பேராசிரியர் து. மூர்த்தி நினைவாக.. நினைவுகள் சாவதில்லை..

பேராசிரியர் து. மூர்த்தி நினைவாக..  நினைவுகள் சாவதில்லை..  பேராசிரியர் து. மூர்த்தி காலமாகி (24 – 10 – 2016) ஒரு வருடம்  கழிந்துவிட்டது..! அவரது நினைவுகளை மீட்டிப் பார்க்கின்றேன். எண்பதுகளின் முற்பகுதி. கலாநிதி து. மூர்த்தி தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றி வந்தார். அவ்வேளை பேராசிரியர் அ. மார்க்ஸ் – பொ. வேல்சாமி – து. மூர்த்தி – இரவிக்குமார் ஆகியோர் தோழமையுடன் கலை இலக்கிய அரசியல் செயற்பாடுகளில் ஒன்றுபட்டுச் செயற்பட்டு வந்தார்கள். இவ்வேளையில்தான் தோழர் கே. டானியலின் ”பஞ்சமர்” நாவலின் (இரு பாகங்கள்) அச்சுப்பதிப்பு தஞ்சாவூரில் இடம்பெற்று வந்தது. அதேவேளை அங்கு தோழமை பதிப்பகம் சார்பில் டானியலின் “கோவிந்தன்” நாவல் அச்சாகி வெளிவந்தது. “கோவிந்தன்” நாவல் வெளியீட்டு விழா – அறிமுக நிகழ்வுகள் இலங்கையில் பல இடங்களிலும் நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.  இந்த நிகழ்வுகளில் சிறப்புரையாற்ற சிறந்த பேச்சாளரான தோழர். கலாநிதி து. மூர்த்தியை இலங்கைக்கு வருமாறு கே. டானியல் அழைத்திருந்தார். மூர்த்தி இலங்கை வந்ததும் அவரது இலங்கைச் சுற்றுப்பயண ஒழுங்குகள் யாவற்றையும் கவனிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் – வேலணை – வடமராச்சி – திருமலை – கொழும்பு ஆதியாமிடங்கள் உட்படப் பல இடங்களில் நடைபெற்ற “கோவிந்தன்” நாவல் அறிமுக நிகழ்வுகளில் கலாநிதி து. மூர்த்தி சிறப்புரையாற்றினார். வேலணையில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் அவரை நயினாதீவுக்கு அழைத்துச் சென்றேன். அவ்வேளை நயினாதீவு மகா வித்தியாலயத்தின் அதிபராக நண்பர் கவிஞர் நாக. சண்முகநாதபிள்ளை கடமையாற்றி வந்தார். அவருக்கு து. மூர்த்தியை அறிமுகஞ்செய்து வைத்தேன். அவரது வேண்டுகோளுக்கிணங்க நயினை மகா வித்தியாலயத்தில் திடீரென ஒழுங்குசெய்யப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் து. மூர்த்தி நல்லதோர் உரையினை வழங்கினார்.. அந்நிகழ்வில் மாணவர்கள் – ஆசிரியர்கள் உட்படப் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் எனது ஊரான புங்குடுதீவுக்கு மூர்த்தியை அழைத்துச் சென்றேன். அன்று இரவு எமது வீட்டில் இலக்கியப் பொழுதாகக் கழிந்தது. மறுநாள் எனது சகோதரர் த. துரைசிங்கம் அதிபராகக் கடமையாற்றிய புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தில் து. மூர்த்தி சிறப்புரையாற்றினார்.

Continue Reading →

தொடர் நாவல்: எத்தனைகோடி இன்பம்! (2)

அத்தியாயம் இரண்டு: இரவு வானம்!

தொடர் நாவல்: எத்தனைகோடி இன்பம்!வ.ந.கிரிதரன்கேசவனும் மாயவனும் பால்கணியிலிருந்தபடி உரையாடிக்கொண்டிருந்தார்கள். இருவருமே ஒருவிதத்தில் ஒரே மாதிரியான மனப்போக்கினைக் கொண்டவர்கள். இரவு வானை, கொட்டிக்கிடக்கும் சுடர்களை இரசித்தபடியே , பியர் அருந்தியபடி அவர்களின் உரையாடலும் தொடர்ந்தது.

மாயவனுக்கு மீண்டும் மனைவியின் கோரிக்கை நினைவுக்கு வந்தது.

“கேசவா, இன்னும் எத்தனை காலம் தான்  உன் நிறைவேறாத காதலுக்காக உன் வாழ்க்கையை வீணாக்கப்போகின்றாய்?”

அதற்குச் சிறிது சிந்தனையிலாழ்ந்த கேசவன் கூறினான்:

“எனக்கு அவள் நிலை தெரிய வேண்டும். அவ்வளவுதான். அவளுக்கு மட்டும் திருமணமாகியிருந்தால் அவளை மனதார வாழ்த்தி விட்டு என் வாழ்க்கையைத் தொடர்வேன். அதுவரையில் என்னால் அடுத்த நகர்வை எடுக்கவே முடியாது”

“ஒருவேளை அவளைப்பற்றிய தகவல்களை அறிய பல ஆண்டுகள் பிடித்தால் என்ன செய்யப்போகின்றாய்? அதுவரை உன் வாழ்க்கையை வீணாக்கப்போகின்றாயா?”

“மாயவன் அண்ணே, எத்தனை ஆண்டுகளென்றாலும் பரவாயில்லை. அவளது நிலை அறியும் வரையில் காத்து நிற்பேன். அந்த என் முடிவில் எந்தவித மாற்றமுமில்லை. அவ்வளவு தூரத்துக்கு அவள் என் நெஞ்சில் பதிந்து விட்டாள். உனக்கு ஒன்று தெரியுமா?”

“என்ன..?”

“அவளைக் கடைசியாகக் கண்ட நாளிலிருந்து இன்றுவரையில் ஒவ்வொரு நாளும் முழித்திருக்கும் நேரமெல்லாம் அவளை நினைத்துக்கொண்டுதானிருக்கிறன். அவளது நினைவு தோன்றுவதை என்னாலை தடுக்கவே முடியவில்லை. அவ்வளவுக்கு நெஞ்சின் ஆழத்தே பதிந்து கிடக்கின்றாள். அவளது நிலையை அறிய வேண்டும். அதற்குப்பின்தான் எல்லாமே..”

கேசவனின் வைராக்கியம் மாயவனுக்கு நன்கு புரிந்தது. இவனது மனத்தை மாற்ற வேண்டுமென்றால் முதலில் அவனது அந்தக் காதலுக்குரியவள் பற்றிய தகவல்களை அறிய வேண்டும். அதற்குப்பின்னரே அவனது மனம் மாறும். மாயவனின் சிந்தனை பல்திசைகளிலும் பயணித்தது. திடீரென அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

” ஏன் கேசவா, எனக்கொரு  யோசனை தோன்றுது. என்னவென்றால்..”

‘என்ன மாயவன் அண்ணே! சொல்லுங்கோ”

Continue Reading →

பயணியின் பார்வையில் — அங்கம் 25: தமிழர்களுக்கு கண்ணகி அம்மன் ! சிங்களவர்களுக்கு பத்தினி தெய்யோ !!

 "கூடல்" முதலாவது மலர் மகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம் என்பன ஐதீகங்களாக போற்றப்பட்டாலும், இவற்றில் வரும் பெண்பாத்திரங்களுக்கு கோயில்கள் அமைத்து வழிபடும் மரபும் தொன்றுதொட்டு நீடிக்கிறது. இந்தக்காவியங்களில் வரும் ஆண் பாத்திரங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். மகாபாரதத்தில் குந்தி முதல் பாஞ்சாலி வரையிலும், இராமாயணத்தில் சீதையும், சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள்தான். குந்தியைத்தவிர ஏனைய மூவரும் வழிபாட்டுக்குரியவர்களாகிவிட்டனர். இலங்கையில் திரெளபதை அம்மன், கண்ணகி அம்மன், சீதை அம்மன் கோயில்கள் அமைத்து சைவத்தமிழர்களும் பௌத்த சிங்களவர்களும் வழிபடும் மரபும் தொடர்ந்து பண்பாட்டுக்கோலமாகவே மாறிவிட்டதை காணமுடிகிறது. சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் மணிமேகலையும் மக்களிடத்தில் காவியமாகியிருக்கிறாள். மணிமேகலை தமிழ்க்காப்பியம் மட்டுமல்ல, அது பவுத்த காப்பியமும்தான் என்று நிறுவுகிறார் தமிழக எழுத்தாளர் பேராசிரியர் அ. மார்க்ஸ். ( ஆதாரம்: தீராநதி 2017 ஜூன்)

கண்ணகி வழிபாடு, திரௌபதை அம்மன் வழிபாடு என்பன கிழக்கிலங்கையில் மிகவும் முக்கியத்துவமாகியிருக்கின்றன. இராவணன் சீதையை கவர்ந்து வந்து அசோகவனத்தில் சிறைவைத்தமையால் அங்கு சிங்கள மக்களால் சீதாஎலிய என்னுமிடத்தில் சீதை அம்மனும், வடமேற்கு இலங்கையில் உடப்பு மற்றும் கிழக்கிலங்கை பாண்டிருப்பில் தமிழர்களினால் திரௌபதை அம்மனும், கன்னன் குடாவில் ஶ்ரீகண்ணகி அம்மனும் குடியிருக்கிறார்கள். பாரத நாட்டில் தோன்றிய காவிய மாந்தர்களில் குறிப்பாக பெண்களுக்காக இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் வழிபாட்டு மரபை தோற்றுவித்திருப்பதின் பின்னணி விரிவான ஆய்வுக்குரியது.

மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், கன்னன்குடா நோக்கி பயணமானோம். அப்பொழுது நண்பர் ‘செங்கதிரோன்’ கோபாலகிருஷ்ணன் எனக்குத்தந்த ‘கூடல்’ சிறப்பு மலர் பல தகவல்களைச் சொன்னது. இந்தப்பயணத்தில் நண்பர் பேராசிரியர் செ. யோகராசாவும் எம்முடன் இணைந்துகொண்டார். மட்டக்களப்பு வாவியைக்கடந்து படுவான்கரையை நோக்கி நண்பரின் கார் பயணித்தது. கன்னன்குடா ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தை வந்தடையும்போது இரவு பத்துமணியும் கடந்துவிட்டது. பக்தர்கள் நிறைந்திருந்தனர். பறவைக்காவடியில் சிலர் வந்தனர். அந்தக்காட்சி அங்கிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்கச்செய்திருக்கலாம். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அக்காட்சியை பார்த்து மனதிற்குள் வருந்தினேன். தம்மை வருத்தி இப்படியும் நேர்த்திக்கடனா..?

திரௌபதை அம்மன் கோயில் முன்றல்களில் தீமிதிப்பு. உடப்பு பிரதேசத்தில் அதனை பூமிதிப்பு என்பார்கள். இரண்டு நேர்த்திக்கடன்களுமே தம்மை வருத்திக்கொள்ளும் செயல்கள்தான். பெண்தெய்வங்கள் இப்படியும் ஆண்களை பழிவாங்குகின்றனவா…? சீதையை இராமன் தீக்குளிக்கவைத்தான். பாஞ்சாலியை துச்சாதனன் துகிலுரிந்தான். கண்ணகியின் கணவனை பாண்டியன் சிரச்சேதம் செய்வித்தான்.

Continue Reading →

நினைவு கூர்வோம்: 1966 அக்டோபர் 21 எழுச்சி..! 51 வருட நிறைவு!

சாதிய தீண்டாமைக் கொடுமைக்கெதிரான புரட்சிகரக் கலை இலக்கிய படைப்புகள் மலர்ந்து இலக்கிய வரலாற்றில் அழியா இடம்பெற்றனதீண்டாமைக்கு எதிரான போராட்ட இயக்கத்தை ஆரம்பிக்கும் வகையில் 1966 -ம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (அன்று சீனச் சார்பு என அழைக்கப்பட்டது) ஓர் ஊர்வலத்தையும் பொதுக்கூட்டத்தையும் வடபிரதேசத்தில் நடாத்துவதென தீர்மானித்தது.

அதற்கமைய 1966 அக்டோபர் 21-ம் திகதி சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஊர்வலம் நடாத்துவதற்கான தயாரிப்புகளைக் கட்சி மேற்கொண்டது. ஊர்வலத்திற்கான அனுமதி பொலிசாரிடம் கோரப்பட்ட போதிலும் அனுமதி மறுக்கப்பட்டது. வடபிரதேசத்தின் சகல பகுதிகளிலிருந்தும் கட்சி வாலிப இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆதரவாளர்களும் மற்றும் முற்போக்கு எண்ணங்கொண்ட பொதுமக்களும் பெருமளவில் ஊர்வலத்தில் கலந்துகொள்ளவென சுன்னாகத்தில் திரண்டனர்.
1966 அக்டோபர் 21-ம் திகதி பிற்பகல் 5 மணியளவில் சுன்னாகம் சந்தை வளாகத்திலிருந்து ”சாதி அமைப்புத் தகரட்டும்..! சமத்துவ நீதி ஓங்கட்டும்..!!” என்ற செம்பதாகையை உயர்த்திப்பிடித்த வண்ணம் ஊர்வலம் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டது. ஊர்வலத்தின் முன்னணியில் தோழர்கள் கே. டானியல் – வீ. ஏ. கந்தசாமி – கே. ஏ. சுப்பிரமணியம் – டாக்டர் சு. வே. சீனிவாசகம் – எஸ். ரி. என் நாகரத்தினம் ஆகியோர் தலைமைகொடுத்துச் சென்றனர். அடுத்து கட்சி வாலிபர் இயக்கத்தைச் சேர்ந்த எம். ஏ. சி. இக்பால் – கு. சிவராசா – நா. யோகேந்திரநாதன் – கி. சிவஞானம் – கே. சுப்பையா ஆகியோர் அணிவகுத்துச்செல்லத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கானோர் அணியணியாக முன்னோக்கி விரைந்தனர். ஊர்வலம் பிரதான வீதியில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை அண்மித்ததும் பொலிசார் வீதிக்குக் குறுக்கே அணிவகுத்து நின்று ஊர்வலத்தைத் தடுத்தனர். ஊர்வலத்தினர் முன்னேற முயன்றபோது பொலிசாரினால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தோழர்கள் பலர் பலத்த காயங்களுக்குள்ளாகினர். அந்த இடம் போர்க்களம்போன்று காட்சியளித்தது. காயங்களுக்குள்ளான தலைமைத் தோழர்கள் சிலரை பொலிசார் இழுத்துச்சென்று பொலிஸ் நிலையத்தில் அடைத்தனர்.
இத்தனை இடர்கள் மத்தியிலும் ஊர்வலத்தினர் கலைந்துசெல்ல மறுத்து நின்றனர். நிலைமை மோசமாகுவதை உணர்ந்த பொலிஸ் உயரதிகாரிகள் முழக்கங்கள் இன்றி இருவர் – இருவர் என வரிசையாக யாழ்ப்பாணம் நோக்கிச் செல்ல அனுமதித்தனர். நீண்ட ஊர்வலமாக முன்னேறத் தொடங்கியது.

ஊர்வலம் யாழ்நகரை வந்தடையும்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். யாழ் முற்றவெளியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் டாக்டர் சு. வே. சீனிவாசகம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் நா. சண்முகதாசன் சிறப்புரையாற்றினார்.

தீண்டாமைக்கெதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்குப் புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டித் தலைமை தாங்குமென தோழர் நா. சண்முகதாசன் அறைகூவல் விடுத்தார். கே. டானியலும் உரையாற்றினார். அக்டோபர் 21 -ம் திகதி ஊர்வலம் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும் மீண்டும் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் சுன்னாகம் சந்தை வளாகத்தில் 26 – 11 – 1966 அன்று நடைபெற்றது.  தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் நா. சண்முகதாசன் – எஸ். டி. பண்டாரநாயக்கா – கே. டானியல் – வி. ஏ. கந்தசாமி – சுபைர் இளங்கீரன் உட்படப் பலர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து வடபகுதியெங்கும் பல ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 266: ‘டொராண்டோவில்’ நடைபெற்ற ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் ‘உலகம் பலவிதம்’ தொகுப்பு நூல் வெளியீட்டு விழா! ஆ.சிவநேசச்செல்வனின் ஆவணப்படுத்தற் சேவை பற்றி..

‘டொராண்டோவில்’ நடைபெற்ற ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் ‘உலகம் பலவிதம்’ தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

திரு. ஆ.சிவநேசச்செல்வன் (22.10.2017) அன்று ‘டொராண்டோவில்’ நடைபெற்ற ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் ‘உலகம் பலவிதம்’ தொகுப்பு நூல் வெளியீட்டிற்குச் சென்றிருந்தேன். சிறப்பாக நடைபெற்றது. இது பற்றிப்பின்னர் விரிவானதொரு பதிவிடுவேன். எழுத்தாளர் அருண்மொழிவர்மன் வரவேற்புரையினையும், நிகழ்வின் முடிவில் நன்றியுரையும் வழங்கினார். கவிஞரும், பேராசிரியருமான சேரன் நிகழ்வுக்குத் தலைமை தாங்கிச் சிறப்பாக நிகழ்வினை நிர்வகித்து நடாத்தினார். நிகழ்வில் பேராசிரியர் நா.சுப்பிரமணியன், க.சண்முகலிங்கன், கலாநிதி மைதிலி தயாநிதி, ஆ.சிவநேசச்செல்வன், எழுத்தாளர் வ.ந.கிரிதரன் மற்றும் எழுத்தாளர் எஸ்.கே.விக்கினேஸ்வரன் ஆகியோர் உரைநிகழ்த்தினர். யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் நூலகம் நிறுவனம் ஆகிவற்றின் கூட்டு முயற்சியாக நடைபெற்ற இந்நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது. நிகழ்வின் வெற்றிக்கு பிறேமச்சந்திரா, அருண்மொழிவர்மன், தயாநிதி, மற்றும் புவனேந்திரன் திருநாவுக்கரசு ஆகியோர் உறுதுணையாக விளங்கியதை நிகழ்வில் காணக்கூடியதாகவிருந்தது.

நிகழ்வில் யாழ் இந்துக்கல்லூரியின் கலையரசி 2017 நிகழ்வில் எஞ்சிய பணத்தை (2000 கனடிய டாலர்களுக்கும் அதிகமான தொகை) யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சார்பில் புவனேந்திரன் திருநாவுக்கரசு நூலகம் நிறுவனத்துக்கு வழங்கினார். நூலகம் சார்பில் அருண்மொழிவர்மன் மற்றும் நக்கீரன் ஆகியோர் அப்பணத்தினைப் பெற்றுக்கொண்டனர். உண்மையில் யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தைப்பாராட்டத்தான் வேண்டும். இவ்விதமானதொரு தொகுப்பு நூலினை வெளியிட்டதற்கும், நூலக அமைப்புக்கு நிதி வழங்கியதற்கும்.

நூலின் பதிப்பாசிரியராகவிருப்பவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் ஆவார். பழைய பிரதிகளை வாசித்துத் தொகுப்பதில் அவர் எவ்வளவு சிரமங்களை அடைந்திருப்பார் என்பதை அறிய முடிகின்றது. அவரது பணியும் பாராட்டுதற்குரியது.

Continue Reading →

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

1. அன்பின் விலை

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

யாருமே சொல்லாதவொரு காரோப்ளேன் கதை சொன்னான் –
பேரானந்தமாயிருந்தது குழந்தைக்கு.
சீராட்ட அதன் கையில் சில
புலிப்பஞ்சவர்ணக்கிளி யளித்தான்.
கலகலவென்று கைகொட்டிச் சிரித்தது பிள்ளை.
விண்ணோக்கிப் பாயுமொரு ஆறு பாரு
என்று காட்டினான்.
கண்விரியக் கண்டுகளித்தது குட்டிமனுஷி.

குழந்தைக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது.
யார் தனக்கு சாக்லேட்டுகள் தந்தாலும்
அதில் அதிகம் அவனுக்கென எடுத்துவைத்து
குறைவாய் தன் வாயில் போட்டுக்கொண்டது.
அவனுடைய தொண்டைக்குள் இறங்கும் இனிப்புச் சுவை
குழந்தை வாயில் அமுதமாய் ருசித்தது.

அவன் ஒரு புகைப்படக்காரன்.
புதுப்புது கதை சொல்லி பிள்ளைக்கு சிநேகக்காரனானான்.
படிப்படியே பிள்ளையின் உலகமே அவனாகிப் போனதை
அவன் அறிவானோ, அறியானோ…..

’உயிர்ப்பின் சாரம்’ என்ற தலைப்பில்
அகில உலக புகைப்படப் போட்டிக்கு அனுப்ப வாகாய்
குழந்தையைப் பலகோணங்களில் படம்பிடித்துக்கொண்டான்.

Continue Reading →

இலக்கியம் ஒரு காலக் கண்ணாடி: ம.வே.திருஞானசம்பத்தப்பிள்ளையின் படைப்புகளை முன்வைத்துச்சில குறிப்புகள்…

– *’டொராண்டோ’வில் 22.10.17 அன்று நடைபெற்ற ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் ‘உலகம் பலவிதம்’ தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வில் நான் ஆற்றிய உரை –

இலக்கியம் ஒரு காலக்கண்ணாடி என்றொரு கூற்றுள்ளது. உண்மை.  இலக்கியப்படைப்பொன்றினை ஆராய்ந்து பார்ப்போமாயின் பல்வேறு விடயங்களை அப்படைப்பினூடு அறிந்து கொள்ள முடியும். அப்படைப்பில் பாவிக்கப்பட்டுள்ள மொழியிலிருந்து அப்படைப்பின் காலகட்டத்தை ஆய்வொன்றின் மூலம் அறிவதற்குச் சாத்தியமுண்டு. உதாரணத்துக்குச் சங்க இலக்கியப்படைப்புகளை எடுத்துக்கொள்ளலாம். அவற்றினூடு பண்டைத்தமிழரின் வாழ்க்கை முறை, இருந்த நகர அமைப்பு, ஆட்சி முறை, நிலவிய மானுடரின் பல்வேறு விடயங்களைப் பற்றிய நம்பிக்கைகள் .. எனக்கூறிக்கொண்டே செல்லலாம். எனது இச்சிற்றுரையில் இலக்கியம் காலக்கண்ணாடி என்னும் அடிப்படையில் ம.வெ.திருஞானசம்பந்தப்பிள்ளை அவர்களின் படைப்புகளை உள்ளடக்கிய  ‘உலகம் பலவிதம்’ நூலினை அணுகுவதாகும்.

அளவில் இந்நூல் பெரியது. நூலிலுள்ள அனைத்துப் படைப்புகளையும் குறுகிய காலத்தில் முழுமையாக வாசிப்பதென்பது சாத்தியமற்றதொன்று. ஆனால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் அடிப்படையில்  இந்நூலை அணுகலாம். அதுவும் கூட முழு நூலைப்பற்றிய இவ்விதமானதோர் அணுகுதலுக்குரிய மாதிரி அணுகலாகவிருக்கும் என்பதால், அது என் நம்பிக்கை என்பதால் அவ்விதமே இந்நூலை அணுகுவதற்கு முடிவு செய்து, அவ்வணுகுதலின் அடிப்படையில் இலக்கியம் காலக்கண்ணாடி என்னும் கூற்றிலுள்ள உண்மை பற்றி அறிதற்குச் சிறிது முயற்சி செய்வதே என் நோக்கம்.

இதற்காக நான் இத்தொகுப்பபிலுள்ள இரு நாவல்கள் மற்றும் ஆசிரியரின் பத்திகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றின் மீது என் கவனத்தைத்திருப்பப் போகின்றேன்.

1. மதமாற்றம்
அந்நியராட்சியின் கீழ் முக்கியமானதொரு விடயமாக மதமாற்றம் இருந்ததைக் காண முடிகின்றது. பாதிரிமார்கள் மக்களை மதம் மாற்றுவதில் தீவிர முனைப்புடன் செயற்பட்டதை அறிய முடிகின்றது. பல்வேறு ஆதாயங்களுக்காக மக்கள் மதம் மாறியதையும் , பலர் மதமாற்றத்துக்கெதிராகச் செயற்பட்டதையும் ம.வெ.தி.யின் புனைகதைகளிலிருந்து காணமுடிகின்றது. அவர் இந்துக்கல்லூரியின் ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியவர். இந்து சாதனம் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கியவர். இயல்பாகவே மதமாற்றம் என்பது அவரை மிகவும் பாதித்ததொரு விடயமாக இருந்திருக்கும். இருந்திருக்க வேண்டும். தன் எழுத்தை மதமாற்றத்துக்கெதிராக மக்களை விழிப்படைய வைப்பதற்கு அவர் பாவித்ததை அவரது புனைகதைகள் வெளிப்படுத்துகின்றன.

Continue Reading →

நிகழ்வு: உலகம் பலவிதம் (ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை) நூல் அறிமுகமும் வெளியீடும் ,சுற்றாடல் பாதுகாப்பு – அண்டாட்டிகா கண்ணோட்டம் –கலாநிதி, தேனுகாவுடனான ஒரு கருத்துரையாடலும்!

இடம்: 08 Shadlock St. Unit 5A Markham, On. L3S 3K9 (On Steels Ave E between Middlefield Rd and Markham Road)
திகதி: ஞாயிறு, ஒக்டோபர் 22, 2017
நேரம்: பி.ப 3.00 – 5.30 

ஆர்வமுள்ள அனைவரையும் நூல் வெளியீட்டு நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து தேனுகாவுடனான  கருத்துரையாடலிலும் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம். நூலுக்கான குறைந்தபட்ச  அன்பளிப்பு: $ 40.00

யாழ். இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவும்   நூலக நிறுவனமும்
தொடர்பு: அருண்மொழிவர்மன்: 416 854 6768;     தயாநிதி: 647 298 1894;     பிரேமச்சந்திரா   647 779 3502


நிகழ்ச்சி நிரல்
(1) உலகம் பலவிதம் நூல் அறிமுகமும் வெளியீடும்  (ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் இந்து சாதன எழுத்துக்கள், பதிப்பாசிரியர் சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார், யாழ் இந்துக் கல்லூரி 125ம் ஆண்டுவிழா வெளியீடு)

வரவேற்புரை: அருண்மொழிவர்மன்
தலைமை உரை: பேராசிரியர் சேரன்,

நூல் வெளியீடு

பேச்சாளர்கள்:
1.பேராசிரியர்,நா.சுப்பிரமணியன்:  ம .வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் நாவல்களும் தமிழ் உரைநடையும்
2. க.சண்முகலிங்கம்.    சமூகவியலாளர், முன்னாள் தமிழ் விவகார,,இந்து கலாசார அமைச்சின் செயலாளர், இலங்கை:
சமூகவியல்,,பார்வையில் ம .வே .திருஞானசம்பந்தப்பிள்ளையின் படைப்புகள்
3.,கலாநிதி மைதிலி தயாநிதி:      காலனியம்,காலனிய எதிர்ப்பு பின்னணியில் ம.வே.,திருஞானசம்பந்தப்பிள்ளையின்     பத்திகளில் பெண்குறித்த கருத்துக்கள்
4. ஆ. சிவநேசச்செல்வன். முன்னாள் ஆசிரியர்,வீரகேசரி,தினக்குரல்: பழைய இந்து சாதனம் இதழ்களை  எவ்வாறு காப்பகப்படுத்தினோம்?
5. வ.ந.கிரிதரன். எழுத்தாளர், ஆசிரியர் ,பதிவுகள் இணைய இதழ்: இலக்கியம் ஒரு காலக்கண்ணாடி(ம .வே . திருஞானசம்பந்தப்பிள்ளை படைப்புகளை முன் வைத்து)
6. எஸ்.கே.விக்னேஸ்வரன். முன்னாள் முகாமைத்துவ ஆசிரியர், சரிநிகர் வார இதழ்: பத்திரிகையாளராகவும் , பத்தி எழுத்தாளராகவும் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை

கருத்துப் பரிமாற்றம்
நன்றி உரை,–,அருண்மொழிவர்மன்

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 265 : இன்ப ஒளி பரவட்டும் இந்நாளில்!; மார்க்சியமும், ஆனை பார்த்த குருடர்களும்!; வாழ்த்துகின்றோம்: அர்ப்பணிப்பு மிக்க முயற்சி வெற்றியடையும்.

இன்ப ஒளி பரவட்டும் இந்நாளில்!
இன்ப ஒளி பரவட்டும் இந்நாளில்!வாசகர்கள் மற்றும் படைப்பாளிகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். சிலர் தீபாவளி சமயத்துடன் சம்பந்தப்பட்டதால் கொண்டாடக்கூடாது என்பார்கள். தீபாவளியின் அடிப்படை நோக்கம் மானுட சமுதாயத்தை மூடியிருக்கும் இருள் நீக்கி ஒளியைப்பரப்பும் நாள் என்பது. சமயத்தைத்தவிர்த்து விட்டுப் பார்த்தால், மானுடரைச் சூழ்ந்திருக்கும் இருள் நீக்கி ஒளி பாய்ச்சும் திருநாள். சமய நம்பிக்கையுள்ளவர்கள் அவ்விதம் கொண்டாடட்டும். அது அவர்கள் உரிமை. அவ்வாறில்லாதவர்கள் மானுடரை மூடியிருக்கும் இருள் நீக்கி ஒளி பாய்ச்சும் திருநாளாகக் கொண்டாடலாம். என்னைப்பொறுத்தவரையில் இந்த இரண்டாவது காரணத்தையே மையமாக வைத்து இந்நாளை அணுகுகின்றேன். நண்பர்கள் அனைவர்தம் வாழ்விவும், உறவினர்கள் அனைவர்தம் வாழ்விலும், இவ்வுலக மானுடர்கள் அனைவர்தம் வாழ்விலும் இந்நாளில் ஆரோக்கியமான சிந்தனையொளி பரவட்டும். சமுதாயத்தை மூடியிருக்கும் மடமையென்ற இருள் நீங்கட்டும்; அறிவென்னும் இரவியெழுந்து ஒளி பாய்ச்சட்டும் இந்நாளில். மானுடரைக்கொன்று குவிக்கும் போரிருள் நீங்கி பேரொளி பரவட்டும். வர்க்கம், மதம், மொழி, இனம், நாடு, வருணம் என்னும் பிரிவிருள் நீங்கி , அன்பெனுமொளி உதயமாகட்டும்.

இந்த நாள் எம் அனைவர்தம் வாழ்விலும் தவிர்க்க முடியாத இன்ப நினைவுகளை நனவிடை தோய வைத்திடும் நாள். எம்மில் பலபேர் போர்ச்சூழலுக்கு முன் பண்டிகைகள் பல கொண்டாடிக் குழந்தைப் பருவத்தைக் குடும்பத்தவருடன் கழித்தவர்கள். மறக்க முடியாத அந்நினைவுகளைச் சுமந்துகொண்டு வாழ்பவர்கள். இன்னும் சிலருக்குப் போர்ச்சூழல் அவ்வாய்ப்பினைத் தட்டிப்பறித்திருக்கக் கூடும். ஆனால் அனைவர்தம் வாழ்விலும் இந்நாளில் இன்ப ஒளி பரவட்டும். இன்ப ஒளியில் இவ்வுலகு சிறகடிக்கட்டும்; சிறக்கட்டும். நோக்கும் திசையெங்கும் நாம் வாழும் இந்நானிலம் களியொளியில் ஒளிரட்டும்.

Continue Reading →