ஆய்வு: தொல்தமிழில் ஞாயிறு

முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னைபரந்த உலகில் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் ஓர் அரிய முதல்வன் ஞாயிறு. அஞ்ஞாயிற்றினைத் தமிழ் இலக்கியங்கள் ஆழ்வான், இனன், உதயன், ஊழ், எரிகதிர், கதிரவன், ஒளியவன், ககேசன், காலை, தபனன், திவாகரன், தாமரை நண்பன், சூதன், சோதி, தினகரன், பகலவன், பரிதி, சூரியன், செங்கதிரோன் எனப் பல்வேறுபெயர்களில் குறிப்பிடுவதைக் காணலாம். ஞாயிற்றினை வழிபடும் வழக்கம் அதிகரித்திருப்பதற்குக் காரணம். ஆணவ இருளில் அழுந்திக் கிடக்கும் உயிர்கட்குத் தன் இன்னருள் ஒளி கொடுத்து அவ்விருளைப் போக்கி அறிவிற்கு உட்பட்ட செய்கைகளைக் கிளர்வித்து இயக்கும் இறைவனையொப்பப் புறவிருளில் மறைபட்டுக் கிடக்கும் மண்ணுயிர்த் தொகைகட்குத் தன்னொளி அளித்து கண்ணொளி விளக்கி அவற்றின் அறிவிச்சை செய்கைகளை எடுத்து இயம்புவது ஞாயிறு என்னும் பலவனே எனலாம்.

இலக்கியத்தில் ஞாயிறு
பண்டைய இலக்கியத்தில் ஞாயிறு ஒரு மகாசக்தியாகப் போற்றப்படுகிறது. அஞ்ஞாயிறு தமிழ் மக்கள் வாழ்வில் பெருமதிப்பிற்குரிய அற்புத விளக்காகத் திகழ்கிறது. வெம்மைக்கு ஞாயிறும், தண்மைக்குத் திங்களும், வண்மைக்கு வானமும் உவமிக்கப்படும் புறப்பாடல்,

“ஞாயிற்றன்ன வெந்திற லாண்மையும்
திங்களன்ன தன்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வண்மையும் மூன்றும்
உடைய தாகி” (புறம் 55: 13 – 16)

சிறக்குமாறு பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மருதனிள நாகனார் வாழ்த்துகிறார். இங்கு புலவர் ஞாயிற்றிற்கே முதலிடம் கொடுக்கிறார்.

“முந்நீர் மீ மிசை பலர் தொழத் தோன்றி
ஏமுர விளங்கிய சுடர்” (நற்றிணை 283: 6-7)

“தயங்குதிரை பெருங்கடல் உலகுதொழத் தோன்றி
வயங்குகதிர் விரிந்த உருவு கெழு மண்டிலம்” (அகம் 263:1-2)

இவை ஞாயிற்றினைப் போற்றும் சங்கப்பாடலாகும்.

சூரியனின் வெளிவட்டமாகிய பல லட்சம் பாகை (2,000,000 டிகிரி கெல்வின்) வெப்பமுள்ள ஒளிக்கதிர்ப் பாபத்தை ‘நெடுஞ்சுடர்கதிர்’ என்றும், தகதகக்கும் பரப்பினை ‘வெப்ப ஒளிப்படலம்’ என்றும் அதன் உட்புறமே ‘கனல் அகம்’ எனறும் இன்றைய அறிவியல் குறிக்கிறது. ஆனால் பண்டையத் தமிழ்ப்பாடலிலேயே கதிரவனின் உள்ளகம் கொதித்துக்கொண்டிருக்கும் அனற்கடல் என்பதைக் கன்னம் புல்லனார் எனும் புலவர்,

Continue Reading →

ஆய்வு: மூவர் குறளுரையில் மெய்விளக்கு

முனைவர் ம. தமிழ்வாணன்திருக்குறள் எத்துணைக் காலங்கடந்தாலும் கற்பக மலர்போல் நின்றொளிரும் நீர்மையது என்று முன்னோர்களால் பாராட்டப்பெற்றது. தமிழரின் தனிக்கருவூலமான திருக்குறளையும் அதன் உரைகளும் ஆராய்தல் வேண்டும். இந்நூலுக்கு உரை எழுதிய பண்டை ஆசிரியர்கள் பதின்மர். இடைக்காலத்தில் கருத்து மாற்றங்களுடன் விளக்கவுரை எழுதியவர்கள் சிலர். பண்டைய பலருரைகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சி அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருக்குறள் உரைவளம், திருக்குறள் உரைக்களஞ்சியம், திருக்குறள் உரைக்கொத்து ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

அழிவற்ற அரிய அமுதசுரபியான திருக்குறளுக்கு இன்றுவரை நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட உரைகள் எழுதப்பட்டுள்ளன. அது தோன்றிய நமது அறத்தமிழ் மொழியிலும், அண்டை அயல்மொழிகளிலும் தோன்றித் துலங்கி மூலநூலுக்கு உயிர்ப்பும், செழிப்பும், சிறப்பும், பரப்பும், உயல்வும், பயில்வும் ஊட்டி வருகின்றன. திருக்குறள் போன்று உலகில் தோன்றிய வேறு எம்மொழி நூலுக்கும், எவ்வற நூலுக்கும் இப்பலர்பால் உரைப்பேறு வாய்த்தது இல்லை என்று உறுதிப்படக் கூறமுடியும்.

சங்கப் பாக்களிலுள்ள அகமும், புறமும் நெஞ்சில் புதைந்துள்ள உணர்வுகளைக் கொட்டுபவை. இதில் காதல் உணர்வும் வீரத்துடிப்பும் உணர்ச்சி அடிப்படையில் அமைபவை. நெஞ்சின் அலைகளே அப்பாடல்களில் கொதித்துத் துடிக்கின்றன. இங்கு அறிவு இரண்டாம் இடமே பெறுகிறது. ஆனால் வள்ளுவரின் வழியில் மெய்யறிவு முதலிடம் பெறுகிறது. ஆராய்ச்சி அதனுடைய நெஞ்சமாக அமைந்து விடுகிறது. இங்கு உணர்ச்சி இரண்டாம் இடத்தையே கொள்கிறது. எனவே உலக மக்களிடத்தில் உண்மையான மெய் விளக்கை ஏற்றி அறிவுப் பெட்டகத்தை வழங்கிய பெருமை வள்ளுவரையே சாரும்.

கோடி விளக்கேற்றி இருளையும் பகலாக மாற்றி விடலாம். ஆனால் இவ்விளக்கொளியால் புறவிருளை மட்டும் அகற்றலாமே தவிர நம் அகவிருளை அகற்ற முடியாது. நம் மனதை மருட்டி மதியை மயக்கி அறிவைக் குலைத்து ஆன்மாவை அழுத்திக்கிடக்கும் ஆணவ இருள் மிகக் கொடியது. இதனை அகற்றும் சக்தி வள்ளுவரின் மெய்விளக்கு திறனால் மட்டுமே சாத்தியமாகும். அத்தகைய வழியில் குறளுரையில் மெய்விளக்கு என்னும் தலைப்பில் ஆராய்வது அவசியமாகிறது. இதில் மூவருரையினை மட்டும் எடுத்துக்கொண்டு ஆராயப்பட்டுள்ளது.

மணக்குடவர்
திருக்குறள் உரைகளில் முதன்மையானது என்று போற்றப்படுவது மணக்குடவர் உரையே. இவரின் காலம் 11 ஆம் நூற்றாண்டாகும். பரிமேலழகர் உரை வளம்பெற வழிவகுத்தவர் மணக்குடவர் என்பது அறிவியல் மதிப்பீடு, சுட்டும் பாடவேறுபாடுகளும் மணக்குடவர் பாடங்களே என்பது நன்கு புலப்படும். பரிமேலழகர் உடன்படும் உரைகளும் உறழும் உரைகளும் உண்டு

பரிமேலழகர்
இவர் உரை எழுதிய காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியாகும். இவர் அறத்துப்பாலை இல்லறம், துறவறம் என இப்பகுதியாகவும் பொருட்பாலை அரசியல், அங்கவியல், ஒழிபியல் என மூவகையாகவும், காமத்துப்பாலை களவியல், கற்பியல் என இரு பகுதியாகவும் பகுத்துக்கொண்டு உரைகூறுவார். பதின்மர் உரைகளுள் பிற்பட்டதும், சிறந்ததும் பரிமேலழகர் உரையே என்பது பல அறிஞர்களின் கருத்து. இவர் தொண்டை நாட்டுக் காஞ்சிபுரத்தில் வசித்தவரென்பது தொண்டை மண்டல சதகத்தால் அறியப்படும்.

Continue Reading →

பயணியின் பார்வையில் – அங்கம் 23: தமிழர் வாழ்வியலோடு இணைந்த சடங்குகளை பதிவுசெய்திருக்கும் எதிர்மன்னசிங்கத்தின் ஆய்வு

எதிர்மன்னசிங்கம்இந்த அங்கத்தை எழுதுவதற்கு அமர்ந்தபோது, எனக்கு சிறுவயதில் பாட்டி சொன்ன கதையொன்று நினைவுக்கு வந்தது. நான் பிறந்தது வீட்டில். எங்கள் அம்மா தனது ஐந்து பிள்ளைகளையும் வீட்டில்தான் பெற்றார். அதேபோன்று எனது அக்காவும் தனது நான்கு குழந்தைகளையும் வீட்டில்தான் பெற்றார். மருத்துவச்சி வந்து பிரசவம் பார்த்த காலத்தில் நாங்கள் பிறந்தோம். இன்று நிலைமை அப்படியல்ல. நான் பிறந்து, எனது அழுகுரல் கேட்டவுடன் எங்கள் தாத்தா ( அம்மாவின் அப்பா) வீட்டின் கூரையில் ஏறி ஓடுகளைத் தட்டி சத்தம் எழுப்பினாராம். ஆண்குழந்தை பிறந்ததால் அவ்வாறு செய்ததாக பாட்டி எனக்குச்சொன்ன காலத்தில் 1966 ஆம் ஆண்டு எங்கள் அக்காவுக்கு ஆண்குழந்தை முதலில் பிறந்தது. அன்று காலை நான்தான் மருத்துவச்சியை அழைத்துவந்திருந்தேன். குழந்தையின் குரல் கேட்டதும், பாட்டிதான் அறையிலிருந்து முதலில் வெளியே வந்து ” ஆம்பிளைப்பிள்ளை” என்றார்கள். உடனே நான் ” பாட்டி கூரையில் ஏறி தட்டவா..? ” எனக்கேட்டேன். பாட்டியும் என்னை வீட்டின் கேற்றில் ஏற்றிவிட்டார்கள். அதில் ஏறி ஷெரிமரத்தில் கால்வைத்து, கூரைக்குச்சென்று ஓட்டிலே தட்டி ஒரு ஓடையும் உடைத்துவிட்டேன். அதன் பிறகு பாட்டி என்னிடம் ஒரு காகிதமும் பென்ஸிலும் கொடுத்து ( பாட்டிக்கு எழுதத்தெரியாது, கைநாட்டுத்தான்) இவ்வாறு எழுதச்சொன்னார்கள். ” பாலகிரிதோசம் இன்றல்ல நாளை” அந்தத்துண்டை வீட்டின் வாசல்கதவு நிலையில் வெளிப்புறமாக ஒட்டினார்கள். அதேபோன்று மற்றும் ஒரு துண்டை எழுதச்செய்து வீட்டின் பின்புற கதவு நிலையிலும் ஒட்டினார்கள். எதற்கு இவ்வாறு எழுதி ஒட்டுகிறீர்கள்? எனக்கேட்டபோது, ” வீட்டில் குழந்தை அழும் குரலைக்கேட்கும் எச்சுப்பிசாசு இரவில் வருமாம். அது வந்து வாசலில் இவ்வாறு எழுதியிருப்பதை பார்த்துவிட்டு மறுநாளும் வருமாம். அவ்வாறு தினமும் இரவில் வந்து பார்த்து ஏமாந்துபோய்விடுமாம் அந்தத் தமிழ் வாசிக்கத்தெரிந்த எச்சுப்பிசாசு. காலப்போக்கில், பாட்டியிடம், ” தாய்மார் ஆஸ்பத்திரிகளிலும் குழந்தைகளை பிரசவிக்கிறார்கள். அங்கெல்லாம் அந்த எச்சுப்பிசாசுகள் வருவதில்லையா…? அங்கும் இவ்வாறு ஒட்டுகிறார்களா..? சிங்களத்தாய்மாரும் குழந்தைகளை பிரசவிக்கிறார்கள். அப்படியானால் சிங்களம் தெரிந்த பிசாசுகளும் வருமல்லவா..? ” எனக்கேட்டிருக்கின்றேன். அதற்குப்பாட்டி, “உன்னைச்சொல்லிக்குற்றமில்லை. இப்படியெல்லாம் நீ பேசுவது கலிகாலத்தில்” என்று எனது வாயில் அடித்தார்கள்.

அன்று மட்டக்களப்பில் எதிர்மன்னசிங்கம் எழுதிய “கிழக்கிலங்கைத்தமிழ் மக்களின் பண்பாட்டுப் பாரம்பரியம்” நூல் வெளியீட்டு விழாவுக்குச்சென்று, நூலாசிரியரிடம் நூலைப்பெற்று அதிலிலிருந்த அணிந்துரையை வாசித்ததும் எனக்கு எங்கள் ஊரில் மறைந்துகொண்டிருக்கும் பண்பாட்டுப்பாரம்பரியம் நினைவுக்கு வந்தது. ஊருக்கு ஊர் இவ்வாறு பல பண்பாட்டுக்கோலங்கள் பலரதும் மனதில் அழியாத கோலங்களாகவே பதிவாகியிருக்கின்றன. கிழக்குப்பல்கலைக்கழகத்தின் மொழித்துறை விரிவுரையாளர் கலாநிதி சி. சந்திரசேகரம் அவர்கள் இந்நூலின் அணிந்துரையில் இவ்வாறு எழுதியுள்ளார்:

” இன்று சில பண்பாட்டுக்கூறுகள் நினைவுகளிலேயே உள்ளன. சில நினைவுகளில் இல்லாமலும் போய்விட்டன. எடுத்துக்காட்டாக, பாரம்பரிய விவசாயச்செய்கையோடு தொடர்புடைய பண்பாடுகள், கோயில் தீர்த்தத்தால் வயலைக்காவல் பண்ணுதல், சூடுபோடும் வழக்குகள், வேளாண்மைத்தொழிலின்போது பாடல்கள் பாடப்படுதல் என்பனவெல்லாம் முற்றாக மறைந்துவிட்டன. அவ்வாறே, பல கிராமிய விளையாட்டுக்கள், திருமணமுறை (பூருதல்), ஆண்கள் கடுக்கன்போடுதல், கன்னக்கொண்டை கட்டுதல், பிள்ளை பிறந்ததும் நிகழும் குறித்த நிகழ்வுகள் ( ஆண்பிள்ளை பிறந்தால் கருங்காலி உலக்கையினையும், பெண்பிள்ளை பிறந்தால் விளக்குமாற்றையும் வீட்டுக்கூரைக்கு மேலாக எறிதல்) எனப் பல்வேறு பண்பாட்டுக்கூறுகள் மறைந்துவிட்டன.”

Continue Reading →