சமவுரிமை இயக்கம் – கனடா : அரசியல் கைதிகளின் விடுதலை கோரி நாளை கனடாவில் பகிரங்க கூட்டம் – ஊடகவியலாளர் சந்திப்பு

அரசியல் கைதிகள் தமது விடுதலை கோரி போராடி வருகின்றனர். அவர்களது குடும்பத்தினரும் பல இடங்களில் போராடி வருகின்றனர். தேர்தல் காலத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையே தமது முதற் செயற்பாடா இருக்கும் என வாக்குறுதி அளித்து வாக்குகளை பெற்ற கூட்டமைப்பு முதல் மைத்திரி – ரணில் கூட்டு வரை அது பற்றி இன்று வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் கைதிகளின் விடுதலையினை பெற்றுக் கொடுக்க முடியாதவர்களாலும், விடுதலை செய்ய முடியாதவர்களாலும் எப்படி நாட்டில் எரிந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டடைய முடியும்?

அரசியல் கைதிகளின் உடனடி விடுதலைக்காக கனடாவில் சமவுரிமை இயக்கம் கனடா ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினையும், மக்கள் பகிரங்க கூட்டம் ஒன்றினையும் நாளை 27-2-2016 சனி அன்று ஒழுங்கு செய்துள்ளது. மிக அதிகளவிலான இலங்கைப் புலம்பெயர் சமூகம் ரொறன்ரொவில் இருப்பதால், இலங்கையிலுள்ள அனைத்து அரசியற்கைதிகளினதும் விடுதலையை வெற்றிகரமாகக் கோருவதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பைக் கொண்டுள்ளது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 159: கனடாவின் முதலாவது தமிழ்க்கவிதை நூலெது?

கனடாவின் முதலாவது தமிழ் நாவல்" மண்ணின் குரல் பற்றிச் சில வார்த்தைகள். - வ.ந.கிரிதரன் -கனடாவின் முதல் தமிழ் நாவலாக வெளிவந்த ஆக்கம் எனது ‘மண்ணின் குரல்’ இந்த நூலுக்கு இன்னுமொரு முக்கியத்துவமும் உண்டு. இந்நூல் ‘மண்ணின் குரல்’ நாவலையும் 8 கவிதைகளையும் மற்றும் 2 கட்டுரைகளையும் கொண்ட சிறு தொகுப்பாக வெளிவந்தது.  அந்த வகையில் இதனை முதலாவது நாவலாகவும் கருதலாம். அதே சமயம் கவிதைகளை உள்ளடக்கிய நூலாகவும் கருதலாம். கட்டுரைகளை உள்ளடக்கிய நூலாகவும் கருதலாம். இந்நூல் 87 தை மாதம் வெளியானது. அந்த வகையில் கனடாவில் வெளியான முதலாவது கவிதை நூலாகவும் இதனை ஒருவிதத்தில் கொள்ளலாமோ?

சுதா குமாரசாமியின் ‘முடிவில் ஓர் ஆரம்பம்’ கவிதைத்தொகுப்பும் றிப்ளக்ஸ் அச்சகத்தால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அது வெளிவந்த ஆண்டு சரியாகத்தெரியவில்லை. 87ற்கு முன் வெளிவந்திருந்தால் அதனையே முதலாவது கவிதைத்தொகுதியாகக் கருதலாம். முகநூலில் இக்கவிதைத்தொகுப்பினைப்பற்றிச்சுட்டிக் காட்டியிருந்தார் நண்பர் கனடா மூர்த்தி. அவருக்கு நன்றி.

‘மண்ணின் குரல்’ றிப்ளக்ஸ் அச்சகத்தினரால் அச்சிடப்பட்டது. இதிலுள்ள கவிதைகள், கட்டுரைகள் மற்றும் ‘மண்ணின் குரல்’ நாவல் ஆகியன ‘புரட்சிப்பாதை’ (மான்ரியால்) கையெழுத்துச் சஞ்சிகையில் 84/95 காலப்பகுதியில் வெளியாகிய படைப்புகள். அக்காலத்து என் உணர்வுகளைப்பிரதிபலிப்பவை. அன்றுள்ள என் அறிவு மட்டத்திற்கேற்ப சில சொற்கள் பாவிக்கப்பட்டிருக்கலாம்.

இத்தொகுப்பிலுள்ள நாவலின் பெயர் மண்ணின் குரல். அதனால் இத்தொகுப்புக்கு இந்தப்பெயர் மிகவும் பொருத்தம். அதே சமயம் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் மற்றும் கட்டுரைகள் ஆகியவையும் மண்ணின் குரல்களாகத்தாம் ஒலிக்கின்றன. அந்த வகையில் மண்ணின் குரல் என்னும் நூலின் பெயர் நூலின் படைப்புகள் அனைத்துக்கும் பொருத்தமான தலைப்பென்பேன்.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகளின் விபரங்கள் வருமாறு:

1. மாற்றமும் , ஏற்றமும்
2. அர்த்தமுண்டே..
3. விடிவிற்காய்..
4. புல்லின் கதை இது..
5. ஒரு காதலிக்கு…
6. மண்ணின் மைந்தர்கள்..
7. புதுமைப்பெண்
8. பொங்கட்டும்! பொங்கட்டும்!

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 158 : கனடாவில் வெளியான கவிதைத்தொகுதிகள்…; பள்ளிக்கூடமா? பல்கலைக்கழகமா?

வ.ந.கிரிதரனின் 'எழுக அதிமானுடா!'

வாசிப்பும், யோசிப்பும் 148 :அண்மையில் வாசித்த அறிவியல் கட்டுரையொன்று - ' நித்திய வாழ்வு காணலாம்'

1. கனடாவில் வெளியான கவிதைத்தொகுதிகள்….

முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்களின் ‘கனடாவில் தமிழ் இலக்கியம்’ என்னும் கட்டுரையில் கனடாவில் வெளியான கவிதை நூல்களைப்பற்றிய குறிப்பொன்று வருகின்றது. அது வருமாறு:

“கவிதைத்தொகுதி என்ற வகையில் கனடாவில் வெளியிடப்பட்ட முதலாவது ஆக்கம் கவிஞர் சேரன் அவர்களுடைய  ‘எலும்புக் கூடுகளின் ஊர்வலம்’ ஆகும்.  இது 1990இல் வெளிவந்தது.  இதனையடுத்து கெளரி என்பாரின் ‘அகதி’ என்ற நெடுங்கவிதை நூலும், அ.கந்தசாமி , மலையன்பன் மற்றும் ரதன் ஆகிய மூவரின் தொகுப்பான ‘காலத்தின் பதிவுகள்’ என்ற தொகுதி 1991இலும், ஆனந்தபிரசாத் என்பாரின் ‘சுயதரிசனம்’ என்ற தொகுதி 1992இலும் வெளிவந்தன. அடுத்த நான்காண்டுகளில் என்.கே.மகாலிங்கம் அவர்களின் ‘உள்ளொளி’ (1993), அ.கந்தசாமி அவர்களின் ‘கானல் நீர்க்கனவுகள்’ (1994), நிலா குகதாசன் அவர்களின் ‘இன்னொரு நாளில் உயிர்த்தேன்’ (1996) முதலிய சில கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன.  இத்தகவல்களைத் தந்துதவியவர்கள் காலம் இதழின் ஆசிரியர் செல்வம் அருளானந்தம் மற்றும் எழுத்தாளர் திரு.ப.ஶ்ரீஸ்கந்தன் ஆகியோராவார்.”

சேரனின் கவிதைத்தொகுதியான ‘எலும்புக்கூடுகளின் ஊர்வலம்’ தேடகம் அமைப்பினரால் வெளியிடப்பட்டது.

Continue Reading →

எளிய மனிதர்களின் தன்முனைப்பு நடவடிக்கைகள்! ” கார்த்திகேசுவின் நாவல்கள் ” தொகுப்பை முன் வைத்து ..

சுப்ரபாரதிமணியன்பச்சைப் பசுங்கோயில் –இன்பப்
பண்ணை மலைநாடு
இச்சைக்குகந்த நிலம்- என்
இதயம் போன்ற நிலம்
– சுத்தானந்த பாரதியார் –

அய்ந்து நாவல்கள் கொண்ட ரெ.கார்த்திகேசு அவர்களின் இத் தொகுப்பை  படித்து முடிக்கிற போது மலேசியாவின் நிலவியல் சார்ந்த பதிவுகளும், கல்வித்துறை சார்ந்த முனைப்புகளும்,முப்பது ஆண்டுகளுக்கு முந்திய மலேசிய மனிதர்களின் ஒரு பகுதியினரும்  மனதில் வெகுவாக  நிற்கின்றனர்.

ரெ.கார்த்திகேசுவின் அய்ந்தாவது நாவலை எடுத்துக் கொள்ளலாம்.” சூதாட்டம் ஆடும் காலம்” இதன் நாயகன்  கொஞ்ச காலம் பத்திரிக்கையாளனாக இருந்து  விட்டுக்  கல்வித்துறை விரிவுரையாளனாகச் செல்கிறான். அப்பாவின் வன்முறையால் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்வி கற்று முன்னேறியவன் அவன். அம்மாவைத் தேடிப்போகிறான். காதலியாக இருப்பவள் இன்னொருத்தனை பணத்துக்காக ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டு  பின் விவாகரத்து பெறுகிறவள் இவனை விரும்புகிறாள். அப்பா, அம்மாக்களை தேடிப்போய் அவர்களின் நோய், மரணம்  ஆகியவற்றில் அக்கறை கொள்கிறான்.

இந்த அம்சங்களை மற்ற நாவல்களிலும் காண முடிவதில் அவர் தன்னை பாதித்த  அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கிற தன்மை காணப்பட்டது.      முதல் நாவலில்  ( வானத்து வேலிகள்) குணசேகரன் இப்படி வீட்டை விட்டு விரட்டப்பட்டவன் மாட்டுத் தொழுவத்தில் வேலை பார்த்து அந்த வீட்டு பணக்காரப் பெண்ணை காதலித்து, லண்டன் போய் படித்து பெரும் பணம் சம்பாதித்து ஏழை மாணவகளுக்கு விடுதி ஒன்றை பெரும் செலவில் கட்டுகிறான். மனைவியுடன் உடல் தொடர்பு இல்லாமல் இருக்கிறவன் மகன் தந்த பாடத்தால்   மனைவியுடன் சேர்கிறான். ராணி என்ற குணசேகரனின்உதவியாளர் திருமணம் செய்து கணவனைப்  பிரிந்து கொஞ்சம் குணசேகரனுக்காக தவிக்கிறவள்.  ” தேடியிருக்கும் தருணங்களில் ” நாவலில் நாயகன் அப்பாவின் சாவு, அஸ்தி கரைப்பு என , தன் அம்மாவைத் தேடிப் போகிறான்.  அம்மா சாதாரண கூலிக்காரப் பெண். அவளைக் கண்டடைகிறான்.  ” அந்திம காலம் “ நாவலில் சுந்தரத்திற்கு புற்று நோய். மகள் ராதா கணவணை விட்டு லண்டனுக்கு மகன் பரமாவை அப்பா சுந்தரத்திடம் விட்டு போய்விடுகிறாள். பின் அந்த வாழ்க்கையும் சரியில்லையென்று திரும்புகிறாள். பரமா இறந்து விடுகிறான்.சுந்தரம் புற்று நோயிலிருந்து தப்பிக்கிறார். ” காதலினால் அல்ல”நாவலில்  கணேஷின் பல்கழைக்கழக அனுபவம், ரேக்கிங்,,அத்தை பெண், காதலிப்பவனைக் கட்டாமல் அத்தைப் பெண்ணை கட்டும் சூழல். எல்லா நாவல்களிலும் நோய் சார்ந்த மனிதர்களின் அவஸ்தை இருக்கிறது. அதிலும் புற்று நோய் என்று வருகிற போது விவரமான விவரிப்பு இருக்கிறது. கல்வி சூழல் சார்ந்த விரிவான அணுகுமுறை, பாடத்திட்டங்கள்,பல்கலைக்கழக கல்வியில் இருக்கும் அரசியல், மாணவர்களின் போக்குகள், ரேக்கிங் சித்ரவதைகள் இடம்பெறுகின்றன.அங்கங்கே இடம் பெறும் இலக்கியக் குறிப்புகளும்  சுவாரஸ்யப்படுத்துகின்றன. எளிய மனிதர்கள் படித்து சுய அக்கறையுடன் கல்வியைத் துணைக்கு வைத்துக் கொண்டு லவுகீய வாழ்க்கையில் முன்னேறும் படிமங்களின் சிதறல் எங்கும் காணப்படுகிறது.

Continue Reading →

பேசாமொழி மாற்று சினிமாவிற்கான மாத இதழ் – புதியது

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் சினிமாவிற்கான இணைய மாத இதழின் பிப்ரவரி இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. நிறைய கட்டுரைகள் ஆவணப்படுத்துதல் அடிப்படையில் பதிவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும்…

Continue Reading →

பத்தி 8: இணையவெளியில் படித்தவை

சார்வாகனின் சிறுகதை “கனவுக் கதை”

எழுத்தாளர் சார்வாகனன் மறைவு!

சத்யானந்தன்

சார்வாகன் பற்றிய அறிமுகமே இல்லாதிருந்தேன். சென்றமாதம் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கட்டுரைகள் வந்த போது அவருடைய படைப்புக்களை வாசிக்கவில்லையே என்னும் வருத்தம் ஏற்பட்டது. காலச்சுவடு அவருக்கான அஞ்சலியுடன் அவரது சிறுகதையையும் பிப்ரவரி 2016 இதழில் வெளியிட்டிருக்கிறார்கள்.  அஞ்சலிகளுக்கு இது ஒரு மாதிரியாக இருக்கும். அஞ்சலி செலுத்தும் போது கூட ஒரு எழுத்தாளர் வாசிக்கப் படவில்லையென்றால் அவர் கவனம் பெறவில்லை என்னும் அஞ்சலி ஆதங்கமும் பொருளற்றுப் போகிறது இல்லையா?

இந்த இடத்தில் நாம் ஆளுமை வழி வாசிக்கும் மனப்பாங்கினால் மட்டுமே சார்வாகன் போன்ற நவீனத்துவ முன்னோடிகளைப் பற்றி அறியாமல் போகிறோம் என்பதைப் பற்றியும்  வேண்டும். ஒரு ஆளுமை கவனிக்கப்படுவது தம்மை கவனப்படுத்த முயற்சி எடுப்பது இவை எழுதப்படாத விதிகளாக ஆகி விட்டன. எழுதும் எந்த ஒரு படைப்பாளியின் தடமும் முயற்சிகளால் ஆன ஒரு சங்கிலியே. அதன் ஒரு கண்ணி தங்கமாகவும் மற்றொன்று பித்தளையாகவும் பிறிதொன்று இரும்பாகவும் இருக்கலாம். ஒரு படைப்பின் வெற்றி அதைப்படித்த பின் நம்முள் தொடரும் சிந்தனையின் சரட்டிலேயே வெளிப்படுகிறது.

தான் பார்த்த ஒன்றை, தம்மை பாதித்த ஒன்றைப் பகிர்ந்து கொள்ளும் எளிய முயற்சி தான் எழுத்து என்பது மிகவும் எளிமையான புரிதல். தனது சிந்தனை மற்றும் கற்பனையின் பொறி ஒன்றின் வழி வாசகனை ஒரு ஆழ்ந்த தரிசனத்துக்கு இட்டுச் செல்லும் இலக்கியமாக்கும் முயற்சிதான் எழுத்து. புதிய தரிசனத்துக்கு ஆழ்ந்த புரிதலுக்கு தீவிரமான சிந்தனைக்கு இட்டுச் செல்லும் ஒரு படைப்பு வாசித்து முடித்தவுடன் நம்முள் இயங்குகிறது. வாசிக்கும் போது படைப்பாளி தென்படுவதில்லை. வாசித்த பின் படைப்பும் தென்படாமல் அது முன் வைத்த தரிசனமே நம்முள் தொடர் சிந்தனையில் இயங்குகிறது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 157: இலக்கியச்சிறப்பு மிக்க ‘தமிழர் தகவல்’ மலர்!

வாசிப்பும், யோசிப்பும் 157: இலக்கியச்சிறப்பு மிக்க 'தமிழர் தகவல்' மலர்!கனடாவிலிருந்து வெளிவரும் ‘தமிழர் தகவல்’ இதழின் பெப்ருவரி (2016) மாத இதழ் அதன் இருபத்து ஐந்தாவது ஆண்டு மலராக வெளிவந்துள்ளது. இதனை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இவ்விதம் ஈழத்துப் பத்திரிகை உலகில் நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளரான எஸ்.திருச்செல்வத்தை ஆசிரியராகக்கொண்டு அவரால் வெளியிடப்படுவது.

மாதா மாதம் வெளியாகும் இதழ்கள் கனடாத் தமிழருக்கு, புதிய குடிவரவாளர்களுக்குப்பயனுள்ள விபரங்களை, ஆக்கங்களைத்தாங்கி வெளிவருவன. அவற்றை இலக்கியச்சிறப்பு மிக்கவை என்று கூற முடியாது.. ஆனால் இவ்விதழின் ஆண்டு மலர்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். அவை நிச்சயம் இலக்கியச்சிறப்பு மிக்கவை என்று கூறலாம். அந்த வகையில் இலக்கியச்சிறப்பு மிக்க மலராக இம்மாத இதழும் வெளிவந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

இம்மலர் கனடாத்தமிழர் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் வெளிப்படுத்தும் வகையில் வெளியாகியிருக்கும் அதே சமயம், உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழும் தமிழர் பற்றிய விபரங்களையும் தாங்கி வெளிவந்திருக்கின்றது.  அவ்வகையில் புலம் பெயர் தமிழர் சிறப்பு மலராகவும் இவ்விதழைக்கூறலாம். மலரின் கலை, இலக்கியச்சிறப்பு மிக்க கட்டுரைகளாகப்பின்வரும் கட்டுரைகளைக்குறிப்பிடுவேன்.

1. கனடாவில் தமிழ் ஒலிபரப்பு கால் நூற்றாண்டு வரலாறு – பொன்னையா விவேகானந்தன். கனடாவில் தமிழ் ஒலிபரப்பு வளர்ந்த கதையினை விரிவாக விபரிக்கும் கட்டுரை இது.

2. திரை விலகுகிறது.. மேடை நாடகங்கள் – ப.ஶ்ரீஸ்கந்தன். இக்கட்டுரையும் கனடாத் தமிழரின் நாடக வரலாற்றை விரிவாகப்பேசுகிறது; ஆவணப்படுத்துகிறது.

3.  இது படமல்ல. புலம்பெயர் திரைப்பட கவழிகை. – ரதன்.  திரைப்படங்களைப்பற்றிய பொதுவான கட்டுரை. இறுதியில் கனடாவில் வெளிவந்த திரைப்படங்களைப்பட்டியலிடுகிறது. இதற்குப்பதிலாக கட்டுரை முழுவதுமே கனடாவில் வெளியான தமிழ்த்திரைப்படங்களைப்பற்றியதாக இருந்திருக்கும் பட்சத்தில், கனடாத்தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய நல்லதோர் ஆவணக்கட்டுரையாக விளங்கியிருக்கும். கவழிகை என்றால் திரைச்சீலை. ‘புலம்பெயர் திரைப்பட கவழிகை’ என்ற தலைப்பு ‘புலம்பெயர் திரைப்படத்திரைச்சீலை’ என்ற பொருளினைத்தருகின்றது. அது பற்றிய குழப்பகரமான சிந்தனையைத்தருகிறது. இன்னும் எளிமையாகத் தலைப்பினை வைத்திருக்கலாமென்று தோன்றுகிறது.

Continue Reading →

மெல்பனில் தென்னாசிய கவிஞர்களின் சங்கமம்! கண்காட்சியும் கவிதா நிகழ்வும்!

நிகழ்வுகள்!இலங்கை – இந்தியா – பாக்கிஸ்தான் – பங்களாதேஷ் – நேபாளம் – பூட்டான் – மாலைதீவு – ஆப்கானிஸ்தான் முதலான எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் SAPAC (South Asian Public Affairs) என்னும் தென்னாசிய விவகாரங்களுக்hகன அமைப்பு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மெல்பனில் தொடங்கியது.

பல்லின கலாசார நாடாக விளங்கும் அவுஸ்திரேலியாவில் இதுபோன்ற பல தேசிய அமைப்புகள் இயங்குகின்றன. பொருளாதாரம் – விளையாட்டு – வர்த்தகம் – அயலுறவு – ஒருமைப்பாடு – கல்வி – வர்த்தகம் – கலாசாரம் முதலான துறைகளில் மேற்குறித்த எட்டு தென்னாசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் பரஸ்பரம் கலந்துரையாடுவதற்கும் ஒன்றிணைந்து கருத்தரங்கு தகவல் அமர்வுகள் நடத்துவதற்காகவும் தொடர்ச்சியாக இயங்கிவருகிறது. இந்நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு குடியேறியிருப்பவர்கள் மத்தியில் இருக்கும் கலை இலக்கிய ஊடகத்துறை ஈடுபாடு மிக்கவர்களுக்காக முதல்தடவையாக ஒன்றுகூடலை நடத்த முன்வந்துள்ளது. 

அவுஸ்திரேலியாவில் எதுவித இலாபநோக்கமுமமற்ற அமைப்பாக பதிவுசெய்யப்பட்டுள்ள தென்னாசிய விவகாரங்களுக்கான இந்த அமைப்பு, எதிர்வரும் 27 ஆம் திகதி (27-02-2016) சனிக்கிழமை மெல்பனில்; இலக்கிய நிகழ்ச்சியை ஒழுங்குசெய்துள்ளது.

மெல்பனில்  –  Stirling theological college   மண்டபத்தில் (40-60 Jackson  Road,  Mulgrave 3150 ) மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சி, நூல்களின் கண்காட்சியுடன் தொடங்கி கவிதா நிகழ்வுடன் இரவு 9.00 மணிக்கு  நிறைவுபெறும். குறிப்பிட்ட எட்டுநாடுகளுக்கும் கலை இலக்கிய கவிதைப்பாரம்பரியம் இருக்கிறது. தமிழ் மக்கள் ஏனைய நாடுகளின் கவிதை முயற்சிகளை அறிந்துகொள்வதற்கும் அந்த நாடுகளைச்சேர்ந்தவர்கள் தமிழர்களின் கவிபுனையும் ஆற்றலை அறிந்துகொள்வதற்கும் ஏற்றவாறு நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Continue Reading →

மெல்பனில் அனைத்துலக பெண்கள் தின விழா!மறைந்த பெண்ணிய ஆளுமைகள் அருண்.விஜயராணி – தமிழினி நினைவுரை!

அனைத்துலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் எதிர்வரும் மார்ச் 06 ஆம் தேதி     (06-03-2016) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு மெல்பேர்ண் பிரஸ்டன்…

Continue Reading →

ஆய்வு: தமிழரின் சமூக ஊடாட்டங்களில் உடல் பற்றிய கருத்தியல்

எழுத்தாளர் க.நவம்ஒரு குறிப்பிட்ட பிரதேச எல்லைக்குள் வாழ்கின்றவர்கள் என்ற வகையிலும், அவ்வாறு வாழும்பொழுது, பொதுமைப்பாடுடைய பல்வேறு தொடர்புகளையும், உறவுகளையும், ஊடாட்டங்களையும் தமக்கிடையே மேற்கொண்டுள்ளவர்கள் என்ற வகையிலும், அக்குழுமத்தினரை ‘ஒரு சமூகம்’ என அழைத்தல் மரபு. பாரம்பரிய தமிழ்ச் சமூகத்தில், மிக நீண்ட காலமாக, இந்த மனித உறவுகளையும் தொடர்புகளையும் ஊடாட்டங்களையும் நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்றாக, உடல் இருந்து வந்துள்ளது.

இவ்வாறான சமூக நடத்தைகளின்போது, உடலை மையமாக வைத்து, சமூக உறுப்பினர்கள் ஒருசாரார்மீது, ‘பாகுபாடு’ பேணப்பட்டு வந்துள்ளமைக்கு, ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள. ஒரு மனிதனின் உடல், இன்னொரு மனிதனால் தீண்டப்படுதலை, தடுத்து நிறுத்துவதற்கு வழிவகுத்த, இந்தப் பாகுபாட்டுக்கு, குறிப்பாகப் பெண்களும், இயற்கையாகவே உடலில் குறிப்பிட்ட குணாம்சங்களையோ அல்லது குறைபாடுகளையோ கொண்டவர்களும், சாதி என்ற பெயரால் தாழ்த்தப்பட்டவர்களும் இலக்காகி வந்துள்ளனர்.

மனித வரலாற்றின் ஆரம்ப காலம் தொட்டு, உடல் வலுவின் அடிப்படையில், பெண்ணினத்திலும் வலுவான சக்தியாகக் கணிக்கப்பெற்ற ஆணினமானது, சமூகத்தின் சகல மட்டங்களிலும், தனது அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொண்டது. பெண்ணினத்தை இரண்டாந்தர சக்தியாக, அடையாளப்படுத்திக்கொண்டது. இது போதாதென்று, கற்பு என்ற பொன் விலங்கை, பெண்களின் கரங்களில் பூட்டிக்கொண்ட தமிழ்க் கலாசாரம், ‘மாதவிலக்கு’ என்ற இயற்கையான உடலியல் செயற்பாட்டின்போதும், ‘தீட்டு’ என்ற பெயருடன் பெண்களின்மீது தீண்டாமையைத் திணித்துக்கொண்டது.

அடுத்து, இயற்கையாகவே உடலியல் மாற்றங்களுக்குள்ளாகி, அண்மைக் காலம்வரை அரவாணிகள் எனும் அருவெருக்கத்தக்க பெயரால் அழைக்கப்பட்டு வந்த திருநங்கையரை, சங்க இலக்கியங்களும், அறநூல்களும், பக்தி இலக்கியங்களும், காப்பியங்களும் ‘அச்சுமாறிகள்’ என்றும், ‘ஆண் பெண்ணாகிகள்’ என்றும், ‘பரத்தையருக்கு ஒப்பானோர்’ என்றும், ‘அலிகள் – ஊனங்கள் – பேடிகள்’ என்றும் குறிப்பிட்டு, அவர்களை இழிவானவர்களாகவும் கேள்விக்குரியவர்களாகவும் ஒதுக்கிய வரலாறு இற்றைவரை தொடர்கிறது. அனைத்து மாற்றுத் திறனாளிகளது நிலைமையும் எமது சமூகத்தில் இவ்வகைப்பட்டதே! மேலும், கறுப்பு நிறமுடையவர்களாகப் பிறந்த தமிழ்ச் சமூகத்தினர், அழகற்றவர்களாகவும், ஆளப்படுபவர்களாகவும், அதிகாரத்திற்குத் தகுதியற்றவர்களாகவும், இழிவின் சின்னங்களாகவும் கருதப்பட்டு வருகின்றமைக்கான ஆரம்ப விதை, தமிழ் அரசுகள் வீழ்ச்சியடைந்த 13ம் நூற்றாண்டின் இறுதியிலேயே நாட்டப்பட்டுவிட்டது.

Continue Reading →