காலமும் கணங்களும் தோழர் வி.பொன்னம்பலம் 25 ஆவது நினைவு தினம் மார்ச் 05 (1930-1994)

அமரர் வி.பொன்னம்பலம்

” பனைமரத்துப்பாளை எல்லாம் நில மட்டத்தில் வெளியாகியிருந்தால், சாதி பேசும் உயர்குடிமக்களும் கள்ளுச்சீவியிருப்பார்கள்”  இவ்வாறு சுவாரஸ்யமாகவும் கருத்தாழத்துடனும் பேசவல்ல ஒருவர் எம்மத்தியிலிருந்தார். சிறந்த பேச்சாளர் மொழிபெயர்ப்பாளர். கல்வித்துறையில் பலருக்கும் கலங்கரைவிளக்கமாக ஒளிதந்த ஆசான். கொள்கைப்பற்றாளர். பதவிகளுக்காக சோரம்போகாதவர். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவே மரணிக்கும்வரையில் குரல் கொடுத்தவர். மாற்றுக்கருத்துள்ளவர்களையும் அரவணைத்தவர்.  இவ்வாறு பல சிறப்பியல்புகளையும் கொண்டிருந்த ஆளுமையுள்ள தலைவர் தோழர் வி. பொன்னம்பலம் பற்றி தெரிந்திருப்பவர்கள் இன்றும் எம்மிடையே இருக்கிறார்கள். வடபுலத்தில் அளவெட்டி கிராமத்தில் 1930 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 18 ஆம் திகதி வல்லிபுரம் – பொன்னம்மா தம்பதியரின் புதல்வராகப்பிறந்து, அனைவராலும் வி. பி. என அழைக்கப்பட்ட தோழர் வி. பொன்னம்பலம் அவர்கள்,  1985 ஆம் ஆண்டின் பிற்கூறில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தார். தனது அரசியல் ஆசானும் அதிபருமான ஒறேற்றர் சுப்பிரமணியம் அவர்களின் நினைவரங்க நிகழ்வில்  (1994 – மார்ச் 05 ஆம் திகதி) உரையாற்றும்வேளையில், “அனைவரிடமிருந்தும் விடைபெறுகின்றேன்” எனச்சொல்லி நிரந்தரமாக விடைபெற்றார்.

பல வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் நள்ளிரவு. உறக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். தொலைபேசி அழைப்பு வந்து திடுக்கிட்டு விழித்தேன். மறுமுனையில் கனடாவிலிருந்து மறைந்த தோழர் வி.பொன்னம்பலத்தின் மகன் நமுனகுலன். தோழர் வி.பி. யின் மறைவுச்செய்தி அறிந்து யார் மூலம் அனுதாபம் சொல்வது எனத்தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த எனக்கு, நமுனகுலனின் அழைப்பு சிலிர்ப்பைத்தந்தது. “அப்பாவின் நினைவாக ஒரு மலரைத்தயாரிக்கின்றோம். நீங்களும் ஒரு கட்டுரை தரவேண்டும்.” என்றார்.

தெணியானின் தம்பி நவம் எனது தொலைபேசி இலக்கம் தந்ததாகவும் சொன்னார். எனது கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்து கட்டுரை அனுப்புவதாகச் சொன்னேன். எங்கள் வீட்டுக்கு கணினி உறவினராகாத காலம். அதனால் மின்னஞ்சலும் இல்லை. மறுநாளே கட்டுரையை தபாலில் அனுப்பிவிட்டேன். மற்றுமொரு நாள் மாலைவேளையில் வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. சென்று பார்த்தேன். தபால்சேவகர் ஒரு பெரிய பார்சலை தந்துவிட்டுப்போனார். திறந்து பார்த்தேன். பொன் மலர் பிரதிகள். சுமார் ஐம்பது இருக்கும். புலம்பெயர் வாழ்வில் என்னை விந்தையில் ஆழ்த்திய சம்பவமாக அந்தப் பிரதிகள் தாமதமின்றி எனக்குக்கிட்டியதைக்குறிப்பிடலாம். பொதுவாக என்ன நடக்குமென்றால்!? என்னிடம் ஆக்கம் கேட்பார்கள். எழுதி அனுப்புவேன். கேட்டவர்களுக்குக் கிடைக்கும். பயன்படுத்துவார்கள். அதன் பிறகு பிரதி அனுப்ப மறந்துவிடுவார்கள். அல்லது பலதடவை தொடர்புகொண்டபின்னர் அனுப்புவார்கள். இதுவிடயத்தில் யாரும் யாரையும் குற்றம் சொல்லமுடியாது. காரணம் தபால்கட்டணம்தான். ஆனால், நமுனகுலன் இந்த விடயத்தில் என்னை ஏமாறச்செய்து ஒரு பிரதி அல்ல 50 பிரதிகள் அனுப்பி ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார்.

அவுஸ்திரேலியாவில் வதியும் வி.பி.யின் ஆதரவாளர்கள் , அவரது முன்னாள் மாணவர்கள் , அவரை நன்கு தெரிந்தவர்கள் சிலருக்கு அந்தப்பிரதிகளை விநியோகித்தேன். தோழருடன் நன்கு பழகிய அரசியல் தலைவர்கள் , கல்விமான்கள் , இலக்கியவாதிகள் பத்திரிகையாளர்கள் சமூகப்பணியாளர்கள் பலர் பொன்மலரில் எழுதியிருந்தனர். எண்பது கட்டுரைகள் அம்மலரில் வெளியாகியிருந்தன. தோழர் பொன்னம்பலத்தின் வாழ்வும் பணியும் ஊடாக வெளிப்பட்ட முன்னுதாரணமான அருங்குணங்கள் அவற்றில் பதிவாகியிருந்தன. மலருக்கு நயப்புரை எழுதி மெல்பன் தமிழ் வானொலி நிகழ்ச்சியொன்றுக்கு பொன்மலர் பிரதியுடன் அனுப்பிவைத்தேன். ஆனால்,  அந்த நயப்புரையை அந்த வானொலி ஒலிபரப்பிற்கு ஏற்கவில்லை. சம்பந்தப்பட்டவரை நேரில் சந்தித்துக்கேட்டபொழுது, அரசியல் சார்ந்த நூல்,  மலர் விமர்சனங்களை தங்கள் வானொலி ஒலிபரப்பாது என்று சொன்னார். எனக்கு அவரது பதில் திருப்தியளிக்கவில்லை. அவர் அன்றைய சூழ்நிலையின் கைதி என்பது மாத்திரம் புலனாகியது.

Continue Reading →