அஞ்சலி: எழுத்தாளர் கண மகேஸ்வரன் மறைவு!

எழுத்தாளர் கண மகேஸ்வரன்எழுத்தாளர் கண மகேஸ்வரன் மறைந்த செய்தியினை முகநூற் பதிவொன்றின் மூலம் அறிந்துகொண்டேன். ஆழ்ந்த இரங்கலைத்தெரிவிப்பதுடன் , அஞ்சலியாக  செப்டம்பர் 16, 20118 அன்று  முகநூலில் நான் அவர் பற்றி எழுதியிருந்த பதிவொன்றினையும் பகிர்ந்துகொள்கின்றேன்.

கிழக்கில் சுடர்விட்ட தாரகை!

எழுத்தாளர் கண மகேஸ்வரன் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர். இவ்வளவுக்கும் சிறுகதைகள் சிலவற்றை அவ்வப்போது பத்திரிகைகளில் பார்த்திருக்கின்றேன். ஆனால் வாசித்ததில்லை. இப்பொழுது அவற்றைத் தேடிப்பிடித்து வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் பிறந்திருக்கின்றது.

இவர் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர் என்று கூறினேனல்லவா. அதற்குக் காரணம் ஒன்றுள்ளது. நான் வவுனியா மகா வித்தியாலயத்தில் ஆறாம் வகுப்பு மாணவனாக இருந்த சமயம் ஈழநாடு மாணவர் மலர் நடாத்திய ‘தீபாவளி இனித்தது’ என்னும் கட்டுரைப்போட்டியில் கலந்து கொன்டிருந்தேன். ஆனால் அதில் என் கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட வில்லை. அதில் அப்போது உயர்தர மாணவராக இருந்த கண மகேஸ்வரனின் கட்டுரை தெரிவாகிப்பிரசுரமாகியிருந்தது. ஆனால் மாணவர் மலரில் என் கட்டுரையைப்பற்றிக் குறிப்பிட்டு, என்னைப்பற்றியும் நான் படித்துக்கொண்டிருந்த பாடசாலையைப்பற்றியும் குறிப்பிட்டு வாழ்த்துக்கூறியிருந்தார்கள். கட்டுரை பிரசுரமாகாவிட்டாலும் அவ்வாழ்த்துரை என்னை அவ்வயதில் உற்சாகமூட்டியது. அவ்வுற்சாகத்துடன் அடுத்து வந்த பொங்கல் தினத்தை முன்னிட்டுக் கவிதையொன்றினை எழுதிச் ‘சுதந்திரன்’ பத்திரிகைக்கு அனுப்பினேன். அது ‘சுதந்திரன்’ பத்திரிகையின் பொங்கல் இதழில் பிரசுரமானது. அதுவே நான் எழுதிப் பிரசுரமான முதலாவது படைப்பு. அப்போது நான் ஏழாம் வகுப்பு மாணவன்.

ஆணால் அண்மையில் ‘நூலகம்’ தளத்தில் உலாவிக்கொண்டிருந்தபோது மட்டக்களப்பிலிருந்து எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளியான ‘தாரகை’ சஞ்சிகையின் சில பிரதிகளைக் கண்டேன். அவற்றை வாசித்தபோது அதன் ஆசிரியர்களாக விளங்கியவர்களைப்பற்றிய விபரம் என் கவனத்தை ஈர்த்தது. ஆரம்பத்தில் அதன் ஆசிரியராக சி.சங்கரப்பிள்ளையும், கெளரவ ஆசிரியராக டாக்டர் இ.மதனகோபாலன் என்பவரும், ஆசிரியர் குழுவில் கண.மகேஸ்வரன், இந்திராணி தாமோதரம்பிள்ளை ஆகியோரும் இருந்துள்ளார்கள். பின்னர் கண மகேஸ்வரனே அதன் ஆசிரியராக அதனைக்கொண்டு நடத்தியிருக்கின்றார். ஓரிதழில் செ.ரவீந்திரன் ஆசிரியர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading →