சிறுகதை: ‘ஹாக்’ செய்யப்பட்ட சித்ரகுப்தனின் கணக்கு!

சிறுகதை: சித்ரகுப்தனின் கணக்கு களவாடப்பட்டது.எம தர்ம ராஜனின் வாகனமான எருமையின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகள் திடீரென்று சிகப்பு வெளிச்சத்துடன்  எச்சரிக்கை  சமிக்கைச் செய்தது. அசவர வேலையாக  போய்க் கொண்டிருந்த எம தர்மன்  “என்ன !? யாரது ,என்னாயிற்று ” எனப் பதட்டமாக கேட்டார்.

அம்மணிகள் பேசவும், கேட்கவும் ,அவசர சமிக்கைச் செய்யவும் வடிவமைக்கப் பட்டிருந்தது.

மறுமுனையில் ,சித்ரகுப்தன் “தலைவா! நம் கணிணி நிலயத்தை எவரோ ‘ஹாக்’ செய்துவிட்டார்கள்! ”

“’ஹாக்’ ..!? அப்படி என்றால் ? ,விவரமாக சொல்லுங்கள்” எனக் கேட்டார்

“எவரோ நம் கணிணியில் இருந்த சில கணக்கு பையில்களை களவாண்டு விட்டார்கள்!”

“அப்படியா! எந்த கணக்கு !!  ” என அதிர்ந்துக் கேட்டார்.

“பாவ புண்ணிய கணக்கு பையில் களவாடப்பட்டது. இந்தந்த செயலுக்கு இவ்வளவு புண்ணியம், பாவம் என அளவு கணக்கு இருந்தது அல்லவா!? அது..”

“ஓ..ஓ !! அது முக்கியமான கணக்கு ஆயிற்றே ! அதை கொண்டு தானே  ஒவ்வொரு மானிடருக்குமான  மொத்த கணக்கு ரிப்போர்ட் ,மும்மூர்த்திகளுக்கும் நாம் அனுப்புகிறோம். இதை திரும்பப் பெற வழி இருக்கிறதா என கணிணி துறையினரிடம் கேட்டீர்களா?”

“நம் கணிணி துறை ,அசட்டு நம்பிக்கையில் அதற்கு ‘பேக்-அப்’ எடுக்கவில்லையாம் ..ஆகையால் ‘ரி-கவர்’ செய்ய முடியாது எனச் சொல்லி விட்டார்கள் !”

“சரி , அப்படியானால் இதை மூம்மூர்த்திகளுக்கும் உடனே தெரியப் படுத்துங்கள் ,சித்ரகுப்தன்..”

உடனே மூம்மூர்த்திகளோடு அசவர கூட்டம் கூட்டப்பட்டது.

Continue Reading →

பயணியின் பார்வையில் – அங்கம்15: கிளிநொச்சி அம்மாச்சி உணவகம் தரும் ஆரோக்கியமான உணவு. இலக்கிய உலகில் சங்கமிக்கும் அண்ணாச்சிகளும் மச்சான்களும்.

கிளிநொச்சி அம்மாச்சி உணவகம்வடமாகாண பயணத்தை முடித்துக்கொண்டு கிளிநொச்சியிலிருந்து அன்று காலை புறப்பட்டபோது, ” உங்களை  அம்மாச்சியிடம்  அழைத்துச்செல்லப்போகின்றேன்” என்றார் நண்பர் கருணாகரன். ” எங்கே..? ” எனக்கேட்டேன்.  ” அம்மாச்சி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?” என்றார். அவர் என்னை அண்ணாச்சி என்றுதான் அழைப்பார். அக்காச்சி, அண்ணாச்சி, அம்மாச்சி என்பவை எமது தமிழர் வாழ்வில் பேசுபொருள். அப்படி யாரோ ஒரு அம்மாச்சியின் வீட்டுக்கு அழைத்துச்செல்லப்போகிறார் என்றுதான் முதலில் நினைத்தேன். வடக்கு பணிகள் முடிந்துவிட்டதால், அடுத்து  கிழக்கு மாகாணம் செல்லவேண்டியிருந்தது. அதற்கிடையில் கொழும்பு, கண்டி, மாத்தளை பயணங்களும் இருந்தன. எனது அவசரத்தை அவரிடம் சொன்னேன். நான் புறப்படும்வேளையில் அதிபர் பங்கயற்செல்வன் வந்து, தங்களது தொண்டு நிறுவனத்திற்கும் வந்து செல்லுமாறு கேட்டார். எனது பயணநெருக்கடியை அவரிடம் பக்குவமாகச்சொல்லிவிட்டு, கருணாகரனுடன் புறப்பட்டேன். அவர் அழைத்துச்சென்றது  அம்மாச்சி உணவகம்.  கிளிநொச்சியில் கண்டி வீதியிலிருப்பதனால்,  வெளியூர்களிலிருந்து  யாழ்ப்பாணம் நோக்கி  வருபவர்களையும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்பவர்களையும்  அழைக்கிறாள்.

அந்த உணவகத்தின் பெயரையும் சிங்களத்திற்கு மாற்றுவதற்கு இலங்கை அரசு எத்தனிக்கிறது என்ற குற்றச்சாட்டை வடக்கு  முதல்வர் முன்வைத்திருக்கிறார். வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்டிருக்கும் அம்மாச்சி உணவகத்தில் அன்று காலைப்பசியை போக்கியபோது புதிய அனுபவமும் கிட்டியது. அவ்வாறு ஒரு உணவகத்திற்கு அதற்கு முன்னர் சென்றிருக்காதமையினால்தான் அந்த புதிய அனுபம் என நினைக்கின்றேன். கொட்டகை ( Cottage)  வடிவில் அம்மாச்சி இயங்குவதனால்  அப்பம், தோசை, புட்டு, இடியப்பம், இட்டலி, வடை முதலான உணவு வகையறாக்கல் பரிமாறப்படும் அழகே அலாதியானது. அனைத்தையும்        ஒரு (கொட்டேஜில் )  கொட்டகையில் பெறமுடியாது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெண்கள் பொறுப்பாக இருந்து உடனுக்குடன் தருகிறார்கள்.    அங்கு   தனியாக காசாளரும் ( Cashier) இல்லை. யாரிடம் எதனைக்கேட்டுப்பெறுகின்றோமோ அவரிடமே அதற்கான பணத்தை தரல்வேண்டும். அதனாலும் இந்த  அம்மாச்சி வித்தியாசமானவள். தென்னிலங்கையிலிருந்து வரும் பெரும்பான்மை இனத்தவர்களையும் அம்மாச்சி பெரிதும் கவர்ந்திருக்கிறாள். அதனால்தான்போலும் இலங்கை அரசு இதற்குள்ளும் அரசியலை திணிக்கப்பார்க்கிறது. அம்மா, அம்மே, அம்மாச்சி எல்லாம் ஒன்றுதான்.

Continue Reading →

லண்டனில் ‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக…’ நூல் வெளியீடு

லண்டனில் ‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக...’ நூல் வெளியீடு‘திருநாவுக்கரசு சிறிதரன் (சுகு) அவர்களின் ‘மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக…’ என்ற நூல் விடுதலை சுவர்க்க பூமிக்காக ஏங்கும் அவரது கனவின் வெளிப்பாடாகும். ஒரு வன்முறையற்ற பூமியைநோக்கி,  படுகொலைகளைக் களைந்து சமூக சௌஜன்யத்துடன் வாழும் சூழலை அவாவிய கனவு அவருடையது. இனப்பிரச்சினைக்கான தீர்வினை நடைமுறையில் நின்று நிதானமாய்ப் பரிசீலிக்கும் சிறிதரன் தொடர்ந்தும் தன் இலட்சியப்பாதையில் தொய்வின்றிப் பயணம் செய்து வருகின்றார். கடந்த முப்பது ஆண்டு கால யுத்தப் பேரழிவினை, மனத்தடைகளைக் களைந்து பார்ப்பதற்கான ஒரு கைவிளக்காக இந்த நூல் திகழ்கிறது.

இலங்கை அரசும், இராணுவமும், விடுதலைப்புலிகளும் ஏற்படுத்திய அவலங்களை அவர் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார். இத்துணை மனிதப் பலிகளை நிறுத்தி, 13ஆவது சட்டத்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், தமிழர்கள் பெற்றிருக்கக்கூடிய நன்மைகள் அதிகமாகவே இருந்திருக்கும் என்பதை இந்த நூல் தெளிவாக வெளிப்படுத்துகிறது. போலியான பிரகடனங்களின் பின்னால் செல்வதைவிடுத்து சிறிதரன் நெறிப்படுத்தியிருக்கும் அரசியல் பாதை நடைமுறை சார்ந்தது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை’ என்று அரசியல் விமர்சகர் மு.நித்தியானந்தன் லண்டனில் கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றும்போது தெரிவித்தார்.

‘திரு. சிறிதரனின் மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக … என்ற தலைப்பு எங்கள் தமிழ் சமுதாயத்தின் மிகப் பிரமாண்டமான மாற்றத்தை எதிர்பார்க்கும் ஒரு நம்பிக்கையில் பிறந்த கருத்துக்களின் தொகுப்பே என்று நினைக்கிறேன். இந்த நூலில் இலங்கையில் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் இழந்துவிட்டவற்றை சொல்லியடங்காத துயருடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஒரு புதிய முற்போக்கான தலைமுறையை எதிர்பார்ப்பதுää தமிழ் மக்களின் அரசியலுடன் தன்னை நெருக்கமாகப் பிணைத்துக்கொண்ட சுகுபோன்ற தன்னலமற்றவர்களிடம் இருந்து துளிர்ப்பது யதார்த்தமானதாகும்’ என்று பிரபல நாவலாசிரியை ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தனது உரையின்போது தெரிவித்தார்.

Continue Reading →

ஆய்வு: சங்கப் புலவர்களின் மனிதஉரிமைகள் சிந்தனைகள்

- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -முன்னுரை
பழந்தமிழ் இலக்கியமாகத் திகழும் சங்க இலக்கியம், மனித சமூகம் உய்வதற்குரிய கருத்துக்களை உயரிய அறக்கோட்பாடுகளாக வகுத்துரைக்கின்றது. சமூக மேம்பாட்டின் பல்வேறு சிறப்புக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. காதலும் வீரமும் அவற்றுள் பெருமையுடையனவாய்ச் சொல்லப்பட்டுள்ளன. இவ்விரண்டும் பண்டைத்தமிழ் வாழ்வின் பண்பாட்டுக் கூறுகளாக விளங்கியுள்ளன. இவ்விரு கூறுகளையும் எடுத்துரைத்துத் தமிழ்மொழியின் பெருமையினையும் உயர்வினையும் உலகறியச் செய்தவர்கள் சங்ககாலப் புலவர்கள் ஆவர். அப்புலவர்கள், தனிமனித வாழ்விலும், சமூகவாழ்விலும், சமூகத்துடன் தொடர்புடைய அரசவாழ்விலும் பெறத்தக்க மனித உரிமைகளைத் தங்கள் பாடல்களில் புலப்படுத்தியுள்ள திறத்தினைக் குறித்து இக்கட்டுரையில் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. 

சங்ககாலப் புலவர்கள்
மனித உரிமைகள் என்ற கருத்துருவாக்கம் மனித சமூகம் குழுவாக வாழ ஆரம்பித்த நாளிலிருந்தே எழத் தொடங்கியுள்ளது. சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்கள் சமூகத்தில் உயர்வான நிலையில் வைத்துப் போற்றப்பட்டமைக்குக் காரணம் அவர்கள் மனித உரிமைகளைப் பற்றிய அறிவினைப் பெற்றிருந்தமையினால்தான். அரசியலிலும், சமூக உயர்விலும் தங்கள் பங்களிப்பினைச் சிறப்புற எடுத்துரைத்து வந்துள்ளனர். சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதர்களின் தேவைகளை எடுத்துரைத்ததோடு, அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கவும் தவறவில்லை. தமிழ் இலக்கியத்தில் மனித உரிமைகள் அறக்கோட்பாடுகளாக வகுத்துரைக்கப்பட்டுள்ளன. இதில் புலவர்களின் பங்கு அளப்பரியதாக இருந்துள்ளது. அவர்கள் தங்களது வறுமையைப் போக்கிக்கொள்ள மன்னர்களைப் பாடிப் பரிசில் பெறுவதை மட்டுமே தொழிலாகக் கொள்ளாமல் மன்னர்கள் மனித உரிமை மீறல்களைச் செய்யும் போது அவர்களைத் திருத்தவும், அறிவுறுத்தவும் செய்துள்ளனர்.

Continue Reading →

புத்தகக்கடை பூபாலசிங்கம் நினைவலைகள்: எழுத்தாளர்களின் தேவைகளை உணர்ந்து அறிவொளி வழங்கிய படிக்காத மேதை. தடைசெய்யப்பட்ட சமதர்மம் பத்திரிகை விற்றதற்காக சவுக்கடியும் வாங்கினார்.

புத்தகக்கடை பூபாலசிங்கம் நினைவலைகள்: எழுத்தாளர்களின் தேவைகளை உணர்ந்து அறிவொளி வழங்கிய படிக்காத மேதை. தடைசெய்யப்பட்ட சமதர்மம் பத்திரிகை விற்றதற்காக சவுக்கடியும் வாங்கினார்.” கவியரசு கண்ணதாசன் மறைந்துவிட்டார்” என்ற ஒரு தொலைபேசித் தகவல் சென்னையில் பலரையும் பரபரப்புக்குள்ளாக்கிவிட்டது. அவருடைய நெருங்கிய நண்பர்கள் பலர் கவிஞரின் வீட்டுக்கு படையெடுத்துவிட்டனர். அதில் ஒருவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன். அவர் நெஞ்சிலே அடித்து புலம்பிக்கொண்டு ஓடிவந்துள்ளார். ஆனால், இவர்களெல்லாம் அதிசயிக்கும்வகையில் ஆசனத்தில் அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார் கவிஞர். அந்த அநாமதேய தொலைபேசி அழைப்பை பலருக்கும் அனுப்பியவரே அவர்தான் என்பது தெரிந்தது. குரலை மாற்றி அவ்வாறு சொல்லி பலரையும் தான் பதட்டப்படவைத்தமைக்கு காரணமும் சொன்னாராம். தான் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதை தான் உயிரோடு இருக்கும்போதே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விபரீத ஆசை நெடுநாளாக இருந்ததாம். அன்று அந்த ஆசையை நிறைவேற்றிக்கொண்டதுடன், அவ்வாறு உயிரோடு இருக்கும்போதே இறந்துவிட்டதாக செய்தி வெளியானால் இன்னும் அதிக காலம் வாழமுடியும் என்று ஒரு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் அன்று துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் சொல்லிச்சிரித்தாராம். அவர் சொன்னவாறே அதன் பிறகு பல வருடங்கள் வாழ்ந்து விட்டுத்தான் இயற்கை எய்தினார். இலங்கையில் தமிழ் புத்தக இறக்குமதி விற்பனை விநியோகத்தில் பெரும் புகழ்பெற்றிருக்கும் பூபாலசிங்கம் புத்தகசாலையின் ஸ்தாபகர் ஆர். ஆர். பூபாலசிங்கம் அவர்களைப்பற்றி நினைக்கும்போது கண்ணதாசனும் நினைவுக்கு வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. கொழும்பு பொரளையில் கொட்டாவீதியில் அமைந்திருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மாஸ்கோ சார்பு) தலைமை அலுவலகத்திற்கு 1972 – 1977 காலப்பகுதியில் அடிக்கடி சென்றுவருவேன். அங்கிருந்துதான் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசாபிமானி, புதுயுகம் முதலான பத்திரிகைகளும் அத்த என்ற சிங்கள நாளேடும் வெளியாகின. தமிழ் பத்திரிகைகள், வாரவெளியீடுகள்தான். அத்த பத்திரிகையில் ஒரு நாள், யாழ்ப்பாணத்தில் பூபாலசிங்கம் மறைந்துவிட்டார் என்ற செய்தி வெளியாகியிருந்தது. கொழும்பில் வசித்த கட்சியைச்சார்ந்த தமிழ்த்தோழர்கள் உடனடியாக யாழ்ப்பாணத்திற்கு தொடர்புகொண்டபோது அந்தச்செய்தி தவறானது என்பது ஊர்ஜிதமானது. இது நிகழ்ந்து பலவருடங்களின் பின்னர்தான் 1982 இல் புத்தகக்கடை பூபாலசிங்கம் மறைந்தார். அவரது பெயரில் வாழ்ந்த மற்றும் ஒருவர் இறந்த செய்தியை அன்றைய அத்த பத்திரிகை வெளியிட்டு, பின்னர் மன்னிப்பும் கேட்டது. அத்த என்றால் தமிழ் அர்த்தம் உண்மை. உண்மைக்குப்புறம்பான செய்தியை வெளியிட்டு கட்சித்தோழர்களிடம் திட்டும் வாங்கியது அந்தப்பத்திரிகை. இதுபோன்று அ.செ. முருகானந்தனுக்கும் நடந்திருக்கிறது.

பீனிக்ஸ் பறவையை நான் இதுவரையில் பார்த்ததில்லை. ஆனால், அது எரிக்கப்பட்டாலும் மீண்டும் புத்துயிர்கொள்ளும் என்று பலரும் எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக கவிஞர்கள் பீனிக்ஸ் பறவையை உவமித்து கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். பூபாலசிங்கம் புத்தகசாலையையும் பீனிக்ஸ் பறவைக்கே உவமிப்பார்கள். சீதையைப்போன்று தீக்குளித்து எழுந்ததுதான் இந்த புத்தக களஞ்சியம். ஒரு தடவையல்ல மூன்று தடவைகள். யாழ்ப்பாணத்தில் நான் படித்துக்கொண்டிருந்த 1963 – 1965 காலப்பகுதியில் சனிக்கிழமைகளில் வெளியே சென்றுவருவதற்கு எங்கள் கல்லூரி ஆண்கள் விடுதியில் அனுமதி தருவார்கள். அரியாலையிலிருந்து யாழ்ப்பாணம் பஸ் நிலையம் சென்று பூபாலசிங்கம் புத்தகசாலையில் அம்புலி மாமா சஞ்சிகை வாங்கிவருவேன். நண்பர்களுடன் வெலிங்டன், ராஜா தியேட்டர்களுக்குச்சென்று முற்பகல், பிற்பகல் படங்களும் பார்த்துவிடுவேன். எனினும் படம் பார்ப்பதைவிட அம்புலிமாமா வாங்குவதுதான் எனக்கு முக்கியமானது.

Continue Reading →