதிட்டங்கள் பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் சமமாகப் பிரயோகிக்கப்படுவது அவசியமாகும்.


எம்ஜிஆர் சிலை சிறப்பு விழாவில் ரஜனிகாந்தின் உரை பற்றி….

எம்ஜிஆர் சிலை சிறப்பு விழாவில் ரஜனிகாந்தின் இந்த உரையைக் கேட்டேன். விமர்சனங்களுக்கு அப்பால், என் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், இந்த உரையிலிருந்து நான் வந்தடைந்த முடிவு : தமிழ் நாட்டு அரசியலையே மாற்றப்போகின்ற பேச்சு.

இதற்கு முக்கிய காரணங்கள்:
1. தன் மேல் வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளையெல்லாம் உள்வாங்கி அவற்றுக்கெல்லாம் பதிலளிக்கின்ற பாங்கு.
2. தமிழ் நாட்டு மக்களின் நாடித்துடிப்பை நன்குணர்ந்து எம்ஜிஆருடன் தன் உறவு, எம்ஜிஆர் பற்றிய தன் சிந்தனைகள் ஆகியவற்றை மக்களை ஈர்க்கும் வகையில் வெளிப்படுத்திய பாங்கு.
3. மக்களை ஈர்க்கும் வகையிலான அவ்வப்போது ‘பஞ்ச்’ வைத்துப் பேசப்பட்ட உரை.
4. ஏன் நடிகனொருவன் அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்கான காரணங்களைத் தர்க்கரீதியாக முன் வைத்தது. எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த சமயம் அவரைக் கூத்தாடி என்று இகழ்ந்தார்கள். அப்பொழுது தேர்தலுக்கு முன் அனைத்துக் கட்சியினருக்கும் இந்திய வானொலியில் உரையாற்ற சந்தர்ப்பம் கொடுத்தார்கள். அச்சந்தர்ப்பத்தை நன்கு பாவித்த எம்ஜிஆர் ‘நான் கூத்தாடிதான்’ என்று ஆரம்பித்துத் தன்னைக் கூத்தாடி என்றவர்களின் வாயை அடைத்து வெற்றியைத் தரும் வகையிலான உரையினை ஆற்றியிருந்தது நினைவுக்கு வருகின்றது. அதனை நினைவு படுத்துகின்றது ரஜனியின் தான் நடிகனே. நடிகன் அரசியலுக்கு வரக்கூடாதா என்ற பேச்சு.
5. ஆன்மிக அரசியலென்றால் தூய்மை அரசியல் என்ற விளக்கம்.
6. அரசியல் தலைவருக்கான வெற்றிடமுள்ளதை ஆணித்தரமாக வலியுறுத்தும் பாங்கு.
7. நடிப்பு என்னும் தொழிலை ஒழுங்காகச் செய்த நடிகனால், தம் அரசியல் வேலைகளை ஒழுங்காகச் செய்யாத அரசியல்வதியை விடச் சிறப்பாகச் செய்ய முடியுமென்று வாதிட்ட தர்க்கச்சிறப்பு.

Continue Reading →

ஆற்றுப்படை நூல்கள் காட்டும் அல்திணை உயிர்கள்!

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?சங்க இலக்கியம் இயற்கையின் உயிர் அகவமைப்பை ஒளித்திரையெனக் காட்டும் தொகை இலக்கியம். சங்கத்தமிழர் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த நெறியை அது தெற்றென எடுத்துக்காட்டுகிறது. தொல்காப்பியர் உயிர் வகைக்கோட்பாட்டைக் கூறுகையில் (தொல்.மரபு.நூற்.1526 )உயர்திணை உயிர்கள், அல்திணை உயிர்கள் என்கிறார். இவற்றுள் அல்திணை உயிர்கள் பற்றிய (விலங்குகள் மட்டும்) பதிவினை ஆற்றுப்படை நூல்களில் இடம்பெற்றிருப்பனவற்றைக் குறித்து இக்கட்டுரை இயங்குகிறது. கீழ்க்காணுமாற்று விலங்குகள் ஆற்றுப்படை நூல்களுள் பதிவு செய்யப்பெற்றிருப்பனவாகக் காணப்படுகின்றன.

01.ஆடு , 02.ஆமான், 03.ஆளி, 04.எருது, 05.ஒட்டகம், 06.கரடி, 07.குரங்கு, 08.சிங்கம், 09.நாய், 10.பன்றி, 12.புரவி, 13.புலி, 14.மரையான், 15.மான், 16.முயல் என்னும் விலங்குகள் இடம்பெற்றுள்ளன. அவைகளை குறித்து விளக்கமாகக் காணலாம்.

01.ஆடு:
சங்க இலக்கியத்தில் ஆட்டை வெள்ளாடு, செம்மறி ஆடு, வருடை ஆடு, தகர், துருவை என்றெல்லாம் பதிவு செய்திருக்கிறது. முருகன் மயிலையும் குற்றமில்லாத கோழிக்கொடியோடு ஆட்டுக்கிடாவையும் கொடியாகக்கொண்டவன் என்பதனை,

“தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் கொடியன்”        திருமுருகு.210

என்கிறார் நக்கீரர். பெரிய காலை உடையதாகவும் மிக்க வலிமை உடையதும் உள்ள ஆட்டுக்கிடாயினது உதிரத்தோடு பிசைந்த தூய வெள்ளரிசியை சிறு பலியாக முருகப்பெருமானுக்கு இட்டு வழிப்பட்ட செய்தியை,

“மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடை
குருதியொடு விரைஇய தூவெள்ளரிசி”        திருமுருகு.232-233

என்கிறது சங்க இலக்கியம். சிறிய திணை அரிசியைப் பூக்களோடு கலந்து பிரப்பரிசியாக வைத்தும் மறியை அறுத்தும் அவ்விடத்தில் இறைப்பொருள் நிலைத்து நிற்க வேடர்கள் விழா செய்தனர் என்பதனை,

“சிறுதிணை மலரொடு மறியறுத்து”        திருமுருகு.218

என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது. அருகம்புல்லின் பழுதையை தின்று நன்றாகக்கொழுத்த செம்மறி ஆட்டின் பருத்த மேல்தொடையின் பதமான இறைச்சியை இரும்புக் கம்பியில் கோர்த்து சுடப்பட்டதைக் கரிகால் வளவன் பொருநனுக்கு அளித்த நிகழ்வை,

Continue Reading →

தொடர் : வெற்றியின் இரகசியங்கள்: அத்தியாயம் மூன்று: எமில்கூ காட்டிய வழி!

அ.ந.கந்தசாமியின் வெற்றியின் இரகசியங்கள்அறிஞர் அ.ந.கந்தசாமி அறிஞர் அ.ந.கந்தசாமி எழுதித் தமிழகத்தில் பாரி பதிப்பக வெளியீடாக 1966இல் வெளியான நூல் ‘வெற்றியின் இரகசியங்கள்’. வாழ்வின் வெற்றிக்கு அறிவுரைகள் கூறும் சிறந்த தமிழ் நூல்களிலொன்று. இந்நூலில் அ.ந.க மனத்தின் தன்மைகளை, அது பற்றிய நவீன அறிவியற் கோட்பாடுகளையெல்லாம் மிகச்சிறப்பாக, துள்ளு தமிழ் நடையில் எழுதியிருக்கின்றார். அந்த வகையில் சிறந்த உளவியல் நூலாகவும் இதனைக் கொள்ளலாம். இந்நூல் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராக வெளிவரும். –


3. எமில்கூ காட்டிய வழி!

மனத்தின் இயல்புகளை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து அதை ஒரு அறிவுத் துறையாக பிராய்ட், ஜூங், அட்லர் போன்றவர்கள் வளர்த்து வர பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த ட்ரோய்ஸ் நகரில் பிறந்த எமில்கூ என்ற வைத்தியர் மனோதத்துவத்தை மனிதனுக்கு உடனடியான பலன்களைத் தரத்தக்க ஒரு கலையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு அதில் பெரிய வெற்றியும் ஈட்டினர். அவர் தாம் கண்டுபிடித்த மனோதத்துவ முறைக்கு (Auto Suggestion) ‘சுய மந்திரம்’ அல்லது ‘சுய வசியம்’ என்று பெயரிட்டார். இந்த முறையினால் ஒருவன் தனது கெட்ட பழக்கங்களை விட்டொழிக்கவும், நல்ல பழக்கங்களை வளர்க்கவும் முடியுமென்பது அவர் சித்தாந்தம். அதுமட்டுமல்ல. உடல் நோய்களில் பல மனப்பிராந்திகளால் ஏற்படுகின்றனவென்றும் சுயமந்திர முறையினால் அவற்றை வேரோடு கல்லி வீச முடியுமென்றும் அவர் திடமாக நம்பினர். இன்னும், ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் அரும்பெரும் சாதனைகளைச் செய்து முன்னேற விரும்பினால் அதற்கும் இச்சுயமந்திர சக்தியை உபயோகிக்கலாம் என்பது அவர் கருத்து. இக்கருத்துக்களின் அடிப்படையில் அவர் செய்த பரிசோதனைகள் மிகவும் ஆச்சரியமான பலன்களை நல்கவே 1910-ம் ஆண்டில், அதாவது தமது 53-வது வயதில் நான்சி என்னும் இடத்தில் சுயவசிய சிகிச்சை நிலையம் ஒன்றையும் அவர் நிறுவினார். இங்கு அவர் அடைந்த வெற்றிகள் ஐரோப்பா முழுவதிலும் அவருக்குப் பெரும் புகழைக் கொடுத்தது. உலகம் முழுவதும் எமில்கூவின் முறைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தது.

 எமில்கூ என்ற வைத்தியர் மனோதத்துவத்தை மனிதனுக்கு உடனடியான பலன்களைத் தரத்தக்க ஒரு கலையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு அதில் பெரிய வெற்றியும் ஈட்டினர்எடுத்த எடுப்பில் பார்த்தால் கூவின் முறைகள் சிறு பிள்ளைத்தனமானவையாகத் தோன்றும். சிலருக்கு அவை: ஒரு பைத்தியக்காரனின் கேலிக்கூத்துப் போலவும் தோன்றக்கூடும். ஆனால் ஆரம்பத்தில் அவை பரிகசிக்கத்தக்கவையாகக் காட்சியளித்தாலும் நாளடைவில் அவற்றின் அபார சக்தியை எவரும் நன்கு உணரவே செய்வார்கள். சோர்ந்திருந்த உள்ளம் சுறுசுறுப்புப் பெறும்போது, நைந்திருந்த, நரம்புகளில் புது உணர்ச்சி ஏறும்பொழுது, கூன்விழுந்த முதுகு குத்திட்டெழும்போது யார்தான் சுயவசிய முறையின் சக்தியை மறுக்க முடியும்?

இந்நூலின் ஆரம்பத்தில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முயற்சி அத்தியாவசியம் எனக் குறிப்பிட்டோம். ஆனால் முயற்சி என்ற சொல்லின் பொருள் என்ன என்பதை நாம் சரியாக விளங்கிக் கொண்டால்தான் அதனை முறையாக மேற்கொண்டு நாம் முன்னேற்றத்தை எய்தலாம். சிலர் முயற்சி என்றதும் மாடுபோல் உழைத்தல் என்று எண்ணி விடுகிறார்கள். சிந்தனையற்ற வெறும் உழைப்பினால் தேவைக்கதிக களைப்பு ஏற்படுமே தவிர பிரயோசனம் அதிகம் இருக்காது. உதாரணமாக ஒரு வாழை மரத்தை, நாம் வெட்டி வீழ்த்த வேண்டுமென்று வைத்துக் கொள்வோம். அதற்குக் கூர்மையுள்ள பெரிய கத்தியொன்றைக் கையில் எடுத்து அதனால் வெட்டி வீழ்த்த வேண்டும். அப்படிச் செய்யாது ஒரு சவர அலகைக்கொண்டு இவ்வேலையைச் செய்ய முயன்றால் அதனால் காலம் விரயமாகும். கைகள் வலிக்கும். சில சமயம் விரல்கள் வெட்டுக் காயத்துக்கும் ஆளாகும். இன்னும் வேலை முடிவதற்குள் சவர அலகு இரண்டாக முறிந்து விடவும் கூடும். வாழை மரமும் வெட்டப்படாது தப்பித்துக் கொள்ளும்! ஆகவே முயற்சி என்பது கடின உழைப்பன்று. புத்திசாலித்தனமான, விவேகமான உழைப்பு. அறிவின் துணையோடு மேற்கொள்ளப்படும் முயற்சிதான் பலன்தர வல்லது என்பதை நாம் மனதிற் கொள்ள வேண்டும்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 272: நடிகர்கள் நாட்டின் செல்வங்கள்!

நடிகை ஸ்ரீதேவிஅண்மையில் நடிகை ஸ்ரீதேவி மறைவினையொட்டி நடைபெற்ற அவரது இறுதி நிகழ்வில் நடைபெற்ற ஒரு விடயம் என்னைக் கவர்ந்தது. அவரது மரணத்தை மகாராஷ்ட்டிர அரசானது அரச மரியாதைகளுடன் நடத்தி அவரைக் கெளரவித்தது. இது சிலருக்கு மனக்கொதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. கூத்தாடிக்கு இவ்வளவு மரியாதை தேவைதானா என்று கேட்கும் இந்தச்சிறுமதிக் கூட்டம்தாம் அக்கூத்தாடிகளின் கலைத்திறமையில் தம் இருப்புப் பிரச்சினைகளையெல்லாம் மறந்து இன்பமடைவது அதிகம். இந்தச்சிறுமதிக்கூட்டம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சினிமா, நாடக நடிகர்களும் எழுத்தாளர்கள் போல், இசைக்கலைஞர்களைப்போல், ஓவியர்களைப்போல் மக்களை அவர்கள்தம் வாழ்வியற் பிரச்சினைகளிலிருந்து சிறிதளவாவது கவனத்தைத் திருப்பி இன்பமடைய வைப்பவர்கள்; வாழ்வுக்கு வேண்டிய ஆரோக்கியமான அறிவுரைகளைத் தம் நடிப்பின் மூலம் உணர வைப்பவர்கள்; நாடொன்றின் பெருமையினை உலகெங்கும் வெளிப்படுத்துவதில் பெரும் பங்காற்றுபவர்கள். எல்லாக் கலைகளிலுள்ளதைப்போல் நடிப்புக் கலையிலும் திறமையான கலைஞர்களுள்ளனர். இவர்கள் ஏனைய துறைக்கலைஞர்களைப்போல் நாடொன்றின் செல்வங்கள். அந்த வகையில் நாடொன்றானது பல்வேறு உயரிய விருதுகளைக் கொடுத்து அவ்வப்போது இக்கலைஞர்களைக் கெளரவிக்கிறது. அதுபோன்றதொரு உயர் கெளரவம் தான் இவ்விதமான அரச மரியாதை என்பதும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்தான் நடிகை ஸ்ரீதேவி.

தமிழகத்தில் பிறந்த ஒருவரின் இழப்பில் பாரதத்தின் அனைத்து மாநில மக்களும் இன,மத, மொழி , மாநில வேறுபாடுகளற்றுப் பங்குபற்றுகின்றார்கள் என்றால், அரசியல்வாதிகள், நடிகர்கள், பொதுமக்கள் அனைத்துப் பிரிவுகளைச்சேர்ந்தவர்களும் அவர் இழப்பால் துயருகின்றார்கள் என்றால், அங்குதான் நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பாளுமை, திறமை என்பன தங்கியுள்ளன. அனைத்து மக்களையும் பாதிக்கும் வகையில் அவரது கலையுலகப் பங்களிபபு அமைந்துள்ளது. இந்த வகையில் அவரது இறுதிச்சடங்குகளை அரச மரியாதைகளுடன் நடாத்திய மகாராஷ்டிர மாநில அரசினைப்பாராட்ட வேண்டும். ஒரு மாநில அரசுக்கு நாட்டின் செல்வமான கலைஞர்களின் பங்களிப்பைப் பொறுத்து எவ்விதம் கெளரவிக்க வேண்டுமென்று தீர்மானிக்கும் முழு உரிமையுமுண்டு. அது மகாராஷ்ட்டிர மாநில அரசுக்கும் உண்டு. அதனை அவர்கள் பாவிக்க வேண்டிய தருணத்தில் சரியாகப் பாவித்திருக்கின்றார்கள்.

Continue Reading →

கட்டக்கலைக்குறிப்புகள் 7 : லெ கொபூசியேவின் (Le Corbusier) நவீனக்கட்டடக்கலைக் கருதுகோள்கள்!

Le Corbusierநவீனக்கட்டடக்கலையின் முன்னோடிகளில் பன்முகத்திறமை வாய்ந்த ஆளுமைகளில் முதன்மையானவர் சுவிஸ்-பிரான்ஸ் கட்டடக்கலைஞரான லே கொபூசியே. சுவிஸில் பிறந்து பிரான்சு நாட்டின் குடிமகனானவர் இவரின் இயற்பெயர் சார்ள்ஸ் எடுவார்ட் ஜென்னெரெ  Charles-Édouard Jeanneret. நகர அமைப்பு, கட்டடக்கலை, ஓவியம், தளபாட வடிவமைப்பு , எழுத்து எனப்பன்முகத்திறமை வாய்ந்த ஆளூமை மிக்கவர் இவர். உலகின் பல நாடுகளிலும் ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளிலெல்லாம் இவரது கை வண்ணம் மிளிர்கிறது. சுதந்திர இந்தியாவில் முதன் முதலாகப் புதிதாக அமைக்கப்பட்ட சண்டிகார் நகர வடிவமைப்பினை அமைத்தவர் இவரே. அத்துடன் அந்நகரிலுள்ள பல முக்கியமான கட்டடங்களையும் வடிவமைத்தவரும் இவரே.

நவீனக் கட்டடக்கலையில் முன்னோடிகளில் முக்கியமான எனக்குப் பிடித்த ஆளுமைகளாக ஃப்ராங் லாயிட் ரை (Frank Lloyd Wright ) , மீஸ் வான்ட ரோ (Mies van der Rohe)  , லி கொபூசியே ஆகியோரையே குறிப்பிடுவேன். இவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவராக நான் கருதுவது லி கோபுசியேயைத்தான். அதற்குக் காரணம் இவரது பன்முகத் திறமையும், படைப்பாக்கத்திறனும், சீரிய சிந்தனை மிக்க எழுத்துகளும்தாம். இம்மூவரும் முறையாகக் கல்விக்கூடங்களில் கட்டடக்கலைத்துறையில் கற்று கட்டடக்கலைஞராக வந்தவர்களல்லர். தம் சொந்தத் திறமையினால் , அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற பயிற்சிகள் மூலம், இத்துறை சார்ந்த பாடங்கள் மூலம் தம் கட்டடக்கலையாற்றலை வளர்த்துச் சாதித்தவர்கள். முறையாகக் கர்நாடக சங்கீதம் கற்காமல் வந்து சிறந்த பாடகர்களாக விளங்கும் பாடகர் பாலசுப்பிரமணியம் போன்று , தம் சொந்தத்திறமை காரணமாகச் சிறந்து விளங்கியவர்கள்.

லி கொபூசியே என்றால் முதலில் நினைவுக்கு வருபவை அவரது புகழ்பெற்ற கூற்றான ” ஒரு வீடானது வாழ்வதற்குரிய இயந்திரம்”  (“A house is a machine to live in”), என்னும் கூற்றும், நவீனக் கட்டடக்கலையில் கட்டட வடிவமைப்பு சார்ந்து அவர் கொண்டிருந்த ஐந்து முக்கிய கருதுகோள்களும் ஆகும். ஒரு வீடானது வாழ்வதற்குரிய இயந்திரம் என்னும் அவரது கூற்றின் முக்கிய அர்த்தம் என்னவெனில் ஒரு வீட்டின் சகல உறுப்புகளுமே மனித வாழ்வின் தேவைகளைத் தீர்ப்பதற்கான இயந்திரங்களே என்பதுதான். குளியல் அறை, சமையலறையிருந்து அனைத்து அறைகளுமே இயந்திரங்கள்தாம். இவ்விதமான பல இயந்திரங்களை உள்ளடக்கிய பெரும் இயந்திரமே ஒரு வீடு என்னும் அர்த்தத்தையே இவரது கூற்றான ” ஒரு வீடானது வாழ்வதற்குரிய இயந்திரம்” என்னும் கூற்று வெளிப்படுத்துகின்றது.

அடுத்து நவீனக் கட்டடக்கலையில் கட்டடமொன்றின் வடிவமைப்பைப்பொறுத்தவரையில் லி கொபூசியேயின்  ஐந்து பிரதான கருதுகோள்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

1. தரைத்தளத்திலிருந்து கட்டடமொன்றினை உயர்த்திப்பிடிக்கும் தூண்கள் (Pilotis): உருக்குக் கம்பிகளினால் அல்லது உருக்கு வலையினால் வலிதாக்க்கப்பட்ட காங்கிரீட்டினால் ஆன தூண்கள். (Reinforced Concrete). இவ்விதமாகக் கட்டடமானது அதன் தரைத்தளத்திலிருந்து உயர்த்திப்பிடிக்கும் தூண்களினால் உயர்த்திப்பிடிக்கும் வகையில் கட்டடங்கள் அமையும்போது, அதனால் உருவாகும் வெளியினால் அதிக வெளிச்சம் அப்பகுதிக்குக் கிடைக்கின்றது. வாகனத்தை நிறுத்த அல்லது மேலும் பல தேவைகளுக்கு அவ்வெளியினைப் பயன்படுத்தும் நிலை உருவாகின்றது.

Continue Reading →