கே.எஸ்.சிவகுமாரனின் ‘ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் – ஒரு பன்முகப்பார்வை’ (ஜீவநதி பதிப்பக வெளியீடு), ஈழத்து உளவியற் சிறுகதைகள் (மணிமேகலை பிரசுர வெளியீடு) மற்றும் ‘அருமையான ஆளுமைகளும், சுவையானமதிப்புரைகளும்’ (மணிமேகலை பிரசுர வெளியீடு) ஆகிய மூன்று நூல்களையும் நண்பர் காலம் செல்வத்திடமிருந்து இன்று பெற்றுக்கொண்டேன். நூல்களைக் கொண்டுவந்து சேர்ப்பித்தற்காக அவருக்கு நன்றியினை இத்தருணத்தில்தெரிவித்துக்கொள்கின்றேன். சிறுகதை நூல் தவிர ஏனைய நூல்களிரண்டும் கே.எஸ்.எஸ் அவர்களின் பல்வேறு புத்தகங்கள் பற்றிய, அவர் இரசித்த ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. ஜீவநதி பதிப்பகம் நூலினை மிகவும் சிறப்பாக வெளியிட்டுள்ளது. நூலினை ஒரு மூச்சில் வாசிக்க வேண்டுமென்ற அவாவினைத் தூண்டுகின்றது. 73 கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் சிறந்ததோர் ஆவணம். இந்நூலினைப்பார்த்தபோது ஒரு சிந்தனையோடியது. இதுவரை கே.எஸ்.எஸ் அவர்கள் எழுதிய நூல்கள், எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் அனைத்தையும் ஒரு பெருந்தொகுப்பாக இது போன்றதொரு சிறப்பான வடிவமைப்பில் வெளியிட்டால் அதுவோர் சிறப்பான ஆவணமாகவிருக்கும்.
ஜீவநதி வெளியீடாக வெளியான ”ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் – ஒரு பன்முகப்பார்வை” நூலின் பொருளடக்கத்தைப் பார்த்தபோது உடனடியாகத் தோன்றிய எண்ணம் இந்நூலில் விடுபட்டவர்கள் பற்றிய கட்டுரைகள். ஈழத்துச் சிறுகதைகளும் , ஆசிரியர்களும் ஒரு பன்முகப்பார்வை என்றிருப்பதால் அப்பன்முகப்பார்வையில் தவிர்க்கப்பட முடியாத பலர் தவிர்க்கப்பட்டிருக்கின்றார்கள். அதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:
1. தொகுப்பு கே.எஸ்.எஸ் அவர்கள் 1962 – 1998 காலப்பகுதியில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அக்காலப்பகுதியில் கே.எஸ்.எஸ் மேற்படி தவிர்க்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றி எழுதாமலிருந்திருக்கலாம். அல்லது எழுதியிருந்தாலும் தொகுத்த ஜீவநதி பதிப்பகம் அவற்றைக் கவனத்திலெடுக்காமலிருந்திருக்கலாம்.
2. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் பெரும்பாலும் வெளியான தொகுப்புகளை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளன. மேற்படி தவிர்க்கப்பட்ட எழுத்தாளர்களின் தொகுப்புகள் இக்காலப்பகுதியில் வெளிவராதிருக்கலாம். ஆனால் இக்காலப்பகுதியில் ஈழத்துப்படைப்பாளிகள் எழுதிய அரிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்புகள் பல வெளியாகியுள்ளன.. அவற்றில் மேலே குறிப்பிடப்பட்ட தவிர்க்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் பல உள்ளடங்கியுள்ளன. அத்தொகுப்புகளைப்பற்றிய கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கும்பட்சத்தில் தவிர்க்கப்பட்டவர்களின் தொகுப்புகள் வெளிவராதிருக்கும் பட்சத்தில் கூட நினைவு கூரப்பட்டிருப்பார்கள். மேலும் தொகுப்பில் நீர்வை பொன்னையன் சிறுகதைகள் பற்றிய இரு கட்டுரைகள் இடம் பெற்று:ள்ளன. இதுபோலவே காவலூர் ஜெகநாதனின், செ.யோகநாதனின், யோ.பெனடிற்பாலனின், கோகிலா மகேந்திரனின், சுதாராஜின் சிறுகதைகள் பற்றி ஒன்றிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அதற்குப்பதில் அவர்களைப்பற்றி ஒவ்வொரு கட்டுரையும், பதிலாகப் பிற எழுத்தாளர்களின் சிறுகதைகளைப்பற்றிய கட்டுரைகளும் வெளிவந்திருக்கலாம். அதே சமயம் ‘மட்டக்களப்புப் பிராந்தியப் பேச்சு வழக்கின் கதை’ கட்டுரை தொகுப்பொன்றிலில்லாத படைப்பாளிகளின் சிறுகதைகளைப்பற்றி எழுதப்பட்டுள்ளது.