தமிழ்நாட்டில் தலித் அரங்கவியலைத் தோற்றுவித்த குரல் ஓய்ந்தது.! முனைவர் கே. ஏ. குணசேகரனுக்கு அஞ்சலி!

தமிழ்நாட்டில் தலித் அரங்கவியலைத் தோற்றுவித்த குரல் ஓய்ந்தது.! முனைவர் கே. ஏ. குணசேகரனுக்கு அஞ்சலி!‘இந்து மதச்சிறையினிலே ஹரிஜனங்க நாங்க
இயற்கையின் படைப்பினிலே சரிசமங்க நாங்க.
சொந்த மண்ணில் சுதந்திரமா வாழ முடியலீங்க
ஏரைப்பிடிச்சுப்பாடுபட்டும் எதைத்தான் கண்டோமுங்;க”

தலித் மக்களின் குரலாக வாழ்ந்த கலைஞர் முனைவர் தோழர் கே.ஏ.குணசேகரன் நேற்று 17 ஆம் திகதி பாண்டிச்சேரியில் காலமானார் என்ற செய்தியை தாங்கிவந்தது நிறப்பிரிகை ரவிக்குமார் – பா. ஜெயப்பிரகாசம் ஆகியோரின் தகவல். தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே  1955 ஆம் ஆண்டு பிறந்த குணசேகரன்,  நாட்டுப்புற பாடல்கள்  ஆய்வில் ஈடுபட்டு முனைவர் பட்டம் பெற்றவர். காலம் காலமாக நீடித்த முன்னைய மரபார்ந்த அரங்கவியலுக்கு மாற்றாக தலித் அரங்கவியல் கோட்பாட்டை உருவாக்கியவர் குணசேகரன். தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தலித் கலை இலக்கிய அமைப்புகளின் மாநாடுகளில் இவருடைய நிகழ்ச்சிகளின்  அரங்காற்றுகைகள் இடம்பெற்றுள்ளன.

தன்னானே என்னும் பெயரில் நாட்டுப்புறக்கலைக்குழுவை அமைத்து, தமிழ்நாட்டின் கிராமங்கள்தோறும் தலித் மக்களுக்கு விழிப்புணர்வூட்டிய சமூகப்போராளி.  நாட்டுப்புறக்கலைகள் தொடர்பாக ஆய்வுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த குணசேகரன் எழுதிய ‘நாட்டுப்புற மண்ணும் மக்களும்’.என்னும் நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த நுண்கலை நூலாசிரியர் விருது கிடைத்துள்ளது. புதுவை அரசின் கலை மாமணி விருதும் பெற்றவர்

“இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளைத் தனது ஆற்றல்மிகு குரலால் எழுச்சிகொள்ள வைத்தவர். தமிழ்நாட்டில் தலித் பண்பாடு இலக்கியம் குறித்த முன்முயற்சிகளை 1990 களின் துவக்கத்தில் முன்னெடுத்தபோது  தங்களோடு எல்லா களங்களிலும் இணைந்து நின்றவர். தலித் பண்பாட்டு அரசியல் வரலாற்றில் அவரது ‘மனுசங்கடா’ ஒலிநாடாவுக்கும் ‘பலி ஆடுகள்’ நாடகத்துக்கும் முக்கியமான இடம் உண்டு. ” என்று முன்னாள் சட்டசபை உறுப்பினரும் எழுத்தாளரும் நிறப்பிரிகை ஆசிரியருமான தோழர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Continue Reading →

ஆய்வு: தமிழர்க்கடவுட் கோட்பாட்டு நெறியும் இந்தியவியல் மரபும்!

தமிழர்க்கடவுட் கோட்பாட்டு நெறியும் இந்தியவியல் மரபும்!  - சு.விமல்ராஜ், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஏ.வி.சி.கல்லூரி, மயிலாடுதுறை - தமிழர்கள் செவ்விய வாழ்வியலை உடையவர்கள். அவர்களின் செம்மார்ந்த வாழ்வுக்கு சான்றுகள் பல உண்டு. சங்கத்தமிழர் வாழ்க்கை முறையும் கடவுட் கோட்பாட்டு  கட்டமைப்பும்  இயல்புநிலைச் சார்ந்த வழிமுறையின் பின்னணியை உணர்த்தி நிற்கிறது.  வழிபாட்டு அமைப்பு முறை உலகளாவிய தன்மையில்  எந்தத் தடத்தில் தொடங்குகிறதோ  அவ்வழி இங்கும் உள்ளதென்பது புலப்படுகிறது.  வைதீக அமைப்பு முறையும் தொல் தமிழர் கடவுட்கொட்பாட்டு வழித்தடமும் எந்த நிலையில் ஒத்துப் போகிறதென்றும் எங்கு வேறுபடுகிறது என்றும் மானிட வளர்நிலை அமைப்பில் பார்க்கிறபோது தமிழர்க் கடவுட்கோட்பாட்டு  அமைப்பின் அடித்தளத்தை உணரமுடியும்.

வழிபடுதல்:
வழிபாடு என்பது ஒன்றின் மையப்பொருளில் ஒன்றித்து பயணப்படுதல். இலக்கை மையமாகக் கொண்ட தமிழர் வாழ்வில் கடவுள் என்னும் கோட்பாடு இழைந்து காணப்படுகிறது. பதுக்கையும் நடுகல்லும் சான்றாய் நின்று விளங்கும்.

“விழுத்தொடை மறவர; வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துஉடை நடுகல் அன்ன’’ 1

தொல்லியலார் கல்திட்டைகளையும் பதுக்கைகளையும் பல இடங்களில் கண்டுபிடித்துள்ளனர். சங்க காலத்தில் இத்தகைய கல் பதுக்கைகள் இருந்தன. தரையைத் தோண்டிச் சிறிது நிலத்திற்கடியில் இருக்குமாறோ அல்லது முழுவதும் அடியிலிருக்குமாறோ பிணக் குழியை அமைப்பர். நன்கு செதுக்கப்பட்ட கருங்கற் பட்டைகளை இதற்குப் பயன்படுத்தனர். இக்குழியைச் சுற்றிலும் ஒன்றிரண்டு வரிரசைகளில் கல்சுவர்கள் எடுப்பர். ஈமப் பொருளைக் குழியிற் போட்டபின் ஒரு கல்லால் மூடிவிடுவர். அதற்குப் பிறகு மேலே கூழாங்கற்கள் பரப்பப்பட்டன. இது புதைபொருள் ஆய்வாளர் கண்டுள்ள பதுக்கைகளின் அமைப்பாகும்.

‘‘நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்
கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்தோர்
படுகளத்து உயர்த்த மயிர்தலைப் பதுக்கை’’2

Continue Reading →