நீண்ட காலத்திற்குப்பின்னர் அவன் என்னைப்பார்க்க வந்தான். அவனை “ அவர் “ என்று அழைக்காமல் மரியாதைக் குறைவாக “அவன் “ என்று அழைப்பதாக வருந்தவேண்டாம். அவன் பிறப்பதற்கு முன்னர் – நூறாண்டுகளுக்கு முன்பு நான் பிறந்தமையால், அவ்வாறு அழைக்கின்றேன்.
பல முன்னோர்களையும் “ அவன் “ என்றுதானே விளிக்கிறார்கள். ஏன்… சில சந்தர்ப்பங்களில் எம்மைப்படைத்த ஆண்டவனைக்கூட “ அவன் படைத்தான் “ எனத்தானே சொல்கிறார்கள்.
நான், அவன் அப்பன் பிறப்பதற்கு முன்பே பிறந்திருக்கின்றேன். என்னைப்படைத்தவர்களினால் என்னிடம் வந்து செல்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட குழந்தைகள் வந்து திரும்பிய அக்காலத்தில், அவன் பாட்டன் பிறந்த ஊர்க்காரர்கள் கல்லெறிந்து என்னைக் களைக்கப்பார்த்தார்கள்.
அவனது பாட்டி அந்தக்கதைளை அவனிடம் அவனது சிறுவயதில் சொல்லியிருக்கிறாள். நீண்ட காலத்திற்குப்பின்னர் என்னை அன்று பார்க்க வந்திருந்த அவன், எனது மேனியை தொட்டுப்பார்த்து பரவசமடைந்தான்.
அவனுக்கு அந்தநாள் நினைவுகள் வந்திருக்கவேண்டும். அவனை அன்று அழைத்துவந்தவர்கள், என்னிடத்தில் விட்டுச்சென்றுவிட்டார்கள். அவன் என்னிடமிருந்து விடைபெற்றுச்செல்வதற்கு இன்னும் பல நிமிடங்கள் இருந்தன. அதனால், என்னருகில் வந்து எனது அங்க இலட்சணங்களை ரசித்தான். இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் கதைகள் இருக்கின்றன. அதுபோன்று எனக்கும் ஒரு கதை நீண்ட வரலாறாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 1902 ஆம் ஆண்டில் பிறந்த எனக்குள்ளும் ஆயிரக்கணக்கான கதைகள் இருக்கின்றன. நான் பல தடவைகள் செத்துப்பிழைத்திருக்கின்றேன். அன்று என்னைப்பார்க்க வந்திருந்த அவன் அறிந்துவைத்திருக்கும் ஒருவரின் மகனும் எழுத்தாளன்தான். கவிதையும் எழுதியிருக்கின்றான். அவனுக்கு அன்று என்னைப்பார்த்ததும் அந்த அன்பரின் மகன் எழுதிய கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.
Continue Reading →