பிற மொழிகளிலிருந்து தரமான கதை, கவிதை முதலான இலக்கியப் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது எவ்வளவு தேவையோ அதேயளவு முக்கியம் தமிழ்ப் படைப்புகள் பிற மொழிகளில் – குறைந்தபட்சம் ஆங்கிலத்திலாவது மொழிபெயர்க்கப் படுவது.

லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) சங்கத் தமிழ்க் கவிதைகள் தொடங்கி சமகாலத் தமிழ்க்கவிதைகள் வரை ஆர்வமாக மொழிபெயர்த்து வருபவர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். சமகால தமிழ்க்கவிதைகள் இதுவரை அவரது ஆங்கில மொழிபெயர்ப்பில் நான்கைந்து தொகுப்புகள் வெளியாகியுள்ளன. கட்டுரைகளும் நிறைய எழுதியிருக்கிறார் டாக்டர் கே.எஸ் சுப்பிரமணியன். அவையும் ஏழெட்டு தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. 40க்கும் மேற்பட்ட நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார். அவையும் தொகுப்புகளாக வந்திருக்கின்றன. தமிழ்க்கவிதையுலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள கவிஞர் இளம்பிறையின் 75 தேர்ந்தெடுத்த கவிதைகள் டாக்டர் கே.எஸ்ஸின் மொழிபெயர்ப்பில் LINGERING IMPRINTS என்ற தலைப்பில் தொகுப்பாக சமீபத்தில் வெளியாகியுள்ளது. அவர் மொழி பெயர்த்து வெளியாகாமலிருக்கும் கவிதைகளும் நிறையவே.

கவிதைகளை மொழிபெயர்ப்பது தனக்கு மிகவும் மனநிறைவளிப்பதாக அவர் கூறுவார். கவிஞர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தொகுப்பில் இடம்பெற செய்ய அனுமதி கோரி கடிதம் எழுதுவதும், தொகுப்பு வெளியானதும் For the Joy of Sharing என்று அன்போடு உற்சாகமாக எழுதி  கையெழுத்திட்டு தொகுப்பில் இடம்பெறும் அத்தனை கவிஞர்களுக்கும் தன் செலவில் தொகுப்புகளை வாங்கி அனுப்பிவைப்பதும் டாக்டர். கே.எஸ். சுப்பிரமணியனுக்கு மிகவும் மனநிறைவளிக்கும் விஷயம்.

அப்படி ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு தொகுப்புக்காகத் தேடித் தேர்ந்தெடுத்து உரிய கவிஞர்களிடம் அனுமதி பெற்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கவிதைகள் தொகுப்பாக வெளியிடப்படுவது பல்வேறு காரணங்களால்  தாமதமாகி இன்று அந்தத் தொகுப்பை வெளியிடும் வாய்ப்பு ன்னும் நூல்வடிவம் பெறாமல் இருப்பது குறித்து அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது என்னுடைய cottage industry publishing house – ANAAMIKAA ALPHABETSக்குக் கிடைத்திருக்கிறது! அதற்காக டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொகுப்பில் இடம்பெறும் கவிஞர்களுக்கும் தன் நட்பினருக்கும் தன் செலவிலேயே நூலின் பிரதியை அனுப்பிவைப்பது டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் வழக்கம். எனவே குறைந்தபட்சம் 150 பிரதிகளாவது அவர் விலை கொடுத்து வாங்கிவிடுவார் என்பதால் அச்சகத்தாருக்கு உடனடியாக பணத்தைக் கொடுத்துவிட முடியும் என்பது நிம்மதியளிக்கும் விஷயம்!

நூலை சிறப்பாக வடிவமைத்துக்கொடுத்திருக்கும் தோழர் திருவுக்கும்(தோழர் முனியரசு) என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நூலின் விலை ரூ.200. பிரதிகள் புதுப்புனல் பதிப்பகத்தில் விலைக்குக் கிடைக்கும்.  No 117 Fathima Complex Ist Floor, Triplicane High Road, Triplicane, Chennai – 600005, Opp to Rathna Café. தொலைபேசி 98844 27997
மின் நூலாகவும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

CONTINUUM (A Harvest of Modern Poetry) என்ற தலைப்பிட்ட இந்தத் தொகுப்பில் 100 கவிஞர்களின் 120 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இடம்பெற்றுள்ள கவிஞர்கள் – கவிதைகள் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளன.

Continue Reading →

‘நம்பிக்கை இன்னும் இருக்கிறது’! புதியவன் இராசையாவின் ‘ஒற்றைப்பனைமரம்’ , பா.அ.ஜயகரனின் ‘Insight’ நாடகம் பற்றிய மதிப்பீடுகள்!

கிளைப் பனைமரம்

எழுத்தாளர் தேவகாந்தன்கடந்த ஜுன் 14, 2019இல் புதியவன் இராசையாவின் ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படத்தை ரொறன்ரோவில் பார்க்க முடிந்திருந்தது. புகலிட மற்றும் இலங்கைச் சூழலில் குறும்பட ஆக்கங்கள்போல் முழுநீள திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்திருப்பது நல்ல சகுனமேயாகும். ஆனாலும் நம்பிக்கை தருகிற விதமான பெறுபேறுகள் கிடைக்கவில்லைப்போன்ற தோற்றமே காணக்கிடக்கிறது. அசோக ஹெந்தகம, பிரசன்ன விதானகெ போன்ற சிங்கள நெறியாளர்களது படங்களுக்கு நிகரானவளவுகூட  இவை உயர்ந்து செல்லவில்லை. இதில் உலகத் தரமென்பது கனவுக்கு எட்டாத்  தூரமாகவே இருக்கிறது. இந்த உண்மையை மறுப்பதில் பிரயோசனமில்லை. இதை நேரில் முகங்கொள்வதே செய்யத் தகுந்தது. ஆனாலும் ‘ஒற்றைப் பனைமர’த்தில் அதன் பிரதியாக்க மேன்மையை ஒரு பார்வையாளனாய் என்னால் வியக்க முடிகிறது. ஆயின், ‘ஒற்றைப் பனைமரம்’ அடையவேண்டிய உயரத்தை ஏன் அடையாமல் போனது என்ற கேள்வியும் அதனடியாகவே எனக்குள் முளைக்கிறது. பல கேள்விகளில் இது ஒன்று. ஆனாலும் முக்கியமான கேள்வி.

இத் திரைப்படம்  பார்வையாளனுக்கு எதுவுமே இல்லையென்பது நியாயமற்ற கூற்று. ஆனால் அது அடைந்திருக்க வேண்டிய உச்சம் தவிர்ந்திருக்கிறதென்பதும் நிஜம். அப்போதும்கூட முப்பத்தேழு உலக படவிழாக்களில் பங்குபெற்று பன்னிரண்டு விருதுகளை அது பெற்றிருக்கிறதான ஒரு தகவல் கண்டேன். American Filmatic Arts Awards இன் சிறந்த பரீட்சார்த்த பிறநாட்டு திரைப்பட வரிசையில் அந்தப் பரிசு கிடைத்திருக்கிறது. நல்லது. இது அவர்களது பார்வை. எனது பார்வை வேறு. ஆயினும் அது நம்பிக்கை தரும் புகலிட திரைப்படமாக இருக்கிறதென்பதையும் இந்த இடத்தில் நான் வலியுறுத்தவேண்டும்.

ஆரம்பத்திலேயே குறைந்தளவு மூலதன வசதியோடு தொடங்கிய இத் திரைப்பட முயற்சியில்  தான் பல தயாரிப்பு இடைஞ்சல்களை எதிர்கொள்ள நேர்ந்ததென ரொறன்ரோவில் திரைப்படம் முடிய  இடம்பெற்ற கலந்துரையாடலில் புதியவன் இராசையா  தெரிவித்திருந்ததை நினைத்துக்கொள்ளவேண்டும். அது ஏற்கப்படக் கூடியதுதான். ஆனாலும் மிகக் குறைந்தளவு பட்ஜெட்டில் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது வாங்கி உலகின் சிறந்த சினிமா விமர்சகர்களால் பாராட்டுப்பெற்ற  திரைப்படங்களை நாம் மறந்துவிடக் கூடாது.

இத் திரைப்படத்தில்  தவிர்த்திருக்கக்கூடிய பல தவறுகள் போஸ்ற் புரொடக்‌ஷனில்தான் நிகழ்ந்துள்ளன. என் ஆதங்கத்தைக் கிளர்த்துவன அவைதான். குறிப்பாக எழுத்துக்கு முன்பாக வரும் சுமார் ஏழு நிமிஷ கடைசி யுத்தக் காட்சிகள் அவசியமற்றவை. அந்த நிகழ்வுகளை உடனடிப் பின்னால் வரும் காட்சிகள்மூலம் பார்வையாளன் சினிமாவிலிருந்தே உள்வாங்கியிருப்பான்.

தானே தன் சக பெண் போராளியை  அவளின் வேண்டுகோளின்படியே எனினும் சுட்டுக் கொல்லநேரும் அவலம் கதாநாயகியின் மனநிலையில் ஏற்படுத்தும் பாதிப்பை அவளது மனது பிளந்தெழும் வேறு பொழுதுகளில் ஒரு பின்னோட்ட துண்டுக் காட்சியாகக் காட்ட நிறையவே வாய்ப்பு இருந்தது. அதன்மூலம் திரைப்படம் மேலும் தன்னை இறுக்கிக்கொள்ள வழி ஏற்பட்டிருக்கும். படத் தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ் அதைத் தவறவிட்டிருக்கிறார்.

Continue Reading →