ஆய்வு: சங்க காலத்தில் நாட்டை ஆண்ட மன்னர்களின் அரண் அமைப்பின் மாண்பு

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தொன்மை வாய்ந்த தமிழ் நாட்டை அரசாண்டு வந்தனர். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்ற மூன்று நாடுகளிலும், பாண்டிய நாடுதான் மிகப் பழமை பெற்ற நாடாகக் கருதப்பட்டது. ‘பாண்டிய நாடே பழம்பதி யென்ன’ என்ற சான்றோர் வாக்கு ஆதாரம் காட்டுகின்றது.  பாண்டிய மன்னர்கள் தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் ஆகிய முச்சங்கங்களை அமைத்துத் தமிழை வளர்த்து வந்தனர். முச்சங்கங்களில் எழுந்த நூல்கள் பல. ஆவற்றுள் எஞ்சிய நூல்களைவிட அழிந்த நூல்களே அதிகமாகும். கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை தமிழகத்தின் சிறப்புற்ற சங்க காலமாகும். அன்றுதான் கடைச் சங்கம் நிலவியிருந்தது. அச்சங்கத்தில் எழுந்த பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் ஆகிய பதினெட்டு நூல்களும் நிகரற்ற இலக்கியங்களாய் இன்றும் உலாவி வருகின்றன. அதன்பின்னான சங்கம் மருவிய காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெரும் காப்பியங்கள்;, ஐஞ்சிறு காப்பியங்கள் ஆக ஒருமித்து இருபத்தெட்டு நூல்கள் எழுந்தன. இனி, அன்றைய மன்னர்களின் அரண் அமைப்புக்களின் சிறப்பினை இலக்கியங்கள் பேசும் திறன் பற்றி விரிவு படுத்திப் பார்ப்போம்.

தொல்காப்பியம்
இடைச் சங்க காலத்தில் எழுந்த மூத்த நூலான தொல்காப்பியத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகை மக்கள் இருந்துள்ளதாகத் தொல்காப்பியர் (கி.மு. 711) கூறியுள்ளார்.  இவர்களில் அந்தணர் முதல் இடத்திலும், அரசர் இரண்டாம் இடத்திலும், வணிகர் மூன்றாம் இடத்திலும், வேளாளர் நான்காம் இடத்திலும் வைக்கப்பட்டுள்ளனர். தெய்வ வழிபாட்டுத் தொடர்பான பிரிவில் மேற் கூறப்பட்ட நால்வகையினரும் பங்குபற்றலாம் என்று சூத்திரம் கூறுகின்றது.

‘மேலோர் முறைமை நால்வர்க்கும் எரித்தே.’ – (பொருள். 31)

அந்தணர்:- ‘நூலே கரகம் முக்கோல் மணையே, ஆயுங் காலை அந்தணர்க் குரிய.’ (பொருள். 615) என்று தொல்காப்பியர் சூத்திரம் அமைத்தார். அவர்கள்  அறநெறி  வாழ்முறையில்  ஈடுபடுவர்.

Continue Reading →

மெல்பனில் நாளை நூல் அறிமுக அரங்கு: லண்டனில் வதியும் கரவை மு.நற்குணதயாளனின் நூல்கள் வெளியீடு!

மெல்பனில்  நாளை  நூல்  அறிமுக  அரங்கு: லண்டனில் வதியும் கரவை மு.நற்குணதயாளனின் நூல்கள் வெளியீடு!கரவை  மு. தயாளன்   எழுதிய ‘சில மனிதர்களும் சில நியாயங்களும்’ என்ற நாவலும் எனது பேனாவிலிருந்து என்னும் கதைகள், கட்டுரைகள், கவிதைகள்  நாடகம்  மற்றும்  ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கதைகள்,    கவிதைகள்  முதலானவற்றை உள்ளடக்கமாகக்கொண்டுள்ள   தொகுப்பு  நூலும்  அவுஸ்திரேலியா விக்ரோரியா   மாநிலத்தில்  மெல்பனில்  Dandenong North Senior Citizens Centre  ( 41 A, Latham  Crescent,    Dandenong North , Victoria 3175)   மண்டபத்தில்   நாளை   சனிக்கிழமை  மாலை  3.30  மணியிலிருந்து   7.00   மணிவரையில்  நடைபெறும்.

நூலாசிரியர்   கரவை  மு.தயாளன்  லண்டனில்   கல்வி,  கலை இலக்கிய,  சமூகப்பணிகளில்  ஈடுபாடுள்ளவர்.   ஏற்கனவே  கடல் கடந்து   போனவர்கள்   என்னும்  நாவலையும்  மண்ணில்  தெரியுது வானம்  என்னும்  கட்டுரைத்தொகுப்பையும்  வெளியிட்டிருப்பவர். நாளை   மெல்பனில்  அறிமுகமாகவுள்ள  ‘சில  மனிதர்களும்  சில நியாயங்களும்’ என்ற  நாவல் தொடர்கதையாக  லண்டன்  தமிழர் தகவல்    இதழில்  வெளியாகியிருக்கிறது.    பின்னர்,  இலங்கையில் தினகரன்   வாரமஞ்சரியிலும்   லண்டனில்  பார்வைகள்  என்னும் இதழிலும்   தொடராக   வெளிவந்துள்ளது.

“இந்த  நாட்டிலிருந்து  புலம்பெயர்ந்து  சென்று  லண்டனில் குடியேறியவர்களையும்  அவர்களின்   வாரிசுகளான  அடுத்த சந்ததியினரையும்    பாத்திரங்களாகக்கொண்டு  இந்நாவல் படைக்கப்பட்டிருக்கிறது.    இங்கிருந்து  புலம்பெயர்ந்து சென்றவர்களின்   மூலவேர்,  அவர்கள்  பிறந்த  தாய்  நாட்டு மண்ணிலேயே   இன்றும்   ஆழப்பதிந்திருக்கின்றது.   ஆதனால் புலம்பெயர்ந்து    வாழும்  நாட்டு  மண்ணுடன்  முழுமையாக  ஒன்றிக்க முடியாத    அவலங்களுக்கும்  ஆளாகின்றனர்.   அவர்களது வாரிசுகளின்    வாழ்வும்  சிந்தனையும்  புலம்பெயர்ந்த  நாட்டு மண்ணுடன்    இசைவாக்கம்  பெறுகின்றன.   அதனால்  இரண்டு தலைமுறையிலும்    நடவடிக்கையிலும்  முரண்பாடுகள்  தோன்றுவது இயல்பு.    அந்த  முரண்   நிலையை   இந்த  நாவல்  சித்திரிக்கிறது ”  இவ்வாறு    இந்நாவல்  பற்றிய  தனது  மதிப்பீட்டை   ஈழத்தின்  மூத்த படைப்பாளி    தெணியான்   பதிவுசெய்துள்ளார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 195 : ‘குடிவரவாளன்’ நாவலும் , ‘அந்தாதி’ இலக்கிய வடிவமும்!

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

அண்மையில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான எனது ‘குடிவரவாளன்’ நாவலைப்பற்றி எழுத்தாளர் குப்பிழான் சண்முகம் அவர்கள் தனது கருத்துகளை முகநூலில் பதிவு செய்திருந்தார். அது வருமாறு:

“மே மாதம் 24, இன்று வ.ந. கிரிதரனின் ‘குடிவரவாளன்’ நாவலை வாசித்து முடித்தேன். சட்ட பூர்வமாகக் கனடாவுக்கு புலம் பெயரும் வழியில், எதிர் பாராத விதமாக அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோர நேரிடுகிறது. ஒரு வருடம் அமெரிக்காவில் சட்ட பூர்வமற்ற அகதியாக வாழ்ந்த அனுபவங்களை நாவல் பேசுகிறது. புலம்பெயர் அகதி வாழ்வின் வித்தியாசமான அனுபவங்கள், வித்தியாசமான மனிதர்கள். எதனாலும் சலிக்காத கதாநாயகனின் உறுதி. இயற்கைக் காட்சிகளின் இரசிப்பு. தமிழ் கவிதைகளினதும்- குறிப்பாக பாரதி- இசை, இயற்கை மீதான ஈடுபாடு.. என விரியும் கதை. ‘ மீண்டும் தொடங்கும் ‘மிடுக்காய்’ தொடரும் வாழ்வு. இந் நூலில் அமெரிக்க அகதி வாழ்வின் அனுபவங்களையே கிரிதரன் முக்கியப்படுத்துகின்றார். இதனால் நாவலின் வடிவம் கேள்விக்குறியாகிறது. இந்த இடத்தில் பெர்லின் வாழ்வு அனுபவங்களைப் பேசும் கருணாகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள் ‘நாவல்’ தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது. குடிபெயரும் வாழ்வின் அனுபவங்களைப் பேசும் இவர்கள் எங்கள் பாராட்டுக்குரியவர்களாகிறார்கள்.”

திரு.குப்பிழான் சண்முகம் அவர்களின் கருத்துகளுக்கு நன்றி. இப்பதிவில் அவர் நாவலின் வடிவம் பற்றி ‘இந் நூலில் அமெரிக்க அகதி வாழ்வின் அனுபவங்களையே கிரிதரன் முக்கியப்படுத்துகின்றார். இதனால் நாவலின் வடிவம் கேள்விக்குறியாகிறது’ என்று குறிப்பிட்டிருந்தது என் கவனத்தை ஈர்த்தது. அவரது கூற்றினை மீண்டுமொருமுறை சிந்தித்துப்பார்த்தேன்.

உண்மையில் இந்த நாவலுக்கு ஒரு வடிவம் உண்டு. அந்த வடிவத்துக்குள் தான் அனுபவங்கள் விபரிக்கப்படுகின்றன. ஒரு சட்டம் அமைக்கப்பட்டு , அதற்குள் ஓவியம் இருப்பதுபோல்தான் நான் நாவலின் வடிவத்தை அமைத்திருந்தேன். இந்த வடிவத்தை நான் இந்த நாவலுக்குப் பாவிக்க முனைந்ததற்கு முக்கிய காரணம் தமிழ் மரபுக் கவிதையினோர் வடிவம்தான்.

மரபுக்கவிதையில் ஒரு வடிவம் உண்டு. அது அந்தாதித்தொடை. ‘யாப்பருங்கலக்காரிகை’ ‘அந்தாதித்தொடை’ பற்றி ‘அந்தம் முதலாத் தொடுப்பதந் தாதி’ என்று கூறும். அடி தோறும் இறுதியாக (அந்தம்) நிற்கும் சீர், அசை, அல்லது எழுத்து ஆகியவற்றையே அடுத்த அடியின் முதலாக (ஆதி) வைத்துப் புனையப்படும் கவிதையில் பாவிக்கப்படும் தொடை அந்தாதித்தொடை என்பதிதன் பொருள்.

அபிராமி அந்தாதியில் அபிராமிப்பட்டர் ஒவ்வொரு பாடலின் இறுதிச் சொல்லாக வரும் சொல்லையே அடுத்த பாடலின் முதற் சொல்லாக வைத்து முழுப்பாடல்களையும் அமைத்திருப்பார். அதனாலேயே அப்பாடல்களின் தொகுதி அபிராமி அந்தாதி ஆயிற்று.

Continue Reading →