ஆய்வு: பிரபஞ்சன் நாவல்களில் சமுதாயச் சூழல்!

எழுத்தாளர் பிரபஞ்சன்நாவல் என்னும் இலக்கிய வடிவம் இக்கால இலக்கிய வகைகளுக்குள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். படைப்பாளிகள் மனிதநேய உணர்வு மிக்கவர்களாய் சமூக மாற்றத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணியே நாவல் இலக்கியத்தை ஒரு கருவியாகக் கையாண்டனர். நாவல் என்னும் இலக்கியவகை இன்று மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. சமகால வாழ்வின் எதிரொலியான இன்றைய நாவல்கள் காலத்திற்கு ஏற்ப பலவகைகளைக் கொண்டு சிறந்து விளங்குகின்றன. அவ்வகையில் பிரபஞ்சன் நாவல்களில் சமுதாயச் சூழல் எவ்வாறெல்லாம் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது என்பதை வெளிக்காட்டுவதே இக்கட்டுரையாகும்.

சமூகப் பின்னணியும் நாவலும்
கல்வியினால் ஏற்பட்ட மாறுதல்கள் ஆளும் வர்க்கத்தினரோடு ஒத்துப்போதல், சமுதாய மாற்றத்திற்குள் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டுமென உந்துதல் போன்றவற்றால் தமிழ் நாவல் உலகில் மறுமலர்ச்சி உருவாயிற்று. இத்தகைய மாறுதல்கள் நிகழ ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆனாலும் இம்மறுமலர்ச்சி இலக்கிய உலகில் நிரந்தரமாக்கப்பட்டது. புதிய சமூக சிந்தனைகள் மக்கள் மனதில் உருவான பொழுதே மனிதனை மையமாகக் கொண்டு படைப்பிலக்கியங்கள் தோன்றின. சமகால வாழ்வைச் சித்தரிக்கும் போது அந்த வாழ்வின் இயற்கை உந்துதலால் விளையும் தீமைகளை அகற்றுவதற்கான தேவையை உணர்த்துவதே நாவல் இலக்கியங்களின் நோக்கமாக அமைகின்றன.

“நாவல் இலக்கியம் சிறுகதையை விட சமுதாயப் பிரச்சனையை முழுமையாகப் பிரதிபலிக்கும் இலக்கிய வகையாகும்”  (தமிழ் நாவல்கள்-ஓர்அறிமுகம்.ப.10) என்று கோ.வே.கீதா விளக்கம் தருகிறார். நாவல் வடிவத்தின் தனித்துவ நிலையே சமூக நடப்பியலை வெளிக்காட்டுவதே இந்த நெறிமுறை பிரபஞ்சன் நாவல்களில் நிறைய காணக் கிடைக்கின்றன.

சமய நிறுவனம்
ஒரு சமுதாயத்தை எதார்த்தமாகப் படைக்க விழையும் எழுத்தாளன் மதம் புனிதமானது சக்தி வாய்ந்ததெனினும் அதன் நன்மை, தீமைகளையும் தன் எழுத்தில் வடிக்க வேண்டிய பொறுப்பிற்கு ஆளாகிறான். சமுதாயங்களின் மையத்தில் அமையும் பல சிக்கல்களை வரையறுத்து ஒழுங்குபடுத்துவதற்குச் சமுதாயங்கள் பயன்படுத்தும் நம்பிக்கைகள், நெறிகள், மதிப்புகள் இவற்றின் தொகுதிகளே சமயம் சார்ந்த சமுக நிறுவனங்களாக அமைகின்றன. அந்த வகையில் ‘சந்தியா’ நாவலில் பிரபஞ்சன் இயேசு கிறிஸ்து பிறக்கின்ற மாதம் பற்றியும் அதனை மகிழ்ச்சியுடன்  வரவேற்கும் நிலையில் மக்கள் இருப்பதைப் பற்றியும் சுட்டிக் காட்டியுள்ளார்.

“கிறிஸ்து புதுவருடத்தை உடன் கொண்டு வருகிறார். பழையன கழிந்து வாழ்வில் புதியதைப் புக வைக்கும் காலம் குளிர்காலம்”  (சந்தியா.ப.201)

கோயில்கள் கலைகளின் பிறப்பிடம் என்பதை நினைவூட்டும் விதமாக பிரபஞ்சன் ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ நாவலில் இறைவனின் உருவத்தை சிறுகுழந்தையின் தோற்றமாக எடுத்துக் காட்டுகிறார்.

“உச்சியில் விநாயகர் கோயில் ஒன்று இருந்தது சின்னஞ்சிறு பிள்ளையார் ஒரு பத்துமாதக் குழந்தை உட்கார்ந்து இருப்பது போல அத்தோற்றம் இருந்தது”   (கனவு மெய்ப்பட வேண்டும்.ப.231).

கல்விச்சூழல்

கல்வி என்பது சமுக மரபுகளை ஒரு தலைமுறையினர் அடுத்த தலைமுறையினருக்கு அளிப்பதே ஆகும். மனித சமூகம் நீண்ட நெடுங்காலமாக முயன்று தேடி வைத்திருக்கும் அறிவுச் செல்வத்தை மக்களிடையே வழங்கும் சாதனமாகக் கல்வி அமைகிறது.  கல்வி என்பது வேலைக்கு மட்டுமல்ல, சமுக சேவைக்கும் பயன்படும் என்பதை ‘சந்தியா‘ நாவலில் பிரபஞ்சன் சுட்டிக் காட்டியுள்ளார்.

“கிருஷ்ணமூர்த்தி எம்.ஏ., வரை படித்த இளைஞன் அவன் வேலை இல்லாத இளைஞனாகச் சொல்லப்பட்டான். ஏதோ ஒரு படிப்பைப் படித்துவிட்டு வேலைகிடைக்கும் என்று எதிர்பார்த்து ஊரில் சோம்பிக் கிடக்கும் லட்சோப லட்சம் இந்திய இளைஞர்களில் ஒருவனாக அவன் இருக்க விரும்பவில்லை. இயல்பாகவே அவனுக்குள் இருந்த கருணை உள்ளம் அந்த அனாதை ஆசிரமத்தின்பால் சென்றது” (சந்தியா.ப.224).

Continue Reading →