அமரர் வெங்கட் சாமிநாதன் நினைவாக..

- வெங்கட் சாமிநாதன் -அக்டோபர் 20 அமரர் வெங்கட் சாமிநாதனின் நினைவுதினம். தமிழகத்தைச்சேர்ந்த கலை, இலக்கிய ஆளுமைகளில் என்னுடன் மிகவும் அதிகமாகத் தொடர்பு வைத்திருந்தவராக நான் கருதுவது அமரர் வெங்கட் சாமிநாதனைத்தான். இவ்வளவுக்கும் நான் அவரை ஒருபோதுமே நேரில் சந்தித்ததில்லை. அவர் இயல் விருது பெறுவதற்காகத் ‘டொராண்டோ’ வந்திருந்தபோதுகூட நான் அவரைச் சந்திக்கவில்லை. அவர் அப்பொழுது அவரை அழைத்தவர்களுடன் மிகவும் நேரமின்றி அலைந்துகொண்டிருப்பாரென்று எண்ணி நானும் அவரைச் சந்திக்கும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆனால் அதன் பின்னரே அவர் ‘பதிவுகள்’ இணைய இதழுக்குத் தன் படைப்புகளை அதிகமாக அனுப்பத்தொடங்கினார். அவரது மறைவுக்கு முதல் நாள் வரையில் அவர் ‘பதிவுகள்’ இணைய இதழுக்குத் தன் படைப்புகளை அனுப்பிக்கொண்டிருந்தார். அவ்வப்போது தன் மின்னஞ்சல்களில் தான் என்னை நேரில் சந்திக்காததையிட்டு வருந்தியிருப்பார். நான் தமிழகம் வரும்போது நிச்சயம் அவரைச் சந்திப்பேனென்று ஆறுதலாக அப்போதெல்லாம் பதில் அளிப்பதுண்டு. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவேயில்லை. அது என் துரதிருஷ்ட்டம்.

அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த குணங்களிலொன்று: இறுதி வரையில் தன் நிலை தளராமல், தனக்குச் சரியென்று பட்டதை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் அந்தப்பண்புதான். நிறைய வாசித்தார். நிறையவே சிந்தித்தார். கலை, இலக்கியத்துறையில் அவர் தனக்கென்றோரிடத்தை ஏற்படுத்தி விட்டு அமரராகி விட்டார். அவர் இருந்தபோதே அவரைக்கெளரவிக்கும் முகமாக எழுத்தாளர்கள் திலிப்குமார், பா.அகிலன் போன்றவர்கள் ‘வெங்கட் சாமிநாதன் வாதங்களும், விவாதங்களும்’ என்னும் அரியதொரு தொகுப்பு நூலினை வெளியிட்டார்கள். மிகவும் பாராட்டுதற்குரிய பணி அது. அதில் என் கட்டுரையொன்றும் அடங்கியுள்ளது. அது எனக்கு மகிழ்ச்சியைத் தருவது. அதன் மூலம் அவரைச் சந்தித்திருக்காவிட்டாலும், சந்தித்துப் பழகியதோர் உணர்வே எனக்கு எப்பொழுதுமுண்டு.

அவரது தொடர்ச்சியான மின்னஞ்சல்களும், பதிவுகள் இணைய இதழுக்கான அவரது ஆக்கப்பங்களிப்புகளும் ஒருபோதுமே அவரை என் நினைவிலிருந்து அகற்றி விடாதபடி செய்து விட்டன. அவரது நினைவாக அவரது இறுதிக்கால மின்னஞ்சல்கள் சிலவற்றை மீண்டும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

Continue Reading →

நிகழ்வுகள்: லண்டனில் பிரீத்தி பவித்திரா மகேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

நிகழ்வுகள்: லண்டனில் பிரீத்தி பவித்திரா மகேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்‘நடனத்திற்கு மிகவும் பொருத்தமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து வார்த்தைகளை உணர்ந்து அந்த மனநிலைகளை அபிநயத்தால் வெளிக்காட்டுவது குருவுக்கும் சீடருக்குமான மரபுசார் நுட்பமாகும். இத்தகைய சாஸ்திரீய முறைகளை மிக அழகாகவே குருவிடமிருந்து பயின்று புஷ்பாஞ்சலி,  அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம், கீர்த்தனம், பதம், அஷ்டபதி, தில்லானா போன்ற அத்தனை உருப்படிகளிலும் செல்வி பிரீத்தி பவித்திரா மகேந்திரன் வித்தியாசமான தனது கலை நுட்பங்களை வெளிக்காட்டியிருந்தார்’ என்று அண்மையில் லண்டன் ‘பெக் தியட்டரில இடம்பெற்ற பரதநாட்டிய அரங்கேற்றத்தின்போது பிரதம விருந்தினாராக வருகை தந்திருந்த ஸ்ரீமதி கீதா உபத்தியா அவர்கள் தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் பேசுகையில் ‘நளினமும் உடல்வாகும் நிரம்பப்பெற்ற நாட்டியக் கலாஜோதி பிரீத்தி மகேந்திரனின் நடன வெளிப்பாடுகள், ஸ்ரீ மாணிக்கம் யோகேஸ்வரனின் ராகத்துடனும் சாகித்தியத்துடனும் கச்சிதமாகவே பொருந்தி, பக்கவாத்தியக் கலைஞர்களான ஸ்ரீ பிரதாப் ராமச்சந்திரனின் மிருதங்கத்தோடும், ஸ்ரீ ஞானசுந்தரத்தின் வயலின் இசையோடும், ஸ்ரீ பிச்சையப்பா ஞானவரதனின் புல்லாங்குழல் இசையுடனும் இணைந்து பார்வையாளர்களை கட்டிப்போட்டது என்றால் மிகையாகாது எனத் தெரிவித்தார். சர்வதேச ரீதியாக அறியப்பட்ட புகழ்பெற்ற நடன ஆசிரியையான ஸ்ரீமதி உஷா ராகவனை குருவாகப் பெற்ற செல்வி பிரீதி மகேந்திரனின் நடனம் வர்ணிக்கத் தக்க வசீகரமான முறையில் அவரது முதலில் அரங்கேறும்; அரங்கேற்றம் போன்றல்லாது, நாட்டியத்தில் நீண்ட அனுபவம் கொண்ட நர்த்தகியாகத் திகழ்ந்தார் என்றும் பாராட்டினார். பிரீதி மகேந்திரனின் சில நடனங்களுக்கு அவரின் அண்ணன் டாக்டர் மேவின் மகேந்திரனும் மிருதங்கத்தை வாசித்து மெருகூட்டியமை மிகவும் சிறப்பைக் கொடுத்தது’ என்றும் மேலும் வியந்து பேசியிருந்தார். 

Continue Reading →

பேராசிரியர் து. மூர்த்தி நினைவாக.. நினைவுகள் சாவதில்லை..

பேராசிரியர் து. மூர்த்தி நினைவாக..  நினைவுகள் சாவதில்லை..  பேராசிரியர் து. மூர்த்தி காலமாகி (24 – 10 – 2016) ஒரு வருடம்  கழிந்துவிட்டது..! அவரது நினைவுகளை மீட்டிப் பார்க்கின்றேன். எண்பதுகளின் முற்பகுதி. கலாநிதி து. மூர்த்தி தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றி வந்தார். அவ்வேளை பேராசிரியர் அ. மார்க்ஸ் – பொ. வேல்சாமி – து. மூர்த்தி – இரவிக்குமார் ஆகியோர் தோழமையுடன் கலை இலக்கிய அரசியல் செயற்பாடுகளில் ஒன்றுபட்டுச் செயற்பட்டு வந்தார்கள். இவ்வேளையில்தான் தோழர் கே. டானியலின் ”பஞ்சமர்” நாவலின் (இரு பாகங்கள்) அச்சுப்பதிப்பு தஞ்சாவூரில் இடம்பெற்று வந்தது. அதேவேளை அங்கு தோழமை பதிப்பகம் சார்பில் டானியலின் “கோவிந்தன்” நாவல் அச்சாகி வெளிவந்தது. “கோவிந்தன்” நாவல் வெளியீட்டு விழா – அறிமுக நிகழ்வுகள் இலங்கையில் பல இடங்களிலும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.  இந்த நிகழ்வுகளில் சிறப்புரையாற்ற சிறந்த பேச்சாளரான தோழர். கலாநிதி து. மூர்த்தியை இலங்கைக்கு வருமாறு கே. டானியல் அழைத்திருந்தார். மூர்த்தி இலங்கை வந்ததும் அவரது இலங்கைச் சுற்றுப்பயண ஒழுங்குகள் யாவற்றையும் கவனிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் – வேலணை – வடமராச்சி – திருமலை – கொழும்பு ஆதியாமிடங்கள் உட்படப் பல இடங்களில் நடைபெற்ற “கோவிந்தன்” நாவல் அறிமுக நிகழ்வுகளில் கலாநிதி து. மூர்த்தி சிறப்புரையாற்றினார். வேலணையில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் அவரை நயினாதீவுக்கு அழைத்துச் சென்றேன். அவ்வேளை நயினாதீவு மகா வித்தியாலயத்தின் அதிபராக நண்பர் கவிஞர் நாக. சண்முகநாதபிள்ளை கடமையாற்றி வந்தார். அவருக்கு து. மூர்த்தியை அறிமுகஞ்செய்து வைத்தேன். அவரது வேண்டுகோளுக்கிணங்க நயினை மகா வித்தியாலயத்தில் திடீரென ஒழுங்குசெய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் து. மூர்த்தி நல்லதோர் உரையினை வழங்கினார்.. அந்நிகழ்வில் மாணவர்கள் – ஆசிரியர்கள் உட்படப் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் எனது ஊரான புங்குடுதீவுக்கு மூர்த்தியை அழைத்துச் சென்றேன். அன்று இரவு எமது வீட்டில் இலக்கியப் பொழுதாகக் கழிந்தது. மறுநாள் எனது சகோதரர் த. துரைசிங்கம் அதிபராகக் கடமையாற்றிய புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தில் து. மூர்த்தி சிறப்புரையாற்றினார்.

Continue Reading →

தொடர் நாவல்: எத்தனைகோடி இன்பம்! (2)

அத்தியாயம் இரண்டு: இரவு வானம்!

தொடர் நாவல்: எத்தனைகோடி இன்பம்!வ.ந.கிரிதரன்கேசவனும் மாயவனும் பால்கணியிலிருந்தபடி உரையாடிக்கொண்டிருந்தார்கள். இருவருமே ஒருவிதத்தில் ஒரே மாதிரியான மனப்போக்கினைக் கொண்டவர்கள். இரவு வானை, கொட்டிக்கிடக்கும் சுடர்களை இரசித்தபடியே , பியர் அருந்தியபடி அவர்களின் உரையாடலும் தொடர்ந்தது.

மாயவனுக்கு மீண்டும் மனைவியின் கோரிக்கை நினைவுக்கு வந்தது.

“கேசவா, இன்னும் எத்தனை காலம் தான்  உன் நிறைவேறாத காதலுக்காக உன் வாழ்க்கையை வீணாக்கப்போகின்றாய்?”

அதற்குச் சிறிது சிந்தனையிலாழ்ந்த கேசவன் கூறினான்:

“எனக்கு அவள் நிலை தெரிய வேண்டும். அவ்வளவுதான். அவளுக்கு மட்டும் திருமணமாகியிருந்தால் அவளை மனதார வாழ்த்தி விட்டு என் வாழ்க்கையைத் தொடர்வேன். அதுவரையில் என்னால் அடுத்த நகர்வை எடுக்கவே முடியாது”

“ஒருவேளை அவளைப்பற்றிய தகவல்களை அறிய பல ஆண்டுகள் பிடித்தால் என்ன செய்யப்போகின்றாய்? அதுவரை உன் வாழ்க்கையை வீணாக்கப்போகின்றாயா?”

“மாயவன் அண்ணே, எத்தனை ஆண்டுகளென்றாலும் பரவாயில்லை. அவளது நிலை அறியும் வரையில் காத்து நிற்பேன். அந்த என் முடிவில் எந்தவித மாற்றமுமில்லை. அவ்வளவு தூரத்துக்கு அவள் என் நெஞ்சில் பதிந்து விட்டாள். உனக்கு ஒன்று தெரியுமா?”

“என்ன..?”

“அவளைக் கடைசியாகக் கண்ட நாளிலிருந்து இன்றுவரையில் ஒவ்வொரு நாளும் முழித்திருக்கும் நேரமெல்லாம் அவளை நினைத்துக்கொண்டுதானிருக்கிறன். அவளது நினைவு தோன்றுவதை என்னாலை தடுக்கவே முடியவில்லை. அவ்வளவுக்கு நெஞ்சின் ஆழத்தே பதிந்து கிடக்கின்றாள். அவளது நிலையை அறிய வேண்டும். அதற்குப்பின்தான் எல்லாமே..”

கேசவனின் வைராக்கியம் மாயவனுக்கு நன்கு புரிந்தது. இவனது மனத்தை மாற்ற வேண்டுமென்றால் முதலில் அவனது அந்தக் காதலுக்குரியவள் பற்றிய தகவல்களை அறிய வேண்டும். அதற்குப்பின்னரே அவனது மனம் மாறும். மாயவனின் சிந்தனை பல்திசைகளிலும் பயணித்தது. திடீரென அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

” ஏன் கேசவா, எனக்கொரு  யோசனை தோன்றுது. என்னவென்றால்..”

‘என்ன மாயவன் அண்ணே! சொல்லுங்கோ”

Continue Reading →