தீபாவளிக் கவிதை: நல் தீபாவளி !

பட்டாடை உடுத்திடுவோம்
பட்சணமும் உண்டிடுவோம்
மத்தாப்புக் கொழுத்திடுவோம்
மனமகிழ இருந்திடுவோம்
தப்புக்கள் தனைமறப்போம்
தாழ்பணிவோம் மூத்தோரை
எப்பவுமே இறைநினைப்பை
இதயமதில் இருத்திடுவோம் !

Continue Reading →

கவிதை: 1. அப்பாவின் பெண்ணே

1. அப்பாவின் பெண்ணே

உன்னிடம் நான்
சொன்னதில்லை மகளே!!

என் வாழ்வின் மிக
மகிழ்வான தருணம்
நான் உன்னை முதன்முதலில்
கையில் ஏந்திய பொன்னான நொடி என…

உன் ஒவ்வொரு வளர்ச்சியையும்
வார்த்தையில் வடிக்காது
மெளனமாக இரசிக்கிறேன்…

உன்னைச் சுற்றி ஊரே இருந்தாலும்
என் கண்களுக்குள்
நீ மட்டுமே தெரிந்தாய்…

Continue Reading →

பயணியின் பார்வையில் – அங்கம் 24: சண்முகம் சிவலிங்கம்- அசோகமித்திரன் நினைவுகூரலுடன் பாண்டிருப்பு ‘விருந்து’ கலை, இலக்கிய இதழ்

சண்முகம் சிவலிங்கம்அசோகமித்திரன்மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்திலிருந்து புறப்படத்தயாரானபோது ஒரு அன்பர் என்னிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தாம் வெளியிடும் விருந்து கலை, இலக்கிய இதழைத் தந்தார். எதிர்மன்னசிங்கத்தின் நூல் வெளியீடு அன்றையதினம் அவரது பவளவிழாவையும் முன்னிட்டு நடந்திருந்தமையால் அந்த நிகழ்ச்சியும் கலை, இலக்கிய விருந்தாகவே அமைந்திருந்தது. அதன் சுவையை ரசித்துவிட்டு கிளம்புகையில் எனது கைக்கு வந்தது கிழக்கிலங்கை பாண்டிருப்பிலிருந்து இருமாதங்களுக்கொருமுறை வெளியாகும் விருந்து. வெல்லும் தமிழ் – எங்கள் வெல்லத்தமிழ் என்ற கவித்துவ மகுடத்துடன் இதனை வெளியிட்டுவரும் அதன் ஆசிரியர் அகரம். செ. துஜியந்தன் இதழையும் தன்னையும் அறிமுகப்படுத்திக்கொண்டார். எனக்குத்தரப்பட்டது அதன் மூன்றாவது இதழ். இவ்விதழ் வெளியாகும் ஊரில் பிறந்து வளர்ந்து, இலக்கியப்பணியும் ஆசிரியப்பணியும் புரிந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களை நினைவுகூரும் வகையில் குறிப்பிட்ட விருந்து வெளியாகியிருக்கிறது.

1939 ஆம் ஆண்டில் பிறந்து 2012 ஆம் ஆண்டில் திடீரென மறைந்துவிட்ட சண்முகம் சிவலிங்கம் எனதும் இனிய நண்பர். அவரது மறைவும் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது. முதல் நாள் இரவு உறங்கச்சென்றவரை மறுநாள் காலையில் அவரது மனைவி தட்டி எழுப்பியபோது துயில் எழாமல் மரணித்திருந்தவர். அந்தத்துயிலே அவரது நிரந்தரத்துயிலானது. அதனால்தான் அவரது மரணம் எமக்கெல்லாம் பேராதிர்ச்சி. ஆனால், அவருக்கோ எவரும் பெரிதும் விரும்புகின்ற நிம்மதியான மரணம். 2005 இல் கிழக்கிலங்கை சென்றிருந்தபோது, அவரது இல்லத்தில் நடுஇரவும் கடந்த நிலையில் பேசிக்கொண்டிருந்திருக்கின்றோம். அதன் பின்னர் தொலைபேசி வாயிலாகவும் நீடித்த தொடர்பாடல் எமக்கிடையே இருந்தது. அவரது மறைவு அறிந்ததும் அவரது வீட்டுக்குத் தொடர்புகொண்டு எனது ஆழ்ந்த கவலையை தெரிவித்ததுடன், மீண்டும் ஒரு தடவை அங்கு சென்றபோது அவரது மனைவி மற்றும் மருமகளிடம் நேரில் எனது அனுதாபங்களையும் தெரிவித்திருக்கின்றேன்.

1972 முதல் எனக்கு நண்பராக விளங்கியிருக்கும் சண்முகம் சிவலிங்கம் பற்றியும் விரைவில் வெளியாகவுள்ள எனது காலமும் கணங்களும் நூலில் விரிவாக பதிவுசெய்துள்ளேன். எனக்குக் கிடைத்த விருந்து இதழில் கவிஞர் சடாட்சரன், ஜெஸ்மி எம்.மூஸா ஆகியோரும் அவரைப்பற்றி எழுதியிருக்கின்றனர். அத்துடன் அவரது சிறுகதையொன்றும் (காற்றில் தேய்ந்த காலடிகள்) சில கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. “எதுவுமே செய்யாமல் இருப்பவன் மட்டுமே சோம்பேறியல்ல, தன்னால் முடிந்ததைச்செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே!” என்ற சோக்கிரட்டீஸின் பொன்மொழியையும் இந்த இதழில் கண்டு குறித்துக்கொண்டேன். அத்துடன் மறைந்த அசோகமித்திரன் நினைவாக, அவர் 1994 ஆம் ஆண்டில் எழுதியிருக்கும் பதிவொன்றையும் விருந்து மறுபிரசுரம் செய்திருந்தது. அந்தப்பதிவின் தொடக்கமும் எழுத்தாளர்களாகிய நாம் கவனிக்கவேண்டிய விடயம்தான்.

Continue Reading →

கவிதை: பனிக்கால அந்திமாலையில் அடர்ந்த வனத்தில் நின்ற பொழுதில்……

Stopping by Woods on a Snowy Evening     By  Robert  Frost

முனைவர் ர.தாரணியாருடைய வளர்ப்பு வனமோ இவை யான் அறிகிலேன்
தூரத்தே தெரியும் சிறுகிராமத்தில் அவரின் வசிப்பிடம் இருக்கக்கூடும்:
அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை, இங்கே நான்
அவரின் எழில் வனம் முழுதும் பனியில் நனைந்து நிரப்புவதை ரசிக்கிறேன் என்பதை 

எனது சின்னஞ்சிறு புரவிக்கு  விந்தையாய் தோன்றியிருக்கக்கூடும்
அருகில் பண்ணைவீடு ஒன்றும் காணப்படாமல்
உறைந்த பனிநிறை ஏரிக்கும், அடர் வனத்திற்கும் இடையே
ஆண்டின் அப்பருவக்காலத்தின் காரிருள் சூழ்
அந்தி மாலைவேளையில் அக்கணம் அங்கே நான் நிற்பது.

தனது தலையை அசைத்து,  கழுத்தில் உள்ள  கிண்கிணி மணியின் நாதம் எழுப்பி
ஏதேனும் பிழை நேர்ந்ததா என அவன் என்னை  மறைமுகமாய் வினவுகிறான்.
அதுவன்றி, அங்கே மெல்லிய பனிக்காற்றின் சுகமான ஓசையும்,
மெல்லிறகுகளாய் வீழும் பனித்துகள்களின் சீரான ஒலியும் மட்டுமே எங்கும்  நிறைந்திருக்கின்றத.

ஆழ்ந்த ரகசியத்தை உள்ளடக்கி. அடர்ந்த காரிருளில் அந்த வனம் மனம்கவர் ரமணீயமாய் அங்கே நிலைத்திருக்கிறது. ஆனால், நிறைவேற்றப்படவேண்டிய என்னுடைய வாக்குறுதிகள் எனக்காய்  காத்திருக்கின்றன.
அதனால்  நான் உறங்குமுன் பயணப்பட வேண்டிய  தொலைவு மிக  அதிகம்
அதனால்  நான் உறங்குமுன் பயணப்பட வேண்டிய  தொலைவு மிக  அதிகம்.

Continue Reading →

எதிர்வினை: ஜானகி கார்த்திகேசன் பாலகிருஷ்ணனின் ‘நனவிடை தோய்தல்: அழிக்கப்பட்ட யாழ். பல்லினப் பல்கலாச்சாரக் கட்டமைப்பு’ பற்றி..

வாசகர் கடிதங்கள் சில.அண்மையில் ‘பதிவுகள்’ இணைய இதழில் ஜானகி கார்த்திகேசன் பாலகிருஷ்ணனின்  ‘நனவிடை தோய்தல்: அழிக்கப்பட்ட யாழ். பல்லினப் பல்கலாச்சாரக் கட்டமைப்பு!’ என்னும் கட்டுரையினை வெளியிட்டிருந்தோம். அதனை முகநூலிலும் பதிவு செய்திருந்தோம். அது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதை அறிய முடிகின்றது. அது பற்றித் தனக்கு வந்த கடிதங்கள் சிலவற்றை ஜானகி கார்த்திகேசன் பாலகிருஷ்ணன் அவர்கள் எமக்கு அனுப்பி வைத்துள்ளார். ஒரு பதிவுக்காக அவற்றை இங்கு பிரசுரிக்கின்றோம். இக்கடிதங்கள் யாவும் அக்டோபர் 15 அன்று அவருக்குக் கிடைத்தவையாகும்.


1.. ஜானகி, கட்டுரையை வாசிக்க எனக்கு நீண்ட நேரம் எடுத்தது. இக்கட்டுரையை எழுத உங்களுக்கு எவ்வளவு நாட்கள் எடுத்திருக்குமென என்னால் ஊகிக்க முடிகிறது. முதலில், உங்களது அபார ஞாபகசக்தி, வண்ணார்பண்ணை சூழல் சார்ந்த உங்களது ஈடுபாடு, பாடசாலை சார்ந்த திடமான உதாரணங்கள் ஆகியவற்றிற்கு எனது பாராட்டுதல்கள் (salute). இது நன்கு ஆராயப்பட்ட கட்டுரை. எதுவும் தவறு எனக் கூறத் தோற்றவில்லை. சில விடயங்களும் கதைகளும் எனது பாடசாலை நினைவுகளை முன்கொணர்ந்தன. முஸ்லிம் மக்களின் இடப்பெயர்வு மறக்க முடியாத சம்பவமும், நாம் தமிழர் அதையிட்டு வெட்கப்பட வேண்டியதுமான ஒரு நிகழ்வாகும். எங்கள் வகுப்பில் பல முஸ்லிம் மாணவியர் – சதக்கத்துல்லா குடும்பத்தினர் உட்பட – கல்வி கற்றனர். அவர்கள் அனைவரும் தமிழ் மொழியில் வல்லுனர்கள். ஆதலால் பாடசாலை வருடாந்த இதழ் அவர்களுடைய கட்டுரைகள் பலவற்றுடன் பிரசுரிக்கப்படும்.

எமது ஐந்து முச்சந்தி ஒரு பல்கலாச்சாரத்தின் உறைவிடம் என்பது எனது மனதிற்குத் தட்டவில்ல. நான் இப்போதான் உணர்கிறேன் எங்கள் வீட்டிற்கும் வயது முதிர்ந்த, தொள தொளவென பஜாமாவும், மேலங்கியும் அணிந்த வாடிக்கையான வியாபாரி ஒருவர், மைசூர் பாகும் மஸ்கெட்டும் கொண்டு வருவார். பழைய பேப்பர், உபயோகித்த போத்தல்கள் வாங்குபவர்கள் பலர் முஸ்லிம்கள். எங்கள் குடும்பம் பெரிது. ஆகவே ஆண்டு இறுதியில் எங்கள் நோட்டு புத்தகங்களை விற்று நிறையப் பணம் பெற்றோம். எனது நினைவில் ஒரு சில முஸ்லிம்களே செல்வந்தர். கைவிட்டு எண்ணக்கூடியவர்களே சமூகத்தில் அந்தஸ்த்தைப் பெற்றிருந்தனர். எப்படியான பிரமிக்கத்தக்க கவலையற்ற வாழ்க்கை எமக்கிருந்தது. நாமெல்லோரும் ஒரு குடும்பம் போல வாழ்ந்திருந்தோம்.

Continue Reading →