அண்மையில் இணையத்தில் ஓரத்தநாடு கார்த்திக் என்னும் அன்பரின் வலைப்பதிவில் என் பால்ய காலத்தில் நான் வாசித்த பல வெகுசனப்படைப்புகளை மீண்டும் அவை தொடராக வெளிவந்தபோது வெளியான ஓவியங்களுடன் வாசிக்க முடிந்தது. அக்காலகட்டத்தில் கல்கி, விகடன், குமுதம், கலைமகள், தினமணிக்கதிரி, ராணி , கல்கண்டு என வெளியான வெகுசன இதழ்களில் தொடராக வெளிவந்த படைப்புகள் பலவற்றை நான் சேகரித்து, ‘பைண்டு’ செய்து வைத்திருந்தேன். அவையெல்லாம் 1983-2009 வரையில் ஈழத்தில் நிலவிய அரசியல் சூழலில் அழிந்து விட்டன. இந்நிலையில் அண்மையில் அன்பர் ஓரத்தநாடு கார்த்திக்கின் தளத்தில் பல படைப்புகளைக்கண்ட போது , அதுவும் வெளியானபோது வெளிவந்த ஓவியங்களுடன் பார்த்தபோது என் சிந்தனைக்குருவி மீண்டும் அந்தக்காலத்துக்கே சிறகடித்துச்சென்று விட்டது. அவ்விதம் வெளியான படைப்புகளில் ஒருபோதுமே சாண்டில்யனின் ‘கடல்புறா’வினை என்னால் மறக்க முடியாது.
நான் ஆறாம் வகுப்பிலிருந்தே கல்கி, விகடனில் வெளியான படைப்புகளை வாசிக்கத்தொடங்கி விட்டேன். ஆனால் குமுதம் சஞ்சிகையில் வெளியான படைப்புகளை வாசிக்கத்தொடங்கியது வவுனியா மகாவித்தியாலயத்தில் அக்காலத்தில் என்னுடன் படித்துக்கொண்டிருந்த ரிஷாங்கன் என்னும் பால்யகாலத்து நண்பர் மூலம்தான். அவரது வீட்டில் அக்காலகட்டத்தில் குமுதம் சஞ்சிகையினை எடுத்துக்கொண்டிருந்தார்கள். எனவே அவர் அதில் வெளியான பி.வி.ஆரின் ‘கூந்தலிலே ஒரு மலர்’, சாண்டில்யனின் ‘ராஜமுத்திரை’, சித்திரக்கதையான ‘கடற்கன்னி’ ஆகியவற்றைப் பற்றிக்கூறியிருந்ததாக ஞாபகம். அல்லது அவை வெளிவந்த குமுதம் சஞ்சிகையினை எனக்கு அறிமுகம் செய்திருக்க வேண்டும். அதன்பின்னரே குமுதத்தின்பால் என் கவனம் திரும்பியது. அதன் பின்னர் ரிஷாங்கனை நான் சந்திக்கவில்லை. அவர் தற்போது மருத்துவராகப் பணிபுரிவதாகக்கேள்விப்படுகின்றேன். மருத்துவரான என் கடைசித்தங்கை அவரது பல்கலைக்கழகக்காலகட்டத்தில் ஒருமுறை அவரைச்சந்தித்திருப்பதாகக்கூறியிருக்கின்றார். முகநூல் மூலம் மீண்டும் அறிமுகமான என் பால்யகாலத்து நண்பர்களிலொருவரான சண்முகராஜாவும் ரிஷாங்கன் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிப்பதாகக் கூறியிருக்கின்றார்.